உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அன்பின் பரிசு.

1

Posted on : Saturday, October 04, 2014 | By : ஜெயராஜன் | In :

இஸ்லாம் நெறிகளில் சற்றும் வழுவாமல் வாழ்ந்த சுலைமான், மரணத்துக்குப் பின் சொர்க்கம் அடைந்தார்.இறைவன் கேட்டார்,''சுலைமான் உனக்கு சொர்க்கம் எதனால் கிடைத்தது என்று தெரியுமா?''சுலைமான் சொன்னார்,''ஆண்டவனே,உம்மை நாள்தோறும் முறை தவறாமல் ஐந்து முறை தொழுததனால் எனக்கு கடவுளின் கருணை கிடைத்திருக்கலாம்.'' இறைவன் சொன்னார்,''இல்லை மகனே,ஒரேயொரு வேளை மட்டும் நீ தொழாமல் இருந்தாய் அல்லவா?அதற்காகவே நீ இன்று சொர்க்கத்தில் இருக்கிறாய்.''சுலைமானுக்கு ஒன்றும் புரியவில்லை.தொழாமல் இருந்ததற்குப் பரிசா?இறைவன் தொடர்ந்தார்,''மகனே,ஒரு குளிர் காலக் காலைப் பொழுதில் பள்ளிவாசலின் அழைப்பொலி கேட்டு அவசரமாய்ப் புறப்பட்டாய்.கடுமையான பனியில் வாடி,குளிரில் நடுங்கித் தவித்த ஒரு சிறு பூனைக்குட்டியை ஓடிச் சென்று அள்ளி அணைத்து விரல்களால் அதன் உடலை வருடி,ஆறுதல் அளித்தாய்.மார்புறப் பூனையைத் தழுவியதால் உன் உடல் வெப்பம் கிடைத்து குட்டி சம நிலையை அடைந்தது.நெஞ்சில் அணைத்த பூனையை நிலத்தில் விட்டுவிட்டு நீ நிமிர்ந்தபோது,பள்ளிவாசல் தொழுகை முடிந்து விட்டது.பிற உயிர்களிடம் காட்டும் பெருங்கருணை தான் எனக்கு மிகவும் பிடித்தமான செயல்.என் அன்பின் பரிசாக உனக்கு இந்த சொர்க்கம் கிடைத்தது.''

பக்குவம்

0

Posted on : Wednesday, September 03, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது,உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும்போது வருத்தம் இருந்தாலும்,அது தர்மத்தை ஒட்டி அமையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.இந்த அனுசரிப்புதான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.அவர் காயப்படுத்துவதும் இல்லை.தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை. காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும்தான் காயப்படுகிறார்கள்.மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்.

கடவுள் கல்லா?

1

Posted on : Monday, September 01, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு நாள் தந்தை பெரியார் அவர்களைப் பார்க்க குழுவாய் சிலர் வந்திருந்தனர்.அவர்கள் பெரியாரிடம்,''ஐயா,நாங்கள் எல்லாம் தங்களது சுய மரியாதைக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.தாங்கள் இந்த சமூகத்துக்கு செய்யும் தொண்டு  மிக சிறப்பானது.ஆனாலும் எங்களுக்கு உங்கள் மீது சிறு வருத்தமும் உண்டு.நாங்கள் அனுதினமும் வணங்கும் ஆண்டவன் சிலைகளை நீங்கள் வெறும் கல்  என்கிறீர்கள்.அப்படி சொல்வதை மட்டும் நீங்கள் நிறுத்தினால் நாங்கள் மிக மகிழ்வடைவோம்,'' என்றார்கள். பெரியார், ''கல்லை கல்  என்று சொல்லாமல் வேறு எப்படி  அய்யா சொல்வார்கள்?''என்று கேட்டவர்,''சரி நீங்கள் என் பின்னால் வாருங்கள்,''என்றார்.அவர் எங்கே செல்கிறார் என்பதை ஆவலுடன் கவனித்த அவர்கள்,அவர் ஒரு கோவிலுக்குள் செல்வதைக் கண்டதும் மிக வியப்புக்குள்ளானார்கள் .பெரியார் நேரே கடவுளுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த பூசாரியிடம் சென்றார்.அவரிடம், பெரியார் கேட்டார்,''ஐயா,இந்த சாமி சிலை பொன்னால் ஆனதா,இல்லை ஐம்பொன்னால் ஆனதா?''அர்ச்சகர் சொன்னார்,''இல்லை ஐயா,இது கல்தான்,''உடனே பெரியார் வந்திருந்தவர்களிடம் திரும்பி சொன்னார்,''ஐயா,பூசாரி சொன்னதைக் கேட்டுக் கிட்டீங்களா?அவரே இது கல்தான் என்று சொல்லிவிட்டார்.இப்போதாவது நான் சொன்னது உண்மை என்று நம்புகிறீர்களா?''வந்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை.

திதிகள்.

0

Posted on : Thursday, August 28, 2014 | By : ஜெயராஜன் | In :

பலர் அன்றாட வாழ்வில் முக்கிய  காரியங்களை திதி பார்த்து செய்கின்றனர்.திதியின் பேர்கள் எல்லாம் சமஸ்கிருத வார்த்தைகள் அவற்றின் பொருள் தெரியுமா?அமாவாசை மற்றும்  பவுர்ணமியில் இருந்து
ஒவ்வொரு நாளும் அவை மாறுகின்றன.
பிரதமை=முதன்மை,அதாவது முதல் நாள்.(நாட்டின் முதல்வன் பிரதமர்)
துவிதியை.துவி என்றால் இரண்டு.(சைக்கிளைதுவிச்சக்கரவண்டி என்பர்)
திரிதியை.இதற்கு மூன்றாவது என்று பொருள்.
சதுர்த்தி.சதுர்  என்றால் நான்கு.(சதுரம் என்பது நான்கு பக்கங்களை உடையது.)
பஞ்சமி.பாஞ்ச் என்றால் ஐந்து.
சஷ்டி என்றால் ஆறு.
சப்தமி.சப்த என்றால் ஏழு.(சப்த கன்னியர் என்று ஏழு கன்னிமார் தெய்வங்களைக் குறிப்பிடுவர்.)
அஷ்டமி.அஷ்ட என்றால் எட்டு.(உடலில் எட்டு கோணல்கள் இருந்தால் அஷ்ட கோணல் என்பர்.)
நவமி.நவம் என்றால் ஒன்பது.(நவராத்திரி.)
தசமி.தசம் என்றால் பத்து.(தசாவதாரம் என்பது பத்து அவதாரம்)
ஏகாதசி.ஏகம் +தசம்.அதாவது ஒன்று+பத்து=பதினொன்று.
துவாதசி.துவம்+தசம்.அதாவது இரண்டு+பத்து=பன்னிரண்டு.
திரயோதசி.திரியோ+தசம்.அதாவது மூன்று+பத்து.
சதுர்த்தசி.சதுர் +தசம்.அதாவது நான்கு+பத்து.
பதினைந்தாவது நாள் அமாவாசை அல்லது பவுர்ணமி.

விமரிசனம்

0

Posted on : Wednesday, August 27, 2014 | By : ஜெயராஜன் | In :

விமரிசனங்கள் பல வகையானவை.அவற்றை எப்படி எதிர்கொள்வது?
 
காகித அம்பு:
சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி,மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும்.இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.
கால்பந்து:
சில விமரிசனங்கள்,விளையாட்டாக,உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.
கண்ணாடி:
சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
கத்தி:
சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும்.நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பதுபோல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள்.விலகி விடுங்கள்.
































  

ஐன்ஸ்டின் பொன்மொழிகள்-2

0

Posted on : Tuesday, August 26, 2014 | By : ஜெயராஜன் | In :

வெளி உலகில் ஒருவன் எவ்வளவு அற்புத மனிதனாக விளங்கினாலும், அவனுடைய மனைவியும்,வேலைக்காரனும் அப்படி அதிசயிக்கும் படியான எதையும் அவனிடம் காண்பதில்லை.
******
நாம் வீழ்ச்சி  அடைந்து விட்டால் நம் மீதே பழி சுமத்தப் பல நண்பர்கள் வருவார்கள்.நாம் உயர்வு அடைந்து விட்டாலோ,தங்களுடைய உதவியால்தான் என்று பறை அடிப்பார்கள்.
******
எக்காரியத்தையும் முகஸ்துதி சாதிக்கும்.கெட்டவர்களுக்கு அது கிரீடம். நல்லவருக்கு அது நஞ்சு.
******
வயிற்றெரிச்சல் தனது வன்ம விஷத்தையே உறிஞ்சிக் குடித்துத் தனக்குத்தானே நஞ்சிட்டு நாசப் படுத்திக் கொள்ளும்.
******
வழக்கம் என்பது வன்மையான,வஞ்சகமான ஒரு வாத்தியார்.அவர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் அதிகாரத்தின் காலடியை நம் மீது ஊன்றி விடுவார்.
******
நிகழ் காலத்தில் வாழத் தெரியாமல் வருங்காலத்திய துக்கம்,பயன்,நம்பிக்கை என்னும் கயிறுகளில் ஊசலாடுவது மனித குலத்தின் இயல்பு.
******
தனது ஞாபக சக்தியில் நம்பிக்கை இல்லாதவன்,பொய் சொல்ல முயற்சி   செய்யக் கூடாது.
******
பேராசைக்குக் கூட  நிறைய சொத்து உண்டு.ஆனால் பொறாமைக்கோ, வேதனை விரக்தியைத் தவிர வேறு எந்த லாபமும் இல்லை.
******
புகழை நோக்கி ஓடாதீர்கள்;புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.
******
என்னிடம் உள்ள மிக சிறந்த நற்பண்பில் கூட ஏதோ கொஞ்சம் பாவத்தின் சாயம் ஒட்டிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்.
******
 சிறு துன்பங்கள் வாய் திறந்து பேசும்.பெருந்துன்பங்கள் ஊமையாக்கும்.
******
தேவை என்பது ஒரு மூர்க்கமான வாத்தியாரம்மா.
******
தலைக் கனம் என்பது இரண்டு வகை.தன்னைப்  பெரிதாக நினைப்பது.முதல் வகை.தலைக்கனமுள்ள பிறரைத் தாழ்வாக நினைப்பது இரண்டாம் வகை.
******
செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்தைப் பொறுத்தது.
******
சட்டங்கள் இல்லாவிடில் நாம் ஒருவரை ஒருவர் விழுங்கி ஏப்பம் விட்டு விடுவோம்.
******
சுகபோகத்தில் வளர்பவர்கள் எப்போதும் ஆணவம்,கர்வம்,பொய் வேஷம் இவற்றில் திறமை பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
******
படைக்கலங்களின் முழக்கம்,சட்டத்தின் குரலை மூழ்கடித்து விடுகிறது.
******

ஐன்ஸ்டைன் பொன்மொழிகள்.

0

Posted on : Monday, August 25, 2014 | By : ஜெயராஜன் | In :

ஆசையும்,இன்பம் துய்த்தலுமே நம்மை ஆத்திரக்காரர்களாக உருமாற்றுகின்றன.
******
மூடனுக்குக் கல்வியறிவின் மீது கோபம்;குடிகாரனுக்கு யோக்கியன் மீது ஆத்திரம்;ஒழுக்க சீலனுக்கு அயோக்கியத்தனம் செய்யச் சொல்வதே தண்டனை.தேகப் பயிற்சியே சோம்பேறிக்குத் தண்டனை.
******
மக்கள் தங்கள் ஆசைகளுக்கும்,விசமத்திற்கும் வன்செயலுக்கும் உற்சாகம் என்னும்  பெயரை சூட்டுகிறார்கள்.
******
நமது மூளையை மற்றவர்களின் மூளையோடு தேத்தப் பள பளப்ப்பாக்கிக் கொள்வது நல்லது.
******
நல்ல சுபாவமும்,நேர்மைப் பயிற்சியும் இல்லாதவனுக்கு மற்ற அறிவனைத்தும் தொந்தரவுதான்.
******
பெண்ணொருத்தி தன் அழகை  அதிகப்படுத்திக் கொள்வதற்காக எந்த வித சித்திரவதையையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பாள்.
******
ஒரே மாதிரியான இரு தலைமுடியோ,இரு தானியங்களோ,இரு கருத்துக்களோ,இந்த உலகில் இருந்ததில்லை.வேறுபாடு தான் இந்த உலகின் பொதுவான பண்பு.
******
மனிதனின் முயற்சியை விட சூழ்நிலைகள் சில நேரங்களில் வெற்றி பெறுவதுண்டு.
******
தடைகளை நீக்க வன்முறை நிரந்தரமாக்கப் படும்போது பேரழிவே எஞ்சியிருக்கும்.
******
தலைமையினைக் கேள்வி கேட்க முடியாத செயல்பாடுகள் உண்மைக்குப்
புறம்பானவைகளாகவே இருக்கும்.
******
ஒரு பொருளைப் பார்ப்பதால் மட்டும் முக்கியத்துவம் ஏற்படாது.எப்படிப் பார்க்கிறோம் என்பதனால்தான் ஏற்படும்.
******




இன்னும் வரவில்லையே!

2

Posted on : Thursday, August 21, 2014 | By : ஜெயராஜன் | In :

இளந்துறவி ஒருவர் தியானம் செய்யஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.அவருக்குக் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்வதில் விருப்பம் இல்லை.தன்  மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை.எனவே கண்ணைத் திறந்து கொண்டே தியானம் செய்ய ஆரம்பித்தார்.மாலை வேளை.சுகமான காற்று வீசியது.அப்போது ஜல்ஜல் என்று ஒரு சப்தம். ஒரு அழகிய பெண் நீர் எடுக்க அந்தப் பக்கம் சென்றாள்.அவளின் அழகு துறவியை சலனப் படுத்தியது.அதனால் அடுத்த நாள் கண்ணைக் கட்டிக் கொண்டு தியானம் செய்தார்.மாலை வந்தது. கன்னியும்  வந்தாள் .சலங்கை ஒலி அவருடைய கவனத்தை மிகக் கவர்ந்தது.அவரால் தியானத்தில் ஒன்ற முடியவில்லை.மறுநாள் கண்ணையும் காதையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு  தியானம் செய்தார்.மாலை வந்தது.பூவையும் வந்தாள்.கூடவே அவள் வைத்திருந்த மல்லிகைப் பூவின் வாசமும் வந்தது.அந்த மனம் அவரை எங்கோ கொண்டு சென்றது.அடுத்த நாள் கண், காது, மூக்கு எதுவும் தெரியாமல் கட்டிக் கொண்டு தியானத்தை மிக உறுதியுடன் ஆரம்பித்தார்.மாலையும் வந்தது.கன்னி வரும் நேரமும் வந்தது.ஆனால் இன்னும் கன்னி வரவில்லையே.துறவியின் மனம் ஏங்க ஆரம்பித்தது.

செந்தூரம்

0

Posted on : Wednesday, August 20, 2014 | By : ஜெயராஜன் | In :

இலங்கையில் ராவணனை ராமன் வெற்றி கொண்டு விட்டான்.இத்தகவலை உடனே சீதைக்கு சொல்ல அனுமன் விரைந்தான்.சீதை தலையில் நேர் வகிடு எடுத்து, சுமங்கலி என்பதால்,நெற்றி வகிட்டில் செந்தூரம் வைத்திருந்தாள். இந்தப் பழக்கம் அனுமனுக்குத் தெரியாது.சீதைக்கு நெற்றியில்  ஏதோ காயம் பட்டு ரத்தம் வருகிறதோ என்று எண்ணி பயந்து விட்டான்.சீதையிடம் பதட்டத்துடன் விபரம் கேட்க சீதை சொன்னாள்,''இது செந்தூரம்.இதை நெற்றிப் பொட்டில் வைத்துக் கொண்டால் தலைவனுக்கு (கணவனுக்கு) வெற்றி கிடைக்கும் என்பது ஒரு நம்பிக்கை,''என்று கூறி சிறிது செந்தூரத்தை எடுத்து அனுமனின் கையில் கொடுத்தாள்.''தலையில் சிறிது செந்தூரம் வைத்தாலே தலைவனுக்கு வெற்றி கிட்டும் என்றால் நான் என் உடல் முழுவதும் செந்தூரம் பூசிக் கொண்டால் என் தலைவனுக்கு எப்போதும் வெற்றி கிட்டும் அல்லவா?''என்று கூறிக் கொண்டே அனுமன் தனது  உடல் முழுவதும்
செந்தூரத்தைப் பூசிக் கொண்டானாம்.அதனால்தான் ஆஞ்சநேயருக்கு சிலை  முழுவதும் செந்தூரம் பூசும் வழக்கம் வந்தது.

தெரிந்ததும் தெரியாததும்-3

0

Posted on : Monday, August 18, 2014 | By : ஜெயராஜன் | In :

*யானைப் பாகனுக்கு மாவுத்தன் என்றும்,குதிரைப் பாகனுக்கு ராவுத்தன் என்றும் பெயர்.மயிலில் குதிரை போல ஏறிச் செல்வதால்,அருணகிரினாதர் ''மயிலேறிய ராவுத்தனே,''என்று முருகனைப் பாடியுள்ளார்.
*அசஹாய சூரன் என்றால் துணை வேண்டா வீரன்என்று பொருள்.
*பூஜ்யத்திற்குத் தமிழில் 'பாழ்' என்று சொல்லப்படுகிறது.
*தம்மிடத்தில் உள்ளவற்றை விட முடியாமல் பற்றிக் கொள்வது பற்று.
பிறரிடத்தில் உள்ளவையும்தமக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவது அவா.
*'தா' என்பது கேடு,குற்றம் என்னும்  பொருளுடையது.'தாவிலை'என்றால் குற்றம் இல்லை என்று பொருள்.இதுதான் மருவி தேவலை என்று ஆகிவிட்டது.
*அசூயை  என்பது பிறர் நலம் கண்டு பொறாமைப் படுவது.
ஈரிசை என்பது பிறர் துன்பம் கண்டு மகிழ்வது.
*கண்டம் என்றால் பிரிவு.அகண்டம் என்றால் பிரிவில்லாதது.காவேரி நதியிலிருந்து கிளை நதிகள் பிரிவதற்கு முன் உள்ள காவேரியே அகண்ட காவேரி.அகன்ற காவேரி என்பது பிழை.
*யோஜனை என்பது நாலு காத தூரம்;கிட்டத்தட்ட நாற்பது மைல்.
*மைனாவிற்குப் பழைய பெயர் நாகணவாய்ப்புள்.
*ஸ்ரீ காளி புரம் என்பதே மருவி  சீகாழி ஆகிப் பின் சீர்காழி ஆயிற்று.
*கருனை என்பதற்குப் பொரியல் என்று பொருள்.எனவே கருனைக் கிழங்கு
 என்று சொல்வதே சரி.
*கோஜலம் என்பது பசுவின் சிறுநீர்.கோமயம் என்பது பசுவின் சாணம்.
*சொக்கம் என்றால் அழகு.சொக்கத் தங்கம் என்பது கலப்பில்லாதது.சொக்கன் என்றால் அழகன்.
*அரசன் மனைவி,குருவின் மனைவி,அண்ணனின் மனைவி,மாமியார்,தாயார் ஆகியோரை ஐவகைத்தாயார் என்பர்.

தெரிந்ததும் தெரியாததும்-2

0

Posted on : Sunday, August 17, 2014 | By : ஜெயராஜன் | In :

*புத்தருடைய விக்ரகம் உள்ள கோவிலுக்கு சைத்தியம் என்று பெயர்.
*கொல்லாமை,பொய்யாமை,கள்ளுண்ணாமை,காமமின்மை,இரவாமை என்ற ஐந்தை பஞ்சசீலம் என்பர்.
*பாரத யுத்தத்தின் முடிவில் எஞ்சியவர் பத்துப்பேர்தான்.அவர்கள்:பஞ்ச பாண்டவர் ஐவர்,அசுவத்தாமா,கிருபர்,கிருதவர்மா,சாத்தகி,கிருஷ்ணன்.
*பழந் தமிழகத்தில் ஒரு வீரன், தான் கொன்ற புலியின் பற்களைக் கோர்த்து தனது  காதலிக்கு அணிவிக்கும் பழக்கம் இருந்தது.அந்த வழக்கமே பின்னர் தாலி கட்டும் வழக்கமாக மாறியது.
*காமம்,கொலை,கள்ளுண்டல்,பொய்,களவு இவை ஐந்தும் பஞ்சமாபாதகங்கள்.
*சரம் என்றால் நாணல்.வனம் என்றால் காடு .நாணல் மிகுந்த காடு சரவணம்.அங்கு உள்ள பொய்கை சரவணப் பொய்கை.
*இரண்டு கைகள்,இரண்டு கால்கள்,வயிறு,இரண்டு கன்னம்,முகம் என்னும்  எட்டு  அங்கங்கள் நிலத்தில் படும்படி வணங்குதல் சாஷ்டாங்க நமஸ்காரம்.இரண்டு கைகள்,இரண்டு முழங்கால்கள்,முகம் என்னும்  ஐந்தும் பூமியில் படும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரம்.
*'காசி'என்றால் பிரகாசிப்பது என்று பொருள்.
*சூர்ப்பம் என்பது முறத்திற்குப் பெயர்.முறம் போன்ற நகங்களை உடையவள் சூர்ப்பனகை.
*'ரசகதளி'என்ற பேரே ரஸ்தாளி என்று மருவியது.
*'ரூப்யம்'என்றால் வெள்ளி என்று பொருள்.முன்னர் வெள்ளியினால் செய்யப் பட்டதால் நாணயத்திற்கு ரூபாய் என்று பெயர் வந்தது.

தெரிந்ததும் தெரியாததும்

1

Posted on : Saturday, August 16, 2014 | By : ஜெயராஜன் | In :

நாம் அன்றாட  வாழ்வில் புரியாமல் உபயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிற்கு அறிஞர் கி.வா. ஜெகநாதன் எழுதிய விடைகள் ஆயிரம் என்ற நூலில் விடைகள் இருக்கின்றன. அவற்றில் சில:
*அரிக்கு இல்லமாகிய ஊர்தான் அரியிலூர்.அதுவே மருவி அரியலூர் ஆகிற்று.
*சீதை அசோக வனத்தில் இருந்த காலம் பத்து மாதங்கள்.
*பாவை என்பது பொம்மையைக் குறிக்கும்.பொம்மை போல வண்ணங்களுடன்  அழகாக இருப்பதால்  பெண்களைப் பாவை என்கின்றனர். பூவை என்பது மைனாவிற்குப் பெயர்.அதன் பேச்சைப் போல இனிமையாகப் பேசுவதால் மங்கையரை பூவை என்று அழைக்கின்றனர்.
*கர்ணனுடைய இயற்பெயர் விஷுஷேணன் .
*பொய்கை என்பது  இயற்கையான நீர்நிலை.தடாகம் என்பது மனிதர் உருவாக்கிய நீர்நிலை.
*தீய குணம் உடையவர்களோடு பழகுவது தீநட்பு.அகத்தில் நட்பின்றி,புறத்தில் நண்பர்போல நடிப்பவரின் நட்பு கூடா நட்பு.
*மனிதன் உண்பது உணவு.விலங்குகள் உண்பது இரை .
*ஜல்பம்,விதண்டை என்று வாதங்களில் இரு வகை உண்டு.வாதப் பிரதிவாதிகள் தமது குணங்களையும் எதிரியின் குற்றங்களையும் எடுத்துரைப்பது ஜல்பம்.தமது குற்றம் மறைத்து எதிரியைக் கண்டிப்பது விதண்டை.
*ஒரு கோவிலில் கர்ப்பக் கிரகத்துக்கு மேலே உள்ளதை விமானம் என்றும்,மற்றவற்றைக் கோபுரம் என்றும் கூறுவது மரபு.
*'அனுத்தமா' என்பதற்கு 'தனக்கு மேற்பட்டவர் இல்லாதவள்' என்று பொருள்.


தர்மவழி

0

Posted on : Thursday, August 14, 2014 | By : ஜெயராஜன் | In :

அரண்மனையில் அரசியின் நகை ஒன்று காணாமல் போனது.குறிப்பிட்ட நாட்களுக்குள் கண்டு  பிடித்துக் கொடுத்தால்தக்க பரிசு வழங்கப்படும் என்றும் அதன்பின் யாரிடமாவது இருப்பது தெரிய வந்தால் மரண தண்டனைக்கு உள்ளாக வேண்டியிருக்கும் என்றும் மன்னனால் அறிவிக்கப்பட்டது.ஞானி ஒருவர் அந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தார்.வழியில் ஒரு நகை
கிடை ப்பதைப்  பார்த்து எடுத்தார்.அது பற்றி விசாரித்தபோது அது அரசியின் நகை என்பதும் அது குறித்த அறிவிப்பு பற்றியும் அறிந்தார்.மன்னன் பரிசு கொடுக்க தீர்மானித்த நாளுக்கு முன்னரே ஞானியின் கையில் நகை கிடைத்து விட்டது.ஆனால் அவர் உடனே கொண்டு போய் கொடுக்காமல் அந்த நாள் கடந்ததும் மன்னனிடம் கொண்டு போய்க் கொடுத்தார்.மன்னன் முழு விபரமும் கேட்டுத் தெரிந்து கொண்டு,''நீங்கள் கிடைத்த உடனே கொடுத்திருந்தால் பரிசு கிடைத்திருக்கும்.இப்போது உங்களுக்கு மரண தண்டனை அளிப்பதைத் தவிர வேறு வழியில்லை,'' என்றான்.தாமதத்திற்குக் காரணமும் கேட்டான்.ஞானி சொன்னார்,''நகை கிடைத்ததும் நான் வந்து கொடுத்திருந்தால் நான் பரிசுக்கு  ஆசைப்பட்டவன் என்று பொருள். உண்மையில்  எனக்கு எந்தப் பரிசின் மீதும் நாட்டமில்லை.மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி நான் கொடுக்காமலே வைத்திருந்தால் நான் சாவுக்கு அஞ்சுவதாகப் பொருள்.எனக்கு மரணம் பற்றிய அச்சம் இல்லை.நகையை அப்படியே வைத்துக் கொண்டால் அடுத்தவர் உடைமைக்கு நான் ஆசைப்பட்டவன் என்று பொருள்.எனக்கு எந்தப் பொருளின் மீதும் ஆசை இல்லை.அதனால் இப்போது கொண்டு வந்து கொடுத்தேன். ''மன்னன், ''இப்போது உங்களுக்கு மரண தண்டனை கிடைக்குமே?''என்று கேட்டான்.அதற்கு ஞானி,''தர்ம வழியில் நடக்கும் ஒருவனை தண்டிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை,''என்று சொல்லியவாறு கம்பீரமாக அங்கிருந்து நடந்தார்.மன்னன் வணங்கி விடை கொடுத்தான்.

புனித கங்கை

0

Posted on : Wednesday, August 13, 2014 | By : ஜெயராஜன் | In :

பார்வதி,பரமசிவனிடம் கேட்டார்,''கங்கையில் குளித்தால் பாவம் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே!அப்படியானால் கங்கையில் குளித்தவர்கள் எல்லாம் பாவம் நீங்கியவர்கள் தானே? அவர்கள் அனைவரும் இறந்தபின் கைலாயம் வர வேண்டும் அல்லவா?ஆனால் அவ்வளவு பேரும் வருவதில்லையே.ஏன்?''சிவன் சிரித்துக்கொண்டே,''இதற்கு பதில் வேண்டுமானால் என்னுடன் கங்கைக் கரைக்கு வா,''என்று சொல்லி அழைத்துச்  சென்றார்.கங்கையில் பலரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு வயது முதிர்ந்த பெண்,''ஐயோ,என் கணவர் ஆத்தோடு  போகிறாரே,யாராவது காப்பாற்றுங்களேன்,''என்று அலறினார்.உடனே அங்கிருந்த பலரும் கிழவரைக் காப்பாற்ற ஓடினார்கள்.அப்போது கிழவி,''சற்று நில்லுங்கள்.உங்களில் பாவம் செய்யாத யாரேனும் அவரைக் காப்பாற்றுங்கள்.பாவம் செய்த ஒருவர் அவரைத் தொட்டால் அவரும் இறந்து விடுவார்,என் கணவரும் இறந்து விடுவார்,''என்றாள்.உடனே வேகமாக ஓடிய அனைவரும் அப்படியே நின்று விட்டனர்.பாவம் செய்யாதார் யார் இருக்கிறார்கள்?திடீரென சாதாரண, படிப்பில்லாத ஒரு கிராமத்து வாலிபன் ஆற்றில் குதித்து நீந்தி சென்று கிழவரைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்தான்.அதிசயித்த அனைவரும் அவனிடம்,''நீ பாவம் ஏதும் செய்ததில்லையா?''என்று கேட்டனர்.அவனும்,''நானும் பல பாவங்கள் செய்துள்ளேன்.ஆனாலும் கிழவி அழுதது என்னால் தாங்க முடியவில்லை. மேலும்,கங்கை நீர் பட்டாலே செய்த பாவங்கள் எல்லாம் தீரும் என்று சொல்கிறார்களே,அப்படியானால் நான் நீரில் குதித்தவுடனேயே என் பாவங்கள் நீங்கி இருக்கும் அல்லவா?''என்று கேட்டான்.அனைவரும் தலை குனிந்தனர்.இப்போது சிவன் பார்வதியிடம்  சொன்னார், ''எல்லோரும்தான் கங்கையில் குளித்தால் பாவம் நீங்கும் என்று சொல்லுகிறார்கள்.ஆனால் அவன் ஒருவன் தானே அதை நம்பினான்.நம்பியவருக்கு மட்டுமே கைலாயத்தில் இடம் உண்டு.''பார்வதியின் சந்தேகம் நீங்கியது.

பறவையும் அம்பும்

0

Posted on : Tuesday, August 12, 2014 | By : ஜெயராஜன் | In :

துரோணர் தனது சீடர்களுக்கு,மரத்திலிருந்த ஒரு பறவையின் கண்ணைக்  குறிபார்த்துஅம்பு எய்யக் கூறினார்.பின் ஒவ்வொரு சீடரையும் அவனுக்கு என்ன தெரிகிறது என்று கேட்க,ஒருவர் மரம் தெரிகிறது என்று சொல்ல அடுத்தவர் கிளை தெரிகிறது என்று சொல்ல அர்ஜுனன் மட்டும் எனக்கு பறவையின் கண் மட்டும் தான்  தெரிகிறது என்று சொல்லி பறவையின் கண்ணில் அடித்து வீழ்த்தியது அனைவரும்  அறிந்த கதை.அந்த சம்பவம் நடக்கும்போது கர்ணனின் நண்பன் ஒருவன் இந்த நிகழ்ச்சியை ஒளிந்திருந்து கவனித்துவிட்டுப் பின் கர்ணனிடம் நடந்ததை  சொன்னான்.பின் அவன் கர்ணனிடம்,''வில் பயிற்சியில் நீ அர்ஜுனனுக்குக் குறைந்தவனா,என்ன?நீயும் முயற்சி செய்.அதோ,மரத்தில் இருக்கும் அந்தப் பறவையின் கண்ணை அடித்து வீழ்த்து,பார்ப்போம்,''என்றான்.கர்ணனும் சம்மதித்து வில்லைக் கையில்
எடுத்தான்.நண்பனுக்கு துரோணர் கேட்ட கேள்வி ஞாபகம் வரவே,அவன் கர்ணனிடம்,''கர்ணா,உனக்கு மரத்தில் என்ன தெரிகிறது?''என்று கேட்டான். கர்ணன்,''எனக்கு ஒன்றும் தெரியவில்லை.''என்றான்.நண்பனுக்கு ஏமாற்றம்.கண் மட்டுமே தெரிகிறது என்று அவன் சொல்வான் என்று எதிர் பார்த்ததால் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.கர்ணனும் அதே பதிலை சொன்னான்.அடுத்த நொடியே கர்ணனின் வில்லிலிருந்து இரண்டு அம்புகள் பறந்தன.பறவை அடிபட்டுக் கீழே விழுந்தது.நண்பன் பறவையைப் பார்த்தான்.என்ன அதிசயம்!பறவையின் இரண்டு கண்களுமே அம்பால்  தாக்கப் பட்டிருந்தன.நண்பனுக்கோ ஒரே ஆச்சரியம்.''இது எப்படி முடிந்தது?'' என்று கேட்க,கர்ணன் சொன்னான்,''எனக்கு மரத்தில் ஏதும் தெரியவில்லை, ஏனெனில் நான் அந்தப் பறவையோடு பறவையாக ஐக்கியமாகி விட்டேன். அதனால்  ஒரு அம்பு கொண்டு ஒரு கண்ணை தாக்கிவிட்டு அந்தப் பறவை திரும்பிக் கீழே விழுவதைக் கணித்து அடுத்த அம்பினால் அடுத்த கண்ணையும்  எய்தேன்,''என்றான்.நண்பன் கர்ணனைக் கட்டிப் பிடித்து,''இவ்வளவு  திறமை வாய்ந்த  உனக்கு அதற்குரிய மரியாதை கிடைக்கவில்லையே!''என்று கலங்கினான்.

காதல்

0

Posted on : Monday, August 11, 2014 | By : ஜெயராஜன் | In :

சொல்லுக்குப் பொருள் சொல்லோடு மட்டும் அல்ல,இடத்தோடும் இழைந்து  இருக்கிறது.'
''காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி,''என்று சம்பந்தர் பாடும்போது காதல் என்பது பக்தி.
''காதல் திருமகன்,''என்று ராமனை தசரதன் குறித்தபோது காதல் என்பது அன்பு.
''ஆதலினால் காதல் செய்வீர்,''என்று பாரதி பாடியபோது,காதல்  என்பது ஆண்,பெண் நட்பு.
''காதலுக்கு வழி வைத்துக் கருப்பாதை சாத்த,''என்று பாரதிதாசன் பாடிய போது,காதல் என்பது உடல் உறவு.
''முதியோர் காதல்''என்று எழுதிய  போது காதல் என்பது உடல் கடந்த உணர்வு நிலை.
காதல் என்பது கடவுள் மாதிரி-இழுத்த இழுப்புக்கு வரும்;இஷ்டத்துக்குப் பொருள் கொள்ளலாம்.
                                                            ===கவிப் பேரரசு வைரமுத்து.

சுடுகாடு

1

Posted on : Saturday, August 09, 2014 | By : ஜெயராஜன் | In :

மூதறிஞர் ராஜாஜி ஒரு முறை சேலம் நகர் மன்றத் தலைவராய் இருந்தார்.ஒரு நகர் மன்றக் கூட்டத்தில்,ஒரு உறுப்பினர் சேலம் சுடுகாட்டுக்கு சுற்றுச் சுவர் எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார்.அது சம்பந்தமாக விவாதம் நடந்தது.ஒரு சிலர் வேண்டும் என்றும் ஒரு சிலர் வேண்டாம் என்றும் தீவிரமாக விவாதிக்க ஆரம்பித்தனர்.நகராட்சியில் நிதிநிலைமை சரியில்லாதிருந்தது.அதைக் கருத்தில் கொண்டாலும் சுற்று      சுவர் உடனைதேவையில்லை என்பது ராஜாஜியின் எண்ணம்.நிதி நிலை பற்றி வெளியில் சொல்வது சரியாய் இருக்காது என்று அவர் கருதினார்.விவாதம் மிக சூடான நிலையில் அதுவரை அமைதியாய் இருந்த ராஜாஜி தலையிட்டார்.
அவர் சொன்னார்,''சுடுகாட்டுக்கு சுற்று சுவர் தேவையில்லை.''என்ன காரணத்தால் அப்படி ஒரு முடிவுக்கு வந்தார் என்பதை அறிய அனைவரும் ஆவல் கொண்டனர்.ராஜாஜி தொடர்ந்தார்,''சுடு காட்டுக்கு உள்ளே சென்றவன் வெளியே வரமாட்டான்.வெளியே இருப்பவன் உள்ளே செல்ல விரும்ப மாட்டான்.அப்படி  இருக்க சுற்று சுவர் எதற்கு?''அனைவரும் கொல்லென்று சிரித்து விட்டனர்.நிதிநிலை பற்றி அறிந்தவர்கள் அந்த சூழலை ராஜாஜி சரி செய்தசாமர்த்தியத்தை எண்ணி வியந்தனர்.

தேன் உண்ணும் வண்டு

1

Posted on : Friday, August 08, 2014 | By : ஜெயராஜன் | In :

புலவர் புகழேந்தி சோழ மன்னனின் தமிழ் அவையில் தான் எழுதிய நள
வெண்பாவை  அரங்கேற்ற ஆரம்பித்தார்.பாக்களின் இனிமையில் அவையோர் மயங்கி இருந்தனர்.இனிய மாலைப் பொழுதின் அழகை வர்ணித்த புகழேந்தி,''மல்லிகையே வெண்சங்கா வண்டூத,''என்று பாடினார்.அதன் பொருள்,''மல்லிகைப் பூக்களை சங்குகளாக்கி வண்டுகள் ஒலி  செய்த போது, '' என்பதாகும்.சோழ மன்னனின் தமிழ் அவையில் ஒட்டக்கூத்தனும் உண்டு.அவருக்கும்,புகழேந்திக்கும் ஏழாம்  பொருத்தம்.புகழேந்தி ஆரம்பித்ததில் இருந்து எதில் குறை கண்டு பிடிக்கலாம் என்று காத்திருந்தார். புகழேந்தி மல்லிகைப் பூக்களைப் பற்றிப் பாடியதும் வெகுண்டு எழுந்தார்,ஒட்டக்கூத்தர். அவர் கூறினார்,''சங்கு ஊதுபவன் சங்கின் பின் புறம் இருந்து ஊதுவதுதான் முறை.மல்லிகைப் பூவின் மேல்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கு ஊதுவதாய்க் கூறுவது காட்சிப் பிழையானது.புகழேந்தி பாடுவது வெண்பா அல்ல.வெறும்பா,''சபையில் கடுமையான அமைதி நிலவியது. புகழேந்தி என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் ஆர்வத்துடன் யோசித்துக் கொண்டிருந்தனர்.புகழேந்தி சொன்னார், ''ஒட்டக்கூத்தரே! நீர் பெரிய புலவர்தான்.ஆனால் உமக்கு ஒரு விஷயம் தெரியவில்லையே!கள் குடிப்பவனுக்கு தலை எது கால் எது என்று தெரியுமா?கள் குடித்த வண்டு மட்டும் அதற்கு விதி விலக்கா?''சபையில் ஆரவாரம் அடங்க சிறிது நேரம் ஆயிற்று.

வேகம்

1

Posted on : Thursday, August 07, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக கவியரசர் கண்ணதாசன் காரில் போய்க் கொண்டிருந்தார்.அவர் பொதுவாக தாமதமாய்த்தான் விழாக்களில் கலந்து கொள்வார்.அன்றும் விழா ஆரம்பிக்கும் தருணம் வந்து விட்டது. ஓட்டுனர் காரை அதி விரைவாக ஓட்டிச் செல்கிறார்.அந்த வேகத்தில் கார் கூட அதிர ஆரம்பிக்கிறது.கவியரசருக்கு வயிறே கலங்குகிறது.உடனே ஓட்டுனரிடம்,''கொஞ்சம் மெதுவாகப் போகலாமே,''என்றார்.ஆனால் தாமதம் ஆகிறது என்பதனை உணர்ந்த ஓட்டுனர் வேகத்தைக் குறைக்காமலேயே
ஓட்டினார்.கண்ணதாசன் சற்று கோபமாக,''மெதுவாகப் போ என்று சொன்னேனே?''என்றார்.ஓட்டுநரோ,''ஐயா,இந்த வேகத்தில் போனால்தான் விழாவுக்குப் போய் சேர முடியும் ,''என்றார்.கவிஞர்,''நான் சொல்வதைக் கேள்.ஒரு கால் மணி நேரம் தாமதமாகப் போனால் கூடப் பரவாயில்லை.பத்து வருடம் முன்னாலேயே போய் விடக் கூடாது,''என்றார் சிரிக்காமலேயே. ஓட்டுனர் உடனடியாக வேகத்தை குறைத்து விட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ!

பாற்கடல்

0

Posted on : Wednesday, August 06, 2014 | By : ஜெயராஜன் | In :

கவிஞர் வைரமுத்து எழுதிய ''பாற்கடல்'' என்னும்  நூலிலிருந்து:

கல்மேல் உளி விழுவது போன்ற தாக்குதலும்,
விதை மேல் மழை விழுவது போன்ற பாராட்டும்
மனிதனை உயர்த்தும்.
******
அன்பு என்பது கூட  ஒரு வகை ஆதிக்கம்தான்.
******
நடை  கற்றுத் தருவதே பெற்றோர்  கடமை;
சாலைகள் அவரவர் உரிமை.
******
நிலா என்பது வளர்ந்த குழந்தை.
குழந்தை என்பது வளரும் பிறை.
வளர்ந்த நிலாவுக்குக் கறை உண்டு.
வளரும் பிறைக்குக் களங்கம் இல்லை.
******
பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சிகள்.
சிலவற்றைப் பிடித்துக் கொள்கிறோம்.
பல பறந்து விடுகின்றன.
******
அறிவைப் பொருளாக்குதல் பலம்.
பொருள் தேடும் அறிவு மட்டும் போதும் என்பது பலவீனம்.
******
நூறாண்டு வாழப்போகும் மனிதன் அழுது கொண்டே  பிறக்கிறான்.
சில நாட்கள் வாழப்போகும் பூ சிரித்துக் கொண்டே மலர்கிறது.
******
பொறாமை என்பது முடியாதவர்களின் பாராட்டு.
******
நின்ற இடத்திலேயே நிற்க வேண்டுமா?
ஓடிக் கொண்டே இரு.
******
சாட்சியில்லாத இடத்திலும் நேர்மையாய் இருப்பது ஒழுக்கம்.
கண்காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது சுத்தம்.
******



ஈக்கு என்ன வேலை?

1

Posted on : Monday, July 07, 2014 | By : ஜெயராஜன் | In :

மாம்பழக் கவிராயர் என்பவரும் ராமச்சந்திர கவிராயர் என்பவரும் நல்ல நண்பர்கள்.மாம்பழக் கவிராயருக்கு கண் பார்வை சிறிது மங்கலாயிற்று.ஒரு நாள் ராமச்சந்திரக் கவிராயர் அவரைப் பார்க்க வந்தபோது வந்திருப்பது யார் எனக் கேட்டார்.ராமச்சந்திரர் சற்று அழுத்தமாக ,''இராமச்சந்திரன் வந்திருக்கிறேன்,''என்றார்.தமிழில் 'ர' என்ற எழுத்துடன் எந்த வார்த்தையும் ஆரம்பிக்க இயலாது என்பதால் அப்படிப்பட்ட பெயர்களுக்கு முன்னால்  'இ' சேர்ப்பது வழக்கம்.அதன்படியே அவரும் சொன்னார்.ஆனால் எழுதும்போது மட்டுமே அவ்வாறு சேர்ப்பதுண்டு.பேசும்போது சாதாரணமாகவே 'இ' சேர்க்கமாட்டார்கள்.எனவே மாம்பழக் கவிராயர்,''கவிராயரே,ஈக்கு இங்கு என்ன வேலை?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.ராமச்சந்திரரும்தனது  தவறை அறிந்து கொண்டாலும் சிரித்துக் கொண்டே, ''மாம்பழம் இருக்கும் இடத்தில் ஈ இருக்கத்தானே செய்யும்!''என்றார்.கவிராயர்கள் என்றால் சும்மாவா?

வால்டேரின் பொன்மொழிகள்.

2

Posted on : Friday, July 04, 2014 | By : ஜெயராஜன் | In :

உலக சிந்தனையாளர்களில் மிக சிறந்த இடத்தில் இருப்பவர் பிரான்ஸ் தேசத்தின் வால்டேர்.அவரின் பொன் மொழிகள் சில:
********
ஒரு கிராமம் நல்ல கிராமமாக இருக்க ஒரு மதம் இருந்தாக வேண்டும்.கடவுள் இல்லையென்றால் அவரைக் கண்டு பிடிப்பது அவசியம் ஆகிறது.சாதாரண மக்களுக்கு பரிசு மற்றும் தண்டனை வழங்கும் கடவுள் ஒருவர் தேவை.
********
ஆதி காலத்தில் அறியாமையும் பயமுமே கடவுள்களை உருவாக்கின. உற்சாகம்,விருப்பம்,வஞ்சனை ஆகியவை அவற்றை அலங்கரித்தன அல்லது சீரழித்தன.வலிவானவை அவற்றை வணங்குகின்றன.உடனே நம்பி விடும் பழக்கம் அவற்றைப் பாதுகாக்கின்றன.பழக்க வழக்கங்கள் அவற்றை மதிக்கின்றன.மனிதர்களின் குருட்டுப் பார்வை அவற்றை சாதகமாக்கிக் கொள்ள, கொடுங்கோன்மை அவற்றைத் தாங்குகின்றன.
********
மனசாட்சி என்பது கடவுளின் குரல் அல்ல.வளர்ந்து கொண்டிருக்கும் சிறுவர்கள் மீது பெற்றோர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் அள்ளிக் கொட்டிய தடைகள்,அவர்கள் மனதில் தேங்கியிருப்பதே மனசாட்சி ஆகிறது.
********
நான் கடவுளைத் தொழுது கொண்டே இறக்கிறேன்;நண்பர்களை நேசித்துக் கொண்டே இறக்கிறேன்.என் விரோதிகளை வெறுக்காது மூட நம்பிக்கைகளை மிகவும் வெறுத்துக் கொண்டே இறக்கிறேன்.
********
சின்னப் புத்தி உடையோரை பொறாமையே அழிக்கிறது.
********
நாம் அனைவரும் பலவீனம் மற்றும் தவறுகளுடன் அமைந்தவர்கள். ஒருவருக்கொருவர் நம்முள் இன்னொருவரின் தவறுகளை மன்னிப்போமாக!இதுவே இயற்கையின் முதல் சட்டம்.
********

பொன்மொழிகள்-55

0

Posted on : Monday, June 30, 2014 | By : ஜெயராஜன் | In :

நீ நொந்து போயிருந்தால் இறந்த காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள். மிகுந்த ஆர்வத்துடன் இருந்தால் எதிர் காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்.
நல்ல அமைதியுடன் இருந்தால் நிகழ்காலத்தில் வாழ்கிறாய் என்று பொருள்.
********
இரவு நம் கண் பார்வையிலிருந்து உலகை மறைக்கலாம்.ஆனால் இந்த அண்டத்தைக் காட்டுகிறதே!
********
பெரிய மனிதர்களின்  கோபம், எதிரிகளின் முழு சமர்ப்பணத்தைத்தான் எதிர்பார்க்கிறது.
********
பொறுப்புகள் அச்சமாகக் கனிகின்றன.அச்சம் வஞ்சகமாகிறது.வஞ்சகம் அனைத்து ஞானத்தையும் நஞ்சாக்குகிறது.
********
அச்சத்தின் மறுபக்கம் வெறுப்பு.
********
வல்லமை என்றும் கீழோரால்  வெறுக்கப்படுகிறது.
********
காதலிலிருந்துதான் வாழ்க்கைக்கு உண்மை இன்பம்பெற முடியும்.நோய்க்குப் பரிகாரமும் அதுவே.பரிகாரம் இல்லாத நோயும் அதுவே.
********
அனுபவம் என்பது தேர்வை முதலில் நடத்தி விட்டுப் பின்னர் பாடம் சொல்லிக் கொடுப்பது.
********
மனிதனின் அச்சம் தான் நரகம்.
அவனது பேராசைதான் சொர்க்கம்.
********
சந்தேகத்தைக் கட்டுப் படுத்தவே நம்பிக்கை தேவைப் படுகிறது.
********
அகந்தையாலோ,ஆசையாலோ,அச்சத்தாலோ எடுக்கும் முடிவுகள் தீங்கையே கொண்டுவரும்.
********

கலீல் ஜிப்ரான் -8

0

Posted on : Monday, June 16, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சாமியார் கோவில் வாசலில் நின்று மக்கள் அறிந்திருந்த பல கடவுள்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.மக்கள் இந்தக் கடவுள்கள் எல்லாம் தங்களோடு வாழ்வதாக நம்பினர்.
சில நாட்கள் கழித்து அதே கோவில் வாசலில்  ஒரு மனிதன் வந்து கடவுள் இல்லவே இல்லை என்று வாதிட்டான்.கேட்டவர் பலருக்கு மகிழ்ச்சி. ஏனெனில்  அவர்கள் எங்கே,தாங்கள் செய்த தவறுகளுக்குக் கடவுள் தண்டிப்பாரோ என்று அச்சம் கொண்டவர்கள்.கடவுள் இல்லை என்று சொன்னதும் அவர்களுக்கு நிம்மதி.
இன்னும் சில நாட்கள் கழிந்தன.புதிதாக ஒரு மனிதன் வந்து,ஒரே ஒரு கடவுள்தான் உண்டு, என்று தீவிரமாகப் பேசினான்.இதைக் கேட்டவர்களுக்கு ஏமாற்றமும் அச்சமும் ஏற்பட்டது.பல கடவுள் இருந்தால் ஒருவர் இல்லாவிடினும் ஒருவர் தங்கள் தவறுகளை மன்னிக்க வாய்ப்புண்டு;ஒரே கடவுள் என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது.தாங்கள் செய்யும் தவறுகளுக்கு கோபப்படுவாரா மன்னிப்பாரா என்று அறிய முடியாமல் கவலைப்பட்டார்கள்.
அடுத்து வந்த வேறு ஒருவன்,''கடவுள் மூன்று பேர் உண்டு.அவர் மூவருக்கும் கருணை வடிவான ஒரு அன்னை உண்டு,''என்று சொன்னான்.இப்போது ஊர் மக்கள் திருப்தி அடைந்தனர்.கடவுள் மூவர் என்பதால், நாம் செய்தது  பாவமா, இல்லையா என்று உறுதியான முடிவுக்கு அவர்களால் வர இயலாது என்றும்  அவர்கள் அப்படியே பாவம் என்று முடிவு செய்தாலும் கருணை வடிவான தாய் மன்னித்து விடுவாள் என்றும் எண்ணினர்
அந்த ஊர் மக்கள் இன்று வரை மொத்தம் எத்தனை கடவுள் என்பதில் ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கிறார்கள்.

கலீல் ஜிப்ரான் -7

0

Posted on : Sunday, June 15, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு பூனை ஒரு நாயிடம் சொன்னது,''நண்பா,நீ முழு மனதுடன் இறைவனை பிரார்த்தனை செய்.தொடர்ந்து நீ அவ்வாறு செய்தால் ஒரு நான் இறைவன் உனக்கு அருள் புரிவார்.இதில்  சந்தேகத்திற்கே இடமில்லை.இறைவனின் அருட்பார்வை உன் மீது பட்டுவிட்டால் போதும்.வானிலிருந்து எலிகள் மழையாய்ப் பொழியும்.நீ விரும்பும் அளவுக்கு அள்ளியள்ளி உண்ணலாம். ''இதைக் கேட்ட நாய்,விழுந்து விழுந்து சிரித்தது.அது பூனையிடம் சொன்னது, ''ஏ,முட்டாள் பூனையே,எனக்கு ஒன்றும் தெரியாது என்று முடிவு செய்து விட்டாயா?என் வீட்டிலும் பெரியவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் என்னிடம் தெளிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்,'மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால் எலி மழை பொழியாது,எலும்பு மழை தான் பொழியும்.அதை நாம் ஆசை தீரக் கடித்துத் தின்று மகிழலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.''
அவரவர் பாடு அவரவர்க்கு.

கலீல் ஜிப்ரான் -6

0

Posted on : Saturday, June 14, 2014 | By : ஜெயராஜன் | In :

சாலையில் ஒருவன் குப்பைகளைப் பெருக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தான் அப்பக்கம் ஒரு தத்துவஞானி வந்தார்.அவர் அவனைப் பார்த்து,''ஐயோ பாவம்,உன்னைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.உன் வேலை மிகக் கடினமானது.அசிங்கமான வேலையும் கூட,''என்றார்.அதை ஒப்புக் கொண்ட அவன்,''ஐயா,என் மீது பரிதாபம் காட்டியதற்கு நன்றி.அது சரி,நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?''என்று கேட்டான்.தத்துவ ஞானி சொன்னார்,''நான் மனிதர்களைப் படிப்பவன்.அவர்களின் மனதையும் அவர்களுடைய செயல்களையும் அவர்களின் ஆசைகளையும் படிக்கிறேன்,''இதைக் கேட்டதும் அந்த ஆள் மெல்ல சிரித்தபடி தனது வேலையைத் தொடர்ந்த வண்ணம் சொன்னான்,''நீங்களும் பாவம்தான் ஐயா.நானும் உங்களுக்காகப் பரிதாபப் படுகிறேன்.''
மனிதர்களின் மனதில் எழும் எண்ணங்களும்,அவனது செயல்களும் ஆசைகளும் அவ்வளவு மோசமான குப்பைகள்!

கலீல் ஜிப்ரான் -5

0

Posted on : Friday, June 13, 2014 | By : ஜெயராஜன் | In :

நான் ஒருதுறவியை சந்திக்க சென்றபோது அங்கு ஒரு திருடன் வந்தான். களைத்திருந்தாலும் துறவியை திருடன் பார்த்ததும் பரவசத்துடன் அவர்முன் மண்டியிட்டு,''ஐயா,நான் செய்த பாவங்கள் பெரும் பாரமாக என்னை அழுத்துகின்றன.என்னைக்  காப்பாற்றுங்கள்.''என்றான்.துறவி புன்னகை புரிந்தவாறே,''மகனே,நானும் பாவங்கள் செய்துள்ளேன் .அவை என்னையும் அழுத்துகின்றன.''என்றார்.திருடன் முகத்தில் அதிர்ச்சி.அவன் பதட்டத்துடன் சொன்னான்,''ஐயா,அப்படியெல்லாம் பேசாதீர்கள்.நீங்களும் நானும் ஒன்றா?நான் ஒரு திருடன்;பொல்லாதவன்.''உடனே துறவி, ''மகனே, நானும் ஒரு திருடன்தான்;பொல்லாதவன்தான்.''என்றார்.திருடன்,''ஐயோ,நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை.நான் ஒரு கொலைகாரன்.நான் கொலை செய்தவர்களின் கதறல் ஒலி இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.'' என்றான்.துறவி,''நானும் கொலைகாரன் தான்.உன் அனுபவம் எனக்கும் உள்ளது,''என்றார்.இதைக் கேட்ட திருடன், ஆச்சரியத்துடன்  எழுந்து நின்றான்.பின் அவன் நடையில் ஒரு துள்ளலுடன் அங்கிருந்து வெளியே சென்றான்.அவன் பார்வை மறைந்ததும் நான் துறவியிடம் ,''ஏன் இப்படி நீங்கள் செய்யாத குற்றங்களை எல்லாம் செய்ததாக சொன்னீர்கள்?அவனுக்கு வரும்போது உங்கள் மீது இருந்த மரியாதையும் நம்பிக்கையும் போய் விட்டன மறுபடியும் அவன் தறுதலையாகத் திரியப் போகிறான்,''என்றேன்.துறவி மெலிதாகப் புன்னகைத்தவாறே சொன்னார்,''மகனே அவனுக்கு என் மீது நம்பிக்கை போய் விட்டது என்பது உண்மைதான்.ஆனால் அவன் இங்கு வரும்போது இருந்ததை  விட அதிக மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் திரும்ப சென்றிருக்கிறான்.''அப்போது தூரத்தில் எங்கோ,அந்தத் திருடன் பாடிய பாடலிலிருந்த மகிழ்ச்சி அந்த மலையையும் பள்ளத்தாக்கையும் நிறைத்தது.

கலீல் ஜிப்ரான் -4

1

Posted on : Thursday, June 12, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு நதி  கடலில் கலப்பதற்காக ஓடிக்கொண்டிருந்தது.அதில் இருந்த இரண்டு நீரோடைகள் தமக்குள் பேசிக் கொண்டன.முதல் ஓடை அடுத்ததிடம்
கே ட்டது,''நண்பா,உன் பயணம் நல்லபடியாக இருந்ததா?'' இரண்டாம் ஓடை சொன்னது,''அதை ஏன் கேட்கிறாய்.நான் வந்த வழி மிக மோசமாக இருந்தது. சரியான வழி நடத்துபவர் இல்லாமல், கண்ட பாதைகளில் பல சோம்பேறி மனிதர்களைக்கடந்து வந்தேன்.அது சரி,உன்  பயணம் எப்படி இருந்தது?''முதல் ஓடை சொன்னது,''நான் வந்த பாதை எங்கும் ஒரே சிரிப்பு, மகிழ்ச்சி, உற்சாகம். மலைப்பாதையில் நறு மணம் மிக்க மலர்களையும் மரங்களையும் கடந்து வந்தேன்.அழகிய ஆண்களும் பெண்களும் என் நீரை அள்ளிக் குடித்தார்கள். குழந்தைகள் விளையாடி மகிழ்ந்தார்கள்.''இவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த நதி அதட்டலாக சத்தம் கொடுத்தது,''என்ன சலசலப்பு அங்கே?எல்லோரும் பேசாமல் என்னோடு வாருங்கள்.நாம் இப்போது பெரிய கடலில் கலக்கப் போகிறோம்.இனி எதுவும் பேசாமல் என்னோடு வந்தாலே போதும்.கடலுக்குள் கலக்கும்போது நம்முடைய பழைய அனுபவங்களோ, மகிழ்ச்சிகளோ,வருத்தங்களோ,சலிப்புகளோ எதுவும் ஞாபகம் இருக்கப் போவதில்லை.நம் கடல் அன்னையின் இதயத்தை அடைந்தபின் நாம் எல்லோரும்சமம்தான்.''

கலீல் ஜிப்ரான் -3

0

Posted on : Wednesday, June 11, 2014 | By : ஜெயராஜன் | In :

இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது.அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை.நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை.நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர். இருவரில் ஒருவருக்குத்தான்.நீச்சல் நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்.சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான். அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்.திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான். மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,''உனக்கு  நீச்சலில் அதிக அனுபவம் இல்லைஎன்று சொன்னாயே! பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்?'' இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத்  தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,''இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது.இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது.நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில்  அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.''

கலீல் ஜிப்ரான்-2

0

Posted on : Tuesday, June 10, 2014 | By : ஜெயராஜன் | In :

மன நல மருத்துவ மனையில் ஒரு இளைஞனை சந்தித்தேன்.அவன் அங்கு வந்த காரணத்தைக் கேட்க அவன் சொன்னான்,''இப்படிக் கேட்பது நாகரீகம் அல்ல.இருந்தாலும் சொல்கிறேன்.என் அப்பா,என்னை தனது பிம்பமாகவே வளர்க்க எண்ணினார்.என் மாமாவும் அப்படித்தான்.என் அம்மாவோ இன்னும் மோசம்.அவர் நான் என் அப்பா,தாத்தா போல வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.என் சகோதரிக்கு தனது கணவரை நினைத்து எப்போதும் பெருமை.''அவரை மாதிரி நீ எப்போது வாழப் போகிறாய்?''என்று கேட்டாள். .என் தம்பி நல்ல விளையாட்டு வீரன்.அவன்,''என்னைப் போல
எ ப்போது அண்ணா ,நன்றாக விளையாடி வாழ்வில் முன்னுக்கு வரப் போகிறாய்?''என்று கேட்டான்.என் ஆசிரியர்களும் சரியில்லை. தத்துவம், இசை,கணக்கு என்று எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் அனைவருமே அவர்களுடைய துறையில் அவர்களை அப்படியே பின்பற்றும் சீடனாக நான் இருக்க வேண்டும் என்று முயன்றார்கள்.இவர்கள் எல்லோரும் என்னைத் துரத்தியதில் நான் இங்கு வந்து சேர்ந்தேன்.வெளி உலகத்தை விட இந்த இடம் அமைதியாக,தெளிவாகத் தெரிகிறது எனக்கு.ஒரு வழியாக, இப்போது யாரைப் போலவும் இல்லாது நான் நானாகவே இருக்கிறேன்.'' பின்னர் அவன் என்னிடம்,''நீ இங்கே எப்படி வந்தாய்? என்னைப் போல்தானா?'' என்று கேட்க அவசரமாக அதை மறுத்த நான் வெறும் பார்வையாளனாகத்தான்  வந்திருப்பதாகக் கூறினேன்.அவன் ஒரு சிறிய புன்னகையுடன் என்னிடம் கேட்டான்,''ஓஹோ,அப்படியானால் நீ இந்த சுவருக்கு வெளியில் இருக்கும் பைத்தியக்கார உலகை சேர்ந்தவனா?''

கலீல் ஜிப்ரான்

2

Posted on : Monday, June 09, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு சிப்பி இன்னொரு சிப்பியிடம் சொன்னது,''ஐயோ,என்னால் வலி தாங்க முடியவில்லையே!''இரண்டாவது சிப்பி காரணம் கேட்க முதல்  சிப்பி, ''என்னுள் ஒரு கனமான உருண்டைப் பந்து ஒன்று சுழல்வது போல இருக்கிறது.அதனால் ரொம்பவலி.''என்றது.இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.மிகுந்த பெருமையுடன் அது கூவியது,''நல்ல வேளை,எனக்கு அப்படி எந்த வலியும் ஏற்படவில்லை. நான் நலமுடன் உள்ளேன்.இறைவனுக்கு நன்றி.''சிப்பி இரண்டும் பேசிக் கொண்டிருந்ததை ஒரு நண்டு கேட்டுக் கொண்டிருந்தது .அது இரண்டாவது சிப்பியிடம் சொன்னது,''உனக்கு தற்போது எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம்.உன் நண்பனை சிரமப்படுத்தும் அந்த வலி,இன்னும் சில நாட்களில் ஒரு அழகான முத்தை உருவாக்கும்.வலியைத் தாங்க விரும்பாத நீ எப்போதும் இப்படி வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான்.''
There is no gain without pain.

பொன்மொழிகள்-52

2

Posted on : Wednesday, May 14, 2014 | By : ஜெயராஜன் | In :

இளைஞனே விளையாடு.எவரும் உன்னை வெல்ல முடியாது என்பதற்காக அல்ல.உன்னை வெல்லும்  தகுதி கொண்டவன் யார் என்று அறிவதற்காக.
********
அச்சமும் ஐயமும் முடிவிலாது தன்னைத்தானே பெருக்கிக் கொள்ளும் வல்லமை உடையவை.
******
ஒரு தாய் தனது பிள்ளையை வயிற்றில் சுமப்பதை விட மனதில் சுமப்பதுதான் அதிகம்.
********
மிருகங்களில் வல்லமை அற்றவை உடனடியாக வல்லமையானவற்றால் கொன்று உண்ணப்  படுகின்றன.அது மிகக் கருணையான செயல்.மனிதன் கருணையால் தங்களில் வல்லமையற்றவனை குரூரமாக வதைத்து தங்கள் அகந்தைக்கு உணவாகக் கொள்கிறார்கள்.
********
நீ ஒரு முறைதான் வாழப் போகிறாய்.அதையே நீ சிறப்பாக செய்தால் ,அந்த ஒரு முறையே போதுமானதுதான்.
********
உன் வலியில் கவனம் செலுத்தாதே!
உன் வலிமையில் கவனம் செலுத்து.
********
ஒரு பறவை உயிருடன் இருக்கும்போது எறும்புகளை சாப்பிடுகிறது.
அந்தப் பறவை இறந்தால் எறும்புகள் அதை சாப்பிடுகின்றன.
காலமும் சூழலும் எப்போது  வேண்டுமானாலும் மாறலாம்.
யாரையும் குறைத்து மதிப்பிடாதே.
நீ இன்று அதிகாரம் மிக்கவனாக இருக்கலாம்.
காலம் உன்னை விட அதிகாரம் மிக்கது என்பதை மறந்து விடாதே.
******
சமூகத்தின் விதி முறைகளுக்கு மாறுபட்டு நீ நடந்தால் உன்னை மக்கள் வெறுக்கலாம்.ஆனால் உள்ளூர தங்களுக்கு அப்படி வாழ தைரியம் இல்லையே என்ற கவலையும் அவர்களுக்கு இருக்கும்.
********
கோபம் என்பது மனதின் பலவீனம்.
********

பிராமணன்

2

Posted on : Thursday, May 08, 2014 | By : ஜெயராஜன் | In :

முன்னொரு காலத்தில் ஒரு பிராமணர் இருந்தார்.அவருக்கு ஒரு மகன் இருந்தான்.ஜாதிகள் பற்றிய தீவிரமான பாகுபாடுகள் இருந்தகாலம் அது.பிராமணரின் மகன் ஒரு உழவர் வீட்டுப் . பெண்ணைக் காதலித்தான். ஆனாலும் தந்தை சம்மதிக்க மாட்டாரே என்று கவலைப்பட்டான்.நண்பன் ஒருவன் யோசனை சொன்னான்,''நீ உன் தந்தையிடம் அந்தப் பெண் ஒரு ஏழை பிராமணக் குடும்பத்தை சேர்ந்தவள் என்று துணிந்து சொல்,''இளைஞனும் அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு தந்தையிடம் நண்பன் சொன்னதுபோலப் பொய் சொன்னான்.அதிர்ச்சியுற்ற அந்தப் பெண் உடனே,''ஐயா,உங்கள் மகன் சொல்வது தவறு.நான் உழவர் வீட்டை சேர்ந்த பெண் தான்.நீங்கள் அனுமதித்தால் மட்டுமே இத்திருமணம் நடைபெறும்'' என்றாள்.பிராமணர் புன்னகை புரிந்தபடி சொன்னார்,''அம்மா,உன் அப்பா எந்தத் தொழில் செய்தால் என்ன?துணிந்து உண்மை சொன்ன நீயும் ஒரு பிராமணப் பெண்தான்.உண்மையான பிராமணர் பொய் சொல்ல மாட்டார்கள்.பிராமண  குலத்தில் பிறந்தாலும் என் மகன்  பொய் சொல்லி விட்டான்.அவன் உண்மையான பிராமணன் அல்ல...பிராமணன் அல்லாத இவனை நீ திருமணம் செய்து கொள்ள பிராமணரான உனக்கு ஆட்சேபம் இல்லாத நிலையில்  இத்திருமணத்திற்கு எனக்கு முழு சம்மதமே.''

சீடன்

0

Posted on : Thursday, May 08, 2014 | By : ஜெயராஜன் | In :

சாக்ரட்டீசிடம் நிறையப் பேர் தம்மை சீடராக்கிக் கொள்ள வேண்டி வருவதுண்டு.அப்போது சரியான சீடனைத் தேர்வு செய்ய அவர் ஒரு வினோதமான தேர்வு வைப்பார்.வந்தவரை அவர் ஒரு குளத்தைப் பார்த்து என்ன தெரிகிறது என்று கேட்பார்.அவர் சொல்லும் பதிலை வைத்தே சீடனைத் தேர்ந்தெடுப்பார்.அவர் எப்படித் தேர்ந்தெடுக்கிறார் என்பது யாருக்கும் புரியவில்லை.நண்பர் ஒருவர் அவரிடம் விபரம் கேட்டார்.சாக்ரடீஸ் சாதாரணமாகச் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விசயமில்லை, நண்பரே!நான் குளத்தில் நீந்தும் மீன்களைப் பார்க்கிறேன் என்று சொல்பவர்களை எனது சீடராக ஏற்றுக் கொள்வேன்.அதற்கு மாறாக எனது முகம் தெரிகிறது என்று சொல்பவர்களை நான் நிராகரித்து விடுவேன்.ஏனெனில் அப்படிப்பட்டவர்கள் தங்களைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.தன்னையே மறக்காத ஒருவர் பிறரையும் மற்றவற்றையும் கண்டறிய முடியாது,''

கண்ணாடி

0

Posted on : Wednesday, May 07, 2014 | By : ஜெயராஜன் | In :

மிகுந்த செல்வம் சேர்த்தும் மன நிம்மதி இல்லாத பணக்காரன் ஒருவன் மன நிம்மதி தேடி ஒரு குருவிடம் சென்று விபரம் சொன்னான்.குரு அவனிடம், ''இந்த கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார்த்து என்ன தெரிகிறது என்று சொல்,''என்றார்.அவனும்,''மக்கள் போய் வருகிறார்கள்,''என்றான்.குரு பின்னர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவனிடம் கொடுத்து,''இந்தக் கண்ணாடியில் என்ன தெரிகிறது என்று பார்த்து சொல்,''என்றார்.அவனும் பார்த்து விட்டு,''என் முகம் தெரிகிறது,''என்றான்.''மக்கள் யாரும் தெரியவில்லையா?''என்று குரு கேட்க அவன் இல்லை என்றான்.இப்போது குரு சொன்னார்,''இரண்டு கண்ணாடிகளும் ஒரே பொருளால் தான் செய்யப் பட்டுள்ளன.ஆனால் முகம் பார்க்கும் கண்ணாடியில் மட்டும் பின்புறம் பாதரசம் பூசப் பட்டுள்ளது பாதரசம் பூசியதால் வெளியே உள்ளது எதுவும் தெரியவில்லை.ஆனால் இந்த சாதாரண கண்ணாடி ஜன்னல் மூலம் வெளி உலகை உன்னால் பார்க்க முடிகிறது.நீ சாதாரணமாக ஏழையாய் இருந்தால் மற்றவர்களை உன்னால் சரியாகப் பார்க்க முடியும்.அவர்களிடம் இரக்கம் காட்ட முடியும்.பணம் எண்ணும் பாதரசத்தால் நீ மறைக்கப் பட்டு விட்டால் உன்னால் உன்னை மட்டுமே பார்க்க முடியும்.பொருள் ஆசையைக் களைந்து விடுவது ஒன்றுதான் உனக்கு நிம்மதி கிடைப்பதற்கான ஒரே வழி,''

தன்னம்பிக்கை

1

Posted on : Tuesday, May 06, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஊரில் பஞ்சத்தினால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.அங்கு வந்து நிலைமையைக் கண்ட புத்தர் தன்னைக் காண வந்திருந்த அனைத்துத் தரப்பினரையும் பார்த்து,''இங்கு பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவளிக்கும் பணியை யார் செய்யத் தயாராயிருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.ஊரின் பெரும் பணக்காரர்,''எனக்கு சொந்தமான எல்லாப் பணத்தை செலவழித்தாலும் பத்தாதே,''என்று அங்கலாய்த்தார்.படைத்தலைவர் ஒருவர்,''ஏதாவது போர் என்றால் நாட்டு மக்களுக்காக என் ரத்தம் சிந்தத் தயாராயிருக்கிறேன்.ஆனால் பட்டினி கிடப்போருக்கு உணவளிக்க தேவையான உணவு என் வீட்டில் இல்லையே,''என்றார்.நிலச்சுவான்தார் எழுந்து,''இந்தப் பஞ்சம் வந்தாலும் வந்தது,எனது வயல்களில் சுத்தமாக விளைச்சல் இல்லை.இந்த ஆண்டு அரசுக்கு எவ்வாறு வரி செலுத்தப்போகிறேன் என்பதே எனது இப்போதைய கவலை.எனவே என்னால் ஒன்றும் செய்ய இயலாது.''என்றார்.அப்போது ஒரு பிச்சைக்காரி எழுந்து,புத்தரை வணங்கி,''பட்டினி கிடப்பவர்களுக்கு நான் உணவளிக்கிறேன்,''என்றாள்.அனைவருக்கும் ஆச்சரியம்.''அது எப்படி உன்னால்  முடியும்,'' என்று அனைவரும் கேட்டார்கள்.அவள் பணிவுடன் சொன்னாள்,''ஐயா,நான் பிச்சைப் பாத்திரம் ஏந்தி வருகிறேன்.அப்போது இங்கு,தன்னால் முடியாது என்று சொன்னவர்கள் தங்களால் இயன்றதை பிச்சையாகக் கொடுத்தால் அதையெல்லாம் ஒன்று சேர்த்து நான் பசியால் வாடுபவர்களின் துயர் தீர்ப்பேன்,''என்றாள்.அவளுடைய தன்னம்பிக்கை கண்டு புத்தர் அவளுக்கு ஆசி அளித்தார்.
மனம் இருந்தால் மார்க்கம் இருக்கும்.

பற்று

1

Posted on : Monday, May 05, 2014 | By : ஜெயராஜன் | In :

இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சாப்பாட்டில் ஆர்வம் உண்டு அடிக்கடி சமையல் அறைக்கு சென்று மனைவி சாரதாதேவியாரிடம் என்ன சமையல் என்று விசாரிப்பார்.ஒரு நாள் அன்னையார் அவரிடம்,''நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர்?யார் யாரெல்லாமோ உங்களைப் பார்க்க வருகிறார்கள்.நீங்கள் அடிக்கடி சமையல் அறைக்கு வருவதைப் பார்த்தால் அவர்கள் என்ன நினைப்பார்கள்?''என்று கேட்டார்.பரமஹம்சர் சிரித்துக் கொண்டே சொன்னார், ''நான் எல்லாப் பற்றுக்களையும் எப்போதோ உதறி விட்டேன்.இருந்தாலும் என்னைப் பூமியுடன் இணைக்க ஒரு பந்தம் தேவை.எல்லாக் கயிற்றையும் அவிழ்த்து விட்டால் படகு ஆற்றோடு போய்விடும்.அதைக் கரையுடன் கட்டி வைக்க ஒரு கயிறு தேவை.என் கயிறு இதுதான் என் பணி முடிந்தவுடன் இந்தக் கயிற்றையும் அவிழ்த்து விடுவேன்.என்றைக்கு நான் சமையல் அறைக்கு வந்து இப்படி விசாரிக்கவில்லையோ அன்றிலிருந்து மூன்றாவது நாள் நான் இந்த உலகை விட்டுப் போய் விடுவேன் என்று பொருள், ''என்றார். அதேபோல் ஒருநாள் அவர் சமையல் அறைக்கு வராததைக் கண்டு அன்னையார் வந்து பார்த்தபோது அவர் கண் மூடிப் படுத்திருந்தார்.அடுத்த மூன்றாம்  நாள் அவர் உயிர் பிரிந்தது.

நஷ்டம் என்ன?

1

Posted on : Monday, May 05, 2014 | By : ஜெயராஜன் | In :

சிறுவன் ஒருவன் ஒரு கூடையில் நாவல் பழங்களை  வைத்து தெருவில் விற்றுக் கொண்டு வந்தான்.ஒரு பெண் அவனை அழைக்கவும் அவள் வீட்டிற்கு வந்து கூடையை இறக்கினான்.அந்தப்பெண் ,''நான் வீட்டிற்குள் எடுத்துச் சென்று நல்ல பழங்களைப்  பொறுக்கி எடுத்துக் கொள்ளவா?''என்று கேட்டாள்.சிறுவனும் சம்மதிக்கவே அவள் கூடையை வீட்டினுள் எடுத்துசென்று நல்ல பழங்களாகப் பார்த்து பொறுக்கி எடுத்தாள் . பையன் வீட்டிற்குள் செல்லவில்லை.வெளியே இருந்தமரத்தில் அமர்ந்திருந்த பறவைகளைப் பார்த்து மகிழ்ச்சியுடன் விசில் அடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் கழித்து அந்தப் பெண் வெளியே வந்து கூடையை அவனிடம் கொடுத்து விட்டுத்  தான் எடுத்த பழங்களுக்கு விலை கேட்டாள். அவனும் எடை போட்டு விலை சொன்னான்.பணத்தைக் கொடுத்த அந்தப் பெண் கேட்டாள்,''ஏன் தம்பி,நான் உள்ளே கூடையை எடுத்து சென்ற போது நீ உள்ளே வரவில்லை.நான் அதிகமாகப் பழங்களை எடுத்திருந்தால் என்ன .செய்வாய்?உனக்கு நஷ்டம் ஆகாதா?நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?''சிறுவன் சொன்னான்,''அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை.நீங்கள் அவ்வாறு அதிகம் எடுத்திருந்தால் எனக்கு நஷ்டம் சில பழங்களே.ஆனால் உங்களுக்கு திருடி என்ற பட்டம் கிடைக்குமே,  அந்த நஷ்டத்தை ஏற்க நீங்கள் தயாரா?''அந்தப் பெண் வாயடைத்து நின்றாள்.

பொன்மொழிகள்-51

1

Posted on : Thursday, April 24, 2014 | By : ஜெயராஜன் | In :

சொர்க்கம் மிகச்சிறியதாகத்தான் இருக்க வேண்டும்.ஏனெனில் அதை என் தாயின் கண்களில் காண்கிறேன்.
******
நல்ல நண்பர்கள் நமக்குக் கிடைத்த பரிசு.
நல்ல பெற்றோர்கள் பரிசாகக் கிடைத்த கடவுள்.
******
உனக்கு உதவ உன் மூளையைப் பயன்படுத்து.
மற்றவர்களுக்கு உதவ உன் இதயத்தைப் பயன்படுத்து.
******
நாம் பெண்களைப் பார்ப்பதே இல்லை.அவர்களை அவர்களின் அழகால் மூடி வைத்திருக்கிறோம்.
******
யாரேனும் பேசிக் கொண்டே இருந்தால் அவர்கள் தங்களது மனதில் இருப்பதை மறைக்கவே முயற்சி செய்கிறார்கள் என்று பொருள்.
******
மற்றவர்களைக் குறை சொல்லும் போக்கு அர்த்தமில்லாதது.
தகுதியும் உழைப்பும் உடையவனை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது.
வெற்றி கிடைக்காவிடில் அதற்கு அவரவர் சொந்தப் பிழையே காரணம்.
******
அடிமைகள் பிறர் சுதந்திரத்திற்காகப் போராடுவதில்லை.
******
மனப்பான்மைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது. நாம் எந்த செயலை செய்கிறோம் என்பதைவிட என்ன மனப்பான்மையுடன் செய்கிறோம் என்பதுதான் முக்கியம்.
******
நிலைமையை சாதகமாக்கிக் கொள்ளத் தெரிந்தால் வெற்றி எண்ணும் சிகரத்தை அடைய கடின உழைப்பு தேவையில்லை.
******
உண்மையை ஒப்புக் கொள்ளாமல் இருப்பதாலோ,ஒப்புக் கொள்ள மறுப்பதாலோ,எந்த நன்மையையும் கிடையாது.சோகமும் விரக்தியும் உங்களை சுற்றி வளைக்கும்.நம்மால் மாற்ற முடியாத எதையும் தாங்கிக் கொள்ளும் சக்தி வேண்டும்.
******
வெற்றியாளர்கள் நாற்காலிகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதில்லை.
ஏதாவது வேலைசெய்வதில்தான் ஓய்வினை அடைகிறார்கள்.
******

மீட்சி

2

Posted on : Wednesday, April 23, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர்.ஒருவன் வருத்தத்தோடு கேட்டான், ''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன்.என் மனம்   அதை நினைத்து தினமும் துடிக்கிறது.நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?''அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்,''நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும் செய்யவில்லை.சின்னச்  சின்னப்  பொய்கள்,சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய செய்துள்ளேன்.தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம் பெரிய பாவங்களா என்ன?''ஞானி சிரித்தார்.முதல் ஆளிடம்,''நீ போய் பெரிய பாறை ஒன்றைத் தூக்கிவா,''என்றார்.இரண்டாமவனிடம்,''நீ போய் இந்த கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கி வா.''என்றார்.இருவரும் அவ்வாறே செய்தனர். முதல்வன் ஒரு பெரிய பாறையைத் தூக்கி வந்தான்.அடுத்தவன் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் கொண்டு வந்தான.இப்போது ஞானி சொன்னார், ''சரி,இருவரும் கொண்டு வந்தவற்றை சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ, அங்கேயே திரும்பப் போட்டுவிட்டு வாருங்கள்,'' என்றார். முதல்வன் பாறையை எடுத்துக் கொண்டுபோய் எடுத்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பினான்.இரண்டாமவன் தயக்கத்துடன்,''இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்?''என்று கேட்டான்.ஞானி சொன்னார்,''முடியாதல்லவா,அவன் பெரிய தவறு செய்தான்.அதற்காக வருந்தி அழுது மன்னிப்புக் கேட்டு அவன் மாற்றுப் பரிகாரம் செய்து அவன் மீட்சி அடையலாம்.நீ சின்னச்  சின்னதாக ஆயிரம் தவறுகள் செய்தும் அவை பாவம் என்று கூட உணராதவன்.யாரெல்லாம் பாதிக்கப் பட்டவர்கள் என்பது கூட உனக்கு நினைவிருக்காது.அவனுக்கு மீட்சி சுலபம்.உனக்குத்தான் மீட்சி என்பது மிகக் கடினம்.''

வாத்தும் குதிரையும்.

1

Posted on : Tuesday, April 22, 2014 | By : ஜெயராஜன் | In :

வாத்து ஒன்று குதிரையைப் பார்த்து சொன்னது,''நான் எல்லா வகையிலும் உன்னைக் காட்டிலும் சிறப்புடையவன்.உன்னைப்போல தரையில் என்னால் நடக்க முடியும்.எனக்கு அழகான இறக்கைகள் இருக்கன்றன.அது கொண்டு வானில் என்னால் பார்க்க முடியும்.என்னால் ஆற்றில் நீந்திக் குளிக்க முடியும்.என்னிடம் ஒரு பறவை,ஒரு மீன்,ஒரு மிருகம் இவற்றின் செயல்பாடுகள் அனைத்தும் உள்ளன.''
குதிரை சொன்னது,''உன்னிடம் மூன்று வித குணாதிசயங்கள் இருப்பதை ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் இந்த மூன்றில் எதிலும் குறிப்பிடத்தக்க அளவில் சிறப்பாக நீ இல்லை.உன்னால் ஒரு கிளி போலப் பறக்க முடியாது.சிறிது தூரம்தான் உன்னால் பறக்க முடியும்.உன்னால் நீரில் நீந்த முடியும்.ஆனால் உன்னால் மீன் போல நீரிலேயே வாழ முடியாது.உன் சப்பை காலுடனும் நீண்ட கழுத்துடனும் நடக்கும்போது எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது என்று உனக்குத் தெரியுமா?எனக்கு நடக்க மட்டும் தான் தெரியும் என்று ஒத்துக் கொள்கிறேன்.ஆனால் என் கம்பீரத்தைப் பார்த்து எத்தனை பேர் பரவசப் படுகிறார்கள்!என் அங்கங்கள் எவ்வளவு கன  கச்சிதமாக அழகாக அமைந்துள்ளன!என்னுடைய வலிமையை நீ அறிவாயா?என் வேகம்பற்றி உனக்கு என்ன தெரியும்?மூன்று விதமாக செயல்படும் உன்னைக் காட்டிலும் ஒரே வகையில் செயல்படும் நான் சிறப்புப் பெற்றிருக்கிறேன்.அதில் எனக்கு மகிழ்ச்சியே!''

விழுந்த பல்

2

Posted on : Monday, April 21, 2014 | By : ஜெயராஜன் | In :

விழுந்து போன பல்லைக் கூட
விழுந்து கும்பிட வேண்டுமென்றால்,
பல் புத்தனுடையதாக இருக்க வேண்டும்.
******
நேற்று என்பது வெட்டி எறிந்த நகம்,
நாளை என்பது வெளுக்கப் போகிற கறுப்பு முடி.
******
ஓடுகிற வரை நீ நதி.
நின்றால் குட்டை!
******
வெந்த சோறே மனிதனுக்கு செறிப்பதில்லை.
குருவியின் குடல்,நெல்லைக் கூட அரைத்து
நீராக்கி விடுகிறது.
******
மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்காக
நீ கவலைப்பட்டால்,
தாயக்கட்டைகளே,
தாண்ட முடியாத மலைகளாகிவிடும்.
உனது அபிப்பிராயங்களுக்காக
மற்றவர்கள் கவலைப்பட்டால்
நிலவே உனக்கு நெற்றிப் போட்டாகும்.
******
உப்பு,செத்தவற்றைப் பாதுகாப்பதற்காக
உபயோகப்படுத்தப்படுகிறது.
அதை உயிரோடிருப்பவர்கள்
சேர்க்கிறோமே ஏன்?
******
பத்துமுறை கீழே விழுந்தவனைப்
பூமி முத்தமிட்டுச் சொன்னது ''நீ
ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா?''என்று.
******
குழந்தைகளை அடிகிறவர்கள்
தண்டனைக்குத் தப்பி விடுகிற கொலைகாரர்கள்.
******
மிருகங்கள் குழந்தைகளை அடிப்பதை
நான் ஒருபோதும் பார்த்ததில்லை.
நீதான் கோழி மிதித்து
குஞ்சு சாவதில்லை என்று
கோழிக்கே சொன்னவன்.
******
கோவில்கள் அதிகமாகி விட்டால்
எங்கே குடியிருப்பது என்ற சங்கடம்
இறைவனுக்கே வந்துவிடும்.
ஆகவேதான் பல இடங்களில்
ஆலயங்கள் இருக்கின்றன.
ஆண்டவன் மாத்திரம் இல்லை.
******
              ---வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் எழுதிய ''எல்லா ராத்திரிகளும் விடிகின்றன''என்ற நூலிலிருந்து.



பணத்தின் கவர்ச்சி.

1

Posted on : Saturday, April 19, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒவ்வொருவரும் பணத்தைப் பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள்.அவர்கள் பரவாயில்லை. இன்னும் சிலர் பேராசை பிடித்தவர்களாக இருக்கிறார்கள்.அவர்கள் அடுத்த உலகத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.நன்னெறியைப் பற்றியும்,அதன் மூலம் சொர்க்கத்தை அடைவதைப் பற்றி சிந்திப்பதும், பணத்தைப் பற்றி சிந்திப்பதற்கு சமமாகத்தான் இருக்கும்.ஒரு மனிதன் நிகழ்  காலத்தில் வாழும்போது மட்டும்தான் பணத்தைப் பற்றியோ அடுத்த உலகத்தைப் பற்றியோ சிந்திக்காமல் இருக்க முடியும்.பணம் என்பது எதிர்காலம்.எதிர்காலத்துக்கான பாதுகாப்பு.அதிகாரத்தின் அடையாளம். அதனால்தான் நீ பணத்தை மேலும் மேலும் சேகரிக்கிராய்.ஆனால் இன்னும் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உன்னை விட்டு ஒருபோதும் அகலாது. ஏனெனில் அதிகார தாகம் முடிவில்லாதது.மக்கள் அதிகாரத்திற்காக ஏங்கித் தவிக்கின்றனர்.ஏன் என்றால் அவர்கள் அவர்களுக்குள்ளே வெற்று மனிதர்களாக இருக்கிறார்கள்.அந்த வெறுமையை எதைக் கொண்டாவது நிரப்பப் பார்க்கின்றனர்.அது பணமாக இருக்கலாம்;அதிகாரமாக இருக்கலாம்; தன்  மதிப்பாக இருக்கலாம்;மற்றோரால் மதிக்கப் படுவதாக இருக்கலாம்; நல்ல குண நலன்களாக இருக்கலாம்.இவ்வுலகில் இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.இருக்கும் வெறுமையை நிரப்ப முயல்பவர்கள் ஒரு வகை.இவர்கள் எப்போதும் ஏமாற்றத்துடனே இருக்கிறார்கள்.அவர்கள் நிரம்ப குப்பையை சேகரிக்கிறார்கள்.அதனால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பயனற்றதாகி விடுகிறது.வெறுமையை அப்படியே காண முயலும் இன்னொரு வகையினர் தியானம் செய்தவர்கள் ஆகிறார்கள்.உன் முன் இருக்கும் கண நேரத்தில் வாழ்ந்து பார்.எதிர்காலத்தை விட்டுவிடு.அப்போது பணம் அதன் கவர்ச்சியை இழந்து விடும்.

பெயர் என்ன?

0

Posted on : Friday, April 18, 2014 | By : ஜெயராஜன் | In :

தேர்வு ஒன்று நடந்து கொண்டிருந்தது.அதில் பல பறவைகளின் கால்களின் படங்களைப் போட்டு பறவையின் பெயர் என்ன என்று கேட்டிருந்தனர்.ஒரு மாணவனுக்குஒரே குழப்பம். எல்லாம் ஒரே மாதிரி தெரிந்தது .அவனால் எந்தக் கால் எந்தப் பறவைக்கு உரியது என்றுகண்டு பிடிக்கவே முடியவில்லை. அவனுக்குக் கோபம் வந்தது.எழுந்தான்.''சே!இதுபோல மோசமான கேள்வித்தாளை நான் பார்த்ததே இல்லை,''என்று சொல்லிக் கொண்டே கேள்வித்தாள்,விடைத்தாள் அனைத்தையும் தூக்கி எறிந்தான்.அங்கிருந்த ஆசிரியருக்கு இவன் ஏன் இப்படி  செய்கிறான் என்று புரியவில்லை. மெதுவாக,''தம்பி,உன் பெயர் என்ன?''என்று கேட்டார்.உடனே அவன் கோபம் சற்றும் குறையாது தனது பேண்டின் கால் பகுதியை மேலே தூக்கிக் காண்பித்து,''நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்,''என்றான்.
******
பாட்டி சொன்னாள்,''தம்பி,உனக்கு ஒரு தம்பிப் பாப்பா பிறந்திருக்கிறான். அவன் அப்படியே உன் அப்பனை உரிச்சு வைச்சது போல இருக்கிறான்,'' சிறுவன் குதூகலத்துடன் கேட்டான்,''அப்படியா?அவனுக்கு இப்போதே மீசையெல்லாம் இருக்கா?''
******

கணவன் தேவை

2

Posted on : Thursday, April 17, 2014 | By : ஜெயராஜன் | In :

கணவர்கள் விற்பனைக்குக் கிடைப்பதாகத் தகவல் அறிந்த ஒரு இளம்பெண் அந்தக் கடைக்கு விரைந்தாள்.அது ஒரு ஐந்து தளக்  கட்டிடம்.ஒவ்வொரு தளமாக மேலே செல்லச்செல்ல கணவர்களின் விலை அதிகம் என்று கூறப்பட்டது.மேலும் மேலே சென்றால் மறுபடியும் கீழ்த் தளத்துக்கு வர முடியாது என்றும் கூறப்பட்டது.முதல் தளத்தில் நுழையும்  இடத்தில் ஒரு பலகையில், ''இங்குள்ளவர்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.அந்தப் பெண் உள்ளே செல்லாது இரண்டாம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பதோடு குழந்தைகளின் மீது பாசமாக இருப்பவர்கள்.''என்று இருந்தது.இளம்பெண் அங்கு உள்ளே செல்லாது அடுத்த தளத்துக்கு விரைந்தாள். அங்கு, ''இங்குள்ளவர்கள்,நல்ல வேலையில் இருக்கிறார்கள்..குழந்தைகளின் மீது அன்பு காட்டுபவர்கள்.மேலும் பார்க்க மிக அழகாக இருப்பார்கள்.''என்று எழுதப்பட்டிருந்தது.ஆர்வமுடன் அப்பெண் நான்காம் தளத்துக்கு சென்றாள்.அங்கு,''இங்குள்ளவர்கள் நல்ல வேளையில் இருப்பவர்கள். குழந்தைகளிடம் அன்பு காட்டுபவர்கள். அழகானவர்கள். மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்பவர்கள்.''என்று இருந்தது.இங்கும் உள்ளே செல்லாது அடுத்த தளத்திற்கு அப்பெண் சென்றாள்.அங்கு,'' வணக்கம்,இங்கு யாருமில்லை.நீங்கள் இத்தளத்திற்கு வருகை தந்த 87,65,432,வது நபர்.பெண்கள் எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள்,என்று உறுதிப்படுத்தியமைக்கு நன்றி.நீங்கள் வெளியே செல்லலாம்.''என்றிருந்தது.

காரிருள்

2

Posted on : Wednesday, April 16, 2014 | By : ஜெயராஜன் | In :

குரு சீடர்களைப் பார்த்துக் கேட்டார்,''இரவு முடிந்து பொழுது புலர்கிறது.அந்த நேரத்தில் எந்த நொடியில் பொழுது புலர்ந்து விட்டது என்பதை அறிவாய்?'' ஒரு சீடன் சொன்னான்,''தொலைவில் நிற்கும் ஒரு மிருகத்தைப் பார்த்து அது குதிரையா,கழுதையா என்று அறிய முடியும்போது விடிந்து விட்டது என்று பொருள்.''குரு தவறான பதில் என்றார்.இன்னொரு சீடன் சொன்னான், ''இங்கிருந்தே தூரத்தில் இருக்கும் ஒரு மரத்தை ஆல  மரமா அரச மரமா என்று சொல்ல முடியும் என்றால் விடிந்து விட்டது என்று அர்த்தம்.''அதற்கும் குரு  மறுப்பாகத் தலை அசைத்தார்.பதில் சொல்லத் தெரியாத சீடர்கள் சரியான விடையைக் கூறும்படி வேண்டினர்.குரு சொன்னார்,''எந்த ஒரு மனிதனைக் கண்டாலும் இவன் எனது சகோதரன் என்றும்,எந்த ஒரு பெண்ணைக் கண்டாலும் இவள் என் சகோதரி என்றும்,எப்போது நீ அறிகிறாயோ, அப்போது தான் உண்மையாகப் பொழுது புலர்ந்து உண்மையான வெளிச்சம் உனக்கு ஏற்பட்டது என்று பொருள்.அதுவரை உச்சி வெயில் கூடக் காரிருளே.''

வருங்காலம்

1

Posted on : Tuesday, April 15, 2014 | By : ஜெயராஜன் | In :

உங்கள் வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எதுவும் நிச்சயமாகக் கூற முடியாது.சொல்லவும் கூடாது.வருங்காலம் என்பது ஒரு திறந்த வெளி.இதை அறிந்து கொள்ளும் மனிதனின் முயற்சி நகைப்புக்குரியது.ஆனால் மனிதன் இதைத்தான் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறான்.,இறந்த காலத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறான்.இது ஒருக்காலும் நடக்காது.நீங்கள் எப்போதும் நிகழ்காலத்துக்கு வருவதில்லை.நடந்து முடிந்ததை  நீங்கள் சீர் செய்ய முடியாது.நடக்கக் கூடியதை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. வருங்காலத்தை உங்கள் அறிவால்  தீர்மானிக்க முடியாது. வருங்காலத்தைப் பற்றி எதுவும் நிலையில்லை.ஆனால் மனிதன் வருங்காலத்தை முன் கூட்டியே தெரிந்து  கொண்டு அதைத் தனக்கு சாதகமாகச் செய்ய முயலுகிறான்.இது முட்டாள்தனம்.நீங்கள் அதை முன்பே அறிந்து கொண்டால் அது வருங்காலமில்லை..அது இறந்த காலமாகி விடுகிறது.
******
கருமித்தனம்,பொறாமை கொண்ட மனம்,வெறுப்பு இவற்றிற்கு 'பகிர்ந்து கொள்ளுதல்'என்பது என்ன என்று தெரியாது.நீங்கள் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை.நீங்கள் யாருக்காவது எதையாவது கொடுத்தால் அதில் சில பேரங்கள் மறைந்திருக்கின்றன.நீங்கள் திரும்ப அவர்கள் ஏதேனும் வெகுமதிகள் கொடுக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள்.எதையும் பதிலுக்கு எதிர்பாராது இருப்பதே பகிர்ந்து கொள்ளுதலின் அர்த்தமாகும்.இன்னும் சொல்லப் போனால் கொடுப்பவன்தான் நன்றியோடு இருக்க வேண்டும்.
******

சந்தோசமா....

0

Posted on : Friday, April 11, 2014 | By : ஜெயராஜன் | In :

கலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கு வானொலியில் பேசஒரு வாய்ப்பு வந்தது.அவரும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.அப்போது வானொலி இயக்குனர் அவரிடம், அவர் பேசக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு,''இதில் ஒரு வரியை மட்டும் நீங்கள் நீக்க வேண்டியிருக்கும்,''என்றார்.கலைவானரும் விபரம் கேட்க நீக்க வேண்டிய  வரியைக் காட்டினார் இயக்குனர்.என்.எஸ்.கே.வாசித்துப் பார்த்தார்.அதில்,''இந்த வருடத்திலே நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க, காமராஜர் சந்தோசமா இருக்காரு!அண்ணா சந்தோசமாக இருக்காரு,''என்று இருந்தது.இயக்குனர் இதில்  அண்ணா பற்றிக் குறிப்பிட்ட வரியை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறினார்.அதற்கான காரணத்தையும் அவர் சொல்ல மறுத்தார்.உடனே என்.எஸ்.கே.முகத்தை குழந்தைத் தனமாக வைத்துக் கொண்டுசொன்னார்,''ஐயா,வேண்டுமானால் இப்போதே அண்ணா வீட்டுக்குப் போன் பண்ணுங்க.அவர் சந்தோசமா இருக்காரா,இல்லையா என்று கேளுங்க.அவரு சந்தோசமா இல்லாம காய்ச்சலில் படுத்திக் கிடந்தார் என்றால் இந்த வரியை  நான் எடுத்து விடுகிறேன்,''கலைவாணர் சொன்ன விதம் அதிகாரியின் மனதை மாற்றியது.இறுதியாக,''நீங்கள் உங்கள் விருப்பப்படியே  பேசுங்கள்,''என்று சொன்னார்.

காசாலேசா...

2

Posted on : Thursday, April 10, 2014 | By : ஜெயராஜன் | In :

வறுமையில் வாடிய புலவர் ஒருவர் செல்வந்தர் ஒருவரைப்  பாடிப்  பரிசு பெற்று வரலாம் என்று அவர் வீட்டிற்கு சென்றார்.அந்த செல்வந்தரோ எச்சில் கையாலும் காக்காய் ஓட்டாதவர்.புலவர் வந்த காரணத்தை சொன்னதும், செல்வந்தர் ஏளனமாக சிரித்துக் கொண்டே,''பாட்டுக்கு காசு வேண்டுமா?காசா லேசா?''என்றார்.புலவருக்கு கோபம் வந்து விட்டது. அவர், ''காசா லேசா, காசாலேசா''என்று கோபமாய் சொல்லிவிட்டு அங்கிருந்து விரைந்து வெளியேறிவிட்டார்.செல்வந்தருக்கும் அங்கிருந்த மற்றோருக்கும் ஒன்றும் புரியவில்லை.செல்வந்தர் காசாலேசா என்றார்.புலவரும் அதையே இரண்டு தடவை சொல்லிச் சென்றதன் பொருள் என்ன என்று புரியாமல் குழம்பினர்.புலவரின் நண்பர்ஒருவர் புலவரின் பின்னாலேயே சென்று அவர் சொன்னதற்கு என்ன பொருள் என்று கேட்டார்.அதற்குப் புலவர்,''அவனுக்கு பாட்டின் மகிமை தெரிவில்லை.காசாலேசா என்கிறான்.அதனால்தான்  நானும் கோபத்துடன் காசாலே சா,காசாலே சா என்றேன்.அதாவது காசாலே செத்துப்போ என்று பொருள்.''என்று விளக்கம் சொன்னார்.இதைக் கேள்விப்பட்ட செல்வந்தர் புலவரின் சாபத்துக்கு அஞ்சி அவரிடம் மன்னிப்புக் கேட்டு பரிசு கொடுத்து அனுப்பினார்.

திகைப்பு

0

Posted on : Wednesday, April 09, 2014 | By : ஜெயராஜன் | In :

''ஆண்டவன் தான் நம் வயிற்றை  நிரப்புகிறான்,''என்று ஆத்திகர் ஒருவர் தனது நாத்திக நண்பரிடம் சொன்னார்.''அதெப்படி,நாம் சாப்பிட்டால்தானே நம் வயிறு நிரம்பும்?''என்று கேட்டநாத்திகர் அதையும் சோதித்துப் பார்த்து விடுவது என்று நினைத்தார்.வீட்டில் மனைவியிடம் நிறைய உணவு தயாரிக்க சொல்லி அதை கட்டிக் கொண்டு ஊருக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்த சாப்பாட்டை திறந்து முன்னால்  வைத்துக் கொண்டு அதைத் தொடாமலேயே அமர்ந்திருந்தார்.நாம் சாப்பிடாமல் இருக்கும்போது ஆண்டவன் வந்து நம் வயிற்றை  நிரப்புகிரானா என்று பார்ப்போம் என்று நினைத்தார்.அப்போது இரண்டு முரடர்கள் அந்தப் பக்கம் வந்து இவனைப் பார்த்தார்கள்.அவர்கள் இருவருக்கும் நல்ல பசி.இவன் உணவை எடுத்து சாப்பிடலாம் என்று அவர்கள் யோசித்தபோது ஒருவன் கேட்டான் ,''இவன் எதுவும் பேசாமல் உணவைத் திறந்து வைத்தபடி இருக்கிறான்.ஒரு வேலை உணவில் விஷம் எதுவும் இருக்குமோ?''இருவரும் சிறிது நேரம் யோசித்து விட்டு உணவை எடுத்து இருவரும் வம்படியாக நாத்திகன் வாயில் ஊட்டி விட்டனர்.நாத்திகனுக்கு வயிறு நிரம்பி விட்டது.மீதி இருந்த உணவை முரடர் இருவரும் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து சென்றனர்.நாத்திகன் திகைப்பில் உட்கார்ந்திருந்தான்.அப்போது அவனது ஆத்திக நண்பர் வந்தார்.அவர்,''நான் நடந்ததைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன்,ஏன் திகைத்துப் போயிருக்கிறாய்?நான் சொன்னது நடந்து விட்டது என்பதால்தானே?''என்று கேட்டார்.அதற்கு நாத்திகன் சொன்னான், ''இல்லை,என் மனைவி தயாரிக்கும் உணவு எனக்கு கொஞ்சம் கூடப் பிடிக்காது.இவர்கள் இருவரும் எப்படி இதை சாப்பிட்டார்கள் என்று எண்ணி திகைத்து நிற்கிறேன்,''

அர்த்தமெல்லாம் வேறுதான்.

0

Posted on : Tuesday, April 08, 2014 | By : ஜெயராஜன் | In :

கல்யாணம் ஆன புதிதில்ஒரு கணவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல்:
கணவன்: உங்க அம்மா வீட்டுக்குப் போறியா?
மனைவி:என்னைப் போகச் சொல்கிறாயா?
கணவன்:ஊஹூம்,அதை நினைத்துக்கூடப் பார்க்காதே.
மனைவி:உனக்கு என் மீது உண்மையான அன்பு இருக்கிறதா?
கணவன்:எப்போதும்.
மனைவி:எப்போதாவது என்னை ஏமாற்றியிருக்கிறாயா?
கணவன்:ஊஹூம்,ஏன் இப்படிக் கேட்கிறாய்?
மனைவி:என்னை முத்தம் இடுவாயா?
கணவன்:வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்.
மனைவி:என்னை அடிப்பாயா?
கணவன்:ஊஹூம்,உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?
மனைவி:நான் உன்னை நம்பலாமா?
கணவன்:ஹூம்.
மனைவி:என் அன்புக் கணவனே!

அது சரி,திருமணமானபின் பல ஆண்டுகள் கழித்தபின் அவர்களுக்கிடையே உரையாடல் எப்படி இருக்கும்?அதற்குத் தனியாக ஒன்றும் தயாரிக்க வேண்டாம்.மேலே கண்ட உரையாடலை கீழிருந்து மேலாகப் படியுங்கள் போதும்.

கன்னாபின்னா..

1

Posted on : Monday, April 07, 2014 | By : ஜெயராஜன் | In :

வறுமையில் வாடிய போதும் சம்பாதிக்க வழி தெரியாத ஒருவனை அவன் மனைவி,''சோழ மகாராஜாவைப் பார்த்து பாடல் ஏதேனும் பாடினால் நிறையப் பரிசு கொடுக்கிறாராம்.சும்மாவே உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே, போய்ப் பாடி  பரிசு வாங்கிவா,''என்றாள் .அவனும் வேறு வழியின்றி ஏதோ ஒரு பாட்டை எழுதி அரசவைக்கு சென்றான்.புதிய புலவர் ஒருவர் வந்திருக்கிறார் என்றெண்ணி மன்னனும் அவனுடைய கவிதையைப் பாட சொன்னார். அவனும்  உடனே தான் எழுதிக் கொண்டு வந்ததைப் பாடினான்.
''மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே!
கூவிறையே!
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி!
மன்னா!தென்னா!
கன்னா! பின்னா!
சோழங்கப் பெருமானே!''
இதைக் கேட்டதும் மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.அவனுக்கு தண்டனை கொடுக்க எத்தனிக்கையில் கம்பர் எழுந்து,''மன்னா,மிகச் சிறந்த இந்தப்  பாடலுக்கு நீங்கள் பரிசு கொடுக்க வேண்டும்,''என்று வேண்டினார்.மன்னனுக்கு ஒன்றும் புரியாது, விளக்கமாக சொல்ல சொன்னார்.கம்பரும் அந்தப் பாட்டிற்கு பொருள் கூறினார்:
மண் உண்ணி மாப்பிள்ளை என்றால் குழந்தையாய் இருந்த போது பசியில் மண்ணை உண்ட சிறந்த பிள்ளையாகியே பெருமாளே என்று பொருள்.
காவிறையே என்றால் தேவலோகத்தில் உள்ள கற்பக சோலைக்குத் தலைவனாகிய இந்திரனே,என்று பொருள்.
கூவிறையே என்றால் உலகுக்குக் கடவுள் போன்றவன் என்று பொருள்.உங்கள் அப்பன் கோ  என்றால் உங்கள் தந்தை யாகிய அரசன் என்றும்,வில் பெருச்சாளி என்றால் வில் போரில் பெரிய ஆளி போன்றவன் என்றும் பொருள்.மன்னா என்றால் மன்னவனே,தென்னா என்றால் தென்னாட்டை உடையவனே என்றும் கன்னா என்றால் கர்ணனைப் போல் கோடையில் சிறந்தவனே என்றும்,பின்னா என்றால் போரில் பின்னிட்டு 
 ஓடா தவனே  என்றும் பொருள்.
மகிழ்ச்சியுற்ற மன்னன் வந்தவனுக்கு நிறைய வெகுமதி கொடுத்து அனுப்பினார்.


நல்ல கேள்விகள்.

2

Posted on : Saturday, April 05, 2014 | By : ஜெயராஜன் | In :

மத போதகர் ஒருவர்,''நல்லவர்களும்,தெய்வநம்பிக்கை உள்ளவர்களும் சொர்க்கத்திற்குப் போவார்கள்,''என்று பிரசங்கம் செய்தார்.ஞானி ஒருவர்,''நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தைத் தருகிறது,''என்றார்.போதகர் விபரம் கேட்க ஞானி கேட்டார்,''ஒருவன் நல்லவனாய் இருக்கிறான். அவனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை.அவன் சொர்க்கம் போவானா, மாட்டானா? ஒருவன் கொலைக்கு அஞ்சாத்  திருடன். அவனுக்கு மிகுந்த தெய்வ நம்பிக்கை உண்டு. அவனுக்கு சொர்க்கமா, நரகமா? ஒரு அப்பாவிக்கு நல்லது கெட்டது தெரியாது.அவனுக்கு தெய்வம் பற்றியும் ஒன்றும் தெரியாது.அவனுக்கு எங்கே இடம்?ஒரு மன்னன் அடுத்த நாட்டின் மீது படையெடுத்து,நாட்டைக் கைப்பற்றி,பெரும் செல்வத்தையும் கைதிகளையும் கொண்டு வருகிறான்.அக்கைதிகளை வைத்து அந்த செல்வம் கொண்டு இறைவனுக்கு பெரிய ஆலயம் எழுப்புகிறான்.அவனுக்கு சொர்க்கம் தானா? அடிமையாக்கப்பட்ட அந்தக் கைதிகளுக்கு நல்லது செய்ய வழியில்லை.  .தொடர்ந்த துயரங்களால் தெய்வத்தையே நிந்திக்கிறார்கள்.அவர்கள் சொர்க்கம் செல்வார்களா,நரகம் செல்வார்களா?''போதகர் பதில் சொல்ல இயலாது தலை குனிந்தார்.அன்றுஇரவு அவருக்கு ஒரு கனவு வந்தது.கனவில் அவர் ஒரு ரதத்தில் செல்கிறார்.ரதம் எங்கே செல்கிறது என்று வினவ அது சொர்க்கம் நோக்கி செல்வதாகப் பதில் வந்தது.புல்  பூண்டு ஒன்றும் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் பாலை போலக் காட்சி அளித்த ஒரு இடத்தில் ரதம் நின்றது இது எந்த இடம் என்று வினவ இதுதான் சொர்க்கம் என்று பதில் ரதம் ஓட்டியவரிடமிருந்து வந்தது.''புத்தர் காந்தி,இயேசு எல்லாம் இங்கு இல்லையா''என்று கேட்க அப்படி யாரும் இங்கில்லை என்று சொல்லப்பட்டது.பின் ரதம் வேறு திசையில் பயணிக்கிறது.இனிய சோலைகள்,  நதிகள், ஆடிப்பாடும் மக்கள் நிறைந்த ஓரிடத்தில் இப்போது ரதம் நின்றது.இந்தஇடம் எது என்று கேட்க,''இதுதான் நரகம்.நீங்கள் கேட்ட புத்தர் இயேசு எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள்.''கனவு கலைந்தது.இப்போது போதகருக்கு தெளிவு ஏற்பட்டது.நல்லவர்கள் எங்கிருக்கிறார்களோ,அந்த இடமே சொர்க்கமாக மாறிவிடும்..

பொன்மொழிகள்-50

1

Posted on : Friday, April 04, 2014 | By : ஜெயராஜன் | In :

புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்தில்லாதது.
******
எது தவறானதோ,அது விரும்பப்படுவதாகவும் இருக்கும்.
******
பொய் சொல்வது கேவலம் அல்ல.அது மனித இயல்பு.
அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம்.
******
ஆயிரம் முறை சிந்தனை செய்யுங்கள்.
ஆனால் ஒரு முறை முடிவெடுங்கள்.
******
வேலை செய்ய வேண்டியது நம் தலைஎழுத்து
என்று வேலை செய்பவன் அடிமை.
வேலை செய்வதுதான் சுகம்
என்று வேலை செய்கிறவன் கலைஞன்.
தேவை இல்லாத வேலைகளை
இழுத்துப் போட்டுக் கொண்டு செய்பவன் முட்டாள்.
******
தூங்குகிறவனை எழுப்புவதற்காகப் பொழுது இருமுறை விடிவதில்லை.
******
எவ்வளவுதான் மறைத்து வைத்திருந்தாலும் எல்லோருடைய நெஞ்சிலும் புகழுக்கான ஆசை எப்போதும் ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கும்.
******
அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.
******
அதிகப் பேச்சு,பொய் இவை இரண்டிற்கும் நெருக்கம் அதிகம்.
******
குழந்தைகள் இல்லையென்றால் உலகம் துன்பம் நிறைந்ததாகி விடும்.
முதியோர் இல்லையென்றால் உலகம் மனித இயல்பற்றதாகி விடும்.
******
விவேகத்திற்குத் தந்தை அனுபவம்.
******
மகிழ்ச்சி,மிதமான உணவு,போதிய ஓய்வு ஆகியவை வைத்தியரை வீட்டுக்குள் விடமாட்டா.
******

தான்தான்...

1

Posted on : Thursday, April 03, 2014 | By : ஜெயராஜன் | In :

இராமச்சந்திரக் கவிராயர் என்று ஒரு புலவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வாழ்ந்தார்.சரியாசனம் புலவர்க்கு மன்னர் அளித்த காலம் போய் ,புலவர்கள் வறுமையில் வாடும் காலம் அது .அவர் ஒரு மாவட்ட ஆட்சியருக்குக் கூட தமிழ் சொல்லிக் கொடுத்தார்.வேறு யாரும் ஆதரிப்பார் இல்லாததால் வறுமையில் வாடினார்.ஒரு நாள் காலையில் அவர் குழந்தைகள் அழுது கொண்டிருந்தன.அவர் மனைவியைப் பார்த்து,''குழந்தைகளுக்கு கஞ்சி ஏதாவது வைத்து பசியாற்று,''என்றார்.அவர் மனைவி,''சமைக்க ஏதுமில்லை.''என்றார்.''நொய்யரிசி கூட இல்லையா?"'என்று புலவர் கேட்க அவர் மனைவி அழுது கொண்டே,''இனி கல்லைத்தான்,மண்ணைத்தான் காய்ச்சிக் கொடுக்க வேண்டும்,''என்றார்.அந்த துயர் நிலையிலும் புலவரின் கவித்துவம் மேலோங்கி நின்றது.அப்போது அவர் பாடிய பாடல்:
''கல்லைத்தான் மண்ணைத்தான் 
காய்ச்சித்தான் குடிக்கத்தான் 
கற்பித்தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் 
எனக்குத்தான் கொடுத்துத்தான் 
இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் 
ஆரைத்தான் நோவத்தான்
ஐயோ!எங்கும் 
பல்லைத்தான் திறக்கத்தான் 
பதுமத்தான் புவியில்தான் 
பண்ணினானே!''
இப்பாடலில் தான் என்ற வார்த்தை பதினெட்டு முறை வந்துள்ளது குறிப்பிடத் தக்கது.

புத்தியின் வகைகள்.

2

Posted on : Wednesday, April 02, 2014 | By : ஜெயராஜன் | In :

1.மண் புத்தி:(மிருத்து புத்தி)
மண் சுவரில் ஆணி அடித்தால் உடனே எடுத்து விடலாம்.அது போல கேட்ட விசயங்களை உடனே விட்டு விடுவான்.
2.மரபுத்தி:(தாருபுத்தி)
ஆனி சுலபமாக இறங்கும்.ஆனால் சுலபமாக எடுக்க முடியாது.அதுபோல கேட்ட நல்ல விசயங்களை வெளியே விடாத புத்தி.
3.கல்புத்தி:(சிலாபுத்தி)
வரிசையாகத் துளையிட்டு முதல் துளையில் உளியால் அடித்தால் கல்  பிளக்கும்.அதுபோல சொன்னால்  முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய புத்தி.
4.மூங்கில் புத்தி:(வேணு புத்தி)
மூங்கில் கணுவின் ஒரு பக்கம் அடித்தால் மறு பக்கம் பிளந்து விடும். அது போல ஒரு விசயத்தைக் கேட்டவுடன் பின் விளைவுகளைப் புரியும்புத்தி.
5.எண்ணெய் புத்தி:(தைலபுத்தி)
தண்ணீரில் ஒருதுளி எண்ணெய் விட்டால் அது எல்லா இடத்திலும் பரவி விடும். ஒரு விஷயத்தை லேசாகச் சொன்னாலும் விபரமாகப் புரிந்து கொள்ளும்  புத்தி.
******
உலகில் ஏழு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
1.பயந்த குணம் உள்ளவர்கள்.
2.சஞ்சலப் படுபவர்கள்.
3.சதா கற்பனையில் மிதந்து எதார்த்தத்தைக் கோட்டை விடுபவர்கள்.
4.தனிமை உணர்வு மிக்கவர்கள்.
5.மற்றவர்களின் செல்வாக்குக்கோ,சொல்லுக்கோ உடன் படமறுப்பவர்கள்.
6.எதிலும் பற்றற்றவர்கள்.
7.மற்றவர்களின் கவலைகளைத் தம் கவலைகளாக எடுத்தப் போட்டுக் கொண்டு செயல் ஆற்றுபவர்கள்.
******

நான் இங்கே...

2

Posted on : Monday, March 31, 2014 | By : ஜெயராஜன் | In :

ஏழை பக்தன் ஒருவன் தனது வாழ்நாளில் ஒருமுறையேனும் திருப்பதி சென்று வர வேண்டும் என்று ஆசைப்பட்டான்.அதற்காக தனது வருவாயில் மிகச்சிறிய பகுதியை   சேமித்து வைத்தான்.ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் திருப்பதி சென்றான்.கையில் குறைந்த அளவே பணம் இருந்ததால், பேருந்தில் மலைக்கு செல்லஇயலாது,நடந்து மலைமீது கோவிலை அடைந்தான். பசியினால் மிகுந்த களைப்புடன் இருந்தான்.இருந்தாலும் கடவுளை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலில் தர்ம தரிசனத்திற்கான வரிசையில் நின்றான். வரிசை மெதுவாக நகர்ந்தது.அதே சமயம் பணம் படைத்தவர்களும்,அதிகாரம் படைத்தவர்களும்,தனி வழியில் விரைவாக சென்று ஆண்டவனை மகிழ்ச்சியுடன் தரிசித்துக் கொண்டிருந்தனர்.தான் நின்று கொண்டிருந்த நீண்ட வரிசையைப் பார்த்து எப்போது ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் நமக்குக் கிடைக்குமோ என்ற கவலையுடன் இருந்தான்.நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. அவனை அறியாமல் மிகுந்த களைப்பினால் வரிசையிலேயே படுத்து தூங்கி விட்டான்.அப்போது அவன் கனவில் கடவுள் வந்தார்.அவரைப் பார்த்ததும் பக்தனுக்கு கோபம் வந்து விட்டது. அவன், ''கடவுளே!எத்தனை நாளாக சிரமப்பட்டு உன்னை தரிசிக்க வந்திருக்கிறேன் .இங்கு வந்தால் உன்னை தரிசிக்க எவ்வளவு சிரமங்கள்?என்ன இருந்தாலும் நீயும் பணக்காரர்களைத் தானே ஆதரிக்கிறாய்!அதோ பார்,அவர்கள் எல்லாம் எவ்வளவு விரைவில் உன்னை மகிழ்ச்சியுடன் வணங்கி செல்கிறார்கள்? பசியுடன் காத்திருக்கும் என் நிலையைப் பார்'' என்றான்.கடவுள் சிரித்துக் கொண்டே சொன்னார்,'' அடே,பைத்தியக்காரா,அவர்கள் எல்லாம் கல்லை வணங்கிச் செல்கிறார்கள்.இதோ,நான் உன்னுடன் தானே பேசிக் கொண்டிருக்கிறேன்!''

தேவை என்ன?

1

Posted on : Saturday, March 29, 2014 | By : ஜெயராஜன் | In :

இந்தியாவை வென்ற அலெக்சாண்டர் தன் குருவின்ஆணைப்படிஞானி ஒருவரைப் பார்க்க வந்தார்."'யார்"என்று ஞானி கேட்க ''இந்தியா  முழுவதையும் வென்று  வந்த அலெக்சாண்டர் ,''என்றார்.ஞானி சிரித்துக் கொண்டே தனது மான் தோலை அவரிடம் கொடுத்து அமர சொன்னார்.மான் தோலை விரித்து  அமர்ந்த அவரை,''எழுந்திரு,''என்றார் ஞானி.அவர் எழுந்தவுடன் மான் தோல் மீண்டும் சுருண்டு கொண்டது.ஞானி,''பார்த்தாயா?நீ விரித்து அமர்ந்தாய்.நீ எழுந்தவுடன் அது சுருண்டு கொண்டது.நீ படையுடன் வந்தாய்.நாடுகள் உனக்குப் பணிந்தன.நீ இங்கிருந்து போனதும் அவை பழையபடி நிமிர்ந்து விடும்.''என்றார்.அலெக்சாண்டர் ஞானியைப் புதிராகப் பார்த்தார்.ஞானி அன்புடன் கூறினார்,''அலெக்சாண்டர்,நதி பிரவாகமாகப் பெருகி ஓடும்.ஆனால் அதில் உனக்குத் தேவை ஒரு சிறிய அளவுதான்.கை நிறைய அள்ளிக்குடி.அதில் தவறில்லை.ஆனால் ஒட்டு மொத்த நதியும் உனது என்று சொந்தம் கொண்டாடாதே.பாத்திரம் நிறைய நீரை ஊற்றலாம்.நிரம்பிய பின்னும் ஊற்றிக் கொண்டிருந்தால்  நீர் வீணே கீழே வழிந்துதான் ஓடும். களஞ்சியம் முழுவதும் நெல் இருந்தாலும் நீ உண்ணப்போவது ஒரு பிடி தான். அரண்மனை முழுவதும் ஆடைகள் இருப்பினும் நீ அணியப் போவது ஒரு ஆடையைத்தான்.உலகம் முழுவதும் உன் வசம் இருந்தாலும் கடைசியில் நீ உறங்கப் போவது ஆறடியில்தான்.உன் கஜானா முழுவதும் தங்கம் நிரம்பி இருந்தாலும் அது உனைக் காப்பதில்லை.நீதான் அதைக் காக்கின்றாய்.''

அடக்குதல்

1

Posted on : Friday, March 28, 2014 | By : ஜெயராஜன் | In :

நீங்கள் உங்கள் பேராசையை சரியாகப் புரிந்து கொண்டால் மட்டுமே நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைய முடியும்.அதைத் துறக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.சரியாகப் புரிந்து கொள்ளாத போதுதான் துறவு எண்ணம் வருகிறது.
சில பேர் பணத்துக்கு எதிராக இருக்கிறார்கள்.சிலர் பணத்தைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.ஒருவன் அதைக் கண்டு அஞ்சுகிறான்.ஒருவன் பேராசை கொள்கிறான்.இருவருமே பணத்தினால் ஆக்கிரமிக்கப் படுகிறார்கள்.மிகுந்த ஈடுபாட்டினை முதலில் தவிர்க்கவும். அதைப்போல துறவு எண்ணத்திலும் ஜாக்கிரதையாக இருந்து தவிர்க்க வேண்டும்.இரண்டுமே எலிப்பொறி போலத்தான்.மிக்க ஈடுபாடும் அடக்குதலும்  இயந்திரத்தனமானது.
நீங்கள் பேராசை,பாலுணர்வு,கோபம்,பொறாமை....இவைகளுக்குள் உங்கள் மனதைத் திறந்து கொண்டு பயமில்லாமல் ஆழமாகச் சென்றால் நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைகிறீர்கள்.உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கிறது.அறிந்து கொள்ளுதல் உங்களை விடுவிக்கிறது.மாறாக நீங்கள் அதை அடக்கினாலும்,இயந்திரத்தனமாக மிகவும்  ஈடுபட்டாலும்,முடிவு ஒன்றுதான்.
முதலில் நீங்கள் உங்கள் உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள்.உங்கள் உடலின் குரலுக்கு மதிப்பு கொடுங்கள்.பிறகு மனதின் குரலைக் கேட்டு அதனைப் பூர்த்தி செய்யுங்கள்.எதையும் தவிர்க்காதீர்கள்.அவற்றின் தேவைகளில் ஆழமாக செல்லுங்கள்.அன்புடன் கூர்ந்து கவனியுங்கள்.உங்கள் உடலோடும் மனதோடும் நட்பாக இருங்கள்.அப்போதுதான் ஒரு நாள்  அவற்றைக் கடந்து செல்ல முடியும்.

பொன்மொழிகள்-49

2

Posted on : Tuesday, March 25, 2014 | By : ஜெயராஜன் | In :

ஓடும்போது விழுந்து விடுவோம் என்று நினைப்பவனை விட.விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் வெற்றி பெறுவான்.
******
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட,தோல்வி அடைந்தது எப்படி என்று யோசித்துப்பார்.நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.
******
பணம் என்ற ஒன்று நுழையாத வரை
எல்லா உறவுகளும் மேன்மையாகத்தான் இருக்கின்றன.
******
மனிதனின் அத்தனை கோர முகங்களையும்
அறிந்த உயிரற்ற பொருள்-பணம்.
******
குழந்தை பிறந்த முதல் ஆண்டு,அது பேசவும்,நடக்கவும் கற்பிக்கிறோம்.
அடுத்த ஓர் ஆண்டு அது ஒரே இடத்தில் இருக்கவும்,வாயைப் பொத்தவும் கத்துகிறோம்.
******
நாம் யாராலோ நிராகரிக்கப் படும்போதுதான்,நம்மால் நிராகரிக்கப்பட்டவரின் வலியை உணர முடிகிறது.
******
அனுபவம் ஒரு ஜன்னல்;அதன் மூலம் தெருவைப் பார்க்கலாம்.ஜன்னலே தெருவாகி விடக்கூடாது.
******
பொதுக் காரியங்களில் நாம் சில சமயம் நம் அறிவை மட்டுமல்ல,பகுத்தறிவையும் இழக்கத்  தயாராகி விடுகிறோம்.
******
நம்பிக்கையின் கை உடையும்போது
சந்தேகம் காலூன்றத் தொடங்குகிறது.
******
இயல்பாய் ஏற்படும் மாற்றம்,சுகம்.
வலிய ஏற்படுத்திக் கொள்ளும்  மாற்றம்,சுமை.
******

அடுத்தவர் கருத்து.

1

Posted on : Monday, March 24, 2014 | By : ஜெயராஜன் | In :

நான் ஏன் அடுத்தவரது கருத்துக்களைக் கண்டு பயப்படுகிறேன்?
ஏன் என்றால் நீங்கள் நீங்களாக இல்லை.நீங்கள் மற்றவர்களது அபிப்பிராயங்களைத் தாங்கும் தூணாக இருக்கிறீர்கள்.நீங்கள்,மற்றவரது அபிப்பிராயத்தைத் தவிர வேறு இல்லை.நீங்கள்  அழகானவர் என்று  மற்றவர் சொன்னால் ,நீங்கள் அழகாக இருப்பதாக நினைக்கிறீர்கள்.அவலட்சணமாக இருப்பதாகப் பிறர் சொன்னால்,அப்படி இருப்பதாகவே கருதுகிறீர்கள். இவ்வாறு மற்றவர் கூறும் அபிப்பிராயங்களை சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.ஒருவர் நீங்கள் அழகானவர்  என்று சொல்ல,அடுத்தவர் நீங்கள் அருவருப்பானவர் என்று சொன்னால் ,நீங்கள் பின்னவர் சொன்னதை மறக்க நினைக்கிறீர்கள்.ஆனால் அதை உங்களால் மறக்க முடியாது.இரண்டு கருத்துக்களும் உங்கள் உள்ளேதான் ஆழமாக இருக்கும்.இப்போது நீங்கள் இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கிறீர்கள்.அதாவது,நீங்கள் பல பொருட்களின் கலவையாக இருக்கிறீர்கள்.நீங்கள் உங்கள் ஆன்மாவை அடையவில்லை.உங்களுக்கென்று எந்த தனித் தன்மையும் இல்லை.நீங்கள் வெறும் அடுத்தவரது குப்பைதான்.ஆகவே நீங்கள் எப்போதும் பயத்தில் இருக்கிறீர்கள்.ஏனெனில் அடுத்தவரது கருத்துக்கள் மாறினால்,நீங்களும் மாற வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்.நீங்கள் அடுத்தவரின் பிடியில் இருக்கிறீர்கள்.
முதலில் தைரியமாக உங்களை சார்ந்து இருங்கள்.அப்போது உங்களைத்தவிர வேறு யாரும் நல்லவனாகவோ,கெட்டவனாகவோ மாற்ற இயலாது.பொய்யான பிறர் அபிப்பிராயத்துக்கும்,நீங்கள் கனவுலகில் சஞ்சரிப்பதற்கும் எவ்வித வித்தியாசமும் கிடையாது.ஒருவன் உங்களைப் புகழும்போது,அவன் சக்தி மிக்கவனாகத் தெரிகிறான்.அவனுடைய புகழ்ச்சியை நீங்கள் ஏற்றுக் கொண்டால்,நீங்கள்தான் அவனுக்கு இரையானவன்.இப்போது அவன் உங்களைத் தனது பிடியில் வைத்துக் கொள்ளலாம்.அவன் உங்கள் குருவாகவும்,நீங்கள் அவன் அடிமையாகவும் இருப்பீர்கள்.

நம்பிக்கை

1

Posted on : Saturday, March 22, 2014 | By : ஜெயராஜன் | In :

துறவி ஒருவர் தினமும் யாருக்காவது உணவு அளித்துவிட்டுத்தான் உணவு அருந்துவார்.ஒருநாள் யாருமே வரவில்லை.சற்று தூரம் நடந்து சென்று வந்தால், யாராவது தென்படுவார்கள் என்று கருதி  நடந்தார்.அப்போது ஒருவர் எதிர்ப்படவே அவரை சாப்பிட அழைத்து வந்தார்.உணவு அருந்தும் முன் அவர்  பிரார்த்தனையில் அமர்ந்தார்.வந்தவர் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவர் ஏன் பிரார்த்தனை செய்யவில்லை என்று கேட்டபோது அவர் ,''நான் தீவிர நாத்திகன். எனக்கு இந்த மாதிரி மூடத்தனங்களில் நம்பிக்கை இல்லை,'' என்றார்.துறவிக்குக் கோபம் வந்துவிட்டது.''உனக்கு உணவு அளிக்க முடியாது.வெளியே போ'' என்றார்.வந்தவர் ,''நானாக ஒன்றும் உணவு கேட்டு வரவில்லை.நீங்களே அழைத்து வந்துவிட்டு இப்போது வெளியே போகச் சொல்கிறீர்கள்.ஆனால் உணவுக்காக என் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது.''என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.துறவியும் உணவு உண்ணாது பாதி  மயக்கத்தில் படுத்து உறங்கினார்.அப்போது கனவில் இறைவன் வந்தார்.அவர் ,''அவன் என் மீது நம்பிக்கை இல்லாதவன்.ஆனால் இத்தனை ஆண்டுகளாக அவனுக்கு நான் விடாது உணவு அளித்து வந்தேன்.ஒரே ஒரு நாள் உன்னிடம் அனுப்பியதில்,நீ அவனை பட்டினியாய் 
அனுப்பி விட்டாயே? இப்போது நான் அவனுக்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்,'' என்றார்.
அலறி அடித்துக் கொண்டு எழுந்த துறவி வேகமாக சென்று அந்த நாத்திகனை சாப்பிட அழைத்தார்.திடீர் மாற்றத்திற்கு அவன் காரணம் கேட்டபோது துறவி சொன்னார்,''ஒரு ஆத்திகன் கடவுள் இருக்கிறார் என்று சொல்லத் தைரியம் தேவையில்லை.ஆனால் ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லத்தான் மிகுந்த மன உறுதியும் வைராக்கியமும் தேவை.எனவே நீங்கள் என்னை விட உயர்ந்தவர்.உங்களுக்கு உணவு அளிப்பது எனக்கு பெருமை தரும் செயலாகும்.''

ஏடாகூடம்

2

Posted on : Friday, March 21, 2014 | By : ஜெயராஜன் | In :

புகழ்பெற்ற ஜென் குரு  ஒருவரைத் திரளாக மக்கள் வந்து தரிசித்து அவர் கருத்துக்களைக் கேட்பது வழக்கம்.அவர் இருந்த ஊரில் ஒரு இசைக் கலைஞன் இருந்தான்.மிகத் திறமைசாலி.அதே சமயம் அவனிடம் எல்லாவித கெட்ட பழக்கங்களும் இருந்தன.குருவிடம் வந்த ஒருவர் அந்தக் கலைஞனைப்   பற்றி மிகக் கேவலமாகப் பேசினார். உடனே குரு,''அவன் சிறப்பாக இசை வாசிப்பானே!நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே!'' என்று புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.உடனே அங்கிருந்த இன்னொருவர், ''ஆமாம்,அவன் இசைக்க ஆரம்பித்தால் அந்தக் கடவுளே வந்த மாதிரி இருக்கும்.சங்கீதமே அவனுக்கு அடிமையாக இருக்குமே,''என்று குருவின் கருத்தை ஒத்துப்  பேசினார்.அப்போது குரு,''''அப்படியா,அவன் ஒரு ஏமாற்றுக்காரன் ஆயிற்றே!அவனை யாரும் நம்ப முடியாதே,''என்றார்.குறை சொன்னவர்,புகழ்ந்தவர் இருவருக்கும் குழப்பம்.குரு இப்படி ஏடாகூடமாகப் பேசுகிறாரே,அவனைப் பற்றி அவர் உண்மையில் என்னதான் நினைக்கிறார் என்று அறிந்துகொள்ள விரும்பி அவரையே கேட்டனர்.
குரு சொன்னார்,''நான் அவனைப் புகழவும் இல்லை,இகழவும் இல்லை.எந்த மனிதனையும் எடை போட நாம் யார்?ஒருவனை நல்லவன் என்றோ,தீயவன் என்றோ கூற உங்களிடமோ,என்னிடமோ என்ன அளவுகோல் உள்ளது? எதையும் ஒப்புக் கொள்வதோ,மறுப்பதோ என் வேலை அல்ல.அவன் நல்லவனும் இல்லை,கெட்டவனும் இல்லை.அவன் அவனாகவே இருக்கிறான்.அவன் அவனே!அவன் செயலை அவன் செய்கிறான்.உங்கள் செயல் எதுவோ அதை நீங்கள் செய்யுங்கள்,''

பயன்

2

Posted on : Thursday, March 20, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு குறிப்பிட்டநோக்கத்திற்காக செய்யப்படும் காரியங்கள் அந்த நோக்கம் நிறைவேறிய பின் பயன் அற்றவை ஆகி விடுகின்றன. முட்டையின் ஓடு கடினமானது.உள்ளிருக்கும் மஞ்சள் கருவையும்,வெண் கருவையும் அது பாதுகாக்கிறது.உள்ளே குஞ்சு வளர்ச்சி அடைந்த உடன் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியே வருகின்றது.அதன் பின் அந்த ஓட்டினால் எந்தப் பயனும் இல்லை.ஏனெனில் ஓட்டின் நோக்கம் நிறைவேறிவிட்டது.ஒரு செடியில் விதை முளைத்து வரும்போது முளையின் இரு புறமும் பருப்புகள் இருக்கும்.செடி வளரத் தேவையான சத்துக்கள் அம்முளையில் அடங்கியிருக்கிறது.செடி வளர வளர பருப்புகள் இற்றுப்போய் விடும்.அதன் பயன் முடிந்துவிட்டது.
சூரியனும் சந்திரனும் ஒளியை வீசி உலகுக்கே பயன் தருகின்றன.ஆனால் அவை எந்த நோக்கத்துடனும் செயல் படுவதில்லை.அதனாலேயே அவை நிலைத்து நிற்கின்றன.நோக்கம் எதுவும் இல்லாத உண்மையான நட்பு எந்த சூழ்நிலையிலும் நிலைத்து நிற்கும்.தாய் குழந்தையின் மீது செலுத்தும் அன்பிற்கு நோக்கம் எதுவும் கிடையாது.அதனால்தான் உயிருள்ளவரை அந்த அன்பு நிலைத்திருக்கிறது.கடவுள் எந்த நோக்கத்துடன் உலகைப் படைத்தார்.ஒரு நோக்கமும் கிடையாது.அது ஒரு விளையாட்டு.அதனால் தான் அதனை லீலை என்கிறார்கள்.
ஞானிகளுக்கு வாழ்வே ஒரு விளையாட்டு.அவர்கள் எந்த நோக்கமும் கொள்வதில்லை.எந்த வித பயனும் எதிர்பார்ப்பதில்லை.

பலி

1

Posted on : Wednesday, March 19, 2014 | By : ஜெயராஜன் | In :

குயவன் ஒருவன் மண் பாண்டங்கள் செய்து கொண்டிருந்தான்.அவன் வீட்டு வாசலில் ஒரு ஆடு கட்டப்பட்டிருந்தது.அந்த வழியே துறவி ஒருவர் வந்தார்.துறவியை வணங்கி அந்தக் குயவன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான்.பின் அவர் விடை பெறும்போது குயவன் சொன்னான், ''ஐயா,தயவு செய்து இரண்டு நாட்கள் இங்கே தங்கிச் செல்லுங்கள்.இங்கு நாளை எங்கள்  குல  தெய்வத்தினை வணங்குகிறோம்.விழா சிறப்பாக இருக்கும்.விழாவில் வாசலில் கட்டப்பட்டிருக்கும் ஆட்டினை பலி  கொடுத்து பூஜை செய்யப் போகிறோம்.''துறவி சற்றும் எதிர்பாராத நிலையில்.குயவனின் பானை ஒன்றினை எடுத்து ஓங்கித் தரையில் அடித்து உடைத்தார்.பானை துண்டு துண்டாகச் சிதறியது.குயவன் அதிர்ச்சி அடைந்தான்.அவனால் பேசக் கூட முடியவில்லை.துறவிக்குப் பைத்தியம்பிடித்திருக்குமோ என்று அஞ்சினான். துறவி அவனைப் பார்த்து,''இந்த உடைந்த துண்டுகளை எடுத்துக் கொள்.அவை எல்லாம் உனக்குத்தான்.''என்றார்.குயவன்,''என் பானையை உடைத்து எனக்கே தருகிறீர்களா?''என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி,''கடவுள் படைத்த ஒரு உயிரைப் பலியிட்டு கடவுளுக்கே கொடுக்கப் போகிறேன் என்கிறாயே! அதை அவர் ஏற்றுக் கொள்வார் என்றால்.இந்த உடைந்த துண்டுகளை நீ ஏன் ஏற்றுக் கொள்ளக்கூடாது?''என்று கேட்டார்.குயவன் பேச வழியின்றி வாயடைத்து நின்றான்.

கோழியா,முட்டையா?

1

Posted on : Tuesday, March 18, 2014 | By : ஜெயராஜன் | In :

''கோழி முதலில் வந்ததா,முட்டை முதலில் வந்ததா?''
'கோழிதான் முதலில்வந்தது.'
''எப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய்?''
'முட்டையிலிருந்து கோழியும் வரலாம்,சேவலும் வரலாம்.ஆனால் கோழியிலிருந்து முட்டை மட்டும் தானே வரும்!'
******
வயதான கணவன் மனைவி ஒரு உணவு விடுதிக்கு வந்தனர்.அவர்கள் உட்கார்ந்த இடத்திற்கு அருகில் வாலிபர் ஒருவர் இருந்தார்.பேச்சு வாக்கில் அந்த தம்பதியினர் சொன்னார்கள்,''நாங்கள் எது செய்தாலும் எங்களுக்குள் பகிர்ந்து கொள்வோம்.'' பின் ஒரு தோசைக்கு கணவர் ஆர்டர் செய்தார்.அதை அவர் மட்டுமே சாப்பிட,அந்தப்பெண் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தார். அருகில் இருந்தவர் மன வருத்தத்துடன்,''நான் வேண்டுமானால் அம்மாவுக்கு ஒரு தோசை ஆர்டர் செய்யட்டுமா?''என்று கேட்க அந்தப் பெண் அவசரமாக மறுத்தார்.''நீங்கள் சாப்பிடாமல் இருக்கிறீர்களே?"'என்று கேட்க அந்தப் பெண் சொன்னார்,''வேறு ஒன்றுமில்லை.பல் செட்டையும் நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்வோம். அதற்காகத் தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.''
******
இளைஞன் ஒருவன் திருமணம்  செய்து கொள்ளாது,தனது வருமானத்தை எல்லாம் மது,மாது,சிகரெட் என்று செலவழித்துக் கொண்டிருந்தான்.நண்பன் ஒருவன் சொன்னான்,''நீ திருமணம் செய்து கொள்.வயதான காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்கவாவது ஒரு ஆள் வேண்டுமே!''இளைஞனும் அது சரி எனத் தோன்றவே திருமணம் செய்து கொண்டான்.வயதான காலத்தில் மரணப் படுக்கையில் அவன் தன் நண்பனிடம் சொன்னான்.நீ சொன்னாய் என்று திருமணம் செய்தேன்.மங்கைக்கு செலவழித்ததை என் மனைவிக்கு செலவு செய்தேன்.மதுவுக்கு செலவழித்ததை குழந்தை வளர செலவு செய்தேன்.சிகரெட் செலவை அவர்கள் நலத்துக்கு செலவளித்தேன்.'' நண்பன்,''அதனால் என்ன எல்லோரும் நன்றாகத்தானே இருக்கிறீர்கள்?''என்று கேட்க அவன் சொன்னான்,''எல்லாம் சரி,எனக்கு  இப்போது தாகம் எடுக்கவில்லையே!''
******

சொற்கள்

1

Posted on : Saturday, March 15, 2014 | By : ஜெயராஜன் | In :

சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை.அவைதான் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன.நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத் தொடங்குகிறோம்.அதைச் சொல்லி விட்டதாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம்.பெரும்பாலான பகைகளும் சினங்களும் சொல்லை விட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.'ஆன்மா குடியிருக்கும் வீட்டில் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை தான்'என்று நாக்கை சுக்ர ஸ்மிரிதி வகுக்கிறது.நாக்கு நம் நலன்களைப் பேணத் தெரியாத பேதை.
சொற்களை அடுத்து எழுத்து.ஓலை  எத்தனை மிதமாக எழுதப் பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதாலேயே ஒரு உறுதியைக் கொண்டிருக்கிறது.அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது.வாசிப்பவரின் மனமே அந்த சொற்களுக்குப் பொருள் அளிக்கிறது.எழுதுபவரின் மனம் அல்ல.ஒருவர் வன் குரலில் வாசித்துக் காட்டி அறைகூவலாக ஒலிக்கச் செய்ய முடியும்.
ஆகவே எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும்,உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.கேட்பவரின் முகத்தையும்,சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியை சொல்ல வேண்டும்.கேட்பவன் உருவாக்கும் எதிர் வினைகளுக்கேற்ப தணிந்தும்,நயந்தும்,தேவை என்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.அதன் பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்த ஓலையை அளிக்கலாம்.
                     --ஜெயமோகன் எழுதிவரும் 'வெண் முரசு 'என்னும்  நூலிலிருந்து.

ஞானி அமைச்சர்

2

Posted on : Thursday, March 13, 2014 | By : ஜெயராஜன் | In :

சீன தத்துவ ஞானி லா வோ த்சுவினால் கவரப்பட்ட அந்த நாட்டு மன்னன் அவரை அமைச்சரவையில் மகாமந்திரியாக நியமித்தால் தனது நாடு சிறப்படையும் என்று கருதினான்.அருகில் இருந்த ஒரு அமைச்சர், ''மன்னா,ஞானிகளை வணங்கலாம்.அன்றாட வாழ்க்கையில் அவர்களை இணைத்துக் கொள்வது சரியாக வராது,''என்றார்.அதைப் பொருட்படுத்தாத மன்னன் ஞானியிடன் சென்று தலைமை அமைச்சர் பொறுப்பேற்குமாறு வேண்டினான்.ஞானி சொன்னார்,''ஆட்சி பற்றிய உனது கண்ணோட்டம் வேறு,எனது கருத்துக்கள் வேறு.அதனால் உன் முடிவு சரி வராது,'' என்றார். மன்னன் மீண்டும் வலியுறுத்தவே ஞானியும் தலைமை அமைச்சராகப் பொறுபேற்றார்.முதல் நாளே ஒரு வழக்கு விசாரணைக்கு ஞானியிடம் வந்தது.திருடன் ஒருவன் அவ்வூரில் புகழ்பெற்ற ஒரு பணக்காரனின் வீட்டில் திருடும் போது கையும் களவுமாகப் பிடிபட்டு விசாரணைக்கு நிறுத்தப் பட்டிருந்தான்.விசாரணையில் திருடனும் தான் செய்த திருட்டை ஒப்புக் கொண்டான்.ஞானி,''திருடியவனுக்கும்,திருட்டுக் கொடுத்தவனுக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை ''என்று தீர்ப்பளித்தார்.மன்னர் உட்பட அனைவரும் இத்தீர்ப்பு கேட்டு திடுக்கிட்டனர்.தான் செய்த தவறு என்ன என்று பணக்காரன் கேட்டதற்கு,''அவன் வறுமை காரணமாகத் திருடினான்.மற்றவர்களின் உழைப்பைத் திருடி,திறமை,சாமர்த்தியம் என்ற பெயரில் பணத்தைக் குவித்து அவனைத் திருடும் படி நீ தூண்டினாய்..நியாயமாய் உனக்கு அதிகதனடனை கொடுத்திருக்க வேண்டும்,''என்றார் ஞானி.தண்டனை பெற்றவன் மன்னரை சந்தித்து,''மன்னா,இவனை அமைச்சராய் வைத்திருக்காதீர்கள்.இன்று எனக்கு ஏற்பட்ட நிலை,நாளை உங்களுக்கும் ஏற்படலாம்.உங்கள் கஜானாவில் உள்ள சொத்துக்கள் ஏழைகளிடம் சுரண்டப்பட்டது என்று கூறு உங்களையும் சிறையில் அடைக்கலாம்.''என்றான்.குழப்பம் அடைந்த மன்னன் ஞானியிடமிருந்த பதவியை பறித்தான்.
குற்றம் நடைபெறக் காரணமான சூழ்நிலைகளை மாற்ற நடவடிக்கை எடுக்காமல் தண்டனைகள் அளிப்பதன் மூலம் குற்றவாளிகள் உருவாவதைத் தடுக்க முடியாது. மேலும் தந்திரமான குற்றவாளிகள் உருவாகும் சூழ்நிலை தான்  ஏற்படும்.

பொன்மொழிகள்-48

1

Posted on : Monday, March 10, 2014 | By : ஜெயராஜன் | In :

மகிழ்ச்சி என்பது பிரச்சினை ஏதும் இல்லாத நிலை அல்ல.
அப்பிரச்சினையை எதிர்கொள்ளும் திறமைதான்.
******
வாழ்க்கையில் பயப்பட வேண்டிய விஷயம் ஏதுமில்லை.
புரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் தான் இருக்கின்றன.
******
முதல் முயற்சியில் தோல்வி அடையும் போது பயப்படாதே.
வெற்றிகரமான கணிதமே பூஜ்யத்தில்தான் ஆரம்பிக்கிறது.
******
உணர்வு என்பது ஒரு சித்திரம்-அதைக் கெடுத்து விடாதே.
முகம் ஒரு புத்தகம்.-அதைப் படி.
வாழ்க்கை விலை மதிப்பில்லாதது.-அதை இழந்து விடாதே.
நட்பு என்பதுஒரு கண்ணாடி.-அதை உடைத்து விடாதே.
******
கோவிலுக்குப் போவதால் மட்டும் ஒருவன் ஆன்மீகவாதி ஆகி விட முடியாது.
ஒர்க்சாப்பிற்குப் போவதால் மட்டும் ஒருவன் மெக்கானிக்காக முடியுமா?
******
 கண்ணீர் சொறிவதற்காகக் கண்கள்  படைக்கப் படவில்லை.
அச்சப்படுவதற்காக இதயம் படைக்கப் படவில்லை.
சோர்வு கொள்ளாதே,எப்போதும் உற்சாகத்துடன் இரு.
கண்ணீர் சிந்துபவர்முகத்தில் புன்னகை வரவழைக்க உன்னால்தான் முடியும்.
******
கடின உழைப்பு என்பது படிக்கட்டுகள்.
அதிர்ஷ்டம் என்பது லிப்ட் .
லிப்ட் சில சமயங்களில் வேலை செய்யாமல் போகலாம்.
ஆனால் படிக்கட்டு நீ மேலே செல்ல எப்போதும் உதவும்.
******
வன்முறை துளியுமில்லா மனிதனின் அண்மை மிருகங்களைக்கூட ஆனந்தம் அடையச்  செய்யும்.
******
பழிச் சொல்லில் வாழ்வதே வீரனின் மீளா நரகம்.
******
உலகின் மீது வன்மம் கொண்டவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களையே வதைப்பார்கள்.
******

என்ன செய்ய?

1

Posted on : Saturday, March 08, 2014 | By : ஜெயராஜன் | In :

பிறர் ஒவ்வொருவரும்,'இதைச் செய்கிறார்கள்,அதைச் செய்கிறார்கள்,இதை சாதிக்கிறார்கள்',நீ மட்டும் எப்படி நின்று விடுவது?போய்க்கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கிறது.இன்னும் அதிக தூரம்,அதிக வேகத்தில்,இன்னும் அதிக கம்பீரத்தோடு,இன்னும் அதிக எழுச்சியோடு என்று போய்க்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.ஆனால் எங்கே போய்க் கொண்டிருக்கிறாய் என்பது மட்டும் தெரியவில்லை.எது சேரும் இடம் என்பது மட்டும் தெரிவதில்லை.எதை சாதிக்க வேண்டும்?பணமா,கௌரவமா?அப்படித்தான் அவை நிறைய வந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்றிருக்கிறாய்?
பெரிய வீட்டை வாங்கி வாழலாம்.நீதானே வாழப்போவது?வீடல்லவே!சிறிய வீட்டில் நிம்மதி இல்லை என்றால் பெரிய வீட்டில் அதிகமாக நிம்மதியை  இழக்கப் போகிறாய்.உன்னைப் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது என்றால் பணம்,புகழை வைத்து என்ன செய்யப் போகிறாய்?உலகம் முழுக்கத் தெரிந்தவன் ஆகலாம்.அதனால் ஆகப் போவதென்ன?உன்னுடைய உள்ளிருட்டு அப்படியேதான் இருக்கப் போகிறது.
******
மற்றவர்களை நேசியுங்கள்;மதியுங்கள்.மற்றவர்களை விட மேலானவராகவோ,உயர்ந்தவராகவோ ஆக முயலாதீர்கள்.மற்றவர்களைத் தாழ்த்தாதீர்கள்.
******

தெரியுமா-7

0

Posted on : Friday, March 07, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு ஆணுக்குஉடலின் மற்ற பாகங்களில் வளர்வதைக்காட்டிலும் முகத்தில் வேகமாக முடி வளர்கிறது.
******
கையில் நடு விரலில் நகம்,மற்ற விரல்களைக் காட்டிலும் வேகமாக வளர்கிறது.
******
நம் தலையில் வளரும் முடியின் சராசரி வயது மூன்றிலிருந்து ஏழு வருடம்.
******
கை நகங்கள்,கால் நகங்களைவிட நான்கு பங்கு வேகத்துடன் வளர்கின்றன.
******
பெண்கள் ஆண்களை விட இரண்டு மடங்கு தடவை கண் இமைகளைக் கொட்டுகிறார்கள்.
******
பெண்களை விட ஆண்களுக்குத்தான் விக்கல் அதிகம் வருகிறது.
******
உங்கள் ஆயுள் முழுவதும் உங்கள் வாயில் ஊறும் உமிழ் நீரானது இரண்டு நீச்சல் குளத்தை நிரப்பக் கூடியதாகும்.
******
பிறக்கும் குழந்தைகளுக்கு நிறங்களைப் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அவர்களுக்கு கருப்பும் வெள்ளையும் தான்  தெரியும்.(நிறக்குருடு)
******
ஒரு மனிதனால் இருபது நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடியும்.ஆனால் இரண்டு நாட்களுக்கு மேல் நீர் அருந்தாமல் இருக்க முடியாது.
******

மாடு மாதிரி

1

Posted on : Thursday, March 06, 2014 | By : ஜெயராஜன் | In :

மனைவி டாக்டரிடம் சொன்னாள்,''டாக்டர்,நீங்கள் என் கணவன் உடல் இளைக்க ,அவரை பச்சைக் காய்கறிகள் சாப்பிடச் சொன்னீர்கள்.எங்கள்  வீட்டுத் தோட்டத்திலேயே எல்லாக் காய்கறிகளும் விளைவதால்,நான் சமைத்துக் கொடுத்தேன்.அவருக்கு அது பிடிக்கவில்லை.தோட்டத்தில் பச்சைக் காய்கறிகளை ,மாடு மாதிரி நான் மேய்ந்து கொள்கிறேன் என்று சொன்னார்.அன்றிலிருந்து தினமும் மூன்று வேளையும் அவரே தோட்டத்திற்கு சென்று காய்கறிகளை சாப்பிடுகிறார்.எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது ,''டாக்டர்,''அதனால் என்னம்மா, நல்லது தானே,இதில் கவலைப்பட என்ன இருக்கிறது?'' என்று கேட்டார்..அவள் சொன்னாள்,''தினமும் இரவில் படுக்கையில் உட்கார்ந்து கொண்டு சாப்பிட்டதை அசை போடுகிறாரே,டாக்டர்.''
******
ஆசிரியர்  வகுப்பில் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.அப்போது பியூன் வந்து தலைமை ஆசிரியர் அவரை அழைப்பதாகக் கூறினார்.தான் இல்லாதபோது மாணவர்கள் அமைதியாக இருக்க,அவர்களைப் பார்த்து,''நான் வரும் வரை ஆங்கிலப் புத்தகத்தில் பதினைந்தாம் பாடத்தைப் படித்துக் கொண்டிருக்க வேண்டும்.வந்ததும் கேட்பேன்,யாராவது படிக்காமல் இருந்தால்,அடி உண்டு,''என்று சொல்லிவிட்டு அவர் வெளியே சென்றார்.சிறிது நேரம் கழித்து வகுப்பறைக்கு வந்து ஒவ்வொரு மாணவராய்ப் பார்த்து ,அவர் சொன்ன பாடத்தைப் படித்தானா என்று கேட்க எல்லோரும் படித்ததாக சொன்னார்கள்.பின் ஆசிரியர்,''உண்மையிலேயே யாராவது நான் சொன்னதைப் படித்திருந்தால் அந்த பாடம் இருக்கும் பக்கத்தைக் கொண்டு வந்து என்னிடம் காட்ட வேண்டும்,''என்றார்.உடனே மாணவர்கள் அனைவரும் பரபரவென்று புத்தகத்தைத் திருப்பினார்கள். அந்தோ!
அப்புத்தகத்தில் மொத்தமே பதினான்கு பாடங்கள் தான் இருந்தன.
******
கணவன் மீது கோபம் கொண்ட மனைவி,''நீங்கள் நன்றாக இருக்க மாட்டீர்கள்.கொஞ்சம் கொஞ்சமாக வேதனை அனுபவித்து சாவீர்கள்,''என்று கத்தினாள்.வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த கணவன் கேட்டான்,''அப்போ,என்னை வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்கிறாயா?''
******

முன் வைத்த காலை...

5

Posted on : Tuesday, March 04, 2014 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ்.பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை.இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத்தன உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம்,''இப்போது திரும்பினால்,பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம்.கடலில் வீணாக உயிர்விட வேண்டாம்,''என்றனர்.ஆனால் கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை.தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார்.ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால்  கடலில் தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி மாலுமிகள் கொலம்பசுக்கு எதிராகத் திரும்பினர்.கப்பலின் பொறுப்பை அவர்கள் ஏற்கத் தீர்மானம் செய்து விட்டார்கள்.அப்போது கொலம்பஸ் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார்.அவர் மாலுமிகளிடம் சொன்னார்,''நண்பர்களே,உங்கள் கவலை எனக்குப் புரிகிறது.இருபது பேருக்கு இருபது நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது.ஒருவர் குறைந்தால்  கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும்.எனவே இன்னும் ஒரு நாள் கப்பலை முன்னோக்கி செலுத்துங்கள்.அதற்குள் கரை தென்படாவிட்டால் என்னைக்  கொன்று விட்டுத் திரும்புங்கள்.அப்போது உங்களுக்கு ஊர் போய் சேரும்வரை உணவு சரியாக இருக்கும்,''என்றார்.கொலம்பஸ் இவ்வாறு சொன்னதும் மற்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.ஒன்றும் சொல்லாது கப்பலை முன்னோக்கி செலுத்தினர்.அடுத்த சில மணி நேரங்களிலேய கரை தென்பட்டதும் எல்லோரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.
இன்றும் கொலம்பஸின் பெயர் உலகில் நிலைத்திருப்பதற்கு கொலம்பஸ் சிக்கலான தருணத்தில் எடுத்த சரியான முடிவுதான் காரணம்.

நிம்மதி

1

Posted on : Wednesday, February 26, 2014 | By : ஜெயராஜன் | In :

ஒரு மன்னனுக்கு மன நிம்மதியே இல்லாமல் இருந்தது.ஜென் குரு  ஒருவர் ஊருக்கு வந்துள்ள தகவல் அறிந்து அவரைப் போய்ப் பார்த்தார்.அவரிடம், தனக்கு வேண்டிய செல்வம் இருந்தும்,ஆட்சி சிறப்பாக நடந்தும்  மக்கள் மகிழ்வுடன் இருந்தாலும்,  தனக்கு மனச்சுமை அதிகமாகி நிம்மதியில்லாமல் இருப்பதாகக் கூறினார்.உடனே குரு,''ஒன்று செய்.உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு,''என்று சொல்ல,மன்னனும் சிறிது கூட யோசிக்காமல்,'எடுத்தக் கொள்ளுங்கள் குருவே,''என்றார்.குரு,''நாட்டை என்னிடம் கொடுத்து விட்டால்,நீ என்ன செய்வாய்?''என்று கேட்டார்.மன்னனும் எங்கோ ஏதேனும் வேலை கிடைத்தால் அதைப் பார்த்துப் பிழைத்துக் கொள்வேன் என்று சொன்னார்.குரு தயங்காது,''எங்கோ ஏன் வேலை பார்க்க வேண்டும்?நீ என்னிடமே வேலை பார்க்கலாமே?என் சார்பில் என் நாட்டை நீ நிர்வகித்து வா.ஆண்டுக்கு ஒருமுறை நான் வந்து கணக்கு வழக்குகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்று சொல்ல மன்னனும் ஒத்துக்கொண்டார்.ஒரு ஆண்டு கழித்து குரு அரண்மனைக்கு வந்து தனது நிர்வாகியான மன்னனைப் பார்த்து,''நாடு எப்படி இருக்கிறது?வரவு செலவு எப்படி இருக்கிறது?நீ எப்படி இருக்கிறாய்?''என்று கேட்டார்.மன்னனும்,''நாடு சுபிட்சமாக இருக்கிறது.நான் மிகுந்த மன நிம்மதியுடன் இருக்கிறேன்.இப்போது கணக்கு வழக்குகளைக் கொண்டு வந்து காட்டுகிறேன்,''என்று சொன்னார்.குரு,''அதற்கு அவசியமில்லை.நீ எப்போதும் செய்த வேலையையே இப்போதும் செய்து வருகிறாய்.ஆனால் முன்னால்  இந்த நாடு,'என்னுடையது'என்று நினைத்து வேலை செய்தாய் அதனால் உனக்கு நிம்மதி இல்லை.இப்போது இன்னொருவரின் நாட்டை நாம் நிர்வாகம் மட்டுமே செய்கிறோம் என்ற நினைப்பு இருப்பதால் நிம்மதியாக இருக்கிறாய்.இதே நினைவுடனேயே தொடர்ந்து நிர்வாகத்தை நடத்து,''என்று சொல்லி அவனை ஆசிர்வதித்து விடை  பெற்றார்.

ஆலயம்

1

Posted on : Tuesday, February 25, 2014 | By : ஜெயராஜன் | In :

எல்லோரும் தங்கள் கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளத்தானே கடவுளை கல்லாக்கி கோவிலில் வைத்திருக்கிறது.கோயில் அமைதியின் இருப்பிடம் என்று கொள்பவர் கொள்ளட்டும்.ஆனால் நான் அறிந்த மட்டில் ஆலயம் ஒரு துயரச்சந்தை.
******
நெருப்பு குளிர்ந்து ஜலம் ஆயிற்று என்றால்,குளிர்ந்த கோபம் தான் கண்ணீர்.உறைந்த கண்ணீர் தான் சிரிப்பு.
******
வாழ்க்கை ஒரு பரீட்சைக் கணக்கு மாதிரிதான் இருக்கிறது.எங்கேயோ ஒரு சிறு தப்பு நேர்ந்துவிட வேன்டியதுதான் ;விடை எங்கேயோ கொண்டுபோய் விட்டு விடுகிறது.இத்தனைக்கும் தெரிந்த கணக்கு,புரிந்த கணக்கு,முன்னால்  போட்ட கணக்குதான்.
******
சாவதையும்,வாழ்வதையும் விட,எதற்காகச் சாகிறோம்,எதற்காக வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்.வாழ்க்கை வீம்பாகி விடும்போது,அதில் சாவுக்கும் உயிருக்கும் பிரமாத இடமில்லை.
******
சமாதானத்தைத் தேடுபவன் சமாதானம் அடைய மாட்டான்.பதில் கிடைத்தவனுக்குத்தான் சமாதானம் கிட்டும்.
******
என் எண்ணங்களை நானே நூற்று,என் மேலேயே பின்னிக்கொண்டு,அவை இன்னதென்று கூடப் புரியாது அவைகளில் சிக்குண்டு தவித்து இரையாகிக் கொண்டிருக்கிறேன்.
******
வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை?உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கிறதா?பார்க்க முடியுமா?அதேபோல் உயிர் பிரிகையில் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா?
******
                            --'லா.ச.ராமாமிர்தம் கதைகள்' என்னும்  நூலிலிருந்து.

பெருக்கல்

3

Posted on : Monday, February 24, 2014 | By : ஜெயராஜன் | In :

கணவன் மனைவியிடம்,தான் ஒரு அற்புத விளக்கைக் கண்டதாகச் சொன்னான்.மனைவி ஆர்வத்துடன்,''நீங்கள் விளக்கைத்தேய்த்து என்ன வரம் கேட்டீர்கள்?''கணவன் சொன்னான்,''என் மனைவியின் மூளையின் சக்தியை பத்து மடங்கு அதிகம் பண்ணிக்கொடு,என்று கேட்டுக் கொண்டேன்,''மனைவி மிக்க மகிழ்ச்சியுடன்,''அப்படியா,அந்த பூதம் அதை செய்து கொடுப்பது பற்றி ஏதாவது சொன்னதா?''என்று கேட்டாள்.கணவன் வருத்தமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்,''அந்த பூதமென்ன சொல்லிற்று,தெரியுமா?ஜீரோவை எந்த எண்ணால் பெருக்கினாலும் ஜீரோ தானே வரும் என்று கேட்கிறது.''
******
கணவன் மனைவி,இருவரும் ஒரு உணவு விடுதியில் சாப்பிட சென்றனர்.உணவு வைக்கப்பட்டதும் கணவன் ஆர்வத்துடன் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.மனைவி கணவனிடம்,''வீட்டில் எப்போதும் சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீர்களே,இன்று மறந்து விட்டீர்களா?''என்று கேட்டாள்.கணவன் சொன்னான்,''கவலைப்படாதே,இங்கு உள்ள சமையற்காரர் நன்றாகவே சமைப்பார்.''
******
ஒருவன் வீட்டு வாசலில் ஒரு பலகை  வைத்திருந்தான்.அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?''ஏற்கனவே தொந்தரவுக்குள்ளான என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்.எனக்குத் திருமணம் ஆகி விட்டது.''
******

நிபந்தனை.

0

Posted on : Sunday, February 23, 2014 | By : ஜெயராஜன் | In :

தனது திருமண பத்தாவது ஆண்டு நிறைவு தினத்தில்,கணவன் மனைவிக்கு ஒரு வைர ஒட்டிகை பரிசளித்தார்.அன்றிலிருந்து ஆறு மாதம்மனைவி கணவனிடம்பேசவே இல்லை.ஏன்?ஒட்டிகை போலி  வைரமா?இல்லை.பின் என்ன,அவள் கேட்ட மாடலில் இல்லையா?இல்லவே இல்லை,அவளுக்கு அந்த ஒட்டிகை மிகவும் பிடித்திருந்தது.பின் என்ன பிரச்சினை?பிரச்சினை ஒன்றும் இல்லை.ஒட்டிகை வாங்கித் தருவதற்கு கணவன் போட்ட நிபந்தனையே அதுதான்.
******
அலுவலகத்தில் அதிகாரியிடம் ஒருவர் கேட்டார்,''சார்,நீங்கள் ஆபீசில் சிங்கம் போல இருக்கிறீர்கள்.ஒவ்வொருவரும் உங்களைக் கண்டாலே பயப்படுகிறார்கள்.வீட்டிலே நீங்கள் எப்படி சார்?''
''அட,வீட்டிலேயும் நான் சிங்கம் தான் ஐயா.என்ன,சிங்கத்தின் மீது காளி  தேவி அமர்ந்திருப்பாள்.''
******

இறைவன் எங்கே?

1

Posted on : Saturday, February 22, 2014 | By : ஜெயராஜன் | In :

சந்தோசப்படும்போது சிரித்து,வருத்தப்படும்போது அழுபவனை நான் காண விரும்புகிறேன்.சுகம்,துக்கம் இரண்டையும் அடக்கிக்கொண்டு 'கண்ணீர் பெருக்குவது பலவீனம்,சிரிப்பது லேசானது,'என்று நினைப்பவர்களுடன் எனக்கு எந்தவிதமான கருத்து ஒற்றுமையுமில்லை.வாழ்க்கை என்னைப் பொறுத்தவரையில் ஆனந்தமான விளையாட்டு,தன்னிச்சையானது, எளிமையானது.அதில் போட்டி,பொறாமை,கோபம்,அற்பத்தனத்திற்கு இடமே இல்லை.கடந்த காலத்தைப்பற்றி நினைப்பதில்லை.எதிர்காலத்தைப் பற்றிய அக்கறையுமில்லை.எனக்குநிகழ்காலம்தான்யாவும்,எல்லாமும்.எதிர்காலத்தைப் பற்றிய கவலை,நம்மைக் கோழையாக்கி விடுகிறது.கடந்த காலத்தின் சுமை நம் இடுப்பை முறித்து விடுகிறது.நாம் வீணாக சுமையை நம்மீது சுமத்திக் கொண்டு நம்பிக்கைகள்,பழகி விட்ட பழக்கவழக்கங்கள்,வரலாறுகளின் இடிபாடுகளுக்கிடையே அழுந்திக் கிடக்கிறோம்.அதிலிருந்து மீண்டெழும் வலிமையோ,ஆற்றலோ நமக்கில்லை.மீண்டு எழ  வேண்டுமென்ற நினைப்புக்கூட நம்மிடம் இல்லை.எங்கு வாழ்க்கை இருக்கிறதோ,அன்பும்,இனிமையும்,செயல்பாடும் உள்ளதோ,அங்குதான் இறைவன் உள்ளான்.வாழ்க்கையை இன்பமுள்ளதாக,இனிமை கூடியதாக ஆக்கிக் கொள்வதுதான் உபாசனை.அதுதான் மோட்சமும்.உன்னால் அழ முடியாவிட்டால்,சிரிக்க முடியாவிட்டால்,நீ மனிதனே அல்ல,பாறாங்கல் எனச் சொல்லுகிறேன்.
                       --பிரேம்சந்த் எழுதிய 'கோதானம்'என்னும்  நூலிலிருந்து.

அதிகாரம்

1

Posted on : Friday, February 14, 2014 | By : ஜெயராஜன் | In :

அதிகாரம் என்பதுஒவ்வொரு அதிகாரியாலும்,தன்னால் கையாளப் படுவதாக நினைத்தாலும் கூட,அது எப்போதும் கூட்டான ஒரு செயல்பாடு தான். உங்களால் அதிகாரம் செலுத்தப்படுபவன் அவ்வதிகாரத்துக்கு ஆட்படுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு அவனுக்கு ஒட்டுமொத்த அதிகாரத்தின் அச்சுறுத்தல் கொண்ட கட்டாயம் இருக்க வேண்டும்.ஆகவே ஒட்டுமொத்த அதிகாரத்தின் செயல் திட்டத்துடன் சரியாக இணைந்து கொள்வதன் மூலமே தனி அதிகாரிக்கு அதிகாரம் கை வருகிறது.தனித்துச் செல்லும் தோறும் அதிகாரம் இல்லாமல் ஆகிறது.
நிர்வாகத்தில் ஈடுபட ஆரம்பிக்கும் அதிகாரி முதலில் அதிகாரத்தின் ருசியை அறிந்து கொள்கிறான்.கூடவே அது எப்படி  உருவாகிறது என்பதயும் கண்டு கொள்கிறான்.மேலும் மேலும் அதிகாரத்திற்காக அவன் மனம் ஏங்குகிறது.அதற்காகத் தன்னை மாற்றிக் கொண்டே  இருக்கிறான்.சில வருடங்களில் அவன் அதிகார அமைப்பில் உள்ள பிற அனைவரையும் போல அச்சு அசலாக மாறி விடுகிறான்.அவன் கொண்டு வந்த கனவுகள் லட்சிய வாதங்கள் எல்லாம் எங்கோ மறைகின்றன.மொழி,பாவனைகள்,நம்பிக்கைகள் மட்டுமல்ல,முகமும் கூட பிறரைப்போல ஆகி விடுகிறது.
                                    -- ஜெயமோகன் எழுதிய 'நூறு நாற்காலிகள்'என்ற நூலிலிருந்து.

ஜென் பொன்மொழிகள்.

2

Posted on : Tuesday, February 11, 2014 | By : ஜெயராஜன் | In :

ஞானம் என்பது அடையக் கூடிய ஒன்றல்ல.ஒவ்வொன்றாய் இழந்தபின் மிஞ்சுவது தான் ஞானம்.
******
நாள் என்பது வெறும் பகல் மட்டும் அல்ல.இரவும் சேர்ந்ததுதான் அது.மரணம் வாழ்க்கையின் எதிரி அல்ல.அதுவும் வாழ்வின் ஒரு அங்கமே.அது இன்றி வாழ்க்கை முழுமை அடையாது.
******
தியானம் என்பது எண்ணங்களை வெல்லுவது அல்ல.அவற்றைக்  கடந்து சென்று விடுவதுதான் தியானம்.
******
எந்தச் செயலுமே எண்ணங்களில் புகும்போதுதான்,இது சரி,இது தவறு,இது விருப்பமானது,இது வெறுக்கக் கூடியது,என்பவை புகுந்து விடுகின்றன.
******
மனிதனுக்காகத்தான் மதமே அன்றி,மதத்துக்காக மனிதன் அல்ல.மனிதத்தன்மை மறந்த மதம் யானையின் மதமே.
******
விரும்புவது கிடைக்காவிட்டால் கிடைத்ததை விரும்பு.தேவை கடல் அளவு,ஆனால் கிடைப்பது கை அளவுதானா?கையையே கடலாக
நினைத்துக்கொள்.
******
அறிவுக்கோ,விவாதங்களுக்கோ எட்டாததுதான் ஞானம்.தெரியாததைத் தெரியாது என்று ஒப்புக்கொள்.தெரிந்ததாக வேடம் பூணாதே.
******
ஞானம் என்பது விவாதித்தல் அல்ல.விவாதம் கடைசியில் இலக்கைவிட்டு விலகிச் சென்றுவிடும்.ஞானம் என்பது எதையும் மறுத்தல் அல்ல.அதை அதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான்.
******
சகிப்புத்தன்மை தான் ஞானத்தின் திறவுகோல்.சகிப்புத்தன்மை இல்லாத ஞானம் வெறும் அறிவின் அகந்தை.
******

திருமணம்-2

1

Posted on : Saturday, February 08, 2014 | By : ஜெயராஜன் | In :

மகிழ்ச்சியான தம்பதிகள் எப்படி இருப்பர்?
 மனைவி விரும்புவதை  கணவன் செய்வான்.
மனைவி விரும்புவதை மனைவி செய்வாள்.
******
உன்னுடைய குறைகளைக் கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை நீண்ட நாள் வரும்.உன் மனைவியின் குறைகளை கண்டு நீ சிரித்தால் உன் வாழ்க்கை சீக்கிரம் முடிந்துவிடும்.
******
மனைவி:நான் எழுதிய ஆணைகளின் படி இந்த கணணி  செயல் பட  மாட்டேன் என்கிறதே!
கணவன்:அது கணணி தானே!கணவன் இல்லையே?
******
திருமணம் என்றால் என்ன?
எப்போது ஒரு மனிதனுக்கு ஏழாவது அறிவு உருவாகி மற்ற ஆறு அறிவுகளையும் சிதைத்து விடுகிறதோ,அப்போது அவனுக்குத் திருமணம் ஆகியுள்ளது என்று பொருள்.
******
திருமண வாழ்வில் நான்கு நிலைகள் உள்ளன;
*ஒருவர் மீது ஒருவருக்குப் பைத்தியம்.
*ஒருவருக்காக ஒருவர்.
*ஒருவரைக் கண்டால் அடுத்தவருக்குப் பைத்தியம்.
*ஒருவரினாலேயே அடுத்தவருக்குப் பைத்தியம்.
******
ஒரு மனிதனின் படுக்கை அறை எத்தகைய மணமுள்ளதாய் இருக்கும்?
திருமணம் ஆன முதல் மூன்று ஆண்டுகள்--
                      பூக்கள் ,பழங்கள்,வாசனை திரவியங்கள் ஆகியவற்றின் மணம் இருக்கும்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு:
                      குழந்தைக்கான பவுடர்,குழந்தைக்கான எண்ணெய் வகைகள்,குழந்தையின் மலம்,சிறுநீர் ஆகியவற்றின் வாடைகள் இருக்கும்.
ஆண்டுகள் கழித்து:
                    தலைவலி மருந்து,உடல் வலி மருந்து ஆகியவற்றின் மணம் இருக்கும்.
ஆண்டுகளுக்குப் பிறகு:
                   பத்தி,சூடம்,சாம்பிராணி.முதலான மணங்கள்.
******
                                                                  நன்றி:நண்பர் சித.மெய்யப்பன்.

கோரிக்கை

2

Posted on : Thursday, February 06, 2014 | By : ஜெயராஜன் | In :

மூன்று பேர் அவர்கள் செய்து கடுமையான குற்றத்திற்காக முப்பது ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர்.ஒவ்வொருவரும் ஒரு கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்பட்டது.முதலாவது ஆள் பெண் வேண்டும் என்று கேட்டான் இரண்டாம் ஆள் செல்போன் வேண்டும் என்று கேட்டான்.மூன்றாவது ஆள் சிகரெட் கேட்டான்.மூவர் கோரிக்கைகளும் அதிகாரிகளால் நிறைவேற்றி வைக்கப்பட்டது.முப்பது ஆண்டுகளுக்குப்பின் மூவரும் விடுதலை பெற்று வெளியே வந்தனர்.அப்போது முதலாவது ஆள் ஒரு பெண்ணோடு பத்து குழந்தைகளோடு வெளியே சென்றான்.இரண்டாவது ஆள் செல்போன் மூலம் நடத்திய கமிசன் வியாபாரத்தினால்பெற்ற பத்து லட்சம் ரூபாயுடன் சென்றான்.மூன்றாமவனோ,வெளியே வந்ததும்,''சிகரெட் பத்த வைக்க நெருப்புப் பெட்டி கிடைக்குமா?''என்று எதிரில் வந்த ஆட்களிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.