உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

ஒத்திப் போடுதல்

3

Posted on : Wednesday, December 19, 2012 | By : ஜெயராஜன் | In :

வெற்றிகள் எல்லாம் எப்போதும் வெகுமானமாக அமைந்து விடுவதில்லை. தோல்விகள் எல்லாம் எப்போதும் அவமானம் தருபவையாக இருந்து விடுவதில்லை.பல சமயம் வெற்றிகள் போதை ஊட்டுவதாக இருக்கின்றன.பல சமயம் தோல்விகள் பாதை காட்டுபவையாக அமைந்து விடுகின்றன.சில சமயம் சில செயல்களை மிகுந்த ஆர்வத்துடன்  செய்யும் போது தேவைக்கு அதிகமாக நேரத்தை அதில் செலவழித்து விடுகிறோம். அதனால் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டிய இதர பணிகளை ஒத்திப் போடுகிறோம்.மேலும் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினாலேயே சில வேலைகளைத் துவங்காமலேயே விட்டு விடுகிறோம்.எதையும் எந்தக் குறையும் இன்றி செய்வேன் என்று சொல்லும் பலர் எந்த ஒன்றையும் செய்யாமலே இருந்து விடுவதை நாம் காண்கின்றோம் இதற்கு முன் இதை நான் செய்ததில்லை ,முதல் முறையாக செய்ய வேண்டியிருக்கிறது,அதில் என்னென்ன பிரச்சினைகள் வருமோ என்று எண்ணுவதால் காரியங்களை ஒத்திப் போடுவதும் உண்டு.அதுவே பின்னர் பெரும் பிரச்சினை ஆகி விடுகிறது.சில சமயம் பிறருக்கு உதவி செய்கிறோம் என்று கூறிக் கொண்டு அடுத்தவர் வேலைகளை இழுத்துப் போட்டுப் பார்த்துவிட்டு,தனது காரியங்களை ஒத்திப் போடுவதுண்டு.உரிய நேரத்தில் உடனுக்குடன் பணிகளை செய்து முடிக்கும் பழக்கம் இல்லாமையும் ஒத்திப் போடுவதற்கு ஒரு காரணம்.காலத்தை திட்டமிட்டு நிர்வகிப்பதன் மூலமாக மட்டும் இத்தீய ஒத்திப் போடுதலை ஒத்திப் போட்டு விட முடியாது.பின் என்ன செய்ய வேண்டும்?நமது மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளுதல் தான் அதற்கு ஒரே வழி.

மீன் காப்பாற்றியது

1

Posted on : Wednesday, December 19, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லா தனது பயணத்தின்போது ஒரு பெரும் ஞானியை சந்தித்தார்.அவரைப் பார்த்ததுமே அவருக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.எனவே அவரை அணுகி வணங்கினார்.ஒரு பழுத்த மதவாதிபோல முல்லா தோன்றியதால் ஞானியும் அவரை மகிழ்வுடன் வரவேற்றார்.அந்த ஞானி, விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ,மீன்கள் ஆகியவற்றின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்.இதை அங்கு வருமுன்னேயே முல்லா கேள்விப்பட்டிருந்தார்.இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது முல்லா,''ஒரு சமயம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என்னை ஒரு பெரிய மீன்தான் காப்பாற்றியது,'' என்றார்.ஞானிக்கு ஆர்வம் உண்டாகி அந்த  நிகழ்ச்சியை விளக்கமாக சொல்ல சொன்னார்.முல்லா சொன்னார்,''ஒரு முறை கடல் கரை ஓரமாக நீண்ட பயணம் மேற்கொண்டேன்.ஆள் யாரும் இல்லாத இடம் ஒன்றில் சென்று கொண்டிருக்கும்போது எனக்கு கடும் பசி ஏற்பட்டது.இரண்டு நாளாக சாப்பிடவில்லை.இனிமேலும் தாங்க முடியாத நிலை.வேகமாக கடற்கரைக்கு ஓடி சென்று ஒரு பெரிய மீனை பிடித்து தீயில் வாட்டி சாப்பிட்டேன்.அந்த மீன் மட்டும் இல்லாவிடில் நான் அன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன்.''

அடங்கா சிறுவன்

0

Posted on : Tuesday, December 18, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிறுவன் தனது  தோளில் எப்போதும் ஒரு ட்ரம்மை வைத்து அடித்துக் கொண்டே இருப்பான்.அதை அவன் மிக ஆவலுடனும் ரசித்தும் செய்து கொண்டிருந்தான்.ட்ரம் அடிக்க அவனுக்குக்கால நேரம் என்று எதுவும் கிடையாது நினைத்த போதெல்லாம் அடித்துக் கொண்டிருப்பான்.ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாவிட்டாலும் போகப்போக சுற்றியிருந்தவர்களுக்கு அது எரிச்சல் தருவதாக இருந்தது.பலரும் அறிவுறுத்தியும் அவன் மாறுவதாக இல்லை.ஒரு பெரியவர் ட்ரம் அடிப்பதை நிறுத்தா விட்டால் காதில் ஓட்டை போடுவேன் என்று பயமுறுத்தினார்.அதற்கு அவன் மசியவில்லை. ஒருவர்,''இது கோவிலில் செய்யும் புனிதமான வேலை இதை எப்போதும் செய்யக் கூடாது ''என்று அறிவுறுத்தினார்.சிறிது நேரம் நிறுத்திவிட்டு மீண்டும் அவன் அடிக்க ஆரம்பித்தான்.ஒருவர் அவனுக்கு தியானம்சொல்லிக் கொடுத்தார்.தியான நேரம் தவிர மற்ற நேரம் தரம் அடித்துக் கொண்டுதான் இருந்தான்.எல்லோரும் அவர்களுடைய முயற்சிகளில் தோல்வியையே தழுவினர்.ஆனால் அவன் ட்ரம்மிலிருந்து வரும் கொடூரமான ஒலி  அவர்களை இம்சைப் படுத்தியது.அப்போது வெளியூரிலிருந்து வந்த பெரியவர் விஷயம் அறிந்து அந்த சிறுவனிடம் சென்று,''தம்பி,இந்த ட்ரம்முக்குள் என்ன இருக்கிறது என்று தெரியுமா?''என்று கேட்டார்.அவன் தெரியாது என்றான்.அவர்,'' எனக்கும் தெரியாது,உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விடுவோமா?''என்று கேட்க அவனும் ஆர்வ மிகுதியில் சரியென்று சொன்னான்.உடனே அவர் ஒரு கத்தியை வைத்து ட்ரம்மைக்  கிழித்துப் போட்டார்.ஊர்க்காரர்களின் பிரச்சினை தீர்ந்தது.

தோல்வி மனப்பாங்கு

0

Posted on : Tuesday, December 18, 2012 | By : ஜெயராஜன் | In :

பார்க்கின்ற பொழுதில் நடக்கின்ற நிகழ்ச்சிகளில் நமக்கு சாதகமானதை மட்டும் நம்புகின்ற ஒரு மன நிலையையே மனப்பாங்கு அல்லது கண்ணோட்டம் என்கின்றோம்.தோல்வி பற்றி பொதுவாக நமது மனப்பாங்கு எப்படி இருக்கிறது?
நாம் ஒரு முயற்சியில் ஈடுபடும்போது தோல்வியைத் தழுவி விடுவோமோ எனப் பயந்து விடுகிறோம்.வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தோல்வியைத்  தழுவி விடக் கூடாது என்று நினைக்கிறோம்.முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று விட வேண்டும் என்று நினைக்கின்றோம். .ஆனால் அவை நடை முறை சாத்தியமாக இருப்பதில்லை.எடுத்துக் கொண்ட செயலில் போதிய அறிவு அல்லது அனுபவம் இல்லாவிட்டாலும், உடனடியாக சரியாக செய்து விட வேண்டும் என்ற பதட்டமும், கால இடைவேளை தேவைப்படுகின்ற வேலைகளை அவசரமாக செய்வதாலும், அகலக்கால் வைத்து விடுவதாலும், பழக்க வழக்கங்கள் சரியில்லாமல் அமைந்து விடுவதாலும், தொடங்கும் போது உள்ள ஆர்வம் தொடர்ந்து இல்லாமல் போய்விடுவதாலும் நாம் பல முறை தோல்வியை தழுவி விடுகிறோம்.
தோல்வி என்பது வலிக்கும்.ஆனால் அது புதிதாக உடல் பயிற்சி செய்பவருக்கு உண்டாகும் வலியைப் போன்றதுதான் என்பதனை உணர வேண்டும்.தோல்வி உடனடியாக துன்பத்தைத் தந்தாலும் நீண்ட காலத்தில் நன்மை பயப்பதாக இருக்கும்.
தோல்வி என்பது கசக்கும்.இது வியாதியை குணமாக்கும் மருந்தின்கசப்பைப் போன்றதுதான் என்பதனை அறிய வேண்டும்.தவிர்க்க முடியாததும்  அவசியமானது என்றும் அது நமக்கு உமர்த்துகிறது.
தோல்வியினால் நாம் நகைப்புக்கு உள்ளாகிறோம்.இது நமக்கு உண்மையான நண்பர்களை அடையாளம் காண உதவுகிறது.இதனால் தீயவர் நட்பிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடிகிறது.தோல்விகள், நமக்கு சிந்திக்க, திட்டமிட, புதுப்பித்துக் கொள்ள அவகாசம் அளிக்கிறது.
தோல்வியும் இயற்கையானதே என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.தோல்வி அளிக்கும் அனுபவத்தினால் நாம் நம் வழிகளையும் முறைகளையும் சீர்படுத்திக் கொள்ள முடிகிறது.மாற்றத்தை  நம்மிடம் கொண்டு வர வேண்டிய அவசியம் நமக்குப் புரிகிறது.தோல்வி என்பது தற்காலிகமானது.அதைப் புரிந்து கொண்டு அதில் வெற்றிக்கான விதைகளைத் தேடுங்கள்.நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

கிண்டல்,கேலி.

1

Posted on : Saturday, December 15, 2012 | By : ஜெயராஜன் | In :

கிண்டல்,கேலி செய்வதில் அறிஞர் பெர்னாட்ஷா அவர்களுக்கு ஈடு யாரும் கிடையாது.அவர் ஒரு சமதர்மவாதி(SOCIALIST).இருந்தாலும் சமதர்ம தத்துவத்தையே கிண்டல் செய்வார்.''முப்பது வயதில் நீ ஒரு சமதர்ம வாதியாக இல்லாவிட்டால் உன்னிடம் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.அதேபோல முப்பது வயதுக்குப் பின்னும் நீ சமதர்மவாதியாகத் தொடர்ந்தால்  அப்போதும் உன்னிடம் ஏதோ கோளாறு இருக்கிறது என்று பொருள்''என்று சொன்னவர் அவர்.
ஆங்கிலம் தான் அவருக்குத் தாய்மொழி.அந்த ஆங்கிலம் கூட அவரது கிண்டல்,கேலியிலிருந்து தப்ப முடியவில்லை.ஒரு நாள் ஒரு காகிதத்தில் GHOTI என்று எழுதி பக்கத்திலிருந்த ஆங்கில அறிஞர்களிடம் படிக்கச்
சொன் னார்.ஒருவர் 'கொட்டி' என்றும் இன்னொருவர் 'கோட்டி' என்றும் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரியாக உச்சரித்தார்கள்.இறுதியில் அனைவரும் தவறு என்று கூறிய ஷா அதை FISH என்று உச்சரித்தார்.அனைவரும் அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள்.பின் அவர் ROUGH என்ற வார்த்தையில் GHக்கு என்ன உச்சரிப்பு வரும் என்று கேட்டார்.உடனே அவர்கள்F என்று சொன்னார்கள்.பின் WOMEN என்ற வார்த்தையில் O க்கு என்ன உச்சரிப்பு என்று கேட்க அவர்கள் Iஎன்று சொன்னார்கள்.அடுத்து STATION என்ற வார்த்தையில்TI  என்பதை எப்படி உச்சரிப்பது என்று கேட்டார்.அவர்களும் SHஎன்று சொன்னார்கள்.அப்படியானால் இந்த வார்த்தை GHOTIயை நான் ஏன் FISHஎன்று உச்சரித்தால் ஒரு மாதிரியாகப் பார்க்கிறீர்கள்?''என்று கேட்டார்.வந்தவர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சோம்பேறிகள்

1

Posted on : Friday, December 14, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு ஒரு பலசரக்குக் கடையில் வேலை கிடைத்தது.சரக்கு அறையிலிருந்து மூட்டைகளைத் தூக்கி வந்து லாரியில் ஏற்ற வேண்டியது அவர் வேலை.அவர் அதே வேலை பார்க்கும் மற்றவர்களைப் பார்த்தார். அவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு மூடைகளைத் தூக்கி சென்றனர்.முல்லா முயன்று பார்த்தார்.அவரால் இரண்டு மூடைகளை ஒரே நேரத்தில் தூக்க முடியவில்லை.அதனால் ஒவ்வொரு மூடையாகத் தூக்கிச் சென்று ஏற்றினார்.அவரைக்கவனித்தமுதலாளி,''முல்லா,நீ மட்டும் ஏன் ஒவ்வொரு மூடையாகத் தூக்குகிறாய்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார், ''முதலாளி, அவர்கள் எல்லாம் சுத்த சோம்பேறிகள்.இரண்டு மூடை தூக்க இரண்டு தடவை இங்கும் அங்கும் நடக்க வேண்டும் என்று பயந்து இரண்டிரண்டு மூடைகளாகத் தூக்குகிறார்கள்.''
******
''முல்லா,உண்மையின் விலை என்ன?''என்று ஒருவர் கேட்டார்.முல்லா சொன்னார்,''உண்மை வேண்டும் என்றால் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டும்,''நண்பர் ,''அது ஏன் அப்படி?''என்று கேட்டார்.முல்லா சிரித்துக் கொண்டே சொன்னார்,''இது பொருளாதாரத்தின் சாதாரண விதி.
அபூர்வமான பொருட்களுக்கு அதிக விலை கொடுத்துத் தானே ஆக வேண்டும்?''
******

ஏற்றுக் கொள்ளுங்கள்.

1

Posted on : Friday, December 14, 2012 | By : ஜெயராஜன் | In :

காற்றோடு சண்டை போட முடியுமா?கடலோடு மோதிப் பார்க்க முடியுமா?நம்மால் முடியாத பல விசயங்கள் உள்ளன.நிச்சயமாக நேரிடப் போகின்ற ஒன்றை உங்களால் தடுத்து நிறுத்தி விட முடியுமா?மலையை உடைக்கிறேன் பார் என்று மண்டையை உடைத்துக் கொள்ளலாமா?ஆகவே உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.
நம்மால் தடுக்க முடியாத , மாற்ற முடியாத மற்றும் புரிந்து கொள்ள முடியாத விசயங்கள் உலகில் நிறைய உள்ளன.நம்மால் மாற்ற முடியாதவைகளுக்கு எதிராக ஏன் போரிட வேண்டும்?தனது கட்டுப் பாட்டிற்கு மீறி நடக்கக் கூடியவைகளை ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.தனது நிகழ் காலக் குறைகளையும்,பிறரும் தங்களது குறைகளுடனேயே வாழ்கிறார்கள் என்ப தையும் ஏற்றுக் கொள்ளுங்கள் .எதை நீங்கள் தவிர்க்க முடியாதோ,எதை நீங்கள் மாற்றமுடியாதோ,அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

என்ன காரணம்?

1

Posted on : Thursday, December 13, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதர் தான்,'மனைவிக்கு பயப்படாதவர்கள்சங்கம்'என்று ஒன்று ஆரம்பிக்கப் போவதாகவும் தகுதியுள்ளவர்கள் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்தில் கூடுமாறும் அறிவிப்பு கொடுத்திருந்தார்.அதற்கு நிறையப் பேர் வந்திருந்தனர்.முல்லாவும் அங்கு ஆவலுடன் சென்றார்.தலைவர்,''ஆரம்பத்திலேயே இவ்வளவு பேர் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.இருந்தாலும் மீண்டும் சொல்கிறேன்,உண்மையிலேயே மனைவிக்குப் பயப்படாதவர்கள் மட்டும் இங்குள்ள நாற்காலிகளில் அமருங்கள்.மற்றவர்கள் தயவுசெய்து வெளியே போய் விடுங்கள்,'' என்றார்.அனைவரும் அமர்ந்து விட்டனர்.முல்லா மட்டும் நாற்காலியில் அமரவில்லை.தலைவர் காரணம் கேட்க முல்லா சொன்னார்,''எனக்கும் உட்கார ஆசைதான்.ஆனால் நேற்று இரவு என் வீட்டில்  நடந்த சண்டையில் என் மனைவி அடி பின்னிவிட்டாள்.உடலெங்கும் வேதனையாய் இருக்கிறது.அதனால் எதிலும் உட்காரக்கூட என்னால் முடியவில்லை.''

கோபத்திலிருந்து விடுதலை

0

Posted on : Thursday, December 13, 2012 | By : ஜெயராஜன் | In :

கோபம் என்பது ஒரு அரக்ககுணம்.ஒருவருக்கொருவரிடையே உள்ள மன வேறுபாட்டினாலும் ,மற்றவர்களின் பேச்சை,செயலை ஏற்றுக் கொள்ள முடியாத போதும் மற்றவர்கள் செய்யும் தவறுகளையும்,பலவீனங்களையும் பார்த்து சகித்துக் கொள்ள முடியாததாலும் மனிதனுக்கு கோபம் வருகிறது. அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி?
*மற்றவர்களை சரியாகப் புரிந்து கொள்ள முடியாத போதும்,ஏற்றுக் கொள்ள இயலாத போதும்,எதிர்க்கும் போதும் அன்புடன் அவர்களுக்கு விளக்கி சொல்லி  திருத்த முயல வேண்டும்.
*உங்கள் கோபத்தை உங்களாலேயே அடக்க முடியாதபோது அடுத்தவர்களின் குறைகளை ஏன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்?கோபித்துக் கொள்வதை விடுத்து அவர்களைத் திருத்த முயற்சி செய்யலாமே?
*விரோதிகளிடம் பேசும்போது கூட அன்பான வார்த்தைகளைப் பயன் படுத்துங்கள்.இதனால் உங்கள் கோபம் தலை தூக்காது.மற்றவர்களின் கோபமும் தணிந்து விடும்.
*அதிக வெப்ப நிலையில் உள்ள இரும்பைக்கூட குளிர்ந்த இரும்பு வெட்டி விடுகிறது.ஆகவே காரசாரமாகப் பேசுபவரிடம் அமைதியாகப் பேசினால் உறுதியாக வெற்றி கிடைக்கும்.
*மற்றவர்களுக்குத் துன்பம் கொடுக்கும்போது நாமும்  துன்பம் அடைகிறோம் என்பதனை உணர வேண்டும்.அமைதியாக காரியங்களை செய்து வெற்றி காண வேண்டும்.
*சிறு கோபமோ,பெரிய கோபமோ முதலில் ஏதோ பலன் கிட்டியதுபோலத் தோன்றினாலும் நன்கு யோசித்தால் அதில் நிரந்தரப் பயன் ஏதும் இல்லை என்பது விளங்கும்.எல்லாவற்றிற்கும் மேல் கோபத்தினால் நாம் விலை மதிப்பற்ற நமது நிம்மதியை இழந்து விடுகிறோம்.
*மற்றவர்கள் நம்மீது கோபித்தால் அது நமக்குப் பிடிக்கிறதா?அதேபோல நமது கோபமும் அடுத்தவர்களுக்குப் பிடிக்காதல்லவா?ரோஜாவாக இருந்தால்  எவ்வளவு அழகாக இருக்கும்?அதை விடுத்து ஏன் ரோஜாவின் முள்ளாக இருக்க வேண்டும்?தீர்க்கமாக சிந்தித்தால் கோபம் நம்மைவிட்டு தானாகவே ஓடிவிடும்!

வாக்குமூலம்

2

Posted on : Wednesday, December 12, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்.கணவன்,மனைவி இருவருமே கருப்பு.மூன்று குழந்தைகளும் கருப்பு.இப்போது நான்காவது குழந்தை பிறந்திருக்கிறது.அந்த குழந்தை சிவப்பாக பிறந்துள்ளது.கணவனுக்கு மனைவியின் மீது கடும் சந்தேகம் ஏற்பட்டது.கணவன் மனைவியிடம் உண்மையை சொல்லுமாறு பலவாறு கேட்டான்.மனைவி கடைசிவரைஇந்தக் குழந்தைக்குத் தகப்பன் அவன்தான்என்று கூறிக்கொண்டே இருந்தாள்.ஒரு நிலையில் அவன் கோபம் கட்டுக்கடங்காமல் போனபோது அவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுவிட்டு,''சாகும் முன்பாவது உண்மையை சொல்லிவிடு,''என்று கோபமாகக் கேட்டான்.அவள் அப்போதும் ,''இந்தக் குழந்தை உன் குழந்தை தான்,''என்று அவன் தலையில் கைவைத்து சத்தியம்செய்தாள்.கணவனுக்கு தான் தவறு செய்து விட்டோமோ என்கின்ற ஆதங்கம் வந்து விட்டது.கனிவுடன் அவளை நோக்கினான்.அப்போது அவள் அவனை அருகில் அழைத்து,''நான் சாகும் முன் நீண்ட நாட்களாக உங்களிடம் மறைத்த உண்மையை இப்போது சொல்லி விடுகிறேன்.இந்தக் குழந்தை உங்கள் குழந்தை என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.ஆனால்முதல் மூன்று குழந்தைகளும் உங்கள் குழந்தைகள் அல்ல.''

வாதத்திறமை

1

Posted on : Tuesday, December 11, 2012 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு புரட்சியாளர்.பொது உடைமைவாதி.தீவிர நாத்திகவாதி.அவர் இறந்தவுடன் அவரை நரகத்திற்குக் கொண்டு போனார்கள்.ஒரு வாரம் கழிந்தது..நரகத்தின் அதிபதி மிகுந்த விசனத்துடன் சொர்க்கத்தின் அதிபதியைப் பார்க்க வந்தார்.விபரம்என்ன என்று கேட்க அவர் சொன்னார்,''ஒரு புரட்சியாளரை என்னிடம் அனுப்பியிருக்கிறார்கள்.அவரோட தொல்லை தாங்க முடியவில்லை.தண்டனைகள் கடுமையாயிருக்கிறது என்று எல்லோரையும் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்கிறார்.குளிர் பதனவசதி வேண்டுமாம்.ரொம்ப நேரம் வேலை வங்கக் கூடாதாம்.அவர் வந்ததும் அனைவரும் அவர் பின்னே சென்று விட்டனர்.எனக்காக அவரை ஒரு மாதம் மட்டும் உங்களிடம் வைத்துக் கொள்ளுங்களேன்,''சொர்க்கத்தின் அதிபதி,''இது பற்றி கடவுளிடம் கேட்க வேண்டாமா?''என்று கேட்க நரகத்தலைவர்,''ஒரு மாதம்தானே,நமக்குள் இது இருக்கட்டும்.ஒரு மாதம் கழிந்தபின் நானே வந்து அவரை அழைத்து சென்று விடுகிறேன்,''என்று சொல்லவும் தட்ட முடியாமல் அந்த புரட்சியாளரை சொர்க்கத்தில் தங்க அனுமதி கொடுத்தார்.ஒரு மாதம் கழிந்தது.வாக்குத் தவறாமல் நரகத்தலைவர் வந்து சொர்க்கத்திலிருந்த  அந்த மனிதரை அழைத்து செல்ல வந்தார்.இப்போது சொர்க்கத்தலைவர் ,''அதற்குள் ஒரு மாதம் ஆகி விட்டதா!அவர் என்னிடமே இருக்கட்டுமே!இந்த ஒரு மாதத்தில் எனக்கு அவர் நல்ல நண்பர் ஆகி விட்டார்.என்னுடன் நல்லபல விவாதங்களை நடத்துகிறார்.பொழுது போவதே தெரியவில்லை.'' என்றார்.அதிர்ச்சியுற்ற நரகத்தலைவர்,''நிரந்தரமாக அவர் உங்களிடம் இருக்க வேண்டுமானால் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டுமே''என்று கவலை தெரிவித்தார்.உடனே சொர்க்கத்தலைவர் சொன்னார்,''கடவுளா!கடவுள் என்ற ஒன்றே கிடையாதே!கடவுள் இருக்கிறார் என்று யார் சொன்னது?''

உப்பா,சர்க்கரையா?

1

Posted on : Sunday, December 09, 2012 | By : ஜெயராஜன் | In :

பாரசீகத்தை சாஞ்சன் என்னும் மன்னன் ஆண்டபோது அவரது அரசவையில் ரஷீத்,பொகானி என்ற இரண்டு பெரும் புலவர்கள் இருந்தனர்.இருவருமே சிறப்பாக செயல் படக்கூடியவர்கள்.இருந்தபோதும் அவர்களுக்குள் கடும் காழ்ப்புணர்ச்சி.ஒருவரை ஒருவர் காலை  வாருவதற்கான வாய்ப்பைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.ஒருநாள் மன்னர் பொகானியிடம் கேட்டார்,''ரஷீத்தின் கவிதைகள் எப்படி?உங்கள் அபிப்பிராயம் என்ன?''பொகானி சொன்னார், ''நன்றாகத்தான் இருக்கிறது.ஆனாலும் உப்பு போதாது.''மன்னர் சிரித்துக் கொண்டே ரஷீத்திடம் இதுபற்றி அவருடைய பதிலைக் கேட்டார்.ரஷீத்தும் சிரித்துக் கொண்டே,''அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சரி. ''என்றார். அவருடைய பதில் கேட்டு அவரை ஆச்சரியத்துடன் பார்த்தார்,பொகானி.ரஷீத் தொடர்ந்தார்,''எனது கவிதை வரிகளில் தேனும் சர்க்கரையும் அதிகமாக இருக்கும்.உப்பு அதில் இருந்தால் அது கெட்டு விடும்.அதனால்தான் என் கவிதைகளில் நான் உப்பு சேர்ப்பதில்லை.ஆனால் பொகானி யின் கவிதைகளில் உப்பு அதிகம்.ஏனெனில் அவருடைய கவிதைகள் அழுகிய முட்டைக்கோஸ்,கத்தரிக்காய் போன்றது.அது தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் நிறைய உப்பு போட வேண்டும் அல்லவா?''

யார் பேசலாம்?

1

Posted on : Sunday, December 09, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை பீகார் மாநில சம்பந்தமான பிரச்சினை ஒன்று பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தது.காலத்தின் அருமை கருதிஅவைத் தலைவர் இந்த விவாதத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மட்டும் பேசலாம் என்றார்.அப்போது பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த வாஜ்பாய் எழுந்து பேச ஆரம்பித்தார்.உடனே அவைத்தலைவர் தலையிட்டு,''நீங்கள் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்தவராயிற்றே.அதனால் நீங்கள் பேசக் கூடாது,'' என்றார்.அதற்கு வாஜ்பாய்,''நானும் பீகாரிதானே,'' என்றார். அவைத் தலைவருக்கு ஒன்றும் புரியவில்லை.வாஜ்பாயியே பின்னர் சிரித்துக் கொண்டு சொன்னார்,''என் முழுப் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய் தானே!அதனால் நானும் பேசலாம் என்று நினைத்தேன்.''

போருக்கான செலவு

3

Posted on : Saturday, December 08, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒப்புயர்வற்ற விண்வெளி அறிவியல் நிபுணரும் எழுத்தாளருமான கார்ல் சாகன் சொல்கிறார்,''மனித சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள  வில்லை  என்றால்,மனித இனத்திற்கு புதிய வாய்ப்புகளும்,மகிழ்ச்சிகரமான அனுபவங்களும் எப்போதும் கிடைக்கும்,''ஆனால் இன்று ஒவ்வொரு நாடும் போருக்காக செய்யும் செலவுகள் ,சமூகம் தன்னைத்தானே அழித்துக் கொள்ள வழிவகை செய்வதாகவே இருக்கிறது.. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் போருக்காக செலவிடப்படும் பணம் கிடைக்குமானால், அதைக் கொண்டு மனித இனம் முழுமைக்கும் கீழ்க்கண்ட நலன்களை ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
*இரண்டு கோடி படுக்கைகள் கொண்ட முப்பதாயிரம் மருத்துவ மனைகள் கட்ட முடியும்.
*நாற்பது கோடி குழந்தைகள் படிப்பதற்கு ஆறு லட்சம் பள்ளிகள் திறக்க முடியும்.
*இரண்டு கோடி மனிதர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கக்கூடிய இருபதாயிரம் தொழிற் சாலைகள் தொடங்க முடியும்.
*முப்பது கோடி மக்களுக்கு வேண்டிய ஆறு கோடி குடியிருப்பு மனைகளைக் கட்டிக் கொடுக்க முடியும்.
*நூறு கோடி மக்களுக்கு வேண்டிய உணவு தானியங்களை உற்பத்தி செய்யலாம்.
இதைப்பற்றி யார் சிந்திக்கப் போகிறார்கள்?

லஞ்சம்

0

Posted on : Friday, December 07, 2012 | By : ஜெயராஜன் | In :

நாட்டில் லஞ்சம் எங்கும் தலை விரித்தாடுகிறது என்று சொல்கிறோம்.பல நூற்றாண்டுகளுக்கு முன் கடுமையான நிர்வாக நியதிகளைப் படைத்த சாணக்கியர் இது குறித்து என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
''நாக்கின் மீது வைக்கப்பட்டது தேனானாலும்,விசமானாலும் ருசி பார்க்காமல் இருப்பது எப்படி இயலாத காரியமோ,அப்படியே பண விவகாரங்களைப் பார்க்கின்ற அதிகாரிகளும் கொஞ்சமாவது அரசாங்கப் பணத்தை ருசி பார்க்காமல் இருக்க மாட்டார்கள்.''
''நீரில் நீந்தும் மீன்கள் எப்போது நீரைக் குடிக்கின்றன என்று அறிந்து கொள்வது மிகவும் கடினம்.அது போலவே,அந்தந்த காரியங்களை நிர்வாகம் செய்யும் திறமையான அதிகாரிகள்,பணத்தை எவ்வாறு அபகரித்துக் கொள்வார்கள் என்பதை அறிவது மிகவும் கடினம்.''
''வானில் பறக்கும் பறவைகளின் வழியையாவது குறிப்பிடலாம்.ஆனால் மேலுக்கு எதுவும் தெரியாமல் வேலை செய்யும் அதிகாரிகள் எந்த வழியில் பணத்தை அபகரிக்கிறார்கள் என்பதை அறிய இயலாது.''
********
அந்தக் காலத்தில் சாப்பாட்டின் அளவு எவ்வளவு இருந்தது  என்பதை சாணக்கியரின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீரனுக்கு::ஒரு படி அரிசி,கால் படி பருப்பு வகைகள்,இதில் பதினாறில் ஒரு பாகம் உப்பு,நான்கில் ஒரு பாகம் எண்ணெய்அல்லது நெய்.
ஆண்களுக்கு:ஒரு படி அரிசி,அதற்கு ஆறில் ஒரு பங்கு பருப்பு வகைகள்,அதில் பாதிக்கு எண்ணெய் .
பெண்களுக்கு:ஆண்களின் உணவில் முக்கால் பங்கு.
சிறுவர்களுக்கு:அரைப்பங்கு.
********

மன்னர் வந்தார்.

1

Posted on : Thursday, December 06, 2012 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார்.அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார்.மன்னர் அவரிடம்,''மற்றவர்கள் எல்லாம் எங்கே?''என்று கேட்க, விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பேதைப் பெண் ,''அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,'' என்று சொன்னார்.''அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?''என்று மன்னர் கேட்டார்.அதற்கு அந்தப்பெண்,''மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் அல்ல.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களைக் காப்பாற்ற வேண்டியகட்டாயம் எனக்கு இருக்கிறது.அதனால்தான் போகவில்லை,''என்றார்.மன்னர் அவரது கையில் சில நூறு பவுண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு,''உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள்.நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோஎன்னைப் பார்க்க வந்தார் என்று..''என்றார்.விஷயம் தெரிந்த அப்பெண் ஆனந்த அதிர்ச்சியுற்றார்.

தேர்ந்த தகவல்கள்

1

Posted on : Thursday, December 06, 2012 | By : ஜெயராஜன் | In :

மூங்கில் ஒரு நாளைக்கு பதினைந்து அங்குலம் வரை வளரும்.
******
ஈ,எறும்பு முதலிய பூச்சிகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.
******
ஹவாய் நாட்டின் மொழிக்கு பன்னிரண்டு எழுத்துக்கள்தான் உண்டு. உலகிலேயே குறைந்த எழுத்துக்கள் கொண்ட மொழி இதுதான்.
******
மெட்ரே டி டயாஸ் (madro de dias)என்ற பிரெஞ்சுச் சொல்லின் மறு வடிவமே மதராஸ் ஆகும்.
******
இந்தியாவின் முதல் நகராட்சி சென்னைதான்.இது உருவானது 1688ல் .
******
துப்பாக்கியைத் தனது நாட்டின் கொடியில் சின்னமாக வைத்திருக்கும் ஒரே நாடு மொசாம்பிக்.
******
ஒருவர் தும்மும்போது நீர்த்திவலைகள் மணிக்கு நூறு மைல் வேகத்தில் செல்லக் கூடியவை.
******
வெள்ளைப் புரட்சி என்பது பால் வளம் பெருக்குதல்.
******
இந்தியாவில் முதல் முதலாக ஒரு ரூபாய் நாணயம் 1542ல் மன்னர் செர்ஷாவின் ஆட்சியில் வெளியிடப்பட்டது.இது சுத்தமான வெள்ளியில் 179கிராம் எடை கொண்டது.
******
பாண்டிச்சேரியின் முன்னாள் பெயர்கள் வேதபுரி,அகத்தீஸ்வரம்.
******
எவரெஸ்ட் சிகரம் இந்தியாவின் முன்னாள் சர்வேயர் ஜெனரல் சர்.ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
******
யூகலிப்டஸ் மரம் 'பச்சைத்தங்கம்' என்று அழைக்கப்படுகிறது.
******
அரசாங்க முத்திரையில் பதிக்கப்பட்டுள்ள 'சத்யமேவ ஜெயதே'எனும் வாசகம் முண்டக உபநிசத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
******


கடி, கடி

1

Posted on : Wednesday, December 05, 2012 | By : ஜெயராஜன் | In :

''நிதி நிறுவனத்துக்கும்,குதிரைப் பந்தயத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன தெரியுமா?''
'நீயே சொல்லு,'
''நிதி நிறுவன அதிபர்  ஓட மாட்டார் என்று நினைத்துப் பணத்தைப் போட்டால்  அவர் ஓடி விடுவார்.ஓடிவிடும் என்று நினைத்து குதிரையின் மீது பணம் கட்டினால் அது ஓடாது.''
******
''நான் தோசை செய்தேன்.''
நிஜமாவா?
''நிஜ மாவில் செய்யவில்லை.அரிசி மாவில் செய்தேன்.
******
''இந்தக் கடிதம் மொட்டைக் கடிதம் என்று எப்படி சொல்கிறாய்?''
'நாலு மூலையிலும் சந்தனம் தடவி இருக்கே!'
******
நம்ம தலைவர் பேசிக்கிட்டிருந்தபோது எதிரே இருந்த மரங்களெல்லாம் விழுந்து விட்டதாமே!
''அவருதான் பேசியே அறுத்திட்டாரே!''
******
''ஏண்டா தேர்வு அறையில் தூங்குகிறே?''
'நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலை என்று முழிச்சிக்கிட்டு இருக்காதே என்று சொன்னீர்கள்?
******
ஆசிரியர்:ஏதேனும் ஒரு திரவத்தின் பெயரை சொல்லு,''
மாணவன்:உபத்திரவம்.
******
''எங்க அப்பா பத்து ஆண்டாக வியாபாரம் செய்கிறார்.ஆனால் சேமிப்பே இல்லை.''
'என்ன வியாபாரம்?'
சேமியா வியாபாரம்.''
******
''ரெண்டு கண்ணிருக்கே,அரிசியில் ஒழுங்காய் கல்லைப் பொறுக்க முடியாதா?''
'முப்பத்திரண்டு பல்லு இருக்கே,மெல்ல முடியாதா?'
******
''போன வாரம் உங்க கடையில் வாங்கின பருப்பில முழுவதும் ஓட்டையாயிருந்தது.''
நீங்க எழுதிக் கொடுத்ததைப் பாருங்க!நீங்க துவாரம் பருப்பு வேண்டும்  என்று தானே எழுதியிருக்கிறீர்கள்!'
******

பயம்

2

Posted on : Wednesday, December 05, 2012 | By : ஜெயராஜன் | In :

அன்றாட வாழ்க்கையை ஒட்டிய பயம்,இறப்பைப் பற்றிய பயம்,துயரம் விளைந்து  விடுமோ என்ற பயம்,அர்த்தமற்ற வாழ்க்கை வாழ்கிறோமோ என்ற பயம்,இருப்பதை இழந்து விடுவோமோ என்ற பயம் இப்படி பல்வேறு பயங்களில்  நாம் வாழ்கிறோம்.பயத்தைப் போக்க சிறந்த வழி,அப்பயத்தை நேரடியாக எதிர்கொள்வதுதான்.எவ்வளவு பயப்படுகிறோமோ அந்த அளவு அது நம்மை பயமுறுத்துகிறது.இதற்கு என்னதான் தீர்வு?
கடந்ததை மறந்து விடுங்கள்.கடந்த காலத்தில் நடந்த எதையும் உங்களால் மாற்ற முடியாது.மாற்ற முடியாத ஒன்றை எதற்காக மனதில் வைத்து வதைபடுகிரீர்கள்?கண்ணிலிருந்து மறைந்ததைப் பற்றியோ,கண்ணுக்குப் புலப்படாததைப் பற்றியோ கவலைப் படுவதால் ஒரு பயனும் இல்லை.ஆறாத ரணம் என்று எதுவும் இல்லை.ஒரு வாரத்தில் ஆறும்.அல்லது ஒரு மாதத்தில் ஆறும்.நேற்றைய காயம் நாளைய வடு.அது மறைவதில்லை.அதே சமயம் வலிப்பதுமில்லை.ஒரு கதவு மூடும்போது இன்னொரு கதவு திறந்து கொள்கிறது.இது இயற்கை வகுத்த நியதியாகும்.உங்களால் சுமக்க முடியாத எந்த சுமையையும் கடவுள் உங்களுக்கு அளிக்க மாட்டார்.ஆகவே கவலைப்பட ஏதுமில்லை.அன்றைய உணவு,அன்றைய உறக்கம் என்பதுபோல அன்றைக்கான கவலைகளே போதும்.நேற்றைய கவலை,இன்றைய கவலை,நாளைய கவலை என்று பளுவைத் தூக்கிக் கொள்ளாதீர்கள்.

சுலபம்

1

Posted on : Tuesday, December 04, 2012 | By : ஜெயராஜன் | In :

அந்தரே என்பவர் இலங்கை மன்னரின் சபையில் இருந்த விகடகவி.அவர் சிறுவனாயிருக்கும்போது வீட்டிற்கு அருகில் ஒரு கிழவியிடம் அப்பங்கள் வாங்கி வருவார்.கிழவி ஒரு நாள் அவரை எமாற்ற நினைத்து சிறு சிறு அப்பங்களாகத் தந்தாள்.அந்தரே ,''ஏன் சிறு அப்பங்களாகத் தருகிறாய்?''என வினவ கிழவியும் ,''நீ சிறிய பையன்.சிறு அப்பத்தைத் தூக்கிச் செல்வது எளிதாக இருக்கும்.''என்றாள்'பணம் கொடுக்கும்போது அந்தரே ஒரு ரூபாய்க்குப் பதிலாக ஐம்பது காசுகள் மட்டும் கொடுத்தவுடன் கிழவி,''காசு குறைவாக இருக்கிறதே?''என்று கேட்டாள்.அதற்கு அந்தரே,''வயதான உனக்கு காசை எண்ணிப் பார்க்க சுலபமாக இருக்கும் என்றுதான் குறைவாகக் கொடுத்தேன்.''என்றார்.

பொன்மொழிகள்-36

0

Posted on : Tuesday, December 04, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவனது குறிக்கோளைக் கொண்டே அவன் எத்தகையவன் என்பதை அறியலாம்.
******
எவனிடம் வீரமில்லாத ஒழுக்கமோ,ஒழுக்கம் இல்லாத வீரமோ உள்ளதோ அவனே கோழை.
******
ஒரு நல்ல நூலைப்போல சிறந்த நண்பன் வேறில்லை.
******
பொருளற்றவனைக் காட்டிலும் பொருளுடையவனே மிகவும் துன்புறுகிறான்.
******
மற்றவருக்கு ஆறுதல் சொல்லும்போது இருக்கும் தைரியம் தனக்கு தேவைப்படும்போது இருப்பதில்லை.
******
திருட்டுப் பொருளை விலை கொடுத்து வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.
******
சிக்கனமாக இல்லாதவன் மகிழ்ச்சியாக வாழ முடியாது.
******
புகழ் என்பது ஒருவன் தன்னோடு வைத்து வளர்க்கும் சொந்த ஆபத்து.
******
உலகிற்கு மனிதன் தனியாக வருவதுபோல உலகிலிருந்து தனியாகவே போகிறான்.
******
எதிரி ஓடிவிட்டால் எவனும் வீரன்தான்.
******
வறுமையில் கசந்தால்தான் செல்வத்தின் இனிமை தெரியும்.
******
செயலே புகழ் பரப்பும்;வாய் அல்ல.
******
சிரிப்பு,குழந்தை உலகின் இசை.
******

என்ன பெயர் வைப்பது?

1

Posted on : Monday, December 03, 2012 | By : ஜெயராஜன் | In :

இங்கிலாந்தில் ஒரு மூத்த அரசியல்வாதி இருந்தார்.அவர் உடல் பருத்த மனிதர்.அவருடைய தொப்பை மிகப் பெரியதாக இருக்கும்.அவரைக் கேலி செய்ய நினைத்த சர்ச்சில் ,''என்ன சார்,எப்போது உங்களுக்கு பிரசவம்?குழந்தைக்கு என்ன பெயர் வைப்பதாக உத்தேசம்?''என்று பலர் முன்னால்  கேட்டார்.அவரும் சளைக்காமல்,''ஆணாக இருந்தால் மன்னரின் நினைவாக ஜார்ஜ் என்று பெயர் சூட்டுவேன்.பெண்ணாகப் பிறந்தால், ராணியின் நினைவாக மேரி என்று பெயர் சூட்டுவேன்.வெறும் வாயுவாக இருந்தால்,உங்கள் நினைவாக சர்ச்சில் வயிறு என்று என் வயிற்றுக்கு பெயர் சூட்டி விடுவேன்.''என்றார்.அதன்பின் அங்கே சர்ச்சில் நிற்பாரா என்ன?
********
இந்தி நடிகர் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தில் ஜோக்கராக நடித்து புகழ் பெற்றிருந்த நேரம்.அவரை ஒரு அரசியல்வாதி சந்தித்தார்.,''நீங்கள் ஏன் ராஜ்ய சபா எம்.பி.பதவிக்குப் போட்டி போடக் கூடாது?''என்று கேட்டார்.அதற்கு ராஜ்கபூர் சொன்னார்,''பாராளுமன்றத்தில் நான் முட்டாளாக இருப்பதை விட படத்தில் ஜோக்கராகவே இருந்து விட்டுப் போகிறேனே!''
********

இரண்டு முகம்

1

Posted on : Monday, December 03, 2012 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கனின் முகம் வடுக்களுடனும் சிடுசிடுப்பாக இருப்பது போலும் இருக்கும்.ஆனால் அவரிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் இருந்தது.ஒரு நாள் பொது விவாதம் ஒன்றில் லிங்கன் கலந்து கொண்டார்.அப்போது அவருக்கு எதிராகப் பேசிய ஒரு அரசியல்வாதி அவருக்கே  உரித்தான பாணியில்,''லிங்கன் இரட்டை முகம் கொண்டவர். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி முகத்தை மாற்றி வைத்துப் பேசுவார்,''என்று பேசினார்.அவர் சொல்ல வந்தது,லிங்கன் தனது  கொள்கையில் ஒரே மாதிரி கருத்துடன் இருப்பதில்லை என்பதே.ஆனாலும் லிங்கன் பேசும்போது,''எதிர்க் கட்சி நண்பரின் இந்தக் கூற்றை பார்வையாளர்களான உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.எனக்கு மட்டும் இரண்டு முகங்கள் இருந்தால்,இந்த அசிங்கமான முகத்தை ஏன் நான் வைத்துக் கொண்டிருக்கிறேன்?மாற்றிக் கொண்டிருக்க மாட்டேனா?''என்றதும் எதிர்க் கட்சிக்காரரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

புத்திசாலிகள்

2

Posted on : Sunday, December 02, 2012 | By : ஜெயராஜன் | In :

ருமேனியாவை ஆண்ட ஒரு மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.தலைமறைவாக இருந்த அவர் இங்கிலாந்து,மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளை சந்தித்து ''நான் இங்கிலாந்துக்கு பத்து இளைஞர்களையும்,அமெரிக்காவுக்கு பத்து இளைஞர்களையும் அனுப்பி வைக்கிறேன்.அவர்களுக்கு அரசாங்க நிர்வாகப் பயிற்சிகளை சொல்லிக் கொடுத்து எங்கள் நாட்டுக்கு திரும்ப அனுப்பி வையுங்கள்.நான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்போது அவர்கள் எனக்கு உபயோகமாயிருப்பார்கள்.''என்று கேட்டுக் கொண்டார்.அதேபோல இளைஞர்களும் இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.சில மாதங்கள் கழித்து பயிற்சி முடிந்தது.மன்னரும் ஆட்சியைப் பிடித்தார்.மன்னரின் நண்பர் கேட்டார், ''பயிற்சி பெற்ற இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?''மன்னர் சொன்னார்,''இங்கிலாந்தில் தேர்ச்சி பெற்ற பத்து பேரும் புத்திசாலிகளாக  இருப்பதால் அவர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி விட்டேன்.'' நண்பர்,''அமெரிக்க போனவர்கள் எப்படி?''என்று கேட்க மன்னர் அமைதியாக,''அவர்கள் அதி புத்திசாலிகள்!அவர்கள் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்கள்.''என்றார்.

மீண்டும் 'கடி'

2

Posted on : Sunday, December 02, 2012 | By : ஜெயராஜன் | In :

''உண்மை பேசுவதற்கு முன் இனிப்பு சாப்பிட வேண்டும் என்று சொல்கிறீர்களே, அது ஏன்?''
'உண்மை கசக்குமே!'
********
''தினசரி காலண்டர் தயாரிப்பவரின் மகளைக் கல்யாணம் செய்தது தப்பாப் போச்சு.''
''ஏன்,என்ன பிரச்சினை?'
''தினசரிஎன்னை கிழிகிழி என்று கிழிக்கிறாள்.''
********
கணவன்:நம்மவீட்டை விக்கிற வரைக்கும் உங்கம்மாவ உங்க அண்ணன் வீட்டில் இருந்து கொள்ளச் சொல்கிறாயா?
மனைவி:வீட்டை விக்கிறதுக்கும் அம்மாவிற்கும் என்ன சம்பந்தம்?
கணவன்:வில்லங்கம் இருக்கிற வீட்டை யாரும் வாங்கிக்க மாட்டாங்களாமே!
********
டாக்டர்:தைரியமாய் இருங்க!நீங்க பூரண குணம் அடைய வேண்டி வெளியே பல பேர் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.
நோயாளி:நீங்க வேற விபரம் தெரியாம பேசாதீங்க,டாக்டர்.அவர்களெல்லாம் எனக்குக் கடன் கொடுத்தவர்கள்.''
********
''மாப்பிள்ளை இருபது பவுன் நகையும் ஒரு லட்சம் ரொக்கமும் கேட்கிறாராமே!''
''இந்தக் காலத்தில இதெல்லாம் சகஜமாயிடுத்தே!'
''அதற்காக அறுபதாம் கல்யாணத்துக்கெல்லாமா கேட்பார்கள்?''
********
''ஆபிசுக்கு தாமதமா வர்ற கேசியர் மாலா ஏன் தலைவிரி கோலமா வர்றாங்க?''
'ஆபீசுக்கு தாமதமா வந்தா இப்ப வந்திருக்கிற மேனேஜர் பின்னிடுவாராம்,பின்னி!'
********
தொலைபேசியில் ஒருவர்:ஹலோ,அறுவைக்கு எதிர்ப்பதம் என்ன?
மற்றவர்:அறுக்காதே,வை.
********
''வாம்மா,மாப்பிள்ள எப்படி இருக்கிறார்?என்னை ரொம்பக் கேட்டதாகச் சொல்லியிருப்பாரே?''
'ரொம்ப இல்லப்பா,கொஞ்சம்தான்.பத்தாயிரம் ரூபாய்தான் கேட்டதா சொல்லச்சொன்னார்.'
********
நண்பன்:உன் மனைவிக்கு பெரிய அட்டிகை செய்து போட்டதற்குப் பதிலாக ஒரு கார் வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
மற்றவர்:அவளும் அதைத்தான் விரும்பினாள்.ஆனாலும் கார் கவரிங்கில்  கிடைக்காதே!
********
பெண்ணின் தாயார்:நாங்க  நாற்பது பவுன் போடுவோம்.நீங்க என்ன போடுவீங்க?
பையனின் தாயார்:அதில் அரைப் பவுன் குறைந்தாலும் சண்டை போடுவோம்.
********

குடை

1

Posted on : Saturday, December 01, 2012 | By : ஜெயராஜன் | In :

பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைனிடம் ஒரு பழைய குடை இருந்தது.அவர் எப்போதும் இந்தக் குடையுடன் தான் காணப்படுவார்.ஒரு நாள் அவருக்கே இந்தக் குடை கிழிந்து அசிங்கமாக இருக்கிறதே என்று தோன்றியது .அதை உடனே வழியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றார்.சிறிது நேரத்திலேயே அவருடைய நண்பர் ஒருவர்,''என்ன உன் குடையைத் தவறிக் கீழே விட்டு விட்டாயா?யாரோ குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். நல்லவேளை,அதை நான் பார்த்ததால் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். கவனமாகப் பார்த்துக்கொள்,''என்று கூறிக் கொடுத்துச் சென்றார், ட்வைன் தலையில் அடித்துக் கொண்டார்.கீழே போட்டால்தானே எடுத்துக் கொடுக்கிறார்கள் என்று எண்ணிய அவர் மறுநாள் .அக்குடையை ஒரு கிணற்றில் போட்டு விட்டு சென்றார்.மறுநாளே கிணற்றைத் தூர் வாரச் சென்ற ஒருவன் குடையை எடுத்து அது ட்வைனுடையது என்பதறிந்து அவரிடமே கொண்டு வந்து சேர்த்து விட்டான்.அவருக்கு கடும் எரிச்சல் ஏற்பட்டது.எங்கு போட்டாலும்,வேண்டாம் என்று நினைத்த குடை திரும்ப வந்து விடுகிறதே என்று வருந்திய அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்.அடுத்த நாள் மழை பெய்து கொண்டிருந்தது.அவரைப் பார்க்க வந்த நண்பர் வெளியே செல்ல அவரிடம் ஏதாவது குடை இரவல் தர முடியுமா என்று கேட்டார்.மகிழ்ச்சியுடன் அவரும் தனது குடையை எடுத்துக் கொடுத்தார்.அதன்பின் அந்தக் குடையைப் பற்றிய கவலை அவருக்கு வரவே இல்லை.இரவல் கொடுத்த பொருள் திரும்ப வருமா?

திருடன்

1

Posted on : Saturday, December 01, 2012 | By : ஜெயராஜன் | In :

திருடன் ஒருவன் சர்க்கஸ் பார்க்கப் போனான்.அதில் ஒரு நிகழ்ச்சி அவனைக் கவர்ந்தது.ஒரு வளையத்தில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒருவன் பாய்ந்து வந்து அனாயாசமாக அந்த வளையத்துக்குள் பாய்ந்து வெளிவந்தான்.நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அவனைப் பார்த்து,''இங்கு உனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கிறதோ அதைப்போல ஐந்து பங்கு தருகிறேன்.நீ என்னுடன் வா,''என்று கூற அவனும் சரியென்று கிளம்பினான். பின் அவனுக்குத் தனது  தொழில் பற்றிக் கூறிவிட்டு முதல் முறையாக அவனை அழைத்துக் கொண்டு ஒரு வீட்டிற்குத் திருடப் போனான்.அங்கு சுவற்றில் கன்னம் வைத்தான்.பின் சர்க்கஸ்காரனிடம் அந்த துவாரத்துக்குள் பாய்ந்து உள்ளே சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரச்சொன்னான். அந்த துவாரத்தின் உயரம் கிட்டத்தட்ட சர்க்கஸில் இருந்த வளையத்தின் உயரத்திற்கே இருந்தது.இருந்தாலும் அவன் உடனே செயல்படவில்லை. அவன் தயங்கியவாறு நின்றிருந்தான்.திருடன் காரணம் கேட்க அவன் சொன்னான்,''அய்யா,என்னைத் தவறாகஎடுத்துக் கொள்ளாதீர்கள்.என்னால் இது முடியாது.சர்க்கஸில் என்னைச்சுற்றி ஆயிரக்கணக்கானோர் இருந்து என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருப்பர்.அவர்கள் தரும் உற்சாகத்திலேயே நான் அந்த வளையத்துக்குள் பாய்ந்து விடுவேன்.அந்த சூழல் இங்கு இல்லை.எனவே என்னால் இங்கு துவாரத்துக்குள் நுழைவதை எண்ணிக்கூடப் பார்க்க முடியவில்லை.''அடுத்தவர் தரும் உற்சாகத்துக்கு அவ்வளவு வலிமை!

கேள்வி-பதில் 2

2

Posted on : Friday, November 30, 2012 | By : ஜெயராஜன் | In :

கேள்வி:நான் மிக நல்லவன்.யாரையும் நான் கெடுக்க விரும்புவதில்லை. ஆனாலும் எனக்கேன் எல்லோரும் தொல்லை கொடுக்கிறார்கள்?
பதில்:வாழ்க்கையில் எவ்வளவோ போட்டிகள் வரும்.அதற்கு ஈடு கொடுக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:நான் எண்ணியபடி நடக்காவிடில் என் வாழ்க்கையே வீணாகி விடுமே?
பதில்:வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும்,என்று அளவுகோல் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள்.அது ஒரு குறுகிய கண்ணோட்டம் ஆகும். வாழ்க்கையை அதன் வழியிலேயே நடத்துங்கள்.
********
கேள்வி:என் மீது யாருக்கும் இரக்கமும் இல்லை,அனுதாபமும் இல்லை.
பதில்:மற்றவர்கள் நமக்கு கடன் பட்டவர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறது.அந்த எண்ணத்தை முதலில் களையுங்கள்.யாரிடமும் அதிக எதிர்பார்ப்பு வைத்துக் கொள்ளக் கூடாது.எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தையே தரும்.
********
கேள்வி:என்னை ஒருவர் தாழ்த்திப் பேசினால் அதை நான் பொறுப்பதா? அல்லது சாவதா?
பதில்:பிறருடன் சம்பந்தப்படும் எந்த செயலும் விமரிசனத்திற்கு உட்பட்டதே.விமரிசனங்களை ஆராய்ந்து சரியாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும்,தவறாக இருந்தால் அதை மறக்கவும் பழகிக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:நான் பிறர் மீது அளவு கடந்த பாசம் வைப்பதால் கோபப்பட்டு விடுகிறேன்.
பதில்:உணர்ச்சிகளைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாததால் வரும் ஆதங்கம்தான் இது.
********
கேள்வி:நான் எக்காரணத்தைக் கொண்டும் எனது கௌரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்.
பதில்:மற்றவர்கள் நமக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணமும் வீண் பிடிவாதமும்தான் ஒவ்வொருவரும் இவ்வாறுஎண்ணக் காரணம்.
********

கடி

2

Posted on : Thursday, November 29, 2012 | By : ஜெயராஜன் | In :

''பட்டப்பகலில் நடுத்தெருவில் அநியாயம்!என்னால் பார்க்கப் பொறுக்கலை.''
'நீங்க அதற்கு என்ன செஞ்சீங்க?'
''கண்ணை மூடிக்கிட்டே அந்த இடத்தை அவசரமாய்க் கடந்து வந்து விட்டேன்.''
********
''கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது மாதிரி இருக்குங்க...''
'அப்படியா?எந்த சாமியைக் கும்பிடப் புறப்பட்டீங்க?'
''ஆஞ்சநேயர் சுவாமியைத்தான்.''
********
''என்ன மாப்பிள்ளே,நான் வாங்கிக் கொடுத்த தொலைக் காட்சிப் பெட்டியை விற்று விட்டீங்களாமே?''
'நீங்கதானே மாமா,என் பெண்ணை  கண் கலங்காமப் பார்த்துக்கோன்னு சொன்னீங்க!''
********
''நாலு நாளாய் தூக்கமே இல்லையே,டாக்டர்!''
'ஆபீசுக்கு லீவு போடாதேங்கன்னு சொன்னா கேட்டால்தானே!'
********
''ஏண்டா,பேயறைஞ்ச மாதிரி முகத்தை வச்சிக்கிட்டு இருக்கே?''
'அடப்பாவி,என் மனைவி என்னை அடிச்சதை எப்படி கண்டு பிடிச்ச?'
********
டாக்டர்:உங்க உடம்பு எடை குறையணும் என்றால் தினமும் நாலு கிலோமீட்டர் தூரமாவது நடக்க வேண்டும்.
நோயாளி:'நடக்குற' காரியமா சார் அது?
********
''அந்த நோயாளி அபாயக் கட்டத்தைத் தாண்டி பேச ஆரம்பிச்சிட்டார்.''
'அப்புறம்?'
''டாக்டரோட பில்லில் இருந்த அபாய கட்டணத்தை தாண்ட முடியாமல் திரும்ப கோமா நிலைக்குப் போய்விட்டார்.''
********
பத்திரிகை ஆசிரியர்:உங்க கதையிலே நடை சரியில்லையே?
எழுத்தாளர்:அதான்,கதாநாயகனுக்கு ஒரு கால் நொண்டியாச்சே!
********
''என் மனைவிக்கு கோபம் வந்தால் எடுத்தெறிஞ்சு பேசி விடுவாள்.''
'பரவாயில்லையே,என் மனைவிக்குக் கோபம் வந்தால் என் மேலே எதையாவது எடுத்து எறிஞ்சு அப்புறம்தான் பேசுவாள்.'
********

கேள்வி-பதில்

1

Posted on : Thursday, November 29, 2012 | By : ஜெயராஜன் | In :

கேள்வி:''வாழ்க்கை என்பதே சோதனைகள் நிறைந்ததாயிருக்கிறது.என் வாழ்க்கையே சூனியமாகி  விட்டதாய் உணர்கிறேன்.அது ஏன்?
பதில்:பிரச்சினைகளை மிகைப் படுத்திப் பார்ப்பதும் தனது திறமைகளை உணர்ந்து செயல் படாததுமே இவ்வாறு நினைப்பதற்குக் காரணம்.
********
கேள்வி:செய்ய வேண்டிய அனைத்தையும் செய்த பிறகும் கூட மனதில் ஏதோ ஒரு குறை உறுத்திக் கொண்டேயிருக்கிறதே,அது ஏன்?
பதில்:குறைகளை மிகைப் படுத்தும் எதிர்மறைக் கண்ணோட்டம் உடையவர்களுக்கே இந்த எண்ணம் உருவாகும்.எதையும் நேர்மறைக் கண்ணோட்டத்துடன் அணுகிப் பாருங்கள்.
********
கேள்வி:எல்லோரும் என்னைத் தனிமைப் படுத்தி விட்டார்களே?
பதில்:நம்ப வேண்டியவர்களை சந்தேகித்து விடுவதாலும், சந்தேகத்திற்குரியவர்களை நம்பி விடுவதாலும் ஏற்படும் விளைவே இது.
********
கேள்வி:எப்போதும் எனக்கு ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்ற எண்ணமே ஏற்படுகிறது.அதற்கு என்ன செய்வது?
பதில்:மனதின் பயம்,மனதின் பதட்ட நிலை ஆகியவையே இவ்வாறு எண்ணுவதற்குக் காரணம்.நிதானத்தைக் கடைப் பிடித்துப் பாருங்கள்.
********
கேள்வி:நல்ல நிலையில் இருந்த நான் பிறர் சொல்லைக் கேட்டதால் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டேனே.
பதில்:தான் செய்த தவறுக்கு பிறர் மீது பழி சுமத்துதல்,மனதில் தெளிவின்மை ஆகியவையே காரணம்.தவறை ஏற்றுக் கொள்ளும் திறந்த மனப் பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
********
கேள்வி:எனக்கு இளகிய மனம்.எதையும் என்னால் தாங்க முடிவதில்லை. கடந்த காலத்தை என்னால் மறக்க முடியவில்லை.
பதில்:சுமைகளை சேர்த்துக் கொள்ளாதீர்கள்.பிறர் மீது ஆற்றாமை கொள்ளாதீர்கள்.பிறர் குறைபாடுகளை எளிதில் மறக்கப் பழகுங்கள். நடைமுறைக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளப் பழகுங்கள்.
********

அடக்கடவுளே!

4

Posted on : Sunday, November 25, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு பையன் பள்ளிக்கு சற்று தாமதமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். அவனுக்கு ஆசிரியர் அடிப்பாரோ,திட்டுவாரோ,என்று அச்சம் ஏற்பட்டது. எனவே  வேகமாக நடந்து கொண்டே,''கடவுளே,இன்று நான் பள்ளிக்கு தாமதமில்லாமல் சரியான நேரத்திற்கு சென்றிட வேண்டும்.அதற்கு நீ துணை புரிய வேண்டும்.ஆசிரியரிடமிருந்து என்னைக் காக்க வேண்டும்,''என்று வேண்டிக் கொண்டான்.அவனது  கவனம் பிரார்த்தனையில் இருந்ததால் சாலையில் கிடந்த வாழைப்பழத் தோலை கவனிக்கவில்லை.அதில் காலை வைத்ததும் வேகமாக சறுக்கி விழுந்தான்.அது ஒரு இறக்கமான சாலை  என்பதால் சறுக்கியதில் பல அடி தூரம் சென்று விட்டான்,அப்போது அவன்,''அடக் கடவுளே!விரைவில் பள்ளி செல்ல உதவச்சொன்னால் இப்படியா தள்ளி விடுவது?''என்று புலம்பினான்.

எண்ணமே வாழ்வு.

3

Posted on : Sunday, November 25, 2012 | By : ஜெயராஜன் | In :

உன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த பெருமைப் படத்தக்க மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளை உன் மனக் கண் முன்னால்  கொண்டு வந்து நிறுத்தி உனக்கே நீ ஊக்கப் படுத்திக்கொள்.
உன் வேலையை நீ மன அமைதியுடன் தான் செய்து தீர வேண்டும் என்று உனக்கே நீ கட்டளை பிறப்பித்துக் கொள்.
சாப்பிடும்போது கவலைப்படவோ,கோபப்படவோ,பொறாமைப்படவோ செய்யாதே.அவ்வுணர்வுகள் உண்ட உணவை ஒழுங்காக செரிக்க செய்யா.
உடல்,மூளையின் ஊழியன்.எண்ணம்தான் செயல்களின் தலைவன்.ஒரு விஷயத்தை நீ திரும்பத் திரும்ப எண்ணினால்,அது பலமடைந்து உன்னையும் அறியாமல் உனக்கு நலமளிக்கும் வகையிலோ,தீமை பயக்கும் முறையிலோ செயலாற்றுகிறது.
நல்ல எண்ணம் உடலை இளமை பொருந்தியதாக்குகிறது.ஒருவன் வளமான வாழ்வை விரும்பி வளமான எண்ணங்களை என்ன வேண்டும்.அவ்விதம் ஆகி விட்டதாக உணர வேண்டும்.
ஒரு செயலை நீ செய்யப் புறப்படும்போதே அது உன்னால் நிச்சயம் முடியும் என்ற எண்ணத்துடன் அடியெடுத்து வைக்க வேண்டும்.சந்தேகம் கூடாது.நம்பிக்கையே பலன் அளிக்கும்.
                                                                   --அப்துல் ரஹீம்.

நச்சரிப்பு

3

Posted on : Saturday, November 24, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தீவிர பக்தன் இருந்தான் நாள் முழுவதும் ஏதாவது பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பான்.அவனுடைய தம்பி இவனுக்கு நேர் மாறானவன்.பெரிய நாத்திகவாதி.சமீபத்தில் பக்தனின் மனைவி இறந்து விட்டாள் .அவனுடைய கூட்டாளி வியாபாரத்தில் அவனை ஏமாற்றி விட்டான்.அவனுடைய வீடு தீப்பிடித்து எரிந்து விட்டது. அவனுடைய குழந்தைகள் தறுதலையாய் திரிந்தார்கள். அதே சமயம் அவனுடைய தம்பி மிக மகிழ்ச்சியுடன் தனது  மனைவி,குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தான்.பக்தன் ஒரு நாள் தாங்க முடியாமல் கடவுளிடம்,''நான் உன்னைக் குறை சொல்லவில்லை.என் வீடு எரிந்தபோதும் அதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும் என்று தேற்றிக் கொண்டு உன்னையே வணங்கினேன்.என் மனைவி இறந்தபோது அதற்கு நல்ல காரணம் இருக்கும் என்று நம்பினேன்.என் குழந்தைகள் எனக்கு எதிராக வந்தபோது கூட எல்லாம் உன் செயல் என்று தேற்றிக்கொண்டு  உன்னைத் தான் கும்பிட்டேன்.எந்நேரமும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் எனக்கு ஏன் இத்தனை சோதனைகள்?உன்னைத் தூற்றித் திரியும் என் தம்பி சகல வசதிகளுடனும் நன்றாக வாழ்கிறானே,அது ஏன்?''என்று கேட்டான். கடவுள் வெறுப்புடன் சொன்னார்,''நாள் முழுவதும் உன் நச்சரிப்பு தாங்காமல்தான் !''
கடவுளை எந்நேரமும் நச்சரித்துக் கொண்டிருந்தால்  பாவம் அவர்தான் என்ன செய்வார்? .

கடைசிப் பேருந்து

3

Posted on : Saturday, November 24, 2012 | By : ஜெயராஜன் | In :

கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் பக்கத்திலிருந்த நகரத்திற்கு சென்றார்கள்.அங்கு ஒரு மதுக் கடையைப் பார்த்தவுடன் உள்ளே நுழைந்தவர்கள் தொடர்ந்து குடிக்க ஆரம்பித்தனர்.நீண்ட நேரம் சென்றபின் ஒருவன் சொன்னான்,''டேய்  மாப்பிள்ள,கடைசி பேருந்தைப் பிடித்தாவது ஊருக்குப் போக வேண்டுமே,''என்றான்.உடனே இருவரும் பேருந்து நிலையம் சென்றனர்.அப்போது கடைசிப் பேருந்து போய்விட்டிருந்தது.என்ன செய்வது என்று இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.உற்சாகமாக ஒருவன் கத்தினான்,''பக்கத்தில்தானே பேருந்து டெப்போ இருக்கிறது!ஏதாவது ஒரு பஸ்ஸை வெளியே எடுத்து நாமே ஓட்டிக் கொண்டு நம் ஊருக்குப் போனால் என்ன?''என்று கேட்க முழு போதையில் இருந்த அடுத்தவன்,''நானே சென்று பேருந்தை எடுத்து வருகிறேன்,''என்று கூறி உள்ளே சென்றான்.நீண்ட நேரம் ஆகியும் அவன் வெளியே வரவில்லை.திடீரென பல பேருந்துகளை இடித்துக் கொண்டும் சேதப்படுத்திக் கொண்டும் ஒரு பேருந்து வெளி வந்தது.அதை அவன் ஓட்டிக் கொண்டு வந்தான்.''ஏண்டா இவ்வளவு நேரம்?''என்று இவன் கேட்க அவன்  சொன்னான்,''என்ன செய்வது? நம்ம ஊருக்குப் போற பேருந்தைக் கடைசியில் நிறுத்தி வச்சிருந்தாங்க.அதைத் தேடி எடுத்து வர தாமதமாயிருச்சி,''

விதண்டாவாதம்

3

Posted on : Friday, November 23, 2012 | By : ஜெயராஜன் | In :

ராமு சோமுவிடம்,''இரண்டு நண்பர்கள் ஆற்றுக்குப் போகிறார்கள்.ஒருவன் சுத்தமாக இருக்கிறான்.மற்றவன் மிகவும் அழுக்குடன் இருக்கிறான்.இருவரில் யார் ஆற்றில் குளிப்பார்கள்?''என்று கேட்டான்.சோமு சொன்னான்,''இது என்ன கேள்வி?அழுக்கானவன்  தான் குளிப்பான்.''ராமு சொன்னான், ''அல்ல. அழுக்கானவன் அந்த அழுக்குக்குப் பழகி விட்டான்.அதனால் சுத்தமானவன்  தான் தன்னை மீண்டும் சுத்தப் படுத்திக்கொள்ள குளிப்பான். பரவாயில்லை, அதே கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.இருவரில் யார் குளிப்பார்?''சற்று யோசித்த சோமு,''சுத்தமானவன்  தான் மீண்டும் குளிப்பான்.''என்றான்.ராமு சொன்னான்,''இது சரியான பதில் அல்ல.சுத்தமானவன் ஏன் குளிக்க வேண்டும்?அழுக்கானவன் தான் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ளக் குளிக்க வேண்டும்.பரவாயில்லை மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறேன். இருவரில்  யார் குளிப்பார்?''சுதாரித்துக் கொண்ட சோமு சொன்னான், ''இருவரும்  தான் குளிப்பார்கள்.அழுக்கானவன்,தனது அழுக்கைப் போக்கிக் கொள்ள:சுத்தமானவன் இன்னும் சுத்தமாகிக் கொள்ள. ''ராமு சொன்னான், ''தவறு.இருவரும் ஏன் குளிக்க வேண்டும்?சுத்தமானவன் குளிக்க வேண்டியதில்லை.அழுக்கானவன் ஏற்கனவே அழுக்குடன் பழகி விட்டான்.

எட்டாவது அதிசயம்

1

Posted on : Thursday, November 22, 2012 | By : ஜெயராஜன் | In :

காதலன்:கண்ணே,நீதான் உலகின் எட்டாவது அதிசயம்.
காதலி:மீதி ஏழு அதிசயங்களாக நீ கருதும் பெண்கள் யார்,யார்?
********
குடிகாரக் கணவனைப் பார்த்து மனைவி ஆதங்கத்துடன் சொன்னாள் ,''நீ குடிப்பதை விட்டுவிடு. அது கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லும் வியாதி.''
கணவன் அமைதியாக சொன்னான்,''நான் ஒன்றும் உடனே சாக வேண்டும் என்று நினைக்கவில்லையே !.மெதுவாகவே செத்துக் கொள்ளலாம்.
********
இரண்டு குடிகாரர்கள் நன்றாகக் குடித்துவிட்டு தள்ளாடி நடந்து வந்தனர். வழியில் ஒரு ஆளுயரக் கண்ணாடி இருந்தது.நடந்து கொண்டே  கண்ணாடியில்  தெரியும் தங்கள் உருவங்களைப் பார்த்ததும் ஒருவன் சொன்னான்,''அதோ நிற்கிறார்களே, அவர்களை எங்கோ பார்த்த மாதிரித் தெரிகிறதே.நாம் அவர்களிடம் போய் பேசுவோமா?''அடுத்தவன் சொன்னான்,''அவசரப்படாதே!அவர்களே நம்மை நோக்கித்தான் வருகிறார்கள்.;;
********
ஒருவர் தனது வீட்டை மாற்றுவதற்காக தன்னுடைய பொருட்களை யெல்லாம் ஒரு திறந்த வேனில் ஏற்றினார்.வேன் கிட்டத்தட்ட நிறைந்து விட்டது.கடைசியாக தனது கிளியைக் கூண்டுடன் வைக்க இடம் பார்த்து,சரியான இடம் இல்லாததால் வேறு வழியின்றி எல்லாவற்றுக்கும் மேலே  தூக்கி வைத்தார் .போகும் வழியில் கிளிக் கூண்டு வேனின் ஆட்டத்தில் நழுவிக் கீழே விழுந்தது.உடனே வண்டியை நிறுத்தி கூண்டை எடுத்து மறுபடியும் மேலே வைத்து விட்டு வண்டி புறப்பட்டது.அந்த சாலை  சரியில்லாததால் வழி  நெடுக அந்தக் கூண்டு கீழே விழவும் அவர் எடுத்து வைப்பதுமாக இருந்தார்.ஆறாவது முறை கீழே விழுந்தபோது அதை எடுத்து வைக்க வந்தவரிடம் கிளி சொன்னது, ''அய்யா, போதும், நிறுத்துங்க! தயவுசெய்து நீங்க போற வீட்டு முகவரியை என்னிடம் கொடுத்து விடுங்கள்.நான் நடந்தே விசாரித்து அந்த வீட்டுக்கு வந்து சேர்கிறேன்.''
********

பிரச்சினைகளிலிருந்து விடுபட

1

Posted on : Thursday, November 22, 2012 | By : ஜெயராஜன் | In :

1 உங்களுக்குள்ள அறிவுத்திறன் மீது நம்பிக்கை வையுங்கள்.
2 தேவைக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம்.
3 மற்றவர்களுடன் உங்களை எப்போதும் ஒப்பிட்டுக் கொண்டே இருக்காதீர்கள்.
4 வாழ்க்கைத் தேவை எவை என்பதை முடிவு செய்து அதனை முறைப்படி செயல் படுத்துங்கள்.
5 அலுவலகத்தில் அல்லது வீட்டில் இருக்கும்போது ஏதாவது ஒரு அலுவலில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
6 தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது.
7 உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களிடமும் நண்பர்களிடமு உ ண்மையான அன்பை செலுத்துங்கள்.
8 பெயர் சொல்லக் கூடிய அளவில் உழையுங்கள்.உங்கள் வாழ்வில் நடந்த நல்ல சம்பவங்களை அடிக்கடி நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
9 மனத்தைக் கெடுக்கக் கூடிய ,தேவையற்ற,மோசமான நண்பர்களிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.
10 சிந்தனைகள் தேவைதான்.அதற்காக முடிவற்ற சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளக் கூடாது.
11 ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டால் கற்றவர்களிடமோ,உங்களுக்கு நெருங்கியவர்களிடமோ,உங்களைவிட அத்துறையில் விவரமாய் இருப்பவர்களிடமோ யோசனை கேட்கத் தயங்க வேண்டாம்.

அறிவாளி

3

Posted on : Wednesday, November 21, 2012 | By : ஜெயராஜன் | In :

அறிவாளி ஒருவர் ஒரு தவறு செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். அதே அறையில் ஒரு திருடனும் அடைக்கப்பட்டிருந்தான்.திருடன் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் போட்டான்.இதை அறிந்த அறிவாளி தன்னையும் சேர்த்துக் கொள்ள சொன்னார்.சிறிது தயக்கத்துடன் அவன் ஒத்துக் கொண்டான்.நள்ளிரவில் திருடன் மெதுவாக சிறையின் பின்புறம் இருளான ஒரு பகுதிக்கு சென்று ஒரு பெரிய கயிறை  சுவரின் மீது போட்டு அதன் மீது ஏறலானான்.அறிவாளியும் பின் தொடர்ந்தார்.அப்போது அந்தப் பக்கம் வந்த வார்டன் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று உஷாராகி ,''யாரது அங்கே?''என்று சப்தம் கொடுத்தார்.திருடன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு, 'மியாவ்'என்று கத்தியவாறு சுவற்றிலிருந்து வெளியே குதித்து விட்டான். வார்டனும் பூனை தான் திறிகிறது  என்று எண்ணி திரும்ப நடந்தார்.இப்போது அறிவாளி கயிற்றின் மீது ஏறவே மீண்டும் சப்தம் கேட்கிறதே என்று உணர்ந்து வார்டன் திரும்ப வந்து,''என்ன சப்தம்?யாரது?''என்று கத்தினார்.அறிவாளி புத்திசாலித்தனமாக சொன்னார்,''இது இரண்டாவது பூனை!''

நிதானம்

5

Posted on : Wednesday, November 21, 2012 | By : ஜெயராஜன் | In :

எத்தனை முறை அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கிறோம்!அதற்கான தண்டனையை எத்தனை முறை அனுபவித்திருக்கிறோம்!ஆனாலும் நாம் சாமானியமாய் மாறுவதில்லை.எந்த ஒரு பிரச்சினையானாலும் அதற்கு முரட்டுத்தனமான தீர்வையே முதலில் மேற்கொள்கிறார்கள்,சில பேர்.வேறு வழியே இல்லாவிடில் கடைசி பாணமாக அதை வைத்துக் கொள்ளலாம் என்று ஏனோ அவர்களுக்குத் தெரிவதில்லை.
ஒரு பிரச்சினை வந்ததுமே அதைத் தீர்க்க என்னென்ன வழியெல்லாம் உண்டு என்று சிந்திக்கத் துவங்குபவனே புத்திசாலி.ஒவ்வொரு வழியையும் தீர ஆலோசித்து அது எப்படி முடியும் என மறுப்பு அசை போட்டு கடைசியில் எது சிறந்த வழியோ அதையே நடைமுறைப் படுத்த வேண்டும்.
உடலில் கொசு உட்கார்ந்ததும் அதைப் பட்டென்று அடிப்பதுபோல ஒவ்வொரு விசயத்திலும் முடிவு எடுத்தால் வரும் தொல்லை முன்னிலும் பலம் அதிகரித்து இருக்கும்.பிரச்சினைக் கோட்டையிலிருந்து வெளிவர ஒரே வழிதான் என்று நம்புபவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.நான்கு புறங்களிலும் வழிகள் இருக்கின்றன.அவற்றுள் எது ஆபத்துக் குறைவான வழியோ அதைத்தான் யோசித்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
மிக எளிதாக இருக்கிறதே என்று பலர் ஆபத்தான வழிகளைத் தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.சற்றே சுற்றிப் போனாலும் பரவாயில்லை என்று நிதானத்தைக் கடைப் பிடிக்க வேண்டியது அவசியம்.
பரபரப்பு அடைவதாலும் அவசரப் படுவதாலும் ஒரு வேலையும் ஆவதில்லை. அப்படி தப்பித்தவறி ஆகிற வேலையும்  அபத்தமாகவோ, ஆபத்தனமானதாகவோதான் இருக்கும்.இந்தப் பரபரப்பிலும் குழப்பத்திலும் இருப்பவர்கள்தான் 'எனக்கு ஒன்றும் புரியவில்லை,''என்றும்,'எனக்குக் கையும் ஊட வில்லை,காலும் ஓடவில்லை'என்றும் புலம்புகிறார்கள்.இது கூடத் தேவலை சிலர் நிதானத்தை இழக்கும்போது நாம் என்ன செய்கிறோம்,என்ன சொல்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருக்கிறார்கள்.
தோன்றியதைச் செய்துவிடுவோம்,.அப்புறம் வருவது வரட்டும் என்கிற மன நிலையும் தவறு.எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் செயலாலும் சொல்லாலும் நிதானத்தை இழந்து விடக் கூடாது.நிதானத்தை இழக்காதவர்கள்,மற்ற அனைத்தையும் காப்பாற்றத் தெரிந்தவர்கள்.

சஞ்சீவினித் தைலம்

1

Posted on : Tuesday, November 20, 2012 | By : ஜெயராஜன் | In :

சாலையில் ஒரு மனிதன் பாட்டில்களில் பச்சை நிறத்தில் திரவியம் நிரப்பி விற்பனை செய்து கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு சிறுவன் உதவி செய்து கொண்டிருந்தான்.சிறிது நேரத்தில் அங்கு ஒரு கூட்டம் கூடி விட்டது. வியாபாரி சுற்றிலும் இருந்தவர்களிடம்,''இது ஒரு சஞ்சீவினித் தைலம்.இதை சாப்பிட்டால் பல நூறாண்டுகள் வாழலாம்.என்னைப் பாருங்கள்!நான் தினமும் ஒரு பாட்டில் அளவு இதைக் குடிக்கிறேன்.என் வயது இப்போது எழுநூறு,''என்றான்.எல்லோரும் தங்களுக்குள் பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். யார் முகத்திலும் நம்பிக்கையின் ரேகை கூட இல்லை. கூட்டத்தில் ஒருவன் மெதுவாக வியாபாரியுடன் கூட இருந்த சிறுவனை மெதுவாகத் தள்ளி அழைத்துச் சென்று,''அந்த ஆள் சொல்வது உண்மையா? அவருக்கு வயது எழுநூறா ?''என்று கேட்டான்.அந்தப் பையன்,''என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது,''என்றான்.உற்சாகம் அடைந்த அந்த நபர்,''உண்மையைச் சொன்னால்  உனக்கு நான் ஒரு பரிசு தருவேன்,''என்றான் .அந்த சிறுவன் சொன்னான்,''நான் அவரிடம் முன்னூறு ஆண்டுகளாகத்தான் வேலை செய்கிறேன்.அதனால் அவரின் உண்மையான வயது எனக்குத் தெரியாது,''வியாபாரியை விடப் பெரிய எத்தன்!

மனோவசியம்

2

Posted on : Tuesday, November 20, 2012 | By : ஜெயராஜன் | In :

முல்லாவுக்கு சில நாட்களாக சுத்தமாக தூக்கமே வருவதில்லை.அவரும் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்.தூக்க மாத்திரை கூடப் போட்டுப் பார்த்து விட்டார்.ஒன்றும் பயனில்லை.அவர் மகனுக்கு கவலையாகி விட்டது.அவன் தனது  நண்பராகிய மனோவசிய மருத்துவரை அழைத்து வந்தான்.அவர் உறுதியாக சரி செய்து விடலாம் என்று கூறினார்.பின் முல்லாவை அவருடைய படுக்கையில் படுக்க செய்து தனது மனோ வசிய மருத்துவத்தை ஆரம்பித்தார்.''நீங்கள் இப்பொழுது உறங்கப் போகிறீர்கள்''என்று திரும்பத் திரும்ப முல்லாவின் கண்களைப் பார்த்துச் சொன்னார்.பின் ஒளியின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே,அதே சமயம் அவருடைய குரலையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டே வந்தார்.சிறிது நேரத்தில் முல்லாவிடமிருந்து குறட்டை ஒலி  வந்தது.அவர் மகனுக்கு மிகுந்த திருப்தி.மருத்துவருக்கு நிறையப் பணத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டு தந்தையின் படுக்கை அறைக்கு மறுபடியும் வந்தான்.முல்லா சிறிது கண்ணைத் திறந்து பார்த்துப் பின் மகனிடம்,''அந்த டாக்டர் ஒழிந்தானா? .சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி மிகவும் அறுத்து விட்டான்.அவன் எப்போதடா தொலைவான் என்று பார்த்தேன்.அவன் நகர்வதாய்த் தெரியவில்லை.எனவே நான் குறட்டை விடுவதுபோல நடித்தேன்.''என்றாரே பார்க்கலாம்,மகன் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தான்.

கஷ்டம் தெரியாமல் வளர்க்கலாமா?

1

Posted on : Monday, November 19, 2012 | By : ஜெயராஜன் | In :

'' வாழ்க்கையில் நான் மிகவும் துன்பப்பட்டு விட்டேன்.என் பிள்ளைகளாவது கஷ்டம் தெரியாமல் வளர வேண்டும்,''என்று பலர் சொல்வதுண்டு. அப்படிஎன்றால் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் படுகிற கஷ்டத்தைப் பற்றிய கவலை தேவையில்லை என்று தானே பொருள்.இந்த மனப்போக்கை வளர விடுவது நல்லதல்ல.எதிர்காலத்தில் அவர்களால் சிக்கனமாக வாழ முடியாத நிலை ஏற்படும்.எவ்வளவு வந்தாலும் அதை செலவழிக்கும் மனோபாவமும் வளரும்.தங்கள் பிள்ளைகள் மனம் நோகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக  அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுப்பதனால் பிள்ளைகளுக்குக் கடைசி வரை ஒரு பொருளின் அருமை தெரியாமல் போய்விடுகிறது.
பிள்ளைகளுக்கு விபரம் தெரிய ஆரம்பித்தவுடன் ஒவ்வொன்றையும் போற்றிப் பாதுகாப்பது எப்படி என்பதனை உணர்த்த வேண்டும்.அது மட்டுமல்ல.நம் சக்திக்கு உட்பட்ட விஷயங்கள் எவை,அப்பாற்பட்டவை எவை என்பதும் அவர்களுக்குத் தெரிய வேண்டும்.பிள்ளைகளிடம் நமது வருமான விபரங்கள்,கடன்,வரவிருக்கும் செலவினங்கள் ஆகியவை பற்றி விவாதிப்பது நல்லது.கோடிகோடியாய் பணம் இருந்தாலும் பணத்தின் அருமையை உணர்த்துவதில் தவறில்லை.தேவை ஏற்பட்டால் இந்த உயரிய நிலையை அடைய தாம் பட்ட துன்பங்களைப் பெற்றோர்கள் எடுத்துச் சொல்லலாம்.
நம்மை விட நமது சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது தவறில்லை.அதற்காக அவர்கள் எதிர் பார்ப்பதையெல்லாம் உடனுக்குடன் செய்து கொடுத்து ஏதோ,அலாவுதீனின் அற்புத விளக்கு கொண்டு சுலபமாக எடுத்துக் கொடுக்கிறோம் என்கின்ற எண்ணம் நம் தலைமுறைக்கு வந்து விடக்கூடாது.

பொன்மொழிகள் 35

5

Posted on : Sunday, November 18, 2012 | By : ஜெயராஜன் | In :

சோம்பல் மிக மெதுவாக நடப்பதால்
வறுமை அவனை எளிதில் பிடித்து விடுகிறது.
********
நன்றியும் கோதுமையும் நல்ல இடத்தில்தான் விளையும்.
********
குற்றம் என்ற புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
********
  உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன் ஆகிறான்.
********
வெளியே  காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்.
********
ஒரு பூனை திருட்டுப் போயிற்று என்று சட்டத்தின் உதவியை நாடினால்
ஒரு பசுவை விற்கே வேண்டிய நிலை வந்துவிடும்.
********
எக்காரியத்தையும் தயங்கித் தயங்கிச் செய்பவன்
ஒரு காரியத்தையும் செய்து முடிக்க மாட்டான்.
********
தவறாக புரிந்து கொள்கிற உண்மையைக் காட்டிலும் பெரிய பொய் வேறு எதுவும் இல்லை.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க வார்த்தை வந்துவிட்டால், முன்னால்  சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதற்கு இல்லை என்று மறுப்பதோ அவமானப் படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன.முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
********
துயரங்களை எதிர்பார்ப்பவன் இரண்டு முறை துயரம் அடைகிறான்.
********
புறாவைப்போல பறந்துவிடும் பேச்சை
நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுக்க முடியாது.
********

திருமண ஆசை

2

Posted on : Friday, November 16, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவனுக்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது.உடனே ஒரு தரகரை அணுகினான்.அவரும் சொன்னார்,''ஒரு அழகான பெண் இருக்கிறாள்.பணம் அவளிடம் நிறைய இருக்கிறது. என்ன, உன்னை விட வயது கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.அவள் ஒரு விதவை.''அவனும் சம்மதித்து பெண்ணைப் பார்க்கப் போனார்கள்.பெண்ணைப் பார்த்ததும் அவனுக்கு அதிர்ச்சி.அந்தப் பெண் மிக அவலட்சணமாக இருந்தாள். .மெதுவாக தரகரின் காதருகே சென்று அவன் மெல்லிய குரலில் கேட்டான்,''இந்தப் பெண்ணையா  அழகான பெண்  என்று சொன்னீர்கள்?'' தரகர் சொன்னார்,''எது வேண்டுமானாலும் சப்தம் போட்டே கேளுங்கள்.பிரச்சினை இல்லை.பெண்ணுக்கு சுத்தமாகக் காது கேட்காது.''
********
ஒரு பெண் ஓவியர் பிக்காசோவைப் பார்க்க வந்தாள்.அவள் அவரிடம்,''எனக்கு உங்கள் ஓவியங்கள் என்றால் உயிர்.எனக்கு உங்களது ஓவியங்கள் இரண்டு வேண்டும்.''என்று ஆர்வத்துடன் கேட்டாள் .பிக்காசோ உள்ளே சென்று பார்த்துவிட்டு வந்து,''அம்மா,இப்போது ஒரு ஓவியம்தான் கைவசம் இருக்கிறது,''என்றார்.அந்தப் பெண்ணோ விடாப்பிடியாக,''எவ்வளவு விலை என்றாலும் பரவாயில்லை.எனக்கு இப்போது இரண்டு ஓவியங்கள் அவசியம் வேண்டும்,''என்றாள் .பிக்காசோ அந்தப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தார்.அந்தப் பெண் ஓவியத்தில் அவ்வளவு விபரம் தெரிந்தவள் இல்லைஎன்று தெரிந்து கொண்டார்.ஆனால் ஜம்பத்திற்காக இரண்டு ஓவியங்கள் உடனே தேவையென்று கேட்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டு உள்ளே சென்றார்.தான் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை இரண்டாகக் கிழித்தார்.பின் வெளியே வந்து இரண்டையும் அவளிடம் கொடுக்க  அவளும் அதிகப் பணத்தைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியுடன் அங்கிருந்துசென்றாள் .
********
ஒருவன் தனது நண்பனிடம் கவலையுடன் சொன்னான்,''தினசரி கனவினில் பிரபலமான நடிகை............என் கனவில் வருகிறாள்.உடனே அலறிக்கொண்டு நான் எழுகிறேன்,''நண்பன் கேட்டான்,''அழகான அந்த நடிகை வந்தால் நீ மகிழ்ச்சிதானே அடைய வேண்டும்.நீ ஏன் அலறுகிறாய்?''அவன் சொன்னான்,''அவள் தினசரி என் அறைக்குள் வந்ததும் கதவைப் படீரென சாத்துகிறாள்.அந்த சப்தத்தில் நான் பயந்து அலறி விடுகிறேன்.''
********

சரியான நேரம்

3

Posted on : Friday, November 16, 2012 | By : ஜெயராஜன் | In :

மன நலம் குன்றியவர்களுக்கான மருத்துவ மனையில் இருவர் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது கடிகாரத்தில் பன்னிரண்டு காட்டியது.அதைப் பார்த்து ஒருவர் சொன்னார்,''இப்போது நடுப்பகல் 12மணி.''அடுத்தவர் சொன்னார்,''இல்லை,இல்லை,இப்போது நடு இரவு 12 மணி.''இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. சப்தம் கேட்டு வார்டன் அந்தப் பக்கம் வந்து என்னவென்று கேட்டார்.அவர்கள் இப்போது பகல் 12 மணியா,இரவு 12 மணியா என்று கேட்டனர்.அவர் உடனே தனது கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு, ''எனது கடிகாரம் ஓடவில்லையே!எப்படி சொல்வது?''என்றார்.அங்கேயே வேலை பார்த்து அவருடைய மனநிலையும் அப்படித்தான் ஆயிற்று போலும்!
********
அப்பா:மகனே,வீட்டை விட்டு ஓடிப் போய்விடுவேன் என்று சொல்கிறாயாமே,அம்மா சொல்கிறாள்!
மகன்:ஆமாம்,இப்ப அதுக்கென்ன?
அப்பா:இல்லை.எப்பவென்று சொன்னால் நானும் உன் கூட வந்து விடலாமே என்று பார்க்கிறேன்.
********
சொர்க்கத்திற்கு வந்து சேர்ந்த ஒருவன் அந்த சூழ்நிலையைப் பார்த்துவிட்டு மிக மகிழ்ச்சியாக இருந்தான்.அடிக்கொரு தடவை,''எத்தனை அமைதி, எவ்வளவு நிம்மதி!,''என்று சொல்லிக் கொண்டேயிருந்தான்.திரும்பத் திரும்ப அதைக்கேட்டு புளித்துப் போனதால் சொர்க்கத்தின் தலைவன் அவனை நரகத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கும் அவன்,''எத்தனை அமைதி,எவ்வளவு நிம்மதி!''என்று சொல்லிக் கொண்டுதான் இருந்தான்.சொர்க்கத்தின் தலைவனும் நரகத்தின் தலைவனும் ஒன்றும் புரியாமல்,''என்னடாஇது அதிசயம்!சொர்க்கமும் நிம்மதி,நரகமும் நிம்மதி என்கிறாயே,ஒன்றுமே புரியவில்லை''என்றனர்.அவன் சொன்னான்,''பூலோகத்தில் என் மனைவியுடன் 50 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நீங்களும் அப்படித்தான் சொல்வீர்கள்!''
********
மனைவியின் மீது சந்தேகம் கொண்ட ஒருவன் ஒருநாள் சீக்கிரமாகவே வீட்டுக்கு வந்தான்.அவன் மனைவி அப்போது கட்டிலில் படுத்திருந்தாள். அவனுக்கு ஏதோ அவள் தவறு செய்கிறாள் என்று தோன்றவே அவளை திட்ட ஆரம்பித்தான்.அதற்கு மனைவி ,''நீங்கள் என்னை நம்ப மாட்டேன் என்கிறீர்கள்.இதையெல்லாம் மேலேயிருந்து ஒருவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான்.அவனுக்குதான் உண்மை தெரியும்,''என்று கூறி அழுதாள் .கணவனுக்கே சிறிது இரக்கம் தோன்றியது.அப்போது மேலே பரணிலிருந்து ஒருகுரல் கேட்டது,''எனக்கு ஓரளவுதான் தெரியும்.கட்டிலுக்கு கீழே இருப்பவனிடம் கேட்டால் முழு விபரம் தெரியும்.''
********

ஊதாரி

2

Posted on : Wednesday, November 14, 2012 | By : ஜெயராஜன் | In :

கருமி ஒருவன் இருந்தான் அவனது கஞ்சத் தனத்தால் அவனுடைய மனைவியும் பையனும் மிகுந்த தொல்லைக்கு உள்ளானார்கள்.ஒருநாள் பையன் முடி அதிகம் வளர்ந்து விட்டது என்று சொல்லி முடி வெட்டக் காசு கேட்டான்.அதற்கு அவன்,''போ,போ,காசு இங்கே காய்த்தா தொங்குகிறது?'' என்று கூறி காசு தர மறுத்து விட்டான்.வருத்தம் அடைந்த சிறுவன்,மறுநாள் முடி வெட்டாமல் போனால் நண்பர்கள் கிண்டல் செய்வார்களே என்று எண்ணியவாறு அவர்களது தோட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது தென்னை மரத்திலிருந்து ஒரு தேங்காய் கீழே விழுந்தது.அவனுக்கு பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது.உடனே அந்த தேங்காயை  எடுத்துக் கொண்டுபோய் முடி திருத்துபவரிடம் கொடுத்து,தேங்காயைப் பெற்றுக் கொண்டு முடி வெட்டுமாறு கேட்டுக் கொண்டான்.பையனின் தகப்பனின் கருமித்தனத்தை அறிந்த முடி திருத்துபவரும் அனுதாபப்பட்டு தேங்காயைப் பெற்றுக் கொண்டு அவனுக்கு முடி வெட்டி விட்டார்.முடி வெட்டியிருந்த பையனைக் கண்ட தந்தை அதிர்ந்தார்.ஆத்திரத்துடன் பணம் ஏது  என்று கேட்க பையனும் உண்மையை சொல்லிவிட்டான்.நீண்ட நேரம் கவலையுடன் அமர்ந்திருந்த கருமி எழுந்து பையனிடம் சொன்னான்,''நான் சிரமப்பட்டு பணம் சேர்க்கிறேன்.நீங்கள் எல்லாம் ஊதாரித்தனமாய் செலவு செய்கிறீர்கள்.நான் மட்டும் ஏன் கஷ்டப்பட வேண்டும்.இன்று முதல் நானும் ஊதாரியாய் இருப்பது என்று முடிவு செய்துவிட்டேன்.''பின் தனது  அறைக்கு சென்று ஒரு பெட்டியிலிருந்து ஒரு பட்டு வேஷ்டியை எடுத்தான்.மகனிடம் சொன்னான்,''இது என் கல்யாணத்திற்கு என் மாமனார் கொடுத்தது.இதை கடந்த 15 ஆண்டுகளாக நான்  உபயோகிக்காமல் பாதுகாத்து வந்தேன் .இன்று முதல் அதை உடுத்துவது என்று முடிவு செய்து விட்டேன்.''

நம்பிக்கைதான்.

2

Posted on : Wednesday, November 14, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு அந்தணர் தினசரி ஆற்றைக் கடந்து சென்று இறுதிக் கடன்களுக்கான சடங்குகளை செய்து தனது  வாழ்க்கையை நடத்தி வந்தார்.தேவையான அளவுக்கு வருமானம் வந்த போதிலும் அவர் எதுவும் செலவழிக்க மாட்டார்.சரியான கஞ்சன்.ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் போய்க் கொண்டிருந்தது அதைப் பற்றிக் கவலைப்படாமல் அவர் வேலைக்கு புறப்பட்டார்.அவர் மனைவி வேண்டாம் என்று தடுத்தும் பணம் வருமே என்ற ஒரே எண்ணத்தில் அவர் கிளம்பி விட்டார்.போகும்போது கழுத்தளவு நீரில் சிரமப்பட்டு நடந்து அக்கறை போய் அன்றைய வருமானத்தைப் பெற்றுக் கொண்டு திரும்ப வரும்போது ஆற்றில் சகதியில் மாட்டிக் கொண்டார். அவருடைய அலறல் கேட்டு இரக்க குணம் உடைய ஒருவர் ஆற்றில் குதித்து அவரை சகதியிலிருந்து மீட்டார்.அவருக்கு நன்றி சொன்ன அந்தணர் திடீரென மறுபடியும் சகதியில் குதித்து விட்டார்.உதவி செய்த நபர்  இந்த அந்தணர் மன நிலை சரியில்லாதவரோ என்று எண்ணிக் கொண்டே அவரது சுபாவத்தினால்  மறுபடியும் அவரை சகதியில் இருந்து காப்பாற்றினார். கரைக்கு வந்ததும் அந்தணரிடம் மீண்டும் ஏன் சகதியில் குதித்தார் என்று கேட்டதற்கு அவர் சொன்னார்,''சகதியில் நான் மாட்டிக் கொண்ட போது போது இன்று நான் சம்பாதித்த நூறு ரூபாய் நோட்டு சகதியில் விழுந்து விட்டது.நீங்கள் நல்லவராய் தெரிவதால் மறுபடியும் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மறுபடியும் குதித்து ரூபாய் நோட்டைக் கண்டு எடுத்து விட்டேன்.''

கர்வபங்கம்

2

Posted on : Monday, November 12, 2012 | By : ஜெயராஜன் | In :

அறிஞர் ஒருவர் இருந்தார்.பல நூல்களையும் அவர் கற்றிருந்தார். பல  இடங்களிலிருந்தும் மக்கள் வந்து அவரைப் பார்த்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டனர்.எனவே தனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டது.ஒரு முறை அவர் வெளியூர் ஒன்றிற்கு சென்றிருந்தார். அங்கு அவரை யாருக்கும் தெரியாது. அதனால் அவரை யாரும் வந்து பார்க்கவில்லை.நிறையப் படித்தவர்களிடம் ஒரு குறை இருக்கும்.அதாவது அவர்களுக்கு, தனக்குத் தெரிந்ததை  யாரிடமாவது சொல்லி தங்கள் மேதாவித் தனத்தை வெளிப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.இந்த அறிஞரும் அதற்கு விதிவிலக்கல்ல.யாரும் வந்து பார்க்காதபோது யாரிடம் தனது  அறிவை வெளிப்படுத்துவது?அப்போது அங்கு ஒரு சிறுமி ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து தீக் குச்சியால் அதை ஏற்றினாள் .அறிஞருக்கு அந்தக் குழந்தையிடமாவது தனது திறமையைக் காட்ட ஆசை வந்தது.அந்தக் குழந்தையை அழைத்து,''பாப்பா,இங்கு இருட்டாக இருந்தது.நீ  மெழுகுவர்த்தியை எற்றின உடனே வெளிச்சம் வந்தது.,அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது?''என்று கேட்டார்.அந்தக் குழந்தை உடனே தனது வாயினால்  ஊதி மெழுகு வர்த்தியை அணைத்தது.பின் அவரிடம் கேட்டது,''சிறிது நேரம் முன் வெளிச்சம் இருந்தது,.மெழுகுவர்த்தியை அனைத்ததும் அந்து வெளிச்சம் எங்கே போனது?''அந்த அறிஞர் திணறி விட்டார்.அப்போதுதான் தனக்கு எல்லாமே தெரியாது என்பதனை உணர்ந்தார். அவருக்கு ஞானம் ஏற்பட்டது.

முன்னேற்றம்

4

Posted on : Sunday, November 11, 2012 | By : ஜெயராஜன் | In :

முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் ஒரு சிறந்த பேச்சாளர். இலக்கியவாதியும்  கூட.அவருடைய சேவையைப்ப் பாராட்டி ஒரு பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கினார்கள்.ஏற்புரை கூற வந்த அவர் ''ஆண்களுக்கு சமமாக பெண்களை முன்னேற்ற செய்ய வேண்டும் என்று பாடு பட்டு வந்தோம்.ஆனால் இப்போது பெண்களுக்கு சமமாக ஆண்களை முன்னேற்ற வேண்டிய நிலை வந்து விட்டது,''என்று கூறி பேச்சை சில நொடிகள் நிறுத்தினார்.எல்லோரும் ஆவலுடன் அவரை நோக்க அவர் தொடர்ந்தார்,''உதாரணத்துக்கு என் மனைவியை சொல்லலாம்.அவர் 25 ஆண்டுகளுக்கும் முன்னரே டாக்டராகி விட்டார்.நான் இப்போதுதான் டாக்டராகியுள்ளேன்.''(அவரது மனைவியின் பெயர் டாக்டர் விசாலாக்ஷி நெடுஞ்செழியன்.)
********
ஜின் காக்டு என்பவர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர்.அவரிடம் ஒரு நண்பர்,''உங்களுக்கு அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை உண்டா?''என்று கேட்டார்.அதற்கு அவர் சொன்னார்,''உறுதியாக நம்புகிறேன்.எனக்கு பிடிக்காதவர்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?''
********

உன்னை விட மாட்டேன்!

2

Posted on : Sunday, November 11, 2012 | By : ஜெயராஜன் | In :

தனது  வருமானத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக செலவு செய்யும் ஒரு மனிதனுக்கு வாய்த்த மனைவியோ கடும் சிக்கனக்காரி.அந்த மனிதன் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்.தான் இறந்தபின் தன் கல்லறை கூட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் தான் இறந்து விட்டால் தன் மனைவி நன்கு செலவு செய்து தனது விருப்பப்படி கல்லறையை அமைக்க மாட்டார் என்று திடமாக நம்பினார்.எனவே அவர் உயிருடன் இருக்குபோதே ஒரு சிறந்த கட்டடக் கலைஞரை வைத்து நிறைய செலவு செய்து தனக்கென்று  ஒரு கல்லறையை அமைத்தார்.அந்தக் கல்லறையில் ''அமைதியாக ஓய்வெடு ''என்றும் கல்லிலே அழகாக எழுத ஏற்பாடும் செய்தார்.சில மாதங்களில் அவர் இறந்து போனார்.அவர் உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.உயிலில் அவர்,''வாழ்க்கையை நான் நன்கு அனுபவித்தேன்.நான் எதுவும் சேமிக்கவில்லை. நான் யாருக்கும் எந்த சொத்தையும் விட்டுச் செல்லவில்லை.''என்று குறிப்பிட்டிருந்தார்.அதைக் கேட்டவுடன் அவர் மனைவிக்கு வந்ததே கோபம்!அவர் நேரே கல்லறைக்கு சென்றார்.''அமைதியாக ஓய்வெடு ''என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தார்.உடனே ஒரு ஆளை வரவழைத்து அந்த வாக்கியத்துக்கு முன்,''நான் வரும்வரை''என்பதனை சேர்த்து விட்டார். .

நம்ப முடியவில்லை

3

Posted on : Saturday, November 10, 2012 | By : ஜெயராஜன் | In :

ஓர் ஊரில் ஒரு மனிதர் இருந்தார்.அவர் பெயர்,'நம்ப முடியவில்லை'.அவர் தனது மனைவியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்.வேறு பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.அவர் வயதாகி நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் தன் மனைவியிடம் சொன்னார்''அந்தக் காலத்தில் என்ன காரணத்தினாலோ எனக்கு இப்படி ஒரு பெயர் வைத்து விட்டார்கள்.இந்தப் பெயர் எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை.ஆனால் இதுவரை அதைத் தவிர்க்க முடியவில்லை.இறந்த பின்னாவது என் கல்லறையில் நான் வெறுக்கும் இந்தப் பெயரை எழுதாது வேறு ஏதாவது என்னைப் பற்றி எழுத ஏற்பாடு செய்,''அதேபோல அவர் இறந்ததும்,அவரது கல்லறையில் ,''தன்  மனைவியிடம்  கடைசி வரை விசுவாசமாக இருந்த அற்புதமான மனிதர்''என்று அவரது மனைவி எழுத வைத்தாள் .ஆனால் அந்தோ பரிதாபம்!அதன்பின் அந்தப் பக்கம் போவோர்,வருவோர் எல்லாம் அதைப் படித்துவிட்டு ''நம்ப முடியவில்லை''என்று சொல்லிச் சென்றார்கள்.
********
ஒரு பெண் தனது தோழியிடம் சொன்னாள் ,''என் கணவர் என்னை எப்போதும் பைத்தியமாய் காதலிக்கிறார்,''தோழி கேட்டாள் ,''அவர் எப்போதாவது புத்தி சுவாதீனமாய்  இருப்பாரா ?''
********

மயக்க மருந்து

3

Posted on : Friday, November 09, 2012 | By : ஜெயராஜன் | In :

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்க மருந்தின் வீரியம் குறையாத நிலையில் இருந்த கணவன் அருகில் மனைவி வந்தாள்.சிறிது  மயக்கம் குறைந்ததும்  லேசாகக் கண் விழித்த கணவன் மனைவியைக் கண்டதும்,''நீ மிக மிக அழகாய் இருக்கிறாய் ''என்றான்.அந்த நிலையிலும் தனது  அழகை கணவன் புகழ்ந்ததில் மனைவிக்கு மிகுந்த மகிழ்ச்சி.அரை மயக்கம் தெளிந்த நிலையில் மீண்டும் கண் விழித்த கணவன்,''இன்று நீ பரவாயில்லாமல் இருக்கிறாயே.''என்று மனைவியிடம் சொன்னான்.அவள் டாக்டரிடம்  ,''முதலில் என்னை மிக அழகாக இருப்பதாக சொன்ன அவர் இப்போது பரவாயில்லை என்று குறைத்து மதிப்பிடுகிறாரே,''என்று அங்கலாய்த்தாள். டாக்டர் சொன்னார்,''மயக்க மருந்தின் குணம் குறையக் குறைய அவருக்கு நிதானம்  அதிகமாகும்,''என்றார்.
********
ஒரு செய்தி வந்தால் ஒரு ஆண் ஒரு காதில் வாங்கி இன்னொரு காது வழியே விட்டு விடுவான்.அதே சமயம் ஒரு பெண் ஒரு செய்தியை இரு காதிலும் வாங்கி வாய் வழியே வெளிவிடுவாள்.
********
தனது பக்தனின் பக்தியை மெச்சிய இறைவன் ,''உனக்கு என்ன வேண்டுமானாலும்  கேள்.உடனே கொடுக்கிறேன்.ஆனால் உன் எதிரியான பக்கத்து வீட்டுக்காரனுக்கு அதுவே இரண்டு மடங்காகக் கிடைக்கும்,''என்றார்.உடனே பக்தனும் தனக்கு ஒரு அழகிய வீடு கேட்டான்.அவனுக்கு ஒரு வீடும் பக்கத்து வீட்டுக்காரனுக்கு இரண்டு வீடும் கிடைத்தது.அடுத்து பக்தன் ஒரு விலை உயர்ந்த கார் கேட்க அவனுக்கு ஒன்றும் அவன் எதிரிக்கு இரண்டு காரும் கிடைத்தன.கடுப்பான பக்தன்,''என்னுடைய ஒரு சிறு நீரகத்தை நான் தானமாகக் கொடுக்க வேண்டும்,''என்றான்.
********

சிரிப்

4

Posted on : Tuesday, November 06, 2012 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியர்:ஏண்டா கோபு,உன் கண்ணாடியை நான் வரும்போது மட்டும் போட்டுக் கொள்கிறாய்,மற்ற நேரம் போடுவதில்லையே.ஏன்?
கோபு :தலைவலி வரும்போது மட்டும் போட்டால் போதும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்,சார்.
********
ஒருவர்:இரண்டு தாரம் மணம் புரிந்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
மற்றவர்:இரண்டு மாமியார்.
********
''தம்பி,உன் பெயர் என்ன?''
'மை நேம் இஸ் பூரண சந்திரன்.'
''நான் தமிழில் கேட்டால்,உன் பெயரை தமிழில்தானே சொல்ல வேண்டும்?''
'சரி,என் பெயர் முழு நிலவு.'
********
காவல் நிலையத்துக்கு ஒருவர் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்க வந்திருந்தார்.ஏதோ பிரச்சினையில் இருந்த காவலர்,''எனையா காலங்கார்த்தால பல்லுக் கூட விளக்காம புகார் கொடுக்க வந்திட்டயா ?''என்று கேட்டார்.வந்தவர்  சொன்னார்,''வேறு வழியில்லை,சார்.திருட வந்தவன் என் டுத் பிரசையும் எடுத்து சென்று விட்டான்.''
********
''மச்சி,நான் என் மனைவியை விவாகரத்து பண்ணப்போறேன்டா.''
'ஏண்டா திடீரென்று?'
''பின்ன என்னடா,மூன்று மாதமா என்கிட்டே அவள் பேசுவதே இல்லை.''
'மச்சி,நல்லா யோசிச்சுக்கடா,இந்த மாதிரி பொண்ணு கிடைக்க மாட்டாடா.அவனவன் தன்  மனைவி பேச்சை நிறுத்த மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான்.நீ என்னடான்னா.'
********

கணவன் வேண்டுமா?

3

Posted on : Monday, November 05, 2012 | By : ஜெயராஜன் | In :

மேரி கோரல்லி என்று ஒரு ஆங்கில நாவல் ஆசிரியை இருந்தார்.அவர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.அவருடைய சினேகிதி ஒருவர் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினார்.அதற்கு அவர் சொன்னார்,''நான் செல்லமாக ஒரு நாய்,கிளி,பூனை வளர்க்கின்றேன்.அவை என்னிடம் அன்பாக இருக்கின்றன.ஒரு நாய் வளர்க்கிறேன்.அது நாள் முழுவதும் குரைக்கிறது.கிளி ஒன்று வளர்க்கிறேன்.அது பகல் முழுவதும் திட்டுகிறது.பூனை ஒன்று வளர்க்கிறேன்.அது இரவு முழுவதும் வெளியே போய் விடுகிறது.இப்படி ஒரு கணவன் பல்வேறு தருணங்களில் செய்யக் கூடிய காரியங்களை இவை செய்து விடுகின்றன.பின் எதற்காக நான் மணம் செய்து கொள்ள வேண்டும்?''
********
ஒரு கூட்டத்தில் கல்கி பேசினார்.அவருக்கு முன் கிருஷ்ணசாமி அய்யரும்,டி .கே.சி.யும் பேசி முடித்திருந்தனர். கிருஷ்ணசாமி அய்யர் திருப்புகழை நன்கு படித்தவர்.டி.கே.சி.'ரசிகமணி' என்று அழைக்கப் பட்டவர்.கல்கி,''மேடையில் இந்தப் பக்கம் திருப்புகழ்  மணி.மறுபக்கம் ரசிகமணி.இடையில் நின்று பேசும் நானோ ஒரு பெண்மணி கூட இல்லையே!'' என்றதும் ஒரே கைதட்டல்.
********

சுயமரியாதை

1

Posted on : Sunday, November 04, 2012 | By : ஜெயராஜன் | In :

பிரபல ஆங்கில எழுத்தாளர் மார்க் ட்வைன் ஒரு முறை இந்தியா வந்திருந்தார்.நண்பர்களுடன் கங்கை நதிக் கரைக்கு சென்றார்.மிக எதிர் பார்ப்புடன் வந்த அவர் கங்கை நீரைப் பார்த்துவிட்டு,''கங்கை நீர் இவ்வளவு அசுத்தமாக இருக்கிறதே?''என்று கேட்டார்.நண்பர்கள் விட்டுக் கொடுக்காமல் , ''பார்க்க அப்படித்தான் இருக்கும்.உங்கள் நாட்டு விஞ்ஞானிகளே இந்த நீரை சோதித்துப் பார்த்துவிட்டு இதில் எந்த நோய்க் கிருமியும் வாழ முடியாது என்று கூறி விட்டனர்,''என்றனர்.மார்க் ட்வைன் சிரித்துக் கொண்டே சொன்னார்,''சரிதான்.சுய மரியாதையுள்ள எந்த உயிர்க் கிருமியும் இதில் வாழ ஒத்துக் கொள்ளாது.''
********
விஞ்ஞானி சர்.சி.வி.ராமனுக்கு ஒரு பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் அளித்து பாராட்டியது.அந்த ஊர் மதுவுக்கு புகழ் பெற்றது.எனவே விருந்தில் மது தாராளமாகப் புழங்கியது.ஆனால் எவ்வளவோ வற்புறுத்தியும் ராமன் மது அருந்த மறுத்து விட்டார்.விருந்து முடிந்தவுடன் நண்பர்கள்,ராமன் மது குடிக்காமல் எப்படித் தப்பித்தார் என்று கேட்டார்கள்.அவர் சொன்னார்,''இந்த விழாவில் கலந்து கொண்டவர்கள்  மதுவில் 'ராமனின் விளைவு' எப்படியிருக்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.இன்று ராமனிடம் மதுவின் விளைவு எப்படியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்து ஏமாற்றம் அடைந்தார்கள்.''
********

துணிவு

2

Posted on : Friday, November 02, 2012 | By : ஜெயராஜன் | In :

'போர்க்காலக் கதாநாயகன்'என்று பெயர் பெற்றவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கும் அவரது மருமகனுக்கும் கொஞ்சமும் ஒத்துப் போவதில்லை.ஒரு நாள் சர்ச்சிலின் நண்பர் அவரிடம் கேட்டார்,''போர் முடிவில் யார் அதிகம் பிரபலம் அடைவார்கள் ?''மருமகனைப் பற்றிய ஏதோ வெறுப்பில் இருந்த அவர்,''முசொலினி தான் பிரபலம் அடைவார் ,'' என்றார்.நண்பருக்கு அவர் பதிலினால் வியப்பு ஏற்பட்டது. அவருடைய பதிலுக்கான காரணத்தைக் கேட்டார்.சர்ச்சில் வெறுப்புடனேயே சொன்னார்,''முசொலினிக்குதான் தன்னுடைய மருமகனை சுடக் கூடிய தைரியம் இருந்தது.''நண்பர் சொல்லாமல் கொள்ளாமல் அவ்விடத்திலிருந்து அகன்றார்.
********
ஒரு நிருபர் பேரறிஞர் பெர்னாட்ஷாவிடம் கேட்டார்,''பெரிய அறிஞர்களுக்கெல்லாம் ஞாபக மறதி அதிகம் என்று நீங்கள் ஒரு முறை கூறி இருக்கிறீர்கள் அல்லவா?''ஷா அமைதியாக சொன்னார்,''எனக்கு ஞாபகம் இல்லையே!''
********

சுகமா,துக்கமா?

2

Posted on : Wednesday, October 31, 2012 | By : ஜெயராஜன் | In :

ஞானி ஒருவர் பாலைவனத்தில் நடந்து கொண்டிருந்தார்.எதிரில் வந்த வயதான ஒரு பெண்மணி திடீரென அவர் காலில் விழுந்து அழுதார். ஞானியிடமவர்,''என்னிடம் மிக அன்பாக இருந்த என் கணவர் இறந்து விட்டார். என் உறவினர்கள் என்னை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்துக் கொண்டனர்.கடவுள் மிகக் குரூரமானவர்.எனக்கு அபார ஞாபக சக்தியைக் கொடுத்து பழையதை எல்லாம் நினைத்து துக்கம் நெஞ்சை அடைக்க செய்கிறார்,''என்று கூறி தேம்பினார்.
ஞானி வாய்விட்டு சிரித்தார்.அந்தப் பெண்ணிடம் அவர் சொன்னார்,''கடவுள் எனக்கும் அதிக ஞாபக சக்தியைக் கொடுத்துள்ளார்.வறண்ட பாலைவனத்தில் நடக்கும்போது நான் ரசித்த ரோஜாக்களை நினைவுக்குக் கொண்டு வந்து மகிழ்ச்சியாக இருக்க செய்கிறார்.முகம் சுளிக்கும் மனிதர்களைக் காணும்போது முன்னர் புன்னகையோடு பார்த்த மனிதர்களை நினைவூட்டுகிறார்.அதனால் எனக்கு அவர் கருணை வடிவானவராய்த்
தெரிகிறார்.''
எதையும் நாம் நோக்கும் விதத்தில்தான் வாழ்க்கை சுகமா,துக்கமா என்று தீர்மானிக்கப் படுகிறது..

பெனால்டி கார்னர்

1

Posted on : Wednesday, October 31, 2012 | By : ஜெயராஜன் | In :

கால்பந்து போட்டியில் பெனால்டி கார்னர் என்று ஒன்று உண்டு.கோல்  கம்பத்திலிருந்து 11 மீட்டர் தூரத்திலிருந்து பந்தை கோல்  போஸ்ட் நோக்கி உதைக்க வேண்டும்.அந்தப் பந்து கோல்  வலைக்குள் விழாமல் தடுக்க வேண்டியது கோல் கீப்பரின் வேலை.கோல் கீப்பருக்கு பந்து மேலே போகுமா,இடது புறம் போகுமா,வலது புறம் போகுமா என்பதனை முடிவெடுக்க ஒரு வினாடி நேரம் கூட இருக்காது.பந்து வரப்போகும் திசையைத் தீர்மானித்து பாய்ந்து பந்தைத் தடுக்க வேண்டும்.கோல்  விழுந்துவிட்டால் அவர் பாடு அதோ கதிதான்.
நூற்றுக்கணக்கான முக்கியமான போட்டிகளின் பெனால்டி கிக்குகளை ஆய்வு செய்ததில் பெரும்பாலான நேரங்களில் பந்து நேரடியாகத்தான் உதைக்கப் பட்டிருந்தது,தெரிய வந்தது.அந்த மாதிரி நேரங்களில் கோல் கீப்பர் நின்ற இடத்தில் இருந்தே கோல் விழாமல் தடுத்திருக்க முடியும்.ஆனால் 92 சதவிகித கோல் கீப்பர்கள் ஏதோ ஒரு திசையில் பாய்ந்து கோலைக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.ஏன் இப்படி அவர்கள் பாய்கிறார்கள்?நின்ற இடத்தில் நின்று இடது புறமோ,வலது புறமோ வந்து கோல் விழுந்து விட்டால் அனைவரும் கோல் கீப்பரைத்தான் திட்டுவார்கள்.ஏதோ ஒரு புறம் பாய்ந்து ,கோல் விழுந்தாலும்,''பாவம்,அவன் என்ன செய்வான்?நல்லாத்தான் தாவி முயற்சி செய்தான்''என்று உலகம் உச்சுக் கொட்டும்.
நம் அன்றாட வாழ்விலும் சுற்றி இருப்பவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பதற்றத்திலும் தயக்கத்திலும் தவறான முடிவை எடுத்து அதை செயல் படுத்தி சொதப்பி விடுகிறோம்.சில சமயங்களில் எதுவும்  செய்யாமல் இருப்பதே நாம் செய்யக் கூடிய சிறந்த செயல் என்பதனை உணர்ந்தாலே பெருமளவு சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம்.

தனித்தன்மை.

1

Posted on : Tuesday, October 30, 2012 | By : ஜெயராஜன் | In :

முனிவர் ஒருவர் ஒரு பாதையில் நடந்து கொண்டிருக்கையிலேயே திடீரென பாதையில் குப்புறப் படுத்து,அந்த நிலையிலேயே தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.
அப்போது அந்த வழியே ஒரு குடிகாரன் வந்தான்.கீழே கிடந்த முனிவரைப் பார்த்து,''இவனும் நம்மை மாதிரி பெரிய குடிகாரன் போலிருக்கிறது இன்றைக்கு அளவுக்கு மீறி குடித்திருப்பான்.அதனால்தான் சுய நினைவில்லாமல் இங்கே கிடக்கிறான்,''என்று சொல்லிக் கொண்டே கடந்து போனான்.
அடுத்து ஒரு திருடன் அந்த வழியே வந்தான்.அவன் அவரைப் பாரத்தவுடன்,''இவன் நம்மைப்போல ஒரு திருடன் போலிருக்கிறது. இரவெல்லாம் திருடிவிட்டு களைப்பு மிகுதியால் நினைவில்லாமல்  படுத்துக் கிடக்கிறான்,பாவம்,''என்று கூறியவாறு அங்கிருந்து அகன்றான்.
பின்னர் முனிவர் ஒருவர் அங்கு வந்தார்.அவர்,''இவரும் நம்மைப் போல ஒரு முனிவராகத்தான் இருக்க வேண்டும்.தியானத்தில் இருக்கும் இவரை நாம் தொந்தரவு செய்யலாகாது,''என்று நினைத்தவாறு தன்  பாதையில் சென்றார்.
ஆக ஒவ்வொரு மனிதரும் அவரவர் தனித்தன்மையில்  இருக்கிறார்கள். அவர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள்.நாம்தான் நம் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களைப் பற்றி கற்பனைகள் செய்து கொண்டு அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று எண்ணிக் கொள்கிறோம்..உறவுகள் சீர்கெடுவதற்கு  இது ஒரு முக்கிய காரணம்.

காபி கோப்பை

3

Posted on : Monday, October 29, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தனது நண்பர்களுக்கு விருந்து அளித்தார்.விருந்தின் முடிவில் ஒரு கேன் நிறைய காபி கொண்டு வந்து வைக்கப்பட்டது.ஒரு தட்டில் சாதாரண பிளாஸ்டிக் கப்பிலிருந்து கண்ணாடிக் கோப்பை,பீங்கான் கோப்பை, அலங்காரக்  கோப்பை என்று விதவிதமான கோப்பைகள் இருந்தன.விருந்துக்கு வந்த அனைவரும் விலை உயர்ந்த கோப்பைகளை எடுக்கவே முயன்றனர்.விலை குறைந்த பிளாஸ்டிக் கோப்பைகளை யாரும் சீண்டக் கூட இல்லை.விருந்தளித்தவர் சொன்னார்''எதிலும் சிறப்பையே நாடுவது மனித இயல்பே.ஆனால் உங்களது இப்போதைய தேவை காபிக் கோப்பைகள் அல்ல.நல்ல காபிதான்.எந்தக் கோப்பையில் குடித்தாலும் நீங்கள் குடிக்கப் போவது இங்குள்ள ஒரே தரக் காப்பியைத்தான்.
நம்  வாழ்க்கையும்  அந்தக் காபியைப் போன்றுதான் உள்ளது.அந்தக் காபியை அருந்த உதவும் கோப்பைதான் உங்கள் வேலை,சமூக அந்தஸ்து,செல்வச் செழிப்பு எல்லாம்.நீங்கள் உங்கள் கோப்பைகளில் மட்டும் கவனம் செலுத்தி.காபியின் உண்மையான ருசியை ரசிக்கத் தவறி விடுகிறீர்கள். காபியின் ருசியை நாவிற்கும் நாசிக்கும் ஏற்றுங்கள்,நண்பர்களே!''


தன்னம்பிக்கை வளர-2

1

Posted on : Sunday, October 28, 2012 | By : ஜெயராஜன் | In :

1 'நம்மால் முடியுமா?' என்று சந்தேகப்படுவதை தவிருங்கள்.
2 பழைய தவறுகளை நினைத்துக் குழம்பாதீர்கள்.அது தன்னம்பிக்கையை வெளிப்படாமல் செய்துவிடும்.
3 சிரமங்களை வெல்ல வேண்டும் என்ற எண்ணம், ஒரு பெரிய பிரச்சினை போல இருக்கக் கூடாது .காலால் சிறு கல்லைத் தட்டி விட்டதுபோல இருக்க வேண்டும்.
4 எந்த இடத்திலும்,எந்தப் பிரச்சினையிலும் தேவையில்லாமல் டென்சன் ஆகாதீர்கள்.
எந்தக் கட்டத்திலும் உங்களுக்கு நீங்கள் மட்டும்தான் சரியான துணை என்று ரகசியமாகப் புரிந்து வைத்திருங்கள்.

ஆழ்மனம்

3

Posted on : Sunday, October 28, 2012 | By : ஜெயராஜன் | In :

மனம் குழம்பிப் போய்விட்டதா?
இதயம் நொறுங்கி விட்டதா?
தீர்க்க முடியாத நோய்களின் தொல்லையா?
அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி
உங்கள் ஆழ்மனதிற்கு உண்டு.
மூன்று சிறைகளின் கதவையும் இது திறக்கும்.'
''நன்றாக,தெளிவாக இருக்கிறேன்,
என் நோய்கள் குணமாகிவிட்டன.
நான் முன்னேறுகிறேன்.''
பலமுறை இவற்றை சொல்லிவிட்டு ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையுடன் துவக்குங்கள்.உங்கள் ஆழ்மனம் இதற்காகப் பிரபஞ்ச சக்திகளுடன் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சினைகளை நீங்கள் அறிந்து,புரிந்து கொள்வதற்கு முன்பே தீர்த்துவிடும்.எனவே நம்பிக்கையுடன் உங்கள் ஆழ்மனதிற்கு இடைவிடாது கட்டளையிட்டு வெற்றி பெறுங்கள்!
 

மௌனம்

1

Posted on : Saturday, October 27, 2012 | By : ஜெயராஜன் | In :

முட்டாளின் மேலான ஞானம் மௌனம்.
அறிஞனின் பெரிய சோதனை பேச்சு.
********
மௌனம் நூறு தடைகளை வென்றுவிடும்.
********
பேச்சினால் பின்னர் வருந்த நேர்கிறது.
மௌனத்தால் அப்படி நேர்வதில்லை.
********
உண்மையான மௌனம் உள்ளத்திற்கு ஓய்வளிக்கும்.
********
மௌனமாயிருந்து மூடனாகக் கருதப்படுவது,சந்தேகமில்லாமல் ,பேசி மூடன் என்று காட்டிக் கொள்வதைவிட மேலானது,
********
நீ அமைதியாக வாழ விரும்பினால்,கேள்;பார்;அனால் மௌனமாயிரு .
********
மௌனமாக இருக்கத் தெரியாதவனுக்கு நன்றாகப் பேசவும் தெரியாது.
********
மௌனம் என்ற மரத்தில் அமைதி என்னும் கனி தொங்குகிறது.
********
உன்னைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக எண்ண  வேண்டுமானால் மௌனமாயிருக்க வேண்டும்.
********
மௌனம் என்பது சிந்தனையின் கூடு.
********
மூடிய வாயின் இசை இனியது.
********
ஒருவனுடைய வாய்ப் பேச்சைவிட அவனது மௌனம் அதிகமாக எண்ணங்களைப் பிரதிபலிக்கும்.
********

நேரம் நல்ல நேரம்

1

Posted on : Saturday, October 27, 2012 | By : ஜெயராஜன் | In :

அவசரத்துக்கும் அவசியத்துக்கும் என்ன வித்தியாசம்?எந்த ஒரு காரியம் ஒரு கால கட்டத்துக்குள்செய்து  முடிக்க வேண்டுமோ அது அவசரக் காரியம். பையனுக்கு கல்லூரிக் கட்டணம் மாதக் கடைசியில் செலுத்த வேண்டும் என்பது அவசரக் காரியம்.முதல் தேதியன்று அதன் அவசர நிலை குறைவு. நாளாக ஆக அது அதிக அவசரம் ஆகிறது.காலம் கடத்திக் கொண்டே போனால் அதுவே சிக்கல்  ஆகி விடுகிறது.ஆனால்,ஒரு அவசியமான காரியம் என்றும் அவசியமாகத்தான் இருக்கும்.நாள் ஆக ஆக அது அதிக அவசியம் ஆகாது.ஒவ்வொரு காரியத்தையும் நான்கு விதமாகப் பிரிக்கலாம்.
1 அபாயப் பகுதி:அவசியமும் அவசரமும் கூடிய காரியங்கள் .அவற்றைப்  புறக்கணித்து காலம் கடத்தினால் அபாயம்தான்.வேலைகள் சரியாக செய்யப் பட மாட்டாது.மன அமைதி பாதிக்கப்படும்.
உதாரணம்:மகளுக்குத் திருமணம் என்பது ஒரு அவசியமானதும் அவசரமானதுமான செயல்.உரிய வயதில் நடத்தாமல் தள்ளிப் போட்டு வந்தால் ஒரு கால கட்டத்தில் எப்படியோ திருமணம் நடந்தால் போதும் என்ற நிலை ஏற்படும்.
2 திட்டமிடும் பகுதி:அவசியமான செயல் ஆனால் அவசரம் இல்லை.நிதானமாக யோசித்து திட்டமிட்டு நேர்த்தியாகச்செய்ய போதிய அவகாசம் உண்டு.(உ-ம் )மகளுக்கு வயது பத்து.அவள் திருமணம் அவசியம்,ஆனால் அவசரம் இல்லை.பணம் சேமிக்கலாம்.அவளைப் படிக்க வைக்கலாம் .ஆரோக்கியமாக வளர்க்கலாம்.நல்ல பழக்க வழக்கங்களைப் போதிக்கலாம்.
3 வீணாகும் பகுதி:இந்த செயல்களுக்கு அவசியமும் கிடையாது,அவசரமும் கிடையாது.நம்மில் பலர் பெரும் பகுதி நேரத்தை இதில்தான்  கழிக்கின்றனர். உபயோகமற்ற அரட்டை ,சம்பந்தமில்லாப் பிரச்சினைகளில் தலையிடுதல் போன்ற செயல்கள் இதில் அடங்கும்.நமது பொன்போன்ற  நேரம் வீணாவது தான் இதில் உள்ள அபாயம்.
4 வேகமான பகுதி:அவசரமாகச் செய்ய வேண்டியவை,ஆனால் அவசியம் கிடையாது.(உ.ம் )அலுவலகம் செல்லும்போது வழியில் விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவரிடம் கொண்டு போய் சேர்ப்பது.மனிதாபிமான அடிப்படையில் செய்வது நல்லதுதான் என்றாலும் இதே வேலையாகத் திரிந்தால் நம் லட்சியங்களை அடைவது தாமதமாகும்.
இன்னின்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதுபோல இன்னின்ன வேலைகளை செய்யக்கூடாது என்ற பட்டியலையும் தயார் செய்ய வேண்டும்.நம் வளர்ச்சிக்கு இது மிகத் தேவையானது.

எப்படிப் பேசுவது?

2

Posted on : Friday, October 26, 2012 | By : ஜெயராஜன் | In :

பேசினால் உண்மை எல்லாம் அழிகிறது.
பேசப் பேச தீமை வளர்கிறது.எனவே
பேசுவதானால் ஆலோசித்துப் பேசு.
சாதுவைக் கண்டால் இரண்டொரு வார்த்தை பேசு.
துஷ்டனிடம் மௌனமாய் இரு.
பண்டிதரிடம் நன்மைக்கானவற்றைச் சொல்.
முட்டாளிடம் வாயைத் திறக்காதே.
அரை குடம் ததும்பும்.
ஞானப் பூர்த்தியினாலேயே மனிதன் ஆலோசித்துப் பேசுவான்.
இனிய மொழி பேசுவதால் எல்லோரும் நம்மிடம்
மலர்ச்சியாக இருக்கிறார்கள்.
நாமும் மலர்ச்சியாக இருக்கிறோம்.
                               --கபீர்தாசர்.

முத்திரை

3

Posted on : Friday, October 26, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு முறை அறிஞர் அண்ணா தேர்தல்  கூட்டம் ஒன்றிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்தார்.இருப்பினும் அவர் வருகைக்காக பெருந்தொகையான மக்கள் காத்திருந்தனர்.அண்ணா பேசினார்,
''மாதமோ....சித்திரை.
மணியோ பத்தரை.
தழுவுவதோ  நித்திரை.
இடுவீர் எமக்கு முத்திரை.''
மக்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆகியது.
********
அண்ணா முதல்வராயிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார், ''புளி விலை இப்போது அதிகமாக இருக்கிறது எங்கள் ஆட்சியில் புளியின் விலை மிகக் குறைவாக இருந்தது.இது யாருடைய சாதனை?''அண்ணா சொன்னார்,''இது புளிய மரத்தின் சாதனை!''
********

மன்னவனே அழலாமா?

2

Posted on : Thursday, October 25, 2012 | By : ஜெயராஜன் | In :

அழுவது தவறு என்றும் குறிப்பாக ஆண்கள் அழுவது ஆண்மைக்கு இழுக்கு என்றும் சிறு வயதிலிருந்து நாம் சொல்லிக் கொடுக்கப்பட்டு அதைக் கடைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.அழலாமா,கூடாதா?முக்கியமான நேரங்களில் உணர்ச்சிகளை அடக்கி வைக்காமல் அழுது  தீர்த்து விட்டால் மனதுக்கு அமைதி கிடைக்கும்.ஏதாவது முக்கியமான செய்திகளைக் கேட்கும்போது உடலும் மனதும் பதற்றப்படும்.அப்போது இரத்தக் கொதிப்பு ஏற்படாதிருக்க அழுது விடுவதே சிறந்தது.அழும்போது மன இறுக்கம் அகலும்.அழும்போது ஹார்மோன்கள் செயல்பட்டு தசைகளை டென்சன் இல்லாமல் ஆக்கி கவலைகளை துரத்தி விடுகின்றன.நடுநிலையுடன் உணர்வுக்கு அமைதி கிட்டுவதால் பிரச்சினைகளை மீண்டும் எதிர்த்து சமாளித்து வெற்றி பெற மனதில் வைராக்கியம் தோன்றும்.குரல் விட்டு அழுவதால் அகப் பண்பு விருத்தியாகி தைரியம் பிறக்கிறது.உடலில் நோய் உள்ளவர்களும் துன்பத்தில் உழல்பவர்களும்  மனம் விட்டு இறைவனிடம் அழுகிறார்கள்.அப்போது அவர்களுக்கு உடலிலும் உள்ளத்திலும் நல்ல மாற்றங்கள் உண்டாகின்றன என்று மனோதத்துவ மருத்துவர்கள் கூறுகிறார்கள்.அழுவதால் ஒருவருக்கு மன தைரியம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

கவலையை ஒழிக்க

1

Posted on : Thursday, October 25, 2012 | By : ஜெயராஜன் | In :

கவலை வாழ்வைத் துன்பமயமாக்கி விடுகிறது.எனவே கவலைகளை ஒழித்தே ஆக வேண்டும்.அதற்கான சில பயிற்சிகள்:
1 தனிமையில் அமைதியாக உட்காருங்கள்.பேப்பர்,பேனா எடுத்துக் கொள்ளுங்கள்.
2 உங்கள் கவலைகளையெல்லாம் தொகுத்து வரிசைப் படுத்தி எழுதிக் கொள்ளுங்கள்.
3 கவலைதரும் சிக்கல்களை கீழ்க்கண்ட நான்கு வகைகளில் பிரித்துக் கொள்ளுங்கள்.
.அனுபவித்தே தீர வேண்டிய கவலைகள்.(தீராத நோய்,மரணம்,பொருள் இழப்பு போன்றவை)
.தள்ளி வைத்துப் பொறுமை கட்ட வேண்டிய கவலைகள்.(பருவம் வந்தும் திருமணம் ஆகாமை போன்றவை)
.அலட்சியப்படுத்த வேண்டிய கவலைகள்.(பிறரின் கருத்து வேறுபாடு, பொறாமைப் பேச்சு,செயல்கள் போன்றவை)
.உடனே தீர்த்து விட வேண்டியவை.(கடன் தொல்லை,பாகப் பிரிவினை,தவிர்க்க முடியாத அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.)
இவ்வாறு தரம் பிரித்தவுடன் அவற்றிற்கேற்றவாறு செயல் பட வேண்டும்.
4 ஒரு சிக்கலை விரைவாகத் தீர்க்க உணர்ச்சி வசப்பட்டு செயலாற்ற வேண்டாம்.அறியாமையால் சிக்கல்களை மேலும் உண்டாக்கிக் கொள்ளாமல் இருந்தால் போதும்.
5 முன்பு வந்த கவலைகள் எப்படித் தீர்ந்தன என்று யோசித்துப் பாருங்கள்.
6 வாழ்வில் சிக்கல்களே இருக்கக் கூடாது என்று எண்ணவோ ,இருப்பவற்றை எல்லாம் வேரோடு களைந்து விட வேண்டும் என்று முடிவு செய்யவோ, செயலாற்றவோ வேண்டாம்.ஒரு சிக்கல் தீர்ந்து மற்றொன்று முளைக்கும் போது ஏற்படும் கவலைகளைத் திட்டமிட்டு செயலாற்றி நீக்கிக் கொண்டால் மகிழ்ச்சியும் அமைதியும் பெறலாம்.

முட்டை

1

Posted on : Wednesday, October 24, 2012 | By : ஜெயராஜன் | In :

முட்டை வியாபாரி:என் பையன் எப்படி படிக்கிறான்,சார்?
ஆசிரியர்:நீங்கள் விற்கிறீர்கள்.அவன் வாங்குகிறான்.அவ்வளவுதான்.
********
ராமு:அரையாண்டு தேர்வு எப்படி எழுதி இருக்கே?
சோமு:அரைகுறையாய்த்தான்.
********
தந்தை:ராமு,மணி என்னவென்று பார்த்துச் சொல்லு.
மகன்:எனக்கு மணி. பார்க்கத் தெரியாது அப்பா.
தந்தை:சரி,பெரிய முள்ளும்,சின்ன முள்ளும் எங்க இருக்கு என்று பார்த்துச்சொல்லு .
மகன்:இரண்டும் கடிகாரத்தில் தான் அப்பா இருக்கு.
********
''எலியின் ஆயுட்காலம் எவ்வளவு,தெரியுமா?''
'அது சுற்றி இருக்கும் பூனைகளைப் பொறுத்தது.'
********
ஆசிரியர்:செய்வினைக்கும் செயப்பாட்டு வினைக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:நீங்கள் கொடுக்கும் வீட்டுப் பாடத்தை நானே போட்டால் அது செய்வினை.அதையே எங்க அப்பா செய்து கொடுத்தால் அது செயப்பாட்டு வினை.
********
ராமு:மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்:தான் வாங்கக் கூடாது என்று நினைப்பவன் யார்?
சோமு:குத்து சண்டை வீரன்.
********
''நாம் எப்போதும் வக்கீல்களிடம் உண்மையே சொல்ல வேண்டும்''
'ஏன் அப்படி?
''பொய் சொல்வதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.''
********
ராமு:எங்கப்பா ஒரு ஆசிரியர்.ஸ்டாம்ப் சேர்ப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
சோமு:எங்கப்பா ஒரு அரசியல்வாதி.காந்தி படம் போட்ட நோட்டுகளை சேகரிப்பதுதான் அவரது பொழுதுபோக்கு.
********
''கல்யாணமும் சூயிங்கமும் ஒரே மாதிரிதான்''
'எனக்குப் புரியலையே.'
''இரண்டும் போகப்போக சுவையே இல்லாமல் ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டே இருக்கும்.''
********
''நம்ம பாகவதர் பாட ஆரம்பித்தாருன்னா உலகத்தையே மறந்து விடுவார்.''
'அதுக்காக பாடிய பாட்டையே மூணாவது தடவை பாடணுமா?'
********

கண்டுபிடி

1

Posted on : Wednesday, October 24, 2012 | By : ஜெயராஜன் | In :

பழைய காலத்தில் வைத்தியர் குடும்பம் ஒன்று இருந்தது.அவர் வீட்டில் எல்லோரின் பெயரும் வித்தியாசமாக இருந்தது.வைத்தியர் பெயர்,'தெரியாது'.அவரின் மனைவியின் பெயர்,'புரியாது'.மூத்த மகனின் பெயர்'புரியுமா'.இளைய மகனின் பெயர்'தெரியுமா'.மூத்த மருமகள் பெயர்,'சொன்னால் கேட்கிறேன்'.இளைய மருமகள் பெயர்,'கேட்டால் சொல்கிறேன்'.ஒரு பேரனின் பெயர்,'எனக்குத் தெரியும்'.இன்னொரு பேரனின் பெயர்,'எனக்குப் புரியும்'.அவர்கள் வீட்டில் ஒரு கழுதையும் இருந்தது.அதற்கும் அவர்கள் ஒரு வித்தியாசமான பெயரைத்தான் வைத்திருந்தார்கள். அது,என்னவென்று கண்டுபிடியுங்கள்.

விடை:இது ஒரு புதிரே அல்ல.இதில் எந்தக் கேள்வியும் கேட்கப்படவில்லை.அந்தக் கழுதையின் விசித்திரமான பெயர்தான்,'என்னவென்று கண்டுபிடியுங்கள்'.

''டைம் பாஸ் ''வார இதழிலிருந்து.

நேர்மை.

4

Posted on : Tuesday, October 23, 2012 | By : ஜெயராஜன் | In :

தனது  வாழ்நாள் முழுவதும் கஞ்சனாகவே இருந்த ஒரு பணக்காரன் சாகும் தருவாயில், தான் வாழ்க்கையை வீணடித்துவிட்டதை உணர்ந்து வருந்தினான்.பணத்தையே தெய்வமாகக் கருதிய அவனுக்கு இப்போது பணம் எந்த வகையிலும் உதவி செய்யாது என்பதை உணர்ந்தவுடன் அதை வெறுத்தான்.தனது  மூன்று மகன்களையும் அழைத்து,''நான் இதுவரை பணப்பித்து பிடித்திருந்து இப்போதுதான் தெளிந்துள்ளேன்.நீங்களாவது பணத்துக்கு முக்கியம் கொடுக்காமல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.நான் இதுவரை சேர்த்த பணத்தை மூன்று பைகளில் வைத்துள்ளேன்.ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் ரூபாய் இருக்கிறது.நான் இறந்தவுடன் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பையை எடுத்து என் பிணத்துடன் வைத்து எரித்து விடுங்கள்,''என்றார்.பிள்ளைகளும் உறுதியளிக்க அவரும் நிம்மதியுடன் மரணத்தைத் தழுவினார்.அவர் கூறியபடியே மூன்று பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு பையை பிணத்துடன் வைத்து எரித்தனர். வீட்டுக்கு வந்தவுடன் மூத்தவன் சொன்னான்,''தம்பிகளே,நான் அப்பா சொன்னபடி நடக்க முடியவில்லை.எனக்கு ஐம்பதினாயிரம் ரூபாய் கடன் இருந்ததால் அதை எடுத்துக் கொண்டு மீதியைத்தான் எரித்தேன்,'' இரண்டாமவன் உடனே சொன்னான்,''நீ பரவாயில்லை.எனக்குக் கடன் கூடுதலாக இருந்ததால் நான் இருபதினாயிரம் ரூபாயை மட்டும் பையில் வைத்துப் போட்டேன்,''கடைக்குட்டிக்கு பயங்கரக் கோபம் வந்து,''அப்பா சொல்லைக் கேளாத நீங்கள் உருப்படுவீர்களா?அவர் நம்பிக்கையை சிதைத்து விட்டீர்களே,''என்று கன்னாபின்னாவெனத் திட்டினான்.அண்ணன்கள் இருவரும்,''பரவாயில்லை,நீயாவது அப்பா சொன்னபடி முழுப் பணத்தையும் போட்டு விட்டாயா?''என்று கேட்டனர்.கடைக்குட்டி சொன்னான்,''நான் நேர்மையானவன்.அப்பா கொடுத்த பணத்தை என் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு அப்பா பெயருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு  செக் எழுதி பையில் வைத்து அவர் பிணத்துடன் வைத்துவிட்டேன்.''

கைப்பாவை

1

Posted on : Tuesday, October 23, 2012 | By : ஜெயராஜன் | In :

உங்கள் மனதில் நிறைந்துள்ளவை எல்லாம் உங்களுடையவை அல்ல.நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டியவர்கள்.நீங்கள் அவற்றுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.அதுமட்டும்தான் பாவம்,குற்றம். உதாரணமாக, யாராவது உங்களை அவமதித்து விடுகிறார்கள்.நீங்கள் கோபமடைகிறீர்கள் .நீங்கள் கோபம் அடைவதாக எண்ணுகிறீர்கள்.ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது அவரது அவமதிப்பு ஒரு ரிமோட் கண்ட்ரோல்.உங்களை அவமதித்த மனிதன் உங்களுடைய நடவடிக்கையைக் கட்டுப் படுத்துகிறான். உங்களது கோபம் அவன் கையில் உள்ளது.நீங்கள் ஒரு கைப்பாவையாகச் செயல் படுகிறீர்கள்.
********
புத்தர் கூறுகிறார்,''கோபப்படுவது என்பது முட்டாள்தனமானது.யாரோ என்னவோ செய்கிறார்.நீங்கள் கோபமடைகிறீர்கள்.அவர் ஏதாவது தவறாகச் செய்யக் கூடும்.தவறாகச் சொல்லக் கூடும். . உங்களை அவமதிக்க ஏதேனும் முயற்சி செய்யக் கூடும்.ஆனால் அது அவரது சுதந்திரம்.நீங்கள் எதிர்ச் செயல் புரிந்தால் நீங்கள்தான் அடிமை என்றாகிறது.'' நீங்கள் அந்த மனிதரிடம்,''உனது மகிழ்ச்சி என்னை அவமதிப்பது.எனது மகிழ்ச்சி கோபம் கொள்ளாமல் இருப்பது.''என்று கூறினால் நீங்கள் எஜமானனைப் போல நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள்.
********

உதட்டளவில் அற்புதம்

1

Posted on : Monday, October 22, 2012 | By : ஜெயராஜன் | In :

உங்கள் எண்ணங்களுக்கு சிறகு வார்த்தைதான்.உயரப் பறந்தாலும் பறக்கும்,புழுதியில் விழுந்தாலும் விழும்.அது உங்கள் வார்த்தையின் தன்மையைப் பொறுத்தது.நீங்கள் வார்த்தை வடிவில்தான் சிந்திக்கிறீர்கள். உடலுக்கு ஆடைபோல,எண்ணங்களுக்கு வார்த்தைகள்.வார்த்தைகளின்றி மனிதர்களை இயக்க முடியாது.சரியான வார்த்தைகள்தான் உங்கள் கருவி.மற்றவர்களை உங்கள் வசமாக்குவது அவைதான்.உணர்வுகளைத் தட்டி எழுப்பிடும் சிறந்த ஆயுதம் பேச்சு.இந்த ஆயுதத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அது உங்கள் பக்கமே திரும்பக் கூடும்.சின்னச்சின்ன வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்.நாலு வார்த்தையில் அழகாகச் சொல்லக்கூடிய ஒரு விஷயத்தை நாள் முழுக்கச் சொன்னாலும் பயன்படாது.எதையும் புன்முறுவலோடு சொல்லுங்கள்.இனிய வார்த்தைகளைப்போல நெஞ்சைத் தொடுவது எதுவும் இல்லை.நிறையக் கேளுங்கள் குறையப் பேசுங்கள்.அதற்காகத்தான் உங்களுக்கு இரண்டு காதுகளும் ஒரு வாயும் உள்ளன.

தெரியுமா?

1

Posted on : Monday, October 22, 2012 | By : ஜெயராஜன் | In :

சூரியனிலிருந்து ஒரு மலையின் உச்சியானது ,பூமியின் நிலப்பரப்பைக் காட்டிலும் அருகாமையில் உள்ளது.அப்படியானால் மலை உச்சியில்தானே வெப்பம் அதிகமாக இருக்க வேண்டும்?மாறாக மலை உச்சியில் வெப்பம் குறைவாக இருப்பதேன்?
சூரியனிலிருந்து பூமிக்கு வெப்பம் வருவதில்லை.சிவப்புக் கதிர்கள்தான் (Infra red rays)வருகின்றன.அந்தக் கதிர்கள் ஒரு பொருளின் மீது படும்போது அந்தப் பொருள் சூடாகிறது.தரையிலிருந்து உயரே செல்லச்செல்ல காற்றின் அடர்த்தி குறைகிறது.அதனால் இக்கதிர்களை உட்கவர்ந்து வெப்பம் உண்டாக்கப் போதுமான பொருள் அங்கு இல்லை.அதனால் அங்கு அவ்வளவு வெப்பம் இருப்பதில்லை.எனவேதான் மலை உச்சிகள் குளிர்ச்சியாக உள்ளன.

ஒத்துழைப்பு இல்லையா?

1

Posted on : Sunday, October 21, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு தொழிலையோ,ஒரு குடும்பத்தையோ,ஒரு அமைப்பையோ,ஏன்,ஒரு சிறு செயலையோ நல்லபடி நடத்திச் செல்ல விரும்பும் ஒருவர் எல்லோருடனும் இணக்கமாகவும் கை கோர்த்து நடக்கும் மன நிலையுடனும் செயல் பட வேண்டியது அவசியம்.நமமிச் சுற்றியுள்ள பலர் இலை மறை காய் மறையாக ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்கு மூன்று பெரிய காரணங்கள் தான் இருக்க முடியும்.
1 இவர்கள் சொற்களால் காயப் பட்டிருப்பார்கள்.அல்லது போதுமான பாராட்டுக்களையோ உரிய அங்கீகாரங்களையோ பெறாமலிருப்பார்கள்.
2 இவர்களது தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாமல் இருக்கும்.அதாவது இவர்களிடம் அதிருப்தி உள்ளது.
3இவர்கள்  பல்வேறு சம்பவங்களினால் நம்மீது எரிச்சல் அடைந்து இனம் புரியாத வெறுப்பைத் தங்கள் மனதிற்குள் வளர்த்திருப்பார்கள்.
முதல் பிரிவினர் அன்பு,பாசம்,மரியாதை,பாராட்டு இவற்றால் அடங்கி விடுவார்கள்.பணத்தையோ,பரிசையோ பெரிதாக எண்ண  மாட்டார்கள். இவர்கள் விசயத்தில் நாம் கௌரவம் பார்க்கக் கூடாது.
இரண்டாவது பிரிவினர் கொஞ்சம் பேராசைக்காரர்கள்.கேட்டதெல்லாம் இவர்களுக்குக் கிடைத்து விட வேண்டும்.இவர்கள் விசயத்தில் நாம் கொஞ்சம் விட்டுக் கொடுக்கவும் இழக்கவும் தயாராக இருந்தால் வழிக்கு வந்து விடுவார்கள்.
மூன்றாவது ரகத்தினர் நம் மீது குறை காணுபவர்கள்.இவர்கள் நம் செயல் தவறு என்று கூறும்போது ஆமாம் என்று ஒத்துக் கொண்டு மறுபடியும் அந்தமாதிரி வராதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
------------லேனா தமிழ்வாணன்.

சில உண்மைகள்

2

Posted on : Saturday, October 20, 2012 | By : ஜெயராஜன் | In :

கழுத்தை முழு வட்டமாக சுற்றும் தன்மை கொண்ட ஒரே உயிரினம் ஆந்தை தான்.
********
ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது கடற்கரையிலிருந்து மூன்று கடல் மைல் .அதாவது 6080 அடி தூரமாகும்.
********
எப்போதும் விரியாத பூ அத்தி மலர்தான்.அதனால்தான் எப்போதாவது நடக்கும் செயலை 'அத்தி பூத்தாற்போல'என்கிறோம்.
********
ஒரு அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 வகையான தசைகள் பணி  புரிய வேண்டியுள்ளது.
********
'மஞ்சள் புரட்சி'என்பது முட்டை உற்பத்தியைக் குறிக்கிறது.
********
பழச்சாறு சாப்பிட்டால் உடனே வாய் கொப்பளிக்க வேண்டும். இல்லையெனில் பல்லில் எனாமல் வேகமாகத் தேயும்.
********
பளபளப்பான பகுதிகள் வெப்பத்தை மிக மிக தாமதமாகவே கடத்தும். அதனால்தான் இஸ்திரிப் பெட்டிகளின் அடிபாகம் பளபளப்பாக இருக்கிறது.
********
பர்மா ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்தியாவுடன் இணைந்திருந்தது.1937 ல்தான் அது இந்தியாவிலிருந்து பிரிந்தது.
********
பென்சிலில் H.B.என்று எழுதியிருப்பதற்கு HARD BLACK என்பதுதான் விரிவு.
********
யானையின் துதிக்கையில் எலும்பே கிடையாது.
********
ஒட்டகச்சிவிங்கியின் நீளமான கழுத்தில் இருப்பது ஏழே  எலும்புகள்.
********
உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் பெயர் ஈசாகானு
.நாடு-நைஜீரியா.மொத்தம் 72 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
********

பொன்மொழிகள்-34

2

Posted on : Saturday, October 20, 2012 | By : ஜெயராஜன் | In :

மிக ஆழமான கடல், பணம்தான்.இந்தப் பணக்கடலில் உண்மை, மனசாட்சி, கௌரவம் ஆகிய அனைத்தும் அடியோடு மூழ்கி விடுகின்றன.
********
நீங்கள் நேர்மையான மனிதர் என்றால் நீங்கள் முன்னேற உங்களுக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தைரியம் மட்டுமே.
********
மனிதர்கள் இரண்டு அழுக்குக் கைகளைப்போல:ஒன்றினால்தான் மற்றொன்றின் அழுக்கைப் போக்க முடியும்.
********
கடுமையான,கசப்பான சொற்கள் என்பது பலவீனமான கொள்கையின் அறிகுறி.
********
எல்லாம் வேடிக்கைதான்:நமக்கு நடக்காமல் அடுத்தவர்களுக்கு நடக்கும் வரை.
********
சொல்லில் இங்கிதம் என்பது திறமையாகப் பேசுவதை விடச் சிறந்தது.
********
அவிழ்க்க முடிந்ததை
அறுக்க வேண்டியதில்லை.
********
குழந்தைகளின் உதட்டிலும் உள்ளத்திலும் உள்ள ஆண்டவனின் பெயர் அம்மா.
********
கும்பலுக்குப் பல தலைகள்:
மூளைதான் இல்லை.
********
நமது சமதர்ம ஆர்வத்தில் ஒரே ஒரு சிக்கல்!நாம் நம்மிலும் மேலோரிடம் மட்டும்தான் சமத்துவம் பாராட்ட விரும்புகிறோம்.
********

என்ன வாழ்க்கை இது?

1

Posted on : Friday, October 19, 2012 | By : ஜெயராஜன் | In :

முன்பெல்லாம் மனிதன்,மாடு ,நாய்,கொக்கு எல்லோருக்கும் வாழ்க்கை அதிக பட்சம் நாற்பது ஆண்டுகள் தான் இருந்தது.மாடு,நாய்,கொக்கு மூன்றும் இறைவனிடத்தில் தங்கள் ஆயுட்காலத்தை இருபது ஆண்டுகள் குறைக்கும்படி கேட்டுக் கொண்டன.உடனே மனிதன் ஆண்டவனிடம் அவை மூன்றும் விட்ட  அறுபது ஆண்டுகளையும் தனக்கு ஆயுட்காலத்தில் நீட்டித்துத் தர வேண்டிக் கேட்டுக் கொண்டான்.இறைவனும் சம்மதித்து  விட்டான்.எனவே மனிதனுக்கு ஆயுட்காலம் நூறாகியது.ஆனாலும் அவனுடைய உரிமையான நாற்பது ஆண்டுகள்தான் அவன் மனித வாழ்க்கை வாழ்கிறான்.அதிலும் போட்டி பொறாமைகளுடன்!
நாற்பதிலிருந்த அறுபது வரை மாட்டிடம் இருந்து இரவல் பெற்ற இருபது ஆண்டுகள்.அப்போது மனிதன் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வாழ்க்கைப் பாரத்தை மாடுபோல இழுக்கிறான்.அறுபதிலிருந்து எண்பது வரை நாயிடமிருந்து இரவல் பெற்றது.எனவே அந்த காலகட்டம் நாய் வாழ்க்கை வாழ்கிறான்.அதிலும் சிலருக்குத் தெரு நாய் வாழ்க்கை!  எண்பதிலிருந்து  நூறு வரை கொக்கின் கடன்.அப்போது மனிதன் கொக்கு வாழ்க்கை வாழ்கிறான்.ஒற்றைக்காலில் அந்த' மரணம் 'என்கிற மீனுக்காகத் தவம் இருக்கிறான்.என்ன வாழ்க்கை இது?

வருத்தமில்லாமல் வாழ!

1

Posted on : Friday, October 19, 2012 | By : ஜெயராஜன் | In :

வருத்தப்படுவது உங்கள் குணமா?கவலையை விடுங்கள்.உங்களின்  அனுபவங்களைக் கொண்டே உங்கள் வருத்தங்களை நீக்கி விடலாம் . வருத்தப்படுவது என்பது உணர்ச்சி வசப்படுதலின் விளைவாக ஏற்படுவது.ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும் நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். எதிர் காலத்தைப் பற்றி அடிக்கடி குழம்பாதீர்கள்.அதற்குப் பதிலாக ரொம்ப சகஜமாகவும்,சிரமமற்றதாகவும் வாழ்க்கையைத் திட்டமிட வேண்டும். குழப்பமான வேலைகள் வந்தால் அதை சற்றே ஒதுக்கி வையுங்கள்.எந்த வேலையையும் ஆர்வமுடன் செய்யும்போது மகிழ்ச்சி ஏற்படும். அம்மகிழ்ச்சியே உங்களை மேலும் சாதனை புரியத் தூண்டும்.வருத்தமான ஒரு நிலை உங்கள் முன்னே உருவாகிறபோது அதைப் பற்றி யோசியுங்கள். ஆராயுங்கள்.காரணம் தெரிந்தவுடன் அதை எப்படி தவிர்ப்பது என்று சிந்தியுங்கள்.அப்போதே பாதி வருத்தம் போய்விடும்.''நான் வருத்தப்படுவதால்  எதிர்காலத்தில் ஏதாவது லாபம் ஏற்படுமா,மாற்றங்கள் உண்டாக வாய்ப்பு உண்டா'' என நினைத்துப் பாருங்கள்.வருத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் வருத்தப்படும் நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். மனதில் உள்ள வருத்தத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியாக அடுத்த வேலையைக் கவனியுங்கள்.

உங்கள் சுமை

2

Posted on : Thursday, October 18, 2012 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் எதை வேண்டுமானாலும் மற்றவர் தலையில் கட்டிவிடலாம்:உங்கள் கவலையைத்தவிர.ஏனெனில் அது உங்கள் சுமை.சிலர் எதற்கும் கவலைப் படுவதில்லை.சிலர் எதெற்கெடுத்தாலும் கவலைப் படுகிறார்கள்.கவலை துளி அளவு படலாம்.அது எச்சரிக்கை உணர்வைத் தோற்றுவிக்கும்.அதே கவலை அளவுக்கு மீறினால் டெண்சன் தான் வரும்.நியாயமான கவலைகள் மனிதன் இயல்பு.கவலைப் படாமல் இருக்கவும் முடியாது.இன்றைய வாழ்வைப் பற்றிக் கவலைப் படுங்கள்.நாளைய மரணத்தைப் பற்றி மாய்வது அனாவசியம். நேற்று நடந்ததைப்  பற்றி நினைத்து வருந்துவதில் பயனில்லை.எதையும் எதிர் மறையாக சிந்திக்காதீர்கள்.மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத போதும்,நம் மீதே நம்பிக்கை இல்லாத போதும் கவலை வந்து விடுகிறது. கவலைகள் காளானைப் போல முளைக்கும்.விட்டு வைத்தால் மலையைப் போல வளர்ந்து நம்மை மலைக்க வைக்கும்.கவலைப் படுகிற சுபாவம் தொற்று நோய்போல,ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும்.சிலர் நோய் வந்து கவலைப் படுவார்கள்.சிலர் எந்த நோயும் இல்லாமலேயே ஏதோ நோய் இருப்பதாக எண்ணிக் கவலைப் படுவார்கள்.''எதுவும் நம் கையில் இல்லை'','கடமையைச்செய்'என்ற கீதையின் வாசகங்களை நினைவில் வையுங்கள்.

தர்மம் தலை காக்குமா?

1

Posted on : Thursday, October 18, 2012 | By : ஜெயராஜன் | In :

இறந்தவுடன் நரகத்திற்குக் கொண்டு வரப்பட்டான் ஒரு பணக்காரன். அவன் கணக்கைப் பார்த்துவிட்டு,சித்திரகுப்தன் ''இவன் பூமியில் எந்தவித தர்மமும் செய்யவில்லை.எனவே இவனைக் கொதிக்கும் எண்ணெயில் தூக்கிப் போடுங்கள் என்று ஆணையிட்டான்.அந்த வியாபாரி ஆவேசத்துடன், ''ஐயோ,என் வாழ்நாள் முழுவதும் என் பணம் முழுவதையும் தர்மத்திற்குத்தானே செலவு செய்தேன்!என்னை இப்படி வதைக்கிறீர்களே?''என்று கத்தினான்.சித்திரகுப்தனுக்கு வந்தது குழப்பம்.அந்த பணக்காரனின் கணக்கை மீண்டும் மீண்டும் பார்த்துவிட்டு,''என்ன விளையாடுகிறாயா?நீ யாருக்கும் ஒரு பைசா கூட தர்மம் கொடுக்கவில்லை. என் கணக்கில் பிழையே ஏற்படாதே!ஒழுங்காய் உண்மையைக் கூறு. இல்லையெனில் இன்னும் கூடுதலாக தண்டனை கொடுப்பேன்,''என்றார். பணக்காரனும் அப்பாவியாக சொன்னான்,''அய்யா,என் மனைவி தர்மம் என்ற தர்மாம்பாளுக்குதான் நான் என் பணம் முழுவதையும் செலவழித்தேன் .நான் சொல்வது உண்மை.''சித்திரகுப்தன் கோபத்தில் பல்லை நறநறவென்று கடித்தார்.

சிரிச்சு வைப்போம்

1

Posted on : Wednesday, October 17, 2012 | By : ஜெயராஜன் | In :

ஆசிரியர்:நீங்கள் எல்லாம் வைரம் மாதிரி.
மாணவன்:அப்படின்னா,நீங்களும் வைரம் தான் சார்.
ஆசிரியர்:எப்படி?
மாணவன்:வைரத்தை வைரத்தால்தானே சார் அறுக்க முடியும்?
********
ராமு:ஆசிரியர்கள் ஏணி மாதிரின்னு சொல்றாங்கள்ள ,அது ரொம்ப சரி.
சோமு:அது எப்படி?
ராமு:எப்பவும் படி,படின்னு சொல்றாங்கள்ள !
********
ஆசிரியர்:செய்முறை வகுப்பிற்கும்,பாடம் நடத்தப்படும் வகுப்பிற்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்:செய்முறை வகுப்பில் நாங்கள் அறுப்போம்:மற்றதில் நீங்கள் அறுப்பீர்கள்.
********
ஆசிரியர்:ஏசுவுக்கும் காந்திக்கும் என்ன ஒற்றுமை?
மாணவன்:இரண்டு பேருமே விடுமுறை தினத்தில் பிறந்தவர்கள்,சார்.
********
மாணவனின் தந்தை:என் மகன் கணக்கிலே புலியாய் இருப்பானே!
ஆசிரியர்:நீங்க வேறே,அவனுக்கு ஐந்தும் நான்கும் கூட்டினால் என்ன விடை என்பதே தெரியவில்லை.
தந்தை:நீங்கள் வேண்டுமானால் ஒரு புலியிடம் இதே கணக்கைப் போட்டுப் பாருங்கள்!அதுவும் பதில் தெரியாமல் முழிக்கத்தான் செய்யும்.
********
ராமு:நான் தேர்வு எழுதக் கிளம்பும்போதெல்லாம் எங்க அப்பா வாசல் படி வரைக்கும் வந்து விடை கொடுத்து அனுப்புவார் தெரியுமா?
சோமு:எங்கப்பா விடையெல்லாம் கொடுத்து அனுப்ப மாட்டார்.தெரிஞ்ச வரைக்கும் எழுதினால் போதும் என்பார்.
********

கெட்டிக்காரன்.

1

Posted on : Tuesday, October 16, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கப்பல் கடலில் அமைதியாக சென்று கொண்டிருந்தது.திடீரென ஒரு பெரிய முதலை கப்பலைத் தாக்கியது.கப்பலில் இருந்தவர்கள் முதலையைப் பார்த்து டேபிள்,சேர்,ஆரஞ்சுப் பழங்கள் ஆகியவற்றைத் தூக்கி எறிந்தனர்.அவற்றை முழுங்கியபோதும் முதலை தாக்குதலை நிறுத்தவில்லை.உடனே கப்பலில் இருந்தவர்கள் ஒரு யூதனைத் தூக்கி எறிந்தனர்.அவனையும் விழுங்கிவிட்டு மறுபடியும் முதலை தாக்கியது.உடனே எல்லோரும் யோசனை செய்தார்கள்.''என்ன போட்டாலும் அதை விழுங்கிவிட்டு திரும்ப வருகிறது.வேறு வழியில்லை.நாம் எல்லோரும் இருக்கும் ஆயுதங்களுடன் ஒரே நேரம் அதன் மீது குதித்துக் கொன்று விட வேண்டியதுதான்.''என்று முடிவு செய்து அவ்வாறே செயல் படுத்தினர்.பின் இறந்த முதலையைக் கப்பலுக்குள் இழுத்து அதன் வயிற்றைக் கிழித்தனர்.அதன் உள்ளே கண்ட காட்சி அவர்களை மயக்கப்பட வைத்தது. ஆம்,.அதன் உள்ளே, தூக்கி எறியப்பட்ட யூதன், நாற்காலியில் உட்கார்ந்தவாறு ,.அவன் எதிரில் டேபிளைப் போட்டு,ஆரஞ்சுப் பழங்களை  அதன் மீது வைத்து,ஏற்கனவே முதலை விழுங்கிய மனிதர்களுக்கு விற்றுக் கொண்டிருந்தான்.

தெளிவு

0

Posted on : Tuesday, October 16, 2012 | By : ஜெயராஜன் | In :

அவர் ஒரு அரசியல்வாதி.ஊரில் பெரிய மனிதன்.எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.அவரும் சில பிரார்த்தனைகளையும்.பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார்.சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன்,''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.உடனே குரு,''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?''என்று கேட்க,குருவும்,''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,''என்றார்.''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார்.அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார்.பத்து நிமிடம் ஆயிற்று.கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று,''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?''என்று கேட்டார்.;;வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?''என்று குரு கேட்க அவர் சொன்னார்,''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள்.நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்''உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார்,''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''

தாராளம்

0

Posted on : Monday, October 15, 2012 | By : ஜெயராஜன் | In :

ஒரு கஞ்சன் சென்னைக்கு சென்றான்.ஒரு தெருவிற்கு சென்றான். கையிலிருந்த விலாசத்தைக்காட்டி பலரிடம் விசாரித்து ஒரு வீட்டுக்கு வந்தான்.அந்த வீடு ஒரு விலைமகளிர் வசித்து வந்த வீடு.ஒரு மனிதன் தனது  வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்தவுடன் அந்தப் பெண் மிக மகிழ்வுடன் அவனை  வரவேற்று உபசரித்தாள்.அவனும் அவளுடன்  மகிழ்ச்சியாய் இருந்துவிட்டு புறப்படுகையில் பத்தாயிரம் ரூபாயை அவளிடம் கொடுத்தான். அவளுக்கு மிகுந்த ஆச்சரியம்.அவள் அவனிடம் சொன்னாள் ,''மிக்க நன்றி இதுவரை யாரும்  பெருந்தன்மையுடன் இவ்வளவு பெருந்தொகையை  எனக்குக் கொடுத்தது கிடையாது.ஆமாம்,நீங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்?''அவன் சொன்னான்,''மதுரையிலிருந்து வருகிறேன்.''அவள் வியப்பைத் தனது முகத்தில் காட்டியவாறே,''அடடே,நானும் மதுரைக்காரிதான்.''என்றாள் .அவனும்,''எனக்குத் தெரியும் பெண்ணே,''என்றான்.அந்தப்பெண் எப்படித்தெரியும் என்று கேட்க,அவன் சொன்னான்,''நான் சென்னைக்கு ஒரு வேலையாய் வருவது தெரிந்து உன் தந்தைதான் என்னிடம் பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்து உன் முகவரியையும் கொடுத்து உன்னிடம் கொடுக்கச் சொன்னார்.''அந்தப்பெண் மயங்கி விழுந்தாள் .

இரண்டும் ஒன்றுதான்.

0

Posted on : Monday, October 15, 2012 | By : ஜெயராஜன் | In :

எண்பது வயது நிரம்பிய ஒரு வயதான மனிதன் தனது  வீட்டு முன்  பகுதியில் இருந்த மதில் சுவர் மீது  ஏறி உட்கார்ந்து கொண்டு தெருவில் போகிற வருகிற வாகனங்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்.அவ்வாறு செய்வதில் அவருக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.விதவிதமான கார்களை மிகவும் ரசித்துக் கைகொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப் படுத்தியவண்ணம் இருந்தார்.அவரது வித்தியாசமான செய்கையை காரில் செல்பவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.அப்போது ஒரு விலை உயர்ந்த கார் அந்தப் பக்கம் வந்தது.அந்தக் காரைப் பார்த்தவுடன் கிழவருக்கு மகிழ்ச்சி அதிகமாகி முகமெல்லாம் மலர்ந்திருந்தார்.அந்தக் காரில் வந்த பணக்காரர் அவரைப் பார்த்து காரிலிருந்து இறங்கி விட்டார்.அவர் கிழவரைப் பார்த்துக் கேட்டார்,''இவ்வளவு விலை உயர்ந்த காரை நான் வைத்திருக்கிறேன்.அதில் மிக சொகுசாய்  பயணம் செய்கிறேன்.ஆனாலும் எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியைக் காட்டிலும் உங்களுக்கு மிக அதிகமாயிருக்கிறதே!உங்கள் செய்கை வியப்பைத் தருகிறது.''கிழவர் சொன்னார்,''நீங்கள் வீதியில் காரில் பயணித்தவாறு பல வீட்டு மதில் சுவர்களையும் பார்த்த வண்ணம் மகிழ்வுடன் செல்கிறீர்கள்.நான் என் வீட்டு மதில் சுவரில் உட்கார்ந்தவாறு வீதியில் செல்லும் கார்களைப் பார்த்து மகிழ்ச்சியடைகிறேன்.இரண்டும் ஒன்றுதானே!இதில் வித்தியாசம் என்ன இருக்கிறது?''

சில இனிய தகவல்கள்

0

Posted on : Sunday, October 14, 2012 | By : ஜெயராஜன் | In :

நாம் உண்ணும் சாதம் செரிக்க ஒரு மணி நேரம் ஆகிறது.பால் செரிக்க இரண்டு மணி நேரம் ஆகிறது.நெய் ,வேக அவித்த முட்டை,மாமிசம் செரிக்க நான்கு மணி நேரம் ஆகிறது.
********
மது அருந்தினால் சிலருக்கு தைரியம் வரும்.அதற்கு Dutch courage என்று பெயர்.
********
இப்போது உலகமெங்கும் உபயோகப் படுத்தப்படும் காலண்டருக்கு கிரிகேரியன் காலண்டர் என்று பெயர்.இது 1582ல் இத்தாலியில் போப் கிரிகேரி13 என்பவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
********
உலகம் தோன்றியது முதல் எந்தவித பரிணாம வளர்ச்சியும் இல்லாத உயிரினம் கரப்பான் பூச்சி.
********
நிறக்குருடு பிரச்சினை உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்தையும் பச்சை நிறத்தையும் வித்தியாசப் படுத்தி சொல்ல முடியாது.
********
ஒரு பிராணியைப் பார்த்தவுடன் அதன் காது வெளியே தெரிந்தால் அது குட்டி போடும் என்றும் காது வெளியே தெரியவில்லை என்றால் அது முட்டையிடும் என்றும் அறியலாம்.
**********
கிரேக்க நாட்டில் யூரல் மலைப் பகுதியில் 'ஆஸ்பெட்டாஸ்'என்ற நகரம் உள்ளது.இந்த நகரம் கல் நார் எடுக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது.இந்த நகரின் பெயராலேயே கல்நாருக்கு 'ஆஸ்பெட்டாஸ்'என்ற பெயர் வந்தது.கிரேக்க மொழியில் ஆஸ்பெட்டாஸ் என்றால் அழிக்க முடியாதது என்று பொருள்.
********
மத்தாப்பு மற்றும் வான வெடிகளில் விதவிதமான வர்ணங்கள் தோன்ற வெடிமருந்துடன் பல்வேறு உலோக உப்புகளைச் சேர்க்கிறார்கள்.
நீலம்-- காப்பர்
பச்சை--பேரியம்.
மஞ்சள்--சோடியம்.
சிவப்பு--ஸ்ட்ரோண்டியம்.
********
55அடிக்குக் குறைவான எந்த அறையிலும் எதிரொலி கேட்காது. காரணம்: காற்றில் ஒலி பயணம் செய்யும் வேகம் வினாடிக்கு 1100அடி.இதில் பத்தில் ஒரு வினாடி தூரத்தில் உள்ள ஒலிகளை மட்டும் நம் காது இனம் பிரித்துக் கேட்கும் இயல்புடையது.வினாடியில் பத்தில் ஒரு பங்கு நேரத்தில் ஒலி  செல்வது 110அடி.எதிரொலிக்க வேண்டும் என்றால் ஒலி  அதில் பாதியில் மோதித் திரும்ப வேண்டும்.110ல் பாதி  55அடி.ஆகவேதான் அதற்குக் குறைவான நீளமுள்ள அறையில் எதிரொலி கேட்பதில்லை.
********


தேவையும் ஆசையும்

1

Posted on : Sunday, October 14, 2012 | By : ஜெயராஜன் | In :

நமக்குத் தேவைகள் என்பவை வெகு சிலவே.அவை எளிமையானவை. உங்களுக்கு என்ன தேவை?உணவு,நீர்,உறைவிடம்,உங்களை காதலிக்க ஒருவர்,அவரை விரும்ப நீங்கள்.இவைதானே உங்களது தேவைகள்.இந்தத் தேவைகளுக்கெல்லாம் மதங்கள் எதிரிகள்.யாரையும் காதலிக்காதே,பிரம்மச்சாரியாக இரு என்கிறது மதம்.தேவைக்கு உணவை உண்ணாதே,விரதம் இரு என்கிறது மதம்.தங்க ஒரு வீடு தேவை,ஆனால் எதிலும் பற்றில்லாமல் சந்நியாசியாகி நாடோடியாகசுற்றித்  திரி என்கிறது மதம்.நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறீர்கள் .அதிலிருந்து மீள அந்த மதவாதிகளிடம் தஞ்சம் புகுகிறீர்கள் .மொத்தத்தில் அவர்கள் சொல்வதெல்லாம் நீங்கள் அவர்களை நம்பி இருப்பதற்காக உருவாக்கப் பட்டவை.
ஆசை என்பது என்ன?உங்களை காதலிக்க தேவை ஒரு பெண். கிளியோபாத்ராதான் வேண்டும் என்பது ஆசை..தங்க இடம் வேண்டுவது  தேவை.அரண்மனை வேண்டும் என்பது ஆசை.  உன்ன உணவு வேண்டும் என்பது தேவை.ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்பது ஆசை.தேவைகள் எளிதில் அடையக் கூடியவை.ஆசைகள் அடைய முடியாதவை.உங்களுடைய எளிமையான தேவைகள் நிறைவேறினாலே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.புத்தருக்கே இந்த தேவைகள் உண்டு.
உங்களது ஆசைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறையுங்கள்.ஆசைகள் செயற்கையானவை.தேவைகள் இயற்கையானவை.அதனால் உங்கள் தேவைகளைக் குறைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றுங்கள்.