முனிவர் ஒருவர் காட்டில் கடவுளை வேண்டி நீண்ட நாட்கள் தனது உடலை வருத்தி தவமிருந்தார்.கடவுளும் அவரது வேண்டுதலுக்கு இரங்கி நேரில் தோன்றினார்.''பக்தா,உன் பக்தியை மெச்சினேன்.உனக்கு என்ன வரம் வேண்டும்?''என்று கேட்டார்.முனிவரும் மிக்க மகிழ்வுடன்,''இறைவா,நான் நீரில் நடக்க வேண்டும்:நெருப்பு பட்டு என் உடல் அழியாதிருக்க வேண்டும்,'' என்று கேட்டார்.இறைவனும் அவர் வேண்டிய வரத்தை அளித்து விட்டு மறைந்தார்.முனிவருக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி.தனது வரத்தை சோதித்துப் பார்க்க எண்ணி ஆற்றிற்கு சென்று நீரின் மீது காலை வைத்தார்.அவர் கால் நீருக்குள் இறங்கவில்லை.அவருக்கு நீரில் நடப்பது மிக எளிதாக இருந்தது. எல்லோரும் அவரை ஆச்சரியத்துடன் வணங்கினர்.மறுநாள் காலை அவர் குளித்துவிட்டு வழக்கமான பூஜை புனஸ்காரங்களில் ஈடுபட எண்ணி ஆற்றிற்கு சென்றார்.குளிப்பதற்கு ஆற்றினுள் இறங்கினார்.அந்தோ பரிதாபம்!அவரால் நீரில் நடக்கத்தான் முடிந்ததே ஒழிய அவரால் நீரில் இறங்கிக் குளிக்க முடியவில்லை.குளிக்காமல் பூஜையில் ஈடுபட முடியாது.அவருக்குப் பயம் வந்து விட்டது.குளிக்காததாலும் அதனால் பூஜைகள் செய்ய இயலாததாலும் தான் இதுவரை அடைந்திருந்த சக்திகள் அனைத்தையும் இழக்க நேரிடுமே என்ற அச்சத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.அவரது பிணத்தை எடுத்துச் சென்று அதற்குக்கொள்ளி வைக்க முயற்சிக்கையில் அந்த உடலில் தீப்பற்றவில்லை.அதனால் செய்வதறியாது அவரது உடலை அப்படியே விட்டு சென்றனர்.அவரது உடல் காக்கைக்கும் கழுகுக்கும் இரையானது.
நாம் ஆசைப்படுவதெல்லாம் நமக்கு தேவையானதாய் இருக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ரோமாபுரியில் சீசர் வஞ்சகர்களால் கொல்லப்பட்டார்.எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்.சீசர் கொலைக்கு உடந்தையானவர்கள் என்று யார் மீது சந்தேகம் வந்தாலும் அவர்கள் தாக்கப்பட்டனர்.சீசரின் ஆதரவாளர்கள் கும்பல் கும்பலாய் வெறியோடு அலைந்தனர்.அப்போது நிலைமையின் தீவிரம் தெரியாது,சின்னா என்பவன் தனக்குள் ஏதோ ஒரு பாட்டைப் பாடிக் கொண்டு அந்தப் பக்கம் போனான்.கும்பலில் ஒருவன் கத்தினான்,''அதோ போகிறானே சின்னா,அவன் எதிரிகளின் ஆள்.அவனைக் கொல்லுங்கள்,''உடனே கும்பல் அவனை சூழ்ந்து கொண்டது.எல்லோரும் அவனைத் தாக்க முற்படுகையில் சின்னா சப்தம் போட்டு,''ஐயோ,நான்,நீங்கள் நினைக்கும் சின்னா அல்ல.நான் கவிஞன் சின்னா..''என்றான்.அப்போது கூட்டத்திலிருந்து ஒரு குரல் வந்தது,''மோசமான கவிதைகள் எழுதி எல்லோரையும் கொல்லும் அந்த சின்னாவா நீ?நண்பர்களே,இவன் கவிதைக்காகவே இவனைக் கொல்லலாம்.கொல்லுங்கடா இந்த சின்னாவை.''
ஓவியர் ஒருவர்,உலகிலேயே மனிதருள் ஒரு அழகான முகத்தையும் ,ஒரு கொடூரமான முகத்தையும் வரையவேண்டும் என்று ஆவல் கொண்டார்.முதலில் அழகான முகம் வரைவதற்காக அலைந்து தேட ஆரம்பித்தார்.நீண்ட நாட்கள் ஆகியும் அவர் எதிர் பார்த்த மனிதன் அகப்படவே இல்லை.திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.அழகான முகம் உடையவர்கள் குழந்தைகள்தானே!எனவே குழந்தைகளுள் அழகிய முகம் தேடினார்.கடும் உழைப்பிற்குப் பின் அவர் எதிர் பார்த்தபடி ஒரு அழகான ஐந்து வயது சிறுவனைக் கண்டார்.மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற அவர் அக்குழந்தையின் பெற்றோர்களின் அனுமதி பெற்று அக்குழந்தையை தத்ரூபமாக வரைந்து முடித்தார்.பின்,கொடூர முகத்தையும் வரைந்து,இரண்டு படங்களையும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கலாம் என்று எண்ணினார்.கொடூர முகத்தை எங்கு தேடலாம் என்று யோசித்த அவருக்கு ,சிறைச் சாலைகள் தான் அதற்குத் தகுந்த இடம் என்று தோன்றியது.அங்குதானே கொடுஞ்செயல் புரிந்தவர்கள் இருப்பார்கள்!ஆனால் இந்த வேலையும் நினைத்த அளவுக்கு எளிதானதாக இல்லை.அவர் மனதில் கருக் கொண்டிருந்த பாதகன் அவர் கண்ணில் படவில்லை.ஆண்டுகள் பல ஆகின.அவர் தனது முயற்சியைக் கைவிடவில்லை.இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் ஒரு சிறையில் அவர் எதிர் பார்த்த கொடூரமான முகம் தெரிந்தது.அவருடைய களைப்பு மறைந்து உற்சாகம் தொற்றிக் கொண்டது.சிறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கி அக்கொடியோனை வரைய ஆரம்பித்தார்.வரையும்போது அவனுடைய ஒத்துழைப்புக்கிடைக்க அவனுடன் பேச்சுக் கொடுத்தார்.அவன் ஊர்,பேர்,பெற்றோர் பற்றிய விபரங்கள் கேட்டு, அவன் சொன்னபோது, அவர் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்.ஏன்?அவன் வேறு யாருமில்லை.அழகான முகம் என்று எச்சிறுவனின் படத்தை வரைந்தாரோ,அதே சிறுவன், இன்று காலத்தின் கோலத்தில் மிகப் பெரிய குற்றவாளியாகக் கொடூரமாகக் காட்சி அளிக்கிறான்!
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அழகும் கொடூரமும் குடி கொண்டுள்ளன.அவன் சூழ்நிலைகள்தான் அவற்றில் ஒன்றை மிகைப்படுத்தியோ,குறைத்தோ காட்டுகிறது.
அன்னை தெரசாவிடம் பத்திரிக்கை நிருபர் ஒருவர் பேட்டி காண அனுமதி கிடைத்து சென்று இருந்தார்.குறிப்பிட்ட நேரத்துக்கு சற்று முன்னரே சென்று விட்டதால் உடனே அன்னையைப் பார்க்க முடியவில்லை.அந்த நிருபர் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்.அன்னை வருவதற்குள் ஒரு சிகரெட் புகைத்துவிடலாம் என்று எண்ணி அங்கேயே ஒரு ஓரமாக நின்று புகைக்க ஆரம்பித்தார்.அவர் புகைத்து முடிக்குமுன்னரே அன்னை அவரைக் கடந்து அவரது அறைக்கு சென்று விட்டார்.அவர் அழைக்கப்பட்ட போது,அன்னை என்ன கேட்பாரோ என்ற அச்சத்தில் அவர் உள்ளே சென்றார்.ஆனால் அன்னை எப்போதும்போல சாந்தமான முக பாவத்துடன் அவரை வரவேற்றுவிட்டு புகை பிடிக்கும் பழக்கம் எவ்வளவு ஆண்டுகளாக இருக்கிறது என்று கேட்க அவரும் பத்து வருடங்கள் என்று பதில் உரைத்தார். ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்க அவரும் பத்து ரூபாய் ஆகும் என்று சொன்னார்.அந்தத் தொகையை சேவைக்குக் கொடுத்தால் எவ்வளவோ பேருக்கு உபயோகமாயிருக்குமே என்று அன்னை சொல்ல நிருபர்,''அது மிகச்சிறிய தொகை ஆயிற்றே,அதை வைத்து என்ன சேவை செய்ய முடியும்?''என்று கேட்டார்.அன்னை சொன்னார்,''தனிப்பட்ட முறையில் சேவை செய்பவர்களுக்குப் பணம் தேவையில்லை.ஆனால் சேவைக்கு ஒவ்வொரு பைசாவும் முக்கியமானது.நான் முதலில் பத்து ரூபாயில்தான் எனது சேவையை ஆரம்பித்தேன்.சாலையில் கிடந்த ஒரு குஷ்டரோகியை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்ல உபயோகப்பட்டது,''அதன்பின் அந்த நிருபரிடம்,'இனி புகை பிடிப்பதில்லை'என்றும்,'அதனால் மிச்சப் படுத்தப் படும் பணத்தை போது சேவைக்குக் கொடுப்பேன்.'என்று உறுதிமொழி பெற்றுக் கொண்டுதான் அன்னை அவருக்குப் பேட்டி கொடுத்தார்.
முல்லா தனது மனைவியிடம் சொன்னார்,''நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஒரு தொழில் ஆரம்பித்திருக்கிறேன்.மூலதனம் மட்டும் ஒரு கோடி ரூபாய்.''மனைவி கேட்டார்,'அப்படியானால் நீங்கள் பாதிப் பணம் போட வேண்டியிருக்குமே,அவ்வளவு பணத்திற்கு எங்கே போவீர்கள்?'' முல்லா சொன்னார்,''நண்பன் மூலதனம் முழுவதையும் போடுவான்.என் அனுபவம் தொழில் நடத்த உதவும்.என் அனுபவம் தான் என் பங்கு மூலதனம்,'' முல்லாவின் மனைவிக்கு ஒரே மகிழ்ச்சி.'லாபத்தில் இருவருக்கும் சம பங்கா?''என்று ஒரு சந்தேகத்தினைக் கேட்டாள்.முல்லா சொன்னார்,''அப்படி ஒப்பந்தம் எதுவும் போடவில்லை.ஆனால் இரண்டு வருடம் கழித்து மூலதனம் என்னிடம் இருக்கும்.அனுபவம் நண்பனிடம் இருக்கும்.''
******
முல்லாவின் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்து விட்டது. இன்சூரன்ஸ் நிறுவத்தினர் வந்து எல்லாவற்றையும் ஆய்வு செய்துவிட்டு முல்லாவிடம் சொன்னார்கள்,''தொழிற்சாலை முழுமையாக எரிந்து விட்டது.இதற்கு ஈடாகப் பணமாய்க் கொடுக்காமல் எங்கள் நிறுவனமே புதிதாகத் தொழிற்சாலையைக் கட்டிக் கொடுத்துவிடும்.''இதைக் கேட்டதும் முல்லாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.' 'அவர் கேட்டார்,''இதுதான் உங்கள் கொள்கையா?''ஆம் என்று அதிகாரிகள் கூற முல்லா சொன்னார்,''அப்படியானால் என் மனைவியின் பெயரில் நான் போட்ட இன்சூரன்ஸ் பாலிசியை நிறுத்தி விடுகிறேன்.''
******
பழமொழிகள் நிறையப் படித்திருக்கிறோம்;கேட்டிருக்கிறோம்.அவற்றின் அர்த்தமும் தெரிந்திருக்கிறோம் .ஆனால் சிலவற்றிற்கு வித்தியாசமான விளக்கங்களும் கொடுக்கப் படுகின்றன.சான்றாக இதோ சில:
''ஆறிலும் சாவு,நூறிலும் சாவு ''என்று ஒரு முதுமொழி உண்டு.மனிதன் ஆறு வயதிலும் சாகலாம்,நூறு வயதிலும் சாகலாம் .இது எல்லோருக்கும் தெரிந்தது.இப்பழமொழி எப்படி வந்தது?
பாண்டவர்களின் தாய் குந்தி,கர்ணனும் தனது மகன்தான் என்பதை அறிந்து அவனிடம் சென்று,அவனைப் பாண்டவர்களுடன் சேர்ந்து விடச் சொல்லி வற்புறுத்துகிறாள்.அப்போது கர்ணன் குந்தியிடம்,''அம்மா,நான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவது ஆளாய் இருந்தாலும்,நூறு கெளரவர்களுடனே இருந்தாலும் எனக்கு சாவு நிச்சயம்.அதனால் நான் உண்ட சோற்றிற்காக நன்றி உணர்வுடன் கெளரவர்களுடனேயே இறுதிவரை இருந்து விடுகிறேனே,''என்றான்.இந்த நிகழ்வே இப்பழமொழி உண்டானதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.
''பந்திக்கு முந்து,படைக்குப்பிந்து''.இப்பழமொழிக்கு இரு விளக்கங்கள் தரப்படுகின்றன.
அ.பந்தியில் பரிமாறுபவர் முதலில் சாப்பிட வேண்டுமாம்.அப்படியானால்தான் அவர்களுக்கு உணவில் உப்பு,காரம் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று தெரியும்.சரி செய்தபின் மற்றவருக்குப் பரிமாற வேண்டும்.
ஆ.பந்தியில் பரிமாறும்போது வலது கை முன்னால் வரும்.அதே சமயம் படையில் வேல் கொண்டு எறியும்போது வலது கை பின்னால் வந்து ,வலுவாய் வேலைப் பாய்ச்சும்.
''ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.''
இதற்கான விளக்கம்:
மனைவியானவள் ஊரார் பெற்ற பிள்ளை. கருவுற்றிருக்கும் காலத்தில்அவளை ஊட்டி வளர்த்தால் கருவிலிருக்கும் தனது குழந்தை தானே நன்றாக வளரும்.
நீண்ட நாள் கழித்து வீட்டிற்கு வந்த நண்பன் சோமுவை வரவேற்று அவருடன் பேசிக் கொண்டிருந்தார் ராமு .அப்போது சிறுவனான அவருடைய இளைய மகன் அங்கு வந்து சோமுவின் மடியில் உட்கார்ந்து குதிக்க ஆரம்பித்தான்.''மாமாவைத் தொந்தரவு செய்யக்கூடாது''என்று மகனை கண்டித்தார் ராமு.சோமு,''அவன் சிறுவன்தானே!அவனுக்கு என்ன தெரியும்? அவன் பாட்டிற்கு உட்கார்ந்திருக்கட்டும்.''என்றார்.சிறிது நேரம் கழித்து சிறுவன் அவர் மீது விளையாட்டு சாமான்களைத் தூக்கி எறிந்தான்.அப்போதும் அவனை ராமு கண்டித்தார்.சோமு,''பாவம் அவனுக்கு என்ன தெரியும்?அவன் விளையாடட்டும்,''என்றார்.பின் சிறுவன் சோமுவின் தோளில் ஏறிக்கொண்டு அவர் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தான்.அவருக்கு கடுமையான வலி.ராமு சிறுவனை அடிக்கப் போனார்.தடுத்த சோமு,''சிறுவனுக்கு என்ன தெரியும்?விட்டுவிடு,''என்றார்.ராமுவும்,'ஐந்து நிமிடம் பொறு.உனக்கு காபி போட்டு எடுத்து வருகிறேன்,'என்று சொல்லி உள்ளே சென்றார்.அவர் கண் மறைந்ததும் சோமு நாக்கைத் துருத்திக்கொண்டு சிறுவனை முதுகில் இரண்டு போட்டு காதைப் பிடித்துத் திருகினார்.சிறுவன் அழ ஆரம்பித்து விட்டான்.'என்ன,என்ன,'என்று கேட்டுக் கொண்டே ராமு வந்தார்.சோமுவும் சிரித்துக் கொண்டே,''அவனுக்கு என்ன தெரியும்,சிறுவன்தானே,அழுதுவிட்டுப் போகட்டும்,''என்றார்.
ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவிற்கு நாதஸ்வரக் கச்சேரி யார் செய்வது என்ற பிரச்சினை ஏற்பட்டது.ஒரு சாரார் உள்ளூர் வித்வானைப் போட வேண்டும் என்று சொல்ல வேறு சிலர் வெளியூர்க்காரர் ஒருவரை இந்த வருடம் கச்சேரி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினர்.இறுதியில் திருவிழாவிற்கு முன் இருவருக்கும் ஒரு போட்டி வைப்பது என்றும் யார் சிறப்பாக வாசிக்கிறார்களோ அவருக்கே திருவிழாவில் வாய்ப்பு கொடுப்பது என்று முடிவாகியது.உள்ளூர்க்காரர் நாதஸ்வரம் வாசிப்பதில் சுமார் ரகம்தான்.வெளியூர்க்காரரோ ஒரு விற்பன்னர்.எனவே உள்ளூர்க்காரருக்கு நடுக்கம் ஏற்பட்டது.போட்டியில் தோல்வியுற்றால் பின்னர் அவர் எங்குமே வாசிக்க முடியாது என்ற நிலை ஏற்படும்.முக வாட்டத்துடன் காணப்பட்ட அவரிடம் அவரது மகன் பார்த்துக் காரணம் கேட்டான்.விசயத்தைத் தெரிந்து கொண்ட சிறுவன் தந்தையிடம்,''நீங்கள் கவலைப் படாமல் போட்டியில் வாசியுங்கள்.மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்றான் .அவருக்கோ ஒன்றும் புரியவில்லை.எனினும் அவன் சொன்னபடி போட்டியில் முதலில் அவர் வாசித்தார்.பின் வெளியூர்க்காரர் வாசிக்க ஆரம்பித்தார்.இப்போது
உள்ளூர்க்கரரின் மகன் அவர் நேர் எதிரில் உட்கார்ந்து கொண்டு,புளித்த ஒரு மாங்காயை வாயில் வைத்துக் கடித்து சப்புக் கொட்ட ஆரம்பித்தான்.வாசிக்க ஆரம்பித்தவருக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்தது.அந்தப் புளித்த வாடைக்கு எச்சில் அத்கமாக ஊற, வாசிக்க முடியாமல் திணறினார்.ஸ்...என்ற சப்தம் மட்டுமே வந்தது.முடிவினை சொல்லவும் வேண்டுமோ?.
இக்கட்டான சூழ்நிலைகளில் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் பிரச்சினைதான்.
திருமண வயதாகியும் ஒரு இளைஞன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பிக் கிடந்தான்.வெறுத்துப்போன அவன் தந்தை கோபமாக ஒரு நாள்,''இன்றிலிருந்து தினசரி நூறு ரூபாய் கொண்டு வந்தால்தான் உனக்கு சாப்பாடு,''என்றார்.இளைஞன் நொந்து போய்விட்டான்.என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.தாயிடம் புலம்பினான். தாயும் இரக்கப்பட்டு, ''நீ வெளியில் போய்வா.நான் உன்னிடம் நூறு ரூபாய் தருகிறேன்.நீ அதை அப்பாவிடம் கொடுத்துவிடு'' என்று சொல்ல அவனும் சம்மதித்தான்.அன்று நூறு ரூபாயை அப்பாவிடம் கொடுத்தபோது அவர் அதை வாங்கி,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி தூக்கி எறிந்து விட்டு வெளியே சென்று விட்டார்.இளைஞன் அமைதியாக இருந்தான்.சில நாட்கள் இப்படியே போயிற்று.ஒரு நிலையில் தாயிடம் கொடுக்கப் பணமில்லை.சில நாட்கள் கடன் வாங்கிக் கொடுத்தாள் .ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் தந்தை ,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறி விட்டெறிந்து கொண்டிருந்தார்.இப்போது தாய்க்கு கடன் யாரும் கொடுக்கத் தயாராயில்லை.மேலும் கொடுத்த பணத்தைக் கேட்க ஆரம்பித்தனர்.தாய் வேறு வழியில்லாது,''மகனே,இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை.இனி நீ போய் ஏதாவது வேலை செய்து பணம் கொண்டு வருவதைத்தவிர வேறு வழியில்லை.உன் தந்தையும் இவ்விசயத்தில் பிடிவாதமாக இருக்கிறார்.நான் என்ன செய்ய முடியும்?என்று கூறி கை விரித்து விட்டார்.இளைஞன் வேறு வழியின்றி வெளியே சென்று மூட்டை தூக்குவதிலிருந்து எந்த வேலையானாலும் செய்து அன்று நூறு ரூபாய் சம்பாதித்து விட்டான்.அன்று பெருமையாகத் தந்தையிடம் ரூபாயைக் கொடுத்தான்.அன்றும் வழக்கம் போலத் தந்தை,''நீயும் உன் ரூபாயும்,''என்று கூறித் தூக்கி எறிந்தார்.இளைஞனுக்கு வந்ததே கோபம்!''அவனவன் மூட்டை தூக்கி கல் சுமந்து கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு வந்தால் இப்படித் தூக்கி எறிகிறீர்களே,என்ன நியாயம்?''என்று கேட்டான்.தந்தை சிரித்துக் கொண்டே கீழ குனிந்து எறிந்த பணத்தை எடுத்து,அதை முத்தமிட்டு தனது பைக்குள் வைத்துக்கொண்டு,''இது என் மகன் உழைப்பில் வந்த பணம்,இனி அவனைப்பற்றி எனக்குக் கவலை இல்லை''என்று கூறி மகிழ்ச்சியுடன் வெளியே சென்றார்.
ஒரு முனிவருக்கு மாம்பழம் கிடைத்தது.அந்த மாம்பழம் சாப்பிட்டவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வர்.முனிவர் அம்மாம்பழத்தை தான் சாப்பிடுவதை விட மக்களுக்கு நல்லது செய்யும் மன்னன் பத்ருஹரி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி மன்னனிடம் கொடுத்தார்.மன்னனோ,அதைத் தான் சாப்பிடுவதை விட தன் மீது உயிரையே வைத்திருக்கும் மனைவி சாப்பிட்டால் நல்லது என்று எண்ணி அவளிடம் கொடுத்தான்.அவளோ மாம்பழத்தைத் தான் உண்ணாது தன் ஆசை நாயகனான நொண்டியும் கூனனுமான குதிரைக்காரனிடம் கொடுத்தாள்.அவனோ,அவன் மனைவி நீண்ட நாள் வாழ வேண்டும் என்று கருதி அதை மனைவியிடம் கொடுத்தான்.அந்தப் பெண் மிக நல்ல பெண்.அவள், தான் நீண்ட காலம் வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம்,இந்த நாட்டை ஆளும் மன்னன் சாப்பிட்டால் மக்கள் அனைவருக்கும் நல்லது என்று கருதி மாம்பழத்தை அதன் சிறப்பை விளக்கி மன்னனிடம் கொடுத்தாள்.மன்னன் அதிர்ச்சி அடைந்தான்.பழம் எப்படித் தன் கைக்கே திரும்ப வந்தது என்று விசாரித்தான்.அடுத்த நாள் அவன் கூறாமல் சன்யாசம் பூண்டான்.
காதல் ஒரு சில நியாயங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.முறையற்ற உணர்வுகளைக் காதல் என்று நினைத்தால் சீரழிவுதான்.
மன்னன் ஒருவன் தனது அவையில் இருந்த அனைத்து புலவர்களையும் வரவழைத்து,''நான் நாற்பது நாள் தருகிறேன்,அதற்குள் நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாலு கோடி பாடல்கள் இயற்ற வேண்டும்.முடித்தால் பரிசு, இல்லையேல் தண்டனை,''என்றான்.புலவர்கள் எவ்வளவோ முயன்றும் ஒரு லட்சம் பாடல்கள் கூட இயற்ற முடியவில்லை.இன்னும் ஒருநாள்தான் இருந்தது.என்ன செய்வதென்று புரியாதிருந்தபோது ஔவையார் அங்கு வந்தார்.விசயத்தைக் கேள்விப்பட்ட அவர்,''இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்று கூறிவிட்டு படுக்க சென்று விட்டார்.
மறுநாள் புலவர்கள் அவையில் கூடினர்.மன்னர் வந்ததும் ஔவையார் தானே நாலு கோடி பாடல் பாடப் போவதாகக் கூறிவிட்டு வரும் பாடலைப் பாடினார்.
''மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடியுறும்.
உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை
கோடியுறு ம்
கோடி கொடுத்தும் குடிப் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடியுறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமை கோடியுறும்,''
இதுதான் நாலு கோடிப் பாடல்'' என்று ஔவையார் சொன்னபோது அதை மறுக்க முடியாத மன்னன் வாக்களித்தபடி ஒளவைக்குப் பரிசுகள் கொடுத்து மரியாதை செலுத்தினான்.
இளம் காக்கை ஒன்றிற்கு ஒரு நத்தைக்கூடு கிடைத்தது.ஆனால் அதை உடைத்து சாப்பிடத் தெரியவில்லை.அருகிலிருந்த ஒரு வயதான காக்கையிடம் நத்தைக்கூடை உடைப்பது எப்படி என்று கேட்டது.அக்காக்கையும் சற்று உயரே பறந்து சென்று அங்கிருந்து நத்தைக்கூடை அருகில் இருக்கும் பாறை மீது போட்டால் அது உடைந்து விடும் என்று ஆலோசனை சொன்னது. இளம் காக்கையும் அவ்வாறே செய்தது.ஆனால் கீழே திரும்பி வருமுன்னே முதிய காக்கை உடைந்த கூட்டிலிருந்து வெளி வந்த நத்தையை சாப்பிட்டு விட்டது.இது நியாயமா என்று இளம் காக்கை கேட்க முதிய காக்கை சொன்னது,''நீ என்னிடம் கூட்டை உடைக்க மட்டும் தானே ஆலோசனை கேட்டாய்.அதை சொல்லி விட்டேனே!''என்றது.
இக்கட்டான சூழ்நிலையில் போகிற போக்கில் யாரிடமாவது ஆலோசன கேட்கக் கூடாது.
******
திருமணம் முடிந்தது.மாமனார் மருமகளிடம் சொன்னார்,''அம்மா,என் பையனிடம் கொஞ்சம் எச்சரிக்கையாய் இரு.அவனுக்கு வாய் கொஞ்சம் நீளம்.''மருமகள் சொன்னாள்,''பரவாயில்லை மாமா,எனக்கு கை கொஞ்சம் நீளம்.''
******
ஒரு பெண் சொன்னாள்,''என் கணவன் குடித்து விட்டு வந்தால் என்னைத் தூங்கவே விட மாட்டார்,''அடுத்தவள் சொன்னாள்,''பரவாயில்லையே,என் கணவன் குடித்துவிட்டு வந்தால் எங்கள் தெருவில் யாரையும் தூங்க விட மாட்டார்.''
******
''என் மனைவி என்னைக் கஷ்டப்படுத்திய போதெல்லாம் பல்லைக் கடிச்சிக்கிட்டு தாங்கிக்கிட்டேன்.இனிமேல் அது முடியாது,''என்றார் ஒருவர்.நண்பர் கேட்டார்,''உங்களுக்கு அவ்வளவு தைரியம் வந்திருச்சா?''அவர் சொன்னார்,''அட நீங்க வேற,என் பல்லெல்லாம் உதிர்ந்து போச்சு.அதைச் சொல்ல வந்தா.....''
******
நடத்துனர் பின் பகுதியிலிருந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.ஒரு பயணி,''என் மனைவி முன் புறம் இருக்கிறாள்.அவள் எனக்கும் சேர்த்து டிக்கெட் எடுத்துவிடுவாள்,''என்றார்.நடத்துனருக்குக் கோபம் வந்துவிட்டது.''உன் திருமணத்திற்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்தாயா?நான் உன் திருமணத்திற்கு வந்தேனா,உன் மனைவி யார் என்று எனக்கு அடையாளம் தெரிய?''என்று எரிச்சலுடன் கேட்டார்.பயணி மிக அமைதியாகப் பதில் சொன்னார்,''சார்,கோபப்படாதீங்க.என் மனைவியைக் கண்டு பிடிப்பது ரொம்ப சுலபம்.அவள் இப்பேருந்தில் ஏறி இரண்டு நிமிடம் ஆகி விட்டது.உறுதியாக இவ்வளவு நேரத்தில் பக்கத்தில் யாருடனாவது சண்டை போட ஆரம்பித்திருப்பாள்.நீங்கள் முன்னால் போகும்போது எந்தப் பெண் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாளோ,அவளே என் மனைவியாக இருப்பாள்.''நடத்துனர் தலையில் அடித்துக் கொண்டார்.
******
மனைவி ஒரு பவுடர் டப்பாவினை இருபது ரூபாய் கொடுத்து வாங்கி வந்தார்.விபரம் அறிந்த கணவன்,தான் அறிவாளி என்பதை அவளிடம் காட்ட,''முட்டாக்கழுதை,அவன் இருபது ரூபாய் சொன்னால் அப்படியே கொடுத்து விடுவதா?நானாக இருந்தால் அவனிடம் பேசியே பத்து ரூபாய்க்கு வாங்கியிருப்பேன்,''என்றான்.மனைவி சொன்னாள்,''அப்படிப் பேசி வாங்கணும் என்றால்.....நான் சிரிச்சுப் பேசியே இலவசமாக வாங்கியிருப்பேனே!''கணவன் வாயைத் திறக்கவில்லை.
******
ஒருத்தி தன் தோழியிடம் சொன்னாள்,''என் கணவர் என்பது பவுன் நகை சேர்த்திருக்கார்.வங்கியில் பத்து லட்சம் சேர்த்திருக்கிறார்.உன் கணவர் என்ன சேர்த்திருக்கிறார்?''தோழி சொன்னாள்,''என் கணவர் திருச்சியில் தீபாவை சேர்த்திருக்கிறார்.மதுரையில் மாலாவை சேர்த்திருக்கிறார்.''
******
சீட்டாட்டம் எப்படி வந்தது என்று தெரியுமா?
ஒரு முறை பிரெஞ்ச் மன்னன் ஒருவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.ஒரு விசயத்தில் கவனம் செலுத்தாமல் பிரமை பிடித்து பல விசயங்களை உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்.ஒருஅமைச்சர் இந்த நேரம்தான் ராஜா (கிங்),ராணி(க்வின்),மந்திரி(ஜேக்)இவர்களைப் படமாக்கி மன்னனின் கவனத்தை ஒரே விசயத்தில் கவனம் செலுத்தச் செய்யும் விளையாட்டான சீட்டாட்டத்தைக் கண்டு பிடித்தார்.மன்னன் விளையாடினான்.தொடர்ந்து விளையாடினான்.மன்னனின் பைத்தியம் தெளிந்து விட்டது.
ஆனால் இன்று சீட்டாட்டம் பலரைப் பைத்தியம் ஆக்கி விட்டது.
அதில் உள்ள டைமண்ட் வைரத்தையும்,ஹார்ட் இருதயத்தையும்,ஸ்பேட் மண்வெட்டியையும்,கிளாவர் பிரண்டைத் தண்டு இலையையும் குறிக்கும்.
''சீட்டாடினால் ஒரு மனிதன் தன்னிடம் உள்ள வைரம் போன்ற பொருட்களை இழப்பான்.இதனால் மனம் நொந்து இதயம் வெடித்து சாவான்.அவனை மண் வெட்டியால் குழி தோண்டிப் புதைக்க நேரிடும்.குழி மீது பிரண்டை செடி வளர்ந்து வரும்.''என்று இந்த சீட்டுக் கட்டு சொல்லாமல் சொல்கிறது.
******
குடையை ஆங்கிலத்தில் UMBRELLA என்று சொல்வார்கள்.இது ஒரு இத்தாலிய வார்த்தை ஆகும்.UMBRA என்பது நிழலையும் YELLOW என்பது மஞ்சளையும் குறிக்கும்.மஞ்சள் துணி தரும் நிழல் என்று பொருள்.
******
பாகு என்றால் இனிப்பு என்று பொருள்.அல் என்றால் அற்றுப் போகச் செய்தல் என்று பொருள்.பாகு+அல் +காய்=பாகற்காய். அதாவது இனிப்பை இல்லாமல் செய்யும் காய்தான் பாகற்காய்.
******
கருவுற்ற காலத்தில் கருப்பை குளிர்ந்து விடாமல் தேவையான வெப்பம் பெற முன் காலத்தில் கறிவேப்பிலை சாப்பிடுவார்கள்.கரு+வெப்ப+இலை=கருவெப்ப இலை.இதுதான் நாளடைவில் கறிவேப்பிலை என்றாயிற்று.
******
நீண்ட நாள் கழித்து நண்பன் ஒருவன் எதிர் பாராத விதமாக வீட்டிற்கு வந்து விட்டான்.வீட்டுக்காரன் மனைவியிடம் தன் நண்பனுக்கு உணவளிக்க சொன்னான்.நண்பர்கள் இருவரும் மேஜையில் சாப்பிட அமர்ந்தனர். நண்பனுக்கு நல்ல பசி.குறிப்பறிந்த வீட்டுக்காரன் 'இன்னும் கொஞ்சம் வை,'என்று இரண்டு தடவை சொல்லி விட்டான்.சாப்பாடு தீரும் நிலை.அடுத்த முறை 'இன்னும் கொஞ்சம் வை' என்று கணவன் சொன்னபோது,நிலையை விளக்க அவன் காலை ஒரு மிதி மிதித்தாள்.அப்படி இருந்தும் மறுபடியும் கணவன்,'இன்னும் கொஞ்சம் வை,'என்றான்.இம்முறை சற்று ஓங்கி மிதித்துவிட்டு மீதி இருந்த சாதத்தை எல்லாம் நண்பனுக்கு வைத்து விட்டாள்.ஒரு வழியாக சாப்பிட்டு முடித்த நண்பன் உடனே கிளம்புவதாக சொன்னான்.வீட்டுக்காரன்,''இரவில் இவ்வளவு நேரம் ஆகி விட்டது.எனவே இங்கு தங்கி காலை செல்லலாமே?''என்று கேட்டான்.நண்பனோ முக்கிய வேலை இருப்பதாக சொல்லி விடை பெற்று சென்று விட்டான்.அவன் தலை மறைந்ததும் மனைவி கணவனிடம் கோபத்துடன்,''சாதம் கொஞ்சம்தான் மீதி இருக்கிறது என்று உங்கள் காலை மிதித்து சைகை செய்தும் நீங்கள் விடாப்பிடியாக,'இன்னும் கொஞ்சம் வை'என்று சொல்கிறீர்களே,உங்களுக்கு அறிவு இருக்கிறதா?''என்று கேட்டாள்.கணவன் பதட்டத்துடன்,''அய்யையோ,நீ என் காலை மிதிக்கவில்லையே!அப்படியானால்....ஓ,அதுதான் அவன் அவ்வளவு வேகமாக ஓடி விட்டானா!''என்றான்.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் கொடிய விலங்குகளின் தொல்லை அதிகம் இருந்ததால்,புலி வேட்டையில் வெற்றி பெற்றவனுக்கே பெண் கொடுத்தார்கள்.
காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் ஒரு பெண் பிறந்ததுமே ஒரு காளையினை வளர்க்கத் துவங்கி விடுவார்கள்.பெண் பருவமடைந்ததும் காளையை அடக்குபவனுக்கே பெண்ணைக் கொடுத்தார்கள்.
வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் இளவட்டக்கல் தூக்கியவனுக்கே பெண்.
கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் நீந்துபவனுக்கு மரியாதை இருந்தது.நீச்சல் வீரனுக்கும்,படகுப் போட்டியில் வெல்பவனுக்குமே பெண் கிடைப்பாள்.
காலம் செல்லச் செல்ல வீரர்களுக்கு இருந்த மரியாதை ஆயதங்களைக் கையாளக்கூடிய திறமை சாலிகளுக்குக் கிடைத்தது.
இப்போது பணம் படித்தவர்களுக்கே முதல் மரியாதை.
வரும் காலத்தில் உடல் நலன் அடிப்படையிலேயே திருமணம் நடக்கும்.
திருமணம் ஆகி ஐந்தாண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் கணவன் மனைவியிடம் இரண்டாவது திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப் போவதாக சொன்னான்.மனைவி சொன்னாள்,''அப்படியா மிக்க மகிழ்ச்சி,நல்ல மாப்பிள்ளையாய்ப் பாருங்க,''
******
சீர்திருத்தவாதியின் நண்பன் அவரிடம் சொன்னான்,''அண்ணே.நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன்.ஒரு விதவைக்கு மறுவாழ்வு கொடுக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.''அவர் சொன்னார்''அப்படியா,ரொம்ப மகிழ்ச்சி.சரி,எப்போது செய்யப் போகிறாய்?''நண்பன் சொன்னான்,''அது நீங்கள் எப்போது இறப்பீர்கள் என்பதைப் பொறுத்தது.''
******
கணவன் மனைவியிடம் சொன்னான்,''நமக்குக் கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகியும் நீ அன்றைக்குப் பார்த்த மாதிரியே இருக்கிறாயே!''மனைவி சொன்னாள்,''அப்படியா...கல்யாணத்தன்று உடுத்திய சேலையைத் தானே இன்று வரை உடுத்திக் கொண்டிருக்கிறேன்.வேறு சேலை உடுத்தினால்தானே வேறு மாதிரி இருப்பேன்?''
******
நண்பன் கேட்டான்,''வீட்டில் நீ யார் பக்கம்?''இவன் சொன்னான்,''காலையில் தாயின் பக்கம்.இரவினில் மனைவி பக்கம்.பகலில் தெருப்பக்கம்.''
******
'',நண்பரே!உங்கள் பெண்ணுக்கு போன வாரம் திருமணமாமே!என்னிடம் நீங்கள் சொல்லவேயில்லையே!''
''என்னிடமே நேற்றுதானே அவள் சொன்னாள்,''
******
ஒரு பூனை சாராயப் பானைக்குள் விழுந்து விட்டது அதனால் வெளியில் வர முடியவில்லை.அங்கு வந்த எலியிடம் அது சொன்னது,''ஒரு கயிறை மட்டும் எடுத்து ஒரு முனையை என்னிடம் கொடுத்துவிட்டு மறுமுனையை நீ கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் நான் வெளியே வந்துவிடுவேன்.வெளியே வந்ததும் உன்னை சத்தியமாகக் கொல்ல மாட்டேன்,''எலியும் சரியென்று சொல்லி அவ்வாறே செய்தது .வெளியே வந்த பூனை உடனே எலியை விரட்டியது.கொடுத்த வாக்கை மீறலாமா என்று எலி கேட்டபோது பூனை சொன்னது,''குடி வெறியில் நான் ஆயிரம் சத்தியம் செய்திருப்பேன்.அதை நீ நம்பலாமா?''
******
கடற் படையில் உபயோகப் படுத்தப்படும் கப்பல்கள் பல வகைப்படும்.அவை;
ரோந்துக் கப்பல்.(CRUISER)
1.நாசகாரி (DESTROYER)
2.விமானம் தாங்கிக் கப்பல்.(AIRCRAFT CARRIER.)
3.நீர் மூழ்கிக் கப்பல்.(SUBMARINE)
4.கண்ணிவெடிப் படகு.(TORPEDO BOAT)
5.கொடிக்கப்பல் அல்லது தளபதிக் கப்பல் (FLAG SHIP)
6.கட்டளைக் கப்பல்.(COMMAND SHIP)
7.ஓர் அடுக்கு பீரங்கிக் கப்பல்.(CORVETTE)
8.வேவுக்கப்பல்.(PATROL VESSEL)
9.கண்ணிவெடி வைக்கும் கப்பல்.(MINE LAYER)
10.துணைக் கப்பல் அல்லது ஊழியக் கப்பல்.(TENDER)
11.கண்ணிவெடி ஒழிப்புக் கப்பல்.(MINE SWEEPER)
12.பீரங்கிப் படகு.(GUN BOAT)
13.படை வீரர்களை இறக்கும் கப்பல்.(LANDING SHIP)
14.கப்பலை இழுத்து செல்லும் இழுவைக் கப்பல்.(TUG)
15.காவல் கப்பல்.(GUARD SHIP)
******
அமெரிக்காவை சேர்ந்த நீல் ஆர்ம் ஸ்ட்ராங் மற்றும் இருவர் முதல் முதலில் நிலவுக்கு சென்ற போது அங்கு நினைவுக் கல் நாட்டினர்.அதில் பொறிக்கப்பட்டிருந்த வாசகம் இது தான்.
''HERE MEN FROM THE PLANET EARTH FIRST SET FOOT UPON THE MOON.JULY 1969A.D.WE CAME TO PEACE FOR ALL MANKIND.''
******
ஒரு விஞ்ஞானி மரத்தின் சேவையை பணத்தின் அடிப்படையில் கணக்கிட்டிருக்கிறார்.அதன்படி ஐம்பது ஆண்டுகள் வரை வாழும் ஒரு சாதாரண மரம் தனது ஆயுத காலத்தில் 18 லட்சம் ரூபாய் பெறுமான சேவை செய்கிறது.
1.ஒவ்வொரு ஆண்டும் அம்மரம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ50000/-
2.புரதப் பொருளாக மாற்றும் சேவை ரூ.20000/-
3.ஒரு மரம் காற்றை சுத்திகரிக்கும் செயலை நாம் செய்தால் அதற்கு ஆகும் செலவு ரூ.5,00,000/-
4.மரம் வெட்டப்பட்டால் அங்கு அதே அளவு மண் வளத்தைப் பாதுகாக்க 50ஆண்டுகளில் நமக்கு ஆகும் செலவு ரூ.3,00,000/-
5.மரத்தின் நிழலிலும்,பாதுகாப்பிலும் தங்கும் பறவைகள்,விலங்குகள் முதலியவற்றிற்கு மரம் செய்யும் சேவையை நாம்செய்தால் அதற்கு ஆகும் செலவு ரூ.3,00,000/-
ஒரு மரம் வெட்டுமுன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.
******
தபால் துறை செயல் படத் துவங்கிய புதிதில் தபால்களைக் குதிரை வீரர்கள் எடுத்து சென்றனர்.ஒரு இடத்தில் அவர்கள் உணவருந்தி இளைப்பாறிய பிறகு குதிரைகளை மாற்றிக் கொண்டு செல்வார்கள்.அந்த இடத்திற்கு 'போஸ்ட்'என்று பெயர்.நாளடைவில் அந்தப் பெயரே கடிதங்களுக்கு வந்துவிட்டது.
******
ஆங்கிலத்தில்,ஒரே மாதிரி உச்சரிப்பில் முடியும் வார்த்தைகளின் தொகுப்பு நிறைய உள்ளன.அவற்றில்ஒன்றைப் பார்க்கலாம்.
QUADROON -வெள்ளையருக்கும்,நீக்ரோவிற்கும் பிறந்த குழந்தை.
LAGOON -கடலோடு இணைந்த ஆழமற்ற ஏரி
GAMBROON --லினென் துணி.
GOSSOON --ஐரிஸ் மொழியில் சிறுவனைக் குறிக்கும் சொல்.
POLTROON --முழுக்கோழை
LAMPOON --ஒருவனை கடுமையாக,வழக்கமாகப் பரிகசித்துக் கூறும் வர்ணனை .
SPITTOON --எச்சில் துப்பப் பயன்படும் பாத்திரம்.
DOUBLOON--ஸ்பானிய நாணயம்.
COCOON --புழு வண்ணத்துப் பூச்சியாக மாறும் காலத்தில் வாழும் கூடு.
PONTOON --அடி பாகம் தட்டையாக உள்ள படகு.
TYPHOON --கடும் புயல் காற்று.
MAROON வான வேடிக்கை.
முல்லாவின் நண்பர் ஒருவர் கேட்டார்,''நீங்கள் தூங்கி எழுந்ததும்,நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு அதிபதி ஆகி விட்டீர்கள் என்று தகவல் வந்தால் என்ன செய்வீர்கள்?''ஒருவர் சொன்னார்,''நான்பெரிய பங்களாவை விலை பேசுவேன்,''என்றார்.இன்னொருவர்,''இந்தப் பணத்தைக்கொண்டு எப்படியெல்லாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று விபரம் சேகரிப்பேன்.'' முல்லா சொன்னார்,''நான் மறுபடியும் தூங்கப் போவேன்,'' கேள்வி கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை.முல்லா விளக்கினார்,''நான் மறுபடியும் தூங்கி எழுந்தால் இன்னொரு கோடி கிடைக்கவாய்ப்பு இருக்கிறது அல்லவா?''
******
முல்லா கோபத்துடன் ஒரு பெரியவரைப் பார்த்து,''நீ நரகத்துக்குப் போ,''என்று கத்தினார்.அருகில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஏனெனில் அந்தப் பெரியவர் அவ்வளவு நல்லவர்.உடனே எல்லோருமொன்று கூடி முல்லா அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.முல்லாவும் வேறு வழியின்றி போகவே பெரியவரைப் பார்த்து சொன்னார்,''நீங்கள் நரகத்துக்குப் போக வேண்டாம்.''
******
முல்லா மனநலம் குன்றியவர்களுக்கான மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டிருந்தார்.சில நாள் கழித்து அவரைப் பார்க்க வந்த நண்பர் சொன்னார்,''நான் டாக்டரிடம் பேசினேன்.நீங்கள் குணமாகி வருவதாகவும்,விரைவில் வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் சொன்னார்,''முல்லா கோபத்துடன் சொன்னார்,''இவ்வளவு வசதியான இடத்தைவிட்டுவிட்டு,பேய் போலக் கத்தும் என் மனைவி இருக்கும் வீட்டிற்குத் திரும்பச் செல்ல எனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?"'
******
ஆசை என்ற ஒன்று இருக்கிறது.அது மனிதர்களை ஆட்டிப் படை க்கிறது. .ஆணோ,பெண்ணோ ஒருவரையும் அது விட்டு வைப்பதில்லை.ஒரு பொருளின் மீது ஆசை உண்டாகிறது.அது உடனே கிடைத்து விட்டால் பிரச்சினை இல்லை.ஆசைப்பட்டது கிடைக்காது என்றால் பிரச்சினை இல்லை.கிடைக்கும்,ஆனால் கிடைக்க மாட்டேன் என்கிறது என்ற நிலை வரும்போதுதான்.பிரச்சினை.அப்போதுதான் ஆசை நிறைவேறுமா என்ற சந்தேகம் தோன்றுகிறது.முடிவு ஏற்படாமல் இப்படி ஒரு இழுபறி நிலை உண்டாகும்போது ஆசைக்குத் தீவிரம் உண்டாகும்.பின் வெறியாக ஆவேசமடைந்துவிடும்.பயம் ஒரு பக்கம்,வெறி ஒரு பக்கம் ஆக இரண்டு பக்கமும் பிசையப் பிசையக் குழப்பம் உண்டாகும்.தைரியம் எவ்வளவு இருந்தாலும் புத்தி தடுமாறிவிடும்
ஆசை நிறைவேறுமா,நிறைவேறாதா என்ற சந்தேகத்தில் ஜோதிடம் பார்ப்பார்கள்.ரேகை சாஸ்திரம் பார்ப்பார்கள்.தங்களுக்குள்ளே ஒரு ஆரூடத்தை உண்டாக்கி அதை வைத்துப் பலனைக் கணிப்பார்கள். புத்தகத்தைப் பிரித்துப் பார்ப்பார்கள்.பிரித்த பக்கத்தில் விஷயம் நன்றாக இருந்தால் காரியம் கைகூடும் என்று திருப்திப் படுவார்கள்.விஷயம் ஒரு மாதிரியாக இருந்தால் காரியம் கைகூடாதோ என்று பதறுவார்கள்.
காரியம் கைகூடும் வரை மனம் அதை நோக்கியே ஓடும்.மறப்பதற்கு மனமும் எத்தனையோ தந்திரம் செய்து பார்க்கும்.ஆனாலும் மறக்க முடியாது.அந்த நினைப்பே சுற்றிச் சுற்றி வரும்.
நினைப்பு வந்தால் சும்மா இருக்குமா?அது சம்பந்தமான பாரத்தை வார்த்தைகளாக இறக்கி வைக்கத் துடிக்கும்.மனதிற்குப் பிடித்தவர்களிடம் அக்காரியத்தைப் பற்றி,விசயத்தைத் தொடாமல் ஜாக்கிரதையாகப் பேச்சுக் கொடுக்கும்.சுற்றி வளைத்து பட்டும் படாமலும் விஷயத்தை ஜாடைமாடையாகக் காட்டும்.
இவ்வளவும் ஆசை காரணமாக வரும் உணர்ச்சிகள்.சோர்வு,பயம்,கலக்கம்,தைரியம்,மகிழ்ச்சி இவை யாவும் ஆசையிலிருந்து பிறக்கின்றன.
பிரச்சினைக்குத் தீர்வு காண முயல்வது விவேகம் அல்ல.பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகக் கூடும் பல கூட்டங்கள் துன்பத்தில் முடிந்துள்ளன. உங்களுக்குப் பிரச்சினை எதுவும் இல்லையென்றால் நீங்கள் பிறருக்குப் பிரச்சினையை உண்டாக்குவீர்கள்.ஏதாவது ஒரு பிரச்சினை உங்கள் கையில் இருந்தால்தான் உங்கள் மனம் ஒருமுகப்படும்.எந்தப் பிரச்சினையும் இல்லையென்றால் நீங்கள் மற்றவர்களுக்குப் பிரச்சினை ஆகி விடுவீர்கள். எனவே பிறருக்குப் பிரச்சினையாக இருப்பதை விட நாம் ஒரு பிரச்சினையோடு இருப்பது நல்லது.
******
சலிப்போடு இருந்தால் உங்களை நீங்களே சாந்தப் படுத்திக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே திருப்திப் படுத்திக் கொள்ளுங்கள்.இன்னொருவர் உங்களை சாந்தப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அது நீங்கள் தெளிவாயில்லை என்பதன் அடையாளம்.இதுதான் அறியாமையின் வேர்.எப்போதும் உற்சாகத்துடன் இருங்கள்.
******
குறை கூறுகிற முகத்துடன் தெய்வீக அன்பைப் பெறுதல் இயலாதது.அது முன்னுணர்வு இல்லாத மனதின் அடையாளம்.குறை கூற வேண்டும் என்றால் ஆண்டவனிடம் கூறுங்கள்.ஏனெனில் அவர் காதுகளை மூடிக் கொண்டுள்ளார்.
******
இன்னொருவர்க்குக் கீழ் வேலை செய்ய மறுப்பது பலவீனத்தின் அடையாளம்.தன் பலம் தெரிந்தவர்கள் யாருக்குக் கீழ் வேலை செய்தாலும் அதை வசதிக் குறைவாக எண்ண மாட்டார்கள்.பலவீனமானவர்களும் ஊக்கம் குன்றியவர்களும் தான் இன்னொருவருக்குக் கீழ் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள்.அவர்களுடைய பலம் அவர்களுக்குத் தெரிவதில்லை.
******
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்.
நண்பர்கள் முலாம் பழத்தைப் போன்றவர்கள்.ஒரு நல்ல முலாம் பழத்தை சுவைக்க நூறு பழங்களை ருசி பார்க்க வேண்டியிருக்கும்.
******
நட்பு இரு உடல்களில் உறையும் ஒரே ஆன்மா.
******
நட்பு கொள்வதில் நிதானமாக இருக்கவும்.நட்பு கொண்டபின் அதில் நிலையாகவும் உறுதியாகவும் இருக்கவும்.
******
மனிதன் மன மகிழ்ச்சி கொள்ளவும்,பெருமை கொள்ளவும் இறைவன் கொடுத்த வரம் 'நண்பர்கள்'.
******
நம்மைப் பாராட்டுவதை விட நம்மிடம் அதிக அன்பு செலுத்தி,நமக்கு உதவுபவனே உண்மையான நண்பன்.
******
சட்டம் என்ன சொல்கிறது என்பது முக்கியம் அல்ல.
சட்டம் என்ன செய்கிறது என்பதுதான் முக்கியம்.
******
இறக்கைகளுடன் பிறந்திருக்கும் நீ ஏன் தவழ ஆசைப்படுகிறாய்?
******
எல்லோரிடமும் இரக்கம் காட்டு.ஏனெனில் நீ சந்திக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு பிரச்சினையோடு கடுமையாகபோரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
******
ஆயிரம் தலைகள் பிரார்த்தனைக்காக குனிந்து வணங்குவதை விட
ஒரேஓர் இதயம் மகிழ செய்யப்படும் ஒரே ஒரு செயல் மேலானது.
******
உண்மையே பேசு.
இனிமையானவற்றையே பேசு.
இனிமையற்ற உண்மையைப் பேசாதே.
இனிமையான பொய்யைப் பேசாதே.
******
பணத்தையும்,அதிகாரத்தையும்,செல்வாக்கையும்
அடித்துவிடக் கூடிய சமாசாரம் ஒன்று உண்டு.
அதுதான் உற்சாகம்.
******
நண்பர்களைக் கூட்டு.பகைவர்களைக்கழி.
உற்சாகத்தைப் பெருக்கு.உன் கவலைகளை வகு.
கடவுளை மையமாக வைத்து
அன்பை ஆரமாக வைத்து
உன் வாழ்க்கை என்னும் வட்டத்தை வரை.
******
அதிக ஏக்கமே புலம்பலாக மாறும்.
******
பல விசயங்களில் நாம் ஆர்வமாக ஈடுபடுகின்றோம்.கொஞ்ச தூரம் போனதும்தான்,''ஐயோ! வசமாக மாட்டிக் கொண்டோம் போலிருக்கிறதே!ஜகா வாங்க வேண்டியதுதானா?''என்கிற கலவர நினைப்பு வரும்.ஆனால் சுற்றியிருப்பவர்கள் நம்மைக் கேவலமாகப் பேசுவார்களே என்ற நினைப்பும் சேர்ந்தே வரும்.இவை நம்மைப் பலவீனப்படுத்துவதற்குப் பதிலாக பலப்படுத்தி விட்டுப் போகும்.அதாவது,'என்ன ஆனாலும் சரி,ஒரு கை பார்த்து விடுவது,''என்று இறங்கி,முகத்தைப் பெயர்த்துக் கொள்வார்கள்.இது புத்திசாலிக்கு அழகல்ல.எவ்வளவோ விசயங்களை ஆர்வக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறோம்,அப்போது பிரச்சினை பூதாகரமாகத் தெரிவதில்லை.இறங்க இறங்கத்தான் ஆழம் மட்டுப் படுகிறது.சுட்டுப் பொசுங்கிய பின்தான் சூடு புலப்படுகிறது.இது பின் வாங்க வேண்டிய தருணம்!அதற்காக எந்த விசயத்தில் தடங்கல் வந்தாலும் உடனே உதறி விட்டு ஓடி விட வேண்டும் என்று பொருள் அல்ல.கடைசி வரை போராட வேண்டியது தான்.ஆனால் நம்பிக்கை ஒளி கொஞ்சம் கூடத் தெரியாத பிரச்னை எண்ணும் மலை முகட்டில்,போலியான கௌரவத்திற்காகவும்,யார் என்ன நினைப்பார்களோ என்ற அர்த்தமற்ற வாதத்திற்காகவும் நடந்து,நடந்து அதல பாதாளத்தில் விழுந்து விடக் கூடாது.சொல்லியும் கேளாமல் சுயமாயும் புரியாமல்,'எனக்கு நானே குழி தோண்டிக் கொள்கிறேன்,''என்ற வரட்டுத் தனத்திற்கு நாம் ஒரு போதும் விலை போய் விடக் கூடாது.இடையில் பின் வாங்குவது அவமானம் எனத் தயங்குபவர்கள் முழுப் பாதையும் கடந்தபின் வாங்கப் போவது அதை விடப் பெரிய அவமானம் என்பதை உணர வேண்டும்.பாதித் தவறை செய்து திருத்திக் கொண்டவனை மன்னிக்க உலகம் தயாராக இருக்கிறது.ஆனால் முழுத் தவறை செய்து விட்டால் சாமான்யமாய் மறக்காது;மன்னிக்கவும் செய்யாது.
நிச்சயமாகத் தவறு என்று தெரிந்து விட்டால் எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் பின் வாங்குவதில் தவறேயில்லை!
பெண்ணை மலிவாக நினைக்காதே.,இழிவாகப்பேசாதே,
அடிமையாக நடத்தாதே!
அவளை சக மனுஷியாக நினை;சரிசமமாக நடத்து.
சரியும்,தவறும் செய்யும் சராசரி பிறவியாக நினை.
அதை விட்டுவிட்டு,ஏண்டா பாவி,
தேவதையாக வர்ணிக்கிறாய்,தெய்வமாக வணங்குகிறாய்,
'உலகமே'என்று உளறுகிறாய்?
சமமானவளை சாமியாக்கி,சாமியாடிவிட்டு,
சகஜம் புரியும்போது,சமாதானம் ஆக முடியாமல்
சமாதியாகி விடுகிறாய்.
கற்பை she-mail க்கு மட்டும் அனுப்பாதே,அது he-mail க்கும்தான்.
எந்த லட்சணத்தில் நீ காப்பாற்றுகிறாயோ கற்பை,
அதே லட்சியத்தில் அவளும்,புரிந்து கொள்!
******
பிடிக்கலையின்னு சொல்ல காரணம் ஆயிரம் இருக்கும்.
ஆனால் பிடிச்சதுக்குக் காரணம் என்னமோ,அனேகமாக 'என்னமோ'வாகத்தான் இருக்கும்.
******
வாழ்க்கை என்பது வெற்றி தோல்வி அல்ல அறிவிக்க:
அது ஒரு அனுபவம்-அனுபவிக்க;சுவை-சுவைக்க;ரசனை-ரசிக்க.
******
தன்னிடமுள்ள ப்ளஸ்களை மட்டுமே
சீவிச் சிங்காரித்துக் காட்டி சிக்கிக் கொண்டவர்களின்
காதல் மட்டுமே கல்யாணத்துக்குப் பிறகு
ஒரு சிறு மைனஸ் தென்பட்டாலும் முறிந்துவிடும்.
******
ரா .பார்த்திபன் எழுதிய 'கிறுக்கல்கள்'என்ற நூலிலிருந்து.
வாழ்க்கை ஒரு சிறைச்சாலை அல்ல.அது ஒரு தண்டனை அல்ல.அது ஒரு பரிசு.அதைப் பெறத் தகுதியானவர்களுக்கு மட்டுமே அது வழங்கப்பட்டு உள்ளது.இப்போது அதை ரசித்து மகிழ்வது உங்கள் கடமை.அதை ரசிக்கா விட்டால் அது ஒரு பாவம்.நீங்கள் வாழ்க்கையை அழகு படுத்தவில்லை என்றால்,அது இருந்தபடியே அதை விட்டு வைத்தால்,அது உயிர் வாழ்தலுக்கு எதிரானது.வாழ்வை இன்னும் கொஞ்சம் மகிழ்ச்சிகரமானதாக ஆக்குங்கள்.மேலும் சற்றே அழகானதாக, நறுமணம் மிக்கதாக ஆக்குங்கள்.
******
வாழ்க்கை ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்,ஒரு ஆசையாக அல்ல.ஒரு நாட்டின் அதிபராகவோ,பிரதமராகவோ ஆக வேண்டும் என்பது போன்ற லட்சியம் இல்லாமல்,'நான்யார்?'என்று கண்டறியும் ஒரு தேடுதலாக இருக்க வேண்டும்.தான் யார் என்று அறியாத மக்கள் யாராகவோ ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு வினோதம்தான்.அவர்கள் இப்போது யாராக இருக்கிறார்கள் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
******
நீ அக்கறை காட்டத் தேவையில்லாத விசயங்கள்இருக்கின்றன.நீ அவற்றை வெறுமனே கவனித்தால் போதும்.அவை சென்று விடும். கோபம், பொறாமை, பேராசை --இருளின் இந்த பாகங்களில் எல்லாம் ஒரு ஒற்றுமை இருக்கிறது.அதாவது அவற்றை நீ கவனித்தால் போதும்,அவை மறையத் தொடங்கிவிடும்.நீ வேறு எதுவும் செய்யத் தேவையில்லை.நல்லது கெட்டது என்பதற்கு வேறு எந்த வரைமுறையும் கிடையாது.கவனிப்பதுதான் அதை முடிவு செய்கிறது.
******
அரசியல்வாதி ஒருவர் மேடையில் பேசி முடித்துக் கீழே இறங்கினார். அப்போது ஒரு நிருபர் கேட்டார்,''நீங்கள் மது குடிப்பது உண்டா?''அரசியல்வாதி கேட்டார்,''இது அழைப்பா,விசாரணையா?''
******
தபால் அலுவலகத்துக்கு கோபத்துடன் ஒருவர் வந்தார்.''எனக்கு அடிக்கடி மிரட்டல் கடிதம் வருகிறது.இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும்.''என்று கத்தினார்.அங்கிருந்த அதிகாரி,''இதுஉடனே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.நீங்கள் முழு விபரங்கள் கொடுத்தால் நாங்கள் உங்களுக்கு உதவத் தயார்.இப்போது சொல்லுங்கள்,யாரிடமிருந்து உங்களுக்கு மிரட்டல் கடிதங்கள் வருகின்றன?''என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''வருமான வரி அலுவலகத்திலிருந்து.''
******
''என் மனைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிறாள்.என்ன செய்வது என்றே தெரியவில்லை,''என்று நண்பரிடம் அங்கலாய்த்தார் ஒருவர்.நண்பர் சொன்னார்,''அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.என் மனைவியும் அடிக்கடி தனக்குத்தானே பேசிக் கொள்வாள்.அவளுக்கே அது தெரிவதில்லை.என்ன,அவள் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்துக் கொள்வாள்.''
******
குடிகாரன் ஒருவன் சாக்கடையில் விழுந்து கிடந்தான்.அவ்வழியே சென்ற பெரியவர் ஒருவர் கேட்டார்,''மது செய்த வேலைதானே இது?''குடிகாரன் சொன்னான்,''இல்லை,இது வாழைப்பழத் தோல் செய்த வேலை.''
******
கம்ப ராமாயணத்தில் ரசிக்கக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.
அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.அப்போது அவர் நினைவெல்லாம் ராமன்தான்.ராமனுடைய சிறந்த குணங்கள் ஒவ்வொன்றையும் நினைவு படுத்தி மகிழ்கிறார்,கண்ணீர் சொறிகிறார்.நட்பின் இலக்கணமான ராமனைப் பற்றி நினைக்கும் பாடல் ஒன்று:
''ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய
ஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி
தோழன் மங்கைகொழுந்தி எனச்சொன்ன
வாழி நட்பினைஉண்ணி மயங்குவாள்.''
ஆழமான நீரை உடைய கங்கை நதியில் படகு ஓட்டும்ஏழை வேடன் குகன் செய்த உதவிக்கு நன்றி கூறும் ராமன் சொல்கிறார்,''நீ என் தம்பி.என் தம்பி உன் தோழன்.என் மனைவி உன் கொழுந்தி.''ஏழை வேடனிடம் இப்படி ராமன் நட்பு பாராட்டியுள்ளதை சீதை நினைவு கூர்வதாக கம்பன் அழகாக வர்ணித்துள்ளார்.
பல் டாக்டரிடம் சென்று முல்லா,''இங்கு பல் பிடுங்குவதற்கு என்ன கட்டணம்?:''என்று கேட்டார்.டாக்டர் சொன்னார்,''சாதாரணமாய் பிடுங்குவதற்கு முன்னூறு ரூபாய் ஆகும்.ஆனால் வலி அதிகம் இருக்கும்.மயக்க மருந்து கொடுத்து பிடுங்கினால் வலி தெரியாது ஆனால் கட்டணம் ஐநூறு ரூபாய் ஆகும்,''முல்லா சொன்னார், ''பரவாயில்லை, முன்னூறு ரூபாய் கட்டணத்திலேயே பிடுங்கிக் கொள்ளலாம்,''உடனே டாக்டர், ''பரவாயில்லையே, நீங்கள் பலசாலி மட்டுமல்ல,தைரியசாலியும் கூட,''என்றார்.முல்லா சொன்னார், ''எனக்குப் பல்பிடுங்க வேண்டியதில்லை .என்மாமியாருக்குத்தான் பிடுங்க வேண்டியிருக்கிறது.''
******
முல்லா சரியான சோம்பேறி.அலுவலகத்துக்கு தினசரி தாமதமாக வந்து கொண்டிருந்தார். முதலாளி கூப்பிட்டு சொல்லிவிட்டார்,''இனி ஒரு நாள் தாமதமாக வந்தால் கூட உன்னை வேலையில் வைத்துக் கொள்ள மாட்டேன்.''முல்லா அன்றே ஒரு டாக்டரைப் பார்த்து மருந்து வாங்கி சாப்பிட்டார்.
முல்லா அரை மணி நேரம் முன்னாலேயே அன்று வருவதைப் பார்த்த முதலாளி கேட்டார் ,''பரவாயில்லை,இதே மாதிரி தினமும் வர வேண்டும்.அது சரி,நேற்று நீ எங்கே போயிருந்தாய்?''
******
முல்லா தனது குடும்பத்தினருடன் ஒரு மலைப் பகுதிக்கு உல்லாசப் பயணம் சென்றார்.அவரது மனைவி இயற்கை அழகில் ஒன்றி விட்டார்.ஒவ்வொரு மரம் செடி கொடியையும் ரசித்துக் கொண்டே வந்த அவர் ஒரு முகட்டின் ஓரத்திற்கு வந்து விட்டார்.சற்றே நகர்ந்தாலும் கீழே விழ வேண்டியது தான்.அதை அவர் கவனிக்கவில்லை.அப்போது முல்லாவின் பையன் அவரிடம் வந்து,''அம்மா,அப்பா, ஒன்று,நீ பின் பக்கமாக உடனே இரண்டு அடி எடுத்து வைக்க வேண்டும்,அல்லது கையில் வைத்திருக்கும் தின் பண்டங்களை என்னிடம் கொடுத்து விட வேண்டும்,என்று சொல்லச்சொன்னார்.''என்றான்.
******
முடி திருத்துபவர் முல்லாவிடம் சொன்னார்,''உங்களுக்கு முடி நிறைய உதிர்கிறதே!''முல்லா சொன்னார்,''எனக்கு ரொம்பக் கவலை.அதனால்தான் முடி உதிர்கிறது.''முடி திருத்துபவர் கேட்டார்,''அப்படி உங்களுக்கு என்ன தான் கவலை?''முல்லா சொன்னார்,''முடி உதிர்கிறதே என்ற கவலைதான்.''
******
நண்பர் முல்லாவிடம் சொன்னார்,''அன்றைக்கு நடந்த கூட்டத்திற்கு மனைவியுடன் வந்திருந்தீர்களே!பாவம்,உங்கள் மனைவிக்குதான் அன்று உடல் நிலை சரியில்லைபோல.தொடர்ந்து இருமிக் கொண்டே இருந்தார்களே!''முல்லா சொன்னார்,''அது வேறொன்றுமில்லை.அன்றுதான் அவள் புதிய நகை ஒன்று அணிந்திருந்தாள்.''
******
முல்லா,கடைவீதியில் வாங்க வேண்டியதை எல்லாம் முடித்துவிட்டு காரை எடுத்தார்.அப்போது கார் முன்னால் நின்ற வண்டி மீது இடித்தது.அவசரமாக தனது காரை பின்புறம் நகர்த்தினார்.அப்போது கார் பின்னால் நின்று கொண்டிருந்த காரில் இடித்தது.ஒரு வழியாக சமாளித்து காரை சாலையில் திருப்பும்போது வந்து கொண்டிருந்த வண்டியில் இடித்தார்.உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.''உங்கள் லைசென்சைக் காட்டுங்கள்''என்று அவர் கேட்க முல்லா சொன்னார்,''ஏன் சார்,எனக்கு எவனாவது லைசென்ஸ் தருவானா?''
******
அர்ஜுனன் மனதை மாற்ற கண்ணன் ஐந்து பார்வைகளை விளக்குகிறார்.
வேதாந்தப்பார்வை :ஆன்மா ஒன்றுதான் அழிக்க முடியாதது.அழிவது உடல்தான்.
சுயதர்மப் பாதை:சுய தர்மத்திலிருந்து பின் வாங்கக் கூடாது. குறை யிருப்பினும் கை விடக்கூடாது.நெருப்புக்குப் புகை இருப்பதுபோல எச்செயலிலும் குறை இருக்கத்தான் செய்கிறது.உனக்கென விதிக்கப்பட்ட கடமையை செய்யும் போது அதில் எந்தப் பாவமும் ஏற்படுவதில்லை.
கர்மயோகப் பார்வை:கடமையைக் கடமைக்காகச் செய்ய வேண்டும்.விருப்பு வெறுப்பு கூடாது.கடமையை செய்.வரப்போகும் பலன் உன்னை எந்த விதத்திலும் பாதிக்க கூடாது.பலனை விரும்பியோ,வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை எந்த விதத்திலாவது கட்டுப் படுத்தி விடும்.செயலில் ஆசை ,கோபம்,விரக்தி போன்ற உணர்வுகள் சேரக் கூடாது.உனது செயல்களை இறைவனுக்கு அர்ப்பணித்து விடு.இறைவனை எண்ணி,அகங்காரம் இன்றி ,பலன் கருதாது செயல்படு.
பக்திப்பார்வை:எல்லாவற்றையும் செயலாக்குவது கடவுள்.அவன் அன்றி ஒரு அணுவும் அசையாது.செயலுக்கு நீ ஒரு கருவிதான்.உன் செயல்களை இறைவனுக்காக செய்.எப்போதும் கடவுள் உன்னிடம் இருப்பார்.
தத்துவப்பார்வை:செயல்படுவது ஒருவனுடைய சுபாவம்தான்.எந்தக் காரியத்தை செய்ய மாட்டேன் என்று பின் வாங்குகிறாயோ ,அதையே செய்யும்படி உன் சுபாவம் கட்டுப் படுத்தும்.
இறுதியாக கண்ணன் சரணாகதி பற்றி சொல்கிறான்:
உன் சுமையை என் மேல் இறக்கி வை.தருமம் அதர்மம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீ அல்ல.என்னையே புகலிடமாகக் கொண்டு உன் கடமையை செய்.
சூபி ஞானி ஜப்பார் தன்னிடம் வருபவர்களையெல்லாம் உட்கார்,ஆரம்பி என்று சொல்வார்.அவர் எந்த போதனையும் செய்வதில்லை.வருபவர்கள்தான் பேச வேண்டும்.அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் பேசி வெளியேற்றி விட வேண்டும்.சில சமயம் அவர்கூட கண்டபடி உளறுவார்.அதுபோல வருபவரையும் உளறச்சொல்வார்.மனிதர்களால் எவ்வளவு நேரம்தான் உளற முடியும்?எவ்வளவு நேரம்தான் பேச முடியும்?எல்லாம் கொட்டியபின் மனம் வெறுமையாகி விடும்.அவர்கள் மௌனமாக இருக்க ஆரம்பித்து விடுவார்கள். மனம் காலியான பின் ஒரு சூன்யம் தோன்றும்.அந்த வெறுமையில் தோன்றுவதுதான் விழிப்புணர்வு எனும் சுடர்.உண்மையில் அது அங்கேதான் இருந்தது.அதை மூடியிருந்த சிந்தனைகளையும், எண்ணங்களையும், இரைச்சல்களையும் எடுத்தெரிந்த பின்னர் அது தானே வெளிப்படுகிறது. ஜப்பார் கொண்டு வந்த இந்த முறை பிரபலமடைந்து,இன்று அவர் பெயரால் ஜிப்ரிஷ் என்று அழைக்கப் படுகிறது.
உடலுக்கும் இதே தன்மை உண்டு.எண்ணற்ற இறுக்கங்கள் உண்டு.நிர்ப்பந்தம் இல்லாமல் அது விரும்பும் அசைவுகளைச் செய்ய விடுங்கள். ஆடலாம், பாடலாம்,விழுந்து புரளலாம்,எதுவாயினும் சரி,செய்யட்டும்.வலிந்து திணிக்கக் கூடாது.அவ்வளவே.உடல் விரும்பிய அசைவுகளை செய்ய விட்டால் ஏற்படும் இறுக்கம் நீங்கிய தளர்வு நிலை இருக்கிறதே,அது ஒரு பரம சுகமான நிலை.
சங்க கால நூல்களில் முக்கியமானது.எட்டுத்தொகை.பல்வேறு சமயங்களில் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்கள்அறிஞர்களின் உதவியால் தொகுக்கப் பட்டவை.இந்நூல்கள் அகத்தைப் பற்றியும்,புறத்தைப் பற்றியும் கூறுவனவாக உள்ளன.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்
றித்திறந்த எட்டுத்தொகை.
நற்றிணை:அகப்பொருளில் திணை வகையை சேர்ந்த நூல்.175 புலவர்கள் பாடிய 400 பாக்கள் உள்ளன.உவமை அழகுக்கு இந்நூல் சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்நூலைத் தொகுப்பிக்க உதவி செய்தது,பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவராகும்.
குறுந்தொகை:இதனைத் தொகுத்தவர் பெயர் பூரிக்கோ.டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் உரை எழுதியுள்ளார்.இந்நூலின் 400 பாடல்கள் 206 புலவர்களால் பாடப்பட்டவை.'கொங்குதேர் வாழ்க்கை'என்று துவங்கும் பாடல் இதில் தான் உள்ளது.
ஐங்குறுநூறு:இந்நூல் அகப்பொருள் தழுவியது.பொருட்களின் இயற்கையையும்,தமிழின் இன்சுவையையும் இதன் கண் அறியலாம்.இதனைத் தொகுத்துத் தந்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார்.சில பாடல்கள் இந்நூலில் தற்போது காணப்படவில்லை.
பதிற்றுப்பத்து.சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பத்துப் பாடல்கள் பாடப் பட்டிருப்பதால் இப்பெயர்.இந்நூல் புறப்பொருள் பிரிவை சேர்ந்தது.
பரிபாடல்.பரிபாடல் என்பது பரிந்து வருவது.இது இசைப்பாட்டு என்றும் கூறப்பட்டது.இன்பத்தைப் பொருளாகக் கொண்டது.மொத்தப் பாடல்கள் 70 இந்நூலில் காணப்படும் பாடல்களைப் பாடியவர்கள் 13 பேர்.இந்நூலுக்கு உரை கண்டவர் பரிமேல் அழகர்.மதுரையின் மாண்பை விளக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கலித்தொகை:இது அகப்பொருள் தழுவிய நூல்.இதனைத் தொகுத்தவர் அறிஞர் நல்லந்துவனார்.
அகநானூறு:இந்நூல் நெடுந்தொகை என்றும் கூறப்படும்.பாடல்களை 145 பேர் எழுதியுள்ளனர்.இந்நூலைத் தொகுக்க உதவியது உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன்.தொகுத்தது மதுரை உப்பிரிகுடிகிழார் உருத்திரசன்மர் ஆவார்.இயற்கை வர்ணனைகள் மிகுதியாக உள்ளன.
புறநானூறு.:இந்நூலில் அமைந்த உவமைகள் சுவையும் பொருத்தமும் உடையன.இது தமிழ்நாடு,தமிழ் மக்களின் பண்டைய நிலை,சிறந்த நாகரீகம்முதலானவற்றை உணர்த்தும் தலை சிறந்த நூல்.
வாழ்க்கையே ஒரு நதியின் பிரவாகம் போன்றது.மலையில் பிறந்த நதி கடலில் சென்று முடிவது போல கருவறையில் பிறந்த வாழ்வு கல்லறையில் முடிகிறது.இடையிடையே எத்தனையோ மேடு பள்ளங்கள், ஆரவாரங்கள், மோதல்கள்.அத்தனை ரணங்களையும் போராட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொள்.வாழ்க்கையை அதன் போக்கில் அப்படியே ஏற்றுக்கொள். எதையும் திணிக்காதே.எதையும் மறுக்காதே.இயல்பை இயல்பு என உணர்ந்து அந்த இயல்போடு ஏற்றுக் கொள்.
******
குறிப்பிட்ட ஒரு பொருளால் ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்தப் பொருள் அவனை விட்டு நீங்கி விட்டால் அந்த மகிழ்ச்சியும் அவனை விட்டுப் போய்விடும்.குறிப்பிட்ட செயலால், நோக்கத்தால்,ஒருவனுக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது என்றால் அந்த செயல் முடிவடைந்த பின்னர் அந்த மகிழ்ச்சி அவனிடம் காணாமல் போய்விடும்.இங்கே மகிழ்ச்சி வெளியிலிருந்து வருவதல்ல.அது உள்ளிருந்து பொங்கிப் பெருகுவது. எப்போதும் பரவச நிலையில் இருப்பது.
******
தனிமையைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன்,
ஏனெனில் தனிமை என்னைக் கண்டு அஞ்சியதில்லை.
தனிமையைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன்.
ஏனெனில் என்னைப்போல் அதுவும் தனியானது.
தனிமையை நான் விரும்புகிறேன்.
ஏனெனில் அது என்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறது.
******
சூபி தத்துவங்கள்.
கடவுளைப் பேட்டி காண்பது போல கனவொன்று கண்டேன்.''ஓ.என்னைப்
பேட்டி காண வேண்டுமா?''என்று புன்னகையுடன் கடவுள் கேட்டார்.'உனக்கு நேரம் ஒதுக்க முடியுமானால் ...''என்று இழுத்தேன்.''காலமே நான் தானே?.சரி,என்ன கேள்விகள் கேட்க விரும்புகிறாய்?''என்று கடவுள் என்னைத் தட்டிக் கொடுத்துக் கேட்டார்.நான் கேட்டேன்,''மனித குலம் எந்த வகையிலாவது உன்னை ஆச்சரியப் படுத்துகிறதா?''கடவுள் சொல்ல ஆரம்பித்தார்,''மனிதன் குழந்தையாய் இருக்கும்போது விரைவில் பெரிய மனிதன் ஆக வேண்டும் என்று விரும்புகிறான்.பெரியவன் ஆகிய பின் குழந்தையாகவே இருந்திருக்கக் கூடாதா,என்று ஏங்குகிறான்.அடுத்து,உடல் நலம் கெட்டாலும் பரவாயில்லை என்று ஓய்வின்றிப் பணம் சேர்க்கிறான்.பின்னர் நோய் வந்து பணத்தை முழுவதும் உடல் நலத்திற்காக செலவழிக்கிறான்.இதை விட முக்கியமானது ஒன்று உள்ளது.எதிர்காலத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டு நிகழ் காலத்தை மறந்து விடுகிறான்.ஆனால் அவன் நிகழ் காலத்திலும் வாழ்வதில்லை.எதிர் காலத்திலும் வாழ்வதில்லை.
தனக்கு மரணமே கிடையாது என்ற எண்ணத்தில் வாழ்கிறான்.ஆனால் எப்போதுமே வாழாமல் இறக்கிறான்.''பின் சிறிது நேரம் எங்களுக்குள் மௌனம் நிலவியது.
மீண்டும் நான் கேட்டேன்,''குழந்தைகள் வாழ்க்கையில் என்ன பாடங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாய்?''கடவுள் திருவாய் மலர்ந்து,
''யாரும் நம்மீது அன்பு செலுத்த மாட்டார்கள்.,நாம்தான் பிறர் அன்பு செலுத்துமாறு நடந்து கொள்ள வேண்டும்.நம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லதில்லை.சில நொடிகளில் பிறரைக் காயப் படுத்தி விடலாம்.ஆனால் அதை சரி செய்ய பல ஆண்டுகள் ஆகும்.இரண்டு மனிதர்கள் ஒரே பொருளை வெவ்வேறு கோணத்தில் பார்க்க முடியும்.இவற்றையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே மனதில் படும்படி சொல்லி வையுங்கள்.''
''நன்றி கடவுளே,வேறேதேனும் குழந்தைகளுக்கு சொல்ல விரும்புகிறீர்களா?''என்று நான் கேட்க கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''நான் எப்போதும் இங்கு இருக்கிறேன்...''
இதுவரை இருந்தமனிதன் நிறைய வேதனைப்பட்டு விட்டான்.அவன் அவலத்தில் வாழ பழக்கப் பட்டிருக்கிறான்.துன்புறுவதிலும் சுய சித்திரவதையிலும் அவன் பயிற்சி அளிக்கப் பட்டிருக்கிறான்.அவனுக்கு சத்தியங்கள் வழங்கப்பட்டன.சாவுக்குப் பிறகு மகத்தான பரிசுகள் காத்திருப்பதாகக் கூறப்பட்டது.எத்தனை வேதனை அவன் படுகிறானோ,எந்த அளவுக்கு அவன் தன்னைத்தானே சித்திரவதை செய்து கொள்கிறானோ அவ்வளவு தூரம் பரிசுகள் அதிகரிக்குமாம்.இது சிலரின் சுயநலன்களுக்கு சாதகமாக இருந்தது.துன்புறும் மனிதனை அடிமைப் படுத்துவது சுலபம். அறியாத வருங்காலத்துக்காக தனது இன்றைய வாழ்வைத் தியாகம் செய்ய ஒப்புக் கொண்டவன்,தன்னை அடிமையாக்கிக் கொள்ளும்படி அறிவித்து விட்டவன் அவன்..காலம் காலமாக அவன் வெறும் நம்பிக்கைகளில் வாழ்ந்து விட்டான்.கற்பனைகளிலும்,கனவுகளிலும் வாழ்ந்து விட்டானே தவிர,யதார்த்தத்தை அவன் கண்டதில்லை.
ஒவ்வொரு குழந்தையும் ஒரு கட்டுப் படுத்தப்பட்ட கும்பலில்தான் பிறக்கிறது.ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,அண்டை அயலார் அனைவரும் கட்டுப் பட்டவர்களே.ஒரு சின்னக் குழந்தை ஆதரவற்றது.அதற்கு அந்தக் கும்பலுடன் ஒத்துப் போவதைத் தவிர வேறு வழி இல்லை.
பழையது சாகட்டும்;புதியது பிறக்கட்டும்!
புனித நூல் உன் வாழ்க்கைதான்.அதை உன்னையன்றி வேறு யாரும் எழுத முடியாது.நீ வெற்றுத்தாளுடைய புத்தகத்துடன் வந்தாய்.அதில் நீ என்ன எழுதுகிறாய் என்பதுதான் முக்கியம்.பிறப்பு மட்டும் வாழ்வல்ல.அது வாழ்வை உருவாக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாகும்.நீங்கள் நேசிக்கக் கூடிய அளவு ஒரு வாழ்வை உருவாக்கிக் கொள்வது அவசியம்.
ஒருவரை நாம் பார்த்தவுடன் அவர் எப்படிப்பட்டவர் என்று எடை போட ஆரம்பித்து விடுகிறோம்.இதேபோல மற்றவர்களும் நம்மை எடை போடுவார்களே!அவர்களது மனதில் இடம் பிடிக்கிற மாதிரி நாம் நடந்து கொள்ள வேண்டாமா?அதற்கு என்ன வழிகள் இருக்கின்றன?
இனிமையான குணத்தை விரும்பாதவர் யாருமில்லை.புதிதாக ஒருவரை சந்திக்கும்போது உங்களிடம் உள்ள நல்ல குணங்களை மட்டும் வெளிப் படுத்துங்கள்.அளவாகப் பேசுங்கள்;அழகாகப் பேசுங்கள்;இயல்பாகப் பேசுங்கள்;இனிமையாகப் பேசுங்கள்;சிரிக்க சிரிக்கப் பேசுங்கள். தேவைப்படும் போது ஆழமாகப் பேசுங்கள்.உங்களது பேச்சும் செயலும் அடுத்தவர் மனதில் அட்டை போல ஒட்டிக் கொள்ளும்.
எப்போதும் எந்த சூழ் நிலையிலும் நீங்கள் நீங்களாகவே இருங்கள். போலித் தனம் வேண்டாம்.நீங்கள் செயற்கையாக நடந்து கொள்ள முயற்சிப்பது ஆபத்து.ஏனெனில் உங்கள் செயற்கை சாயம் அடுத்தவர்க்கு அப்பட்டமாகத் தெரியும்.
உணர்வுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய உறுப்பு கண் தான்.மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டோ,தரையைப் பார்த்துக் கொண்டோ அடுத்தவரிடம் பேசுவது உங்கள் தாழ்வு மனப்பான்மையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.அடுத்தவர் கண்களை நேருக்கு நேராகப் பார்த்துப் பேசினால் உங்கள் தன்னம்பிக்கை பளிச்சிடும்.
பலர் இருக்கும் இடத்தில்,சுற்றியிருப்பவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ.எப்படி எதிர் பார்க்கிறார்களோ அதற்கேற்றபடி உங்கள் கருத்துக்களை சொல்லத் தொடங்கினால் தூண்டில் போல மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம் கவ்வி இழுக்கப்படும்.
முக மலர்ச்சியும்,கலகலப்பும் உங்களை உயர்த்திக் காட்டுகிற உன்னதமான குணங்கள்.வருத்தத்தோடு உங்களிடம் வருபவர்களின் கவனத்தை திசை திருப்பினால் அவரும் கவலையை மறந்து கலகலப்பாகி விடுவார்.
இந்த உத்திகளைப் பயன்படுத்தினால் பிறரைக் கவர்வதில் சிறந்த மனிதர் நீங்கள்தான்!
விசிறியை அசைக்காமல் காற்று வராது.
உழைப்பில்லாமல் உயர்வு வராது.
******
புத்திசாலித்தனமான குழந்தை
மகிழ்ச்சியான தந்தையை உருவாக்குகிறான்.
******
வெற்றி நமது தவறுகளை மூடி மறைத்துவிடும்.
******
கடமை உங்கள் வாசல்கதவைத்தட்டும் போது உடனே உள்ளே அழையுங்கள்.
காக்க வைத்தீர்களோ,அது புறப்பட்டுப்போய் இன்னும் ஏழு கடமைகளை அழைத்து வந்துவிடும்.
******
பணம் வரும்போது இரண்டு கால்களுடன் வரும்.
போகும்போது பல கால்களுடன் போகும்.
******
நீ நிமிர்ந்து நிற்கும்வரை உன் நிழல் கோணலாய் இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
******
சந்தேகம்,நம்பிக்கைக்கு எதிரானது அல்ல.
அதன் ஒரு பாகமே.
******
இரக்கத்தின் பனித்துளி கண்ணீர்.
******
துளசிக்கு வாசமும்,முள்ளுக்குக் கூர்மையும்
முளைக்கிறபோதே தெரியும்.
******
அசுத்தம்,வறுமை,துன்பம் எங்கு இருக்கிறதோ,அங்கு இசை இருக்க முடியாது.
******
கிணறு வற்றியபின் தான் தண்ணீரின் அருமை நமக்குத் தெரிகிறது.
******
கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு.
******
தங்கத் திறவுகோல் எல்லா பூட்டுக்களுக்கும் சேரும்.
******
பெண்களைக் கடத்திக் கொண்டு போய் ,பின் அவர்களது கணவர்களுக்குக் கடிதம் எழுதி மிரட்டி பணம் பெற்று விடுவிப்பது அவன் தொழில்.ஒரே மாதிரியாக அத்தொழிலை செய்தது அவனுக்கு போரடித்தது.அனைத்துத் துறையிலும் புதுமை விரும்புவோர் அமெரிக்கா செல்வதாக அறிந்த அவனும் அமெரிக்கா பயணமானான்.அங்கு இவன் தொழிலே செய்பவர்களைக் கண்டு அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்ற விபரம் கேட்டான்.அவர்கள், பெண்ணைக் கடத்திக் கொண்டு வைத்துக் கொண்டு அவர்களின் கணவர்களுக்குக் கடிதம் எழுதி வரவழைத்து பணம் பறிப்பதாகக் கூறினர். நம்மாளுக்கோ ஏமாற்றம்.''இதைத்தானே நானும் செய்து கொண்டிருக்கிறேன். இதைத் தெரிந்து கொள்ளவா இவ்வளவு தூரம் வந்தேன்?''என்று அங்கலாய்த்தான்.அமெரிக்கனுக்கும் மானப் பிரச்சினை.தான் தொழிலில் உயர்வானவன் என்று காட்ட வேண்டுமே!''சரி,கடிதத்தில் என்ன எழுதுவாய்?''என்று கேட்டனர்.நம்மாளும் சொன்னான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்ச ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் உன் மனைவி உனக்கு. இல்லையெனில் அவளைப் பிணமாகத்தான் பார்ப்பாய் என்று எழுதுவேன்.''அமெரிக்கன் சொன்னான்,''அங்குதான் உன் பழமைத்தன்மை வெளிப்படுகிறது.நாங்களெல்லாம் அப்படி எழுத மாட்டோம்.''நம்மவனுக்கு இப்போது சுவாரசியம் வந்து விட்டது .அமெரிக்கன் தொடர்ந்தான்,''நாளைக்குள் இந்த இடத்தில் ஒரு லட்சம் டாலர் கொண்டு வந்து கொடுக்கா விட்டால் நாங்கள் உன் மனைவியை உன்னிடமே அனுப்பிவிடுவோம் என்று எழுதுவோம்.மறுநாளே அந்த ஆட்கள் அலறி அடித்துக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்கள்.''
துன்பம் வரும்போது அதை அப்படியே அனுபவியுங்கள்.அதைக் கண்டு ஓட வேண்டாம்.அப்படி ஓடினால் அது உங்களைத் துரத்திக் கொண்டுதான் வரும்.அதை மறக்க நினைத்தால் அது உங்கள் மனதில் ஆழத்தில் பதுங்கி விடும்.மன வியாதிகளுக்கு மருந்து கொடுத்தால் அது உள்ள துன்பத்திலிருந்து உங்களை விலகி ஓடச்செய்யும்.அதனால் துன்பத்திலிருந்து உங்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்காது.நீங்கள் துன்பத்தினால் வரும் வடுவை தைரியமாக முழுமையாகப் பார்க்க வேண்டும்.
உங்கள் அறையில் அமைதியான சூழ்நிலையில் தனிமையில் அமர்ந்து வேறெதிலும் மனம் ஈடுபடாது உங்கள் உள்போராட்டங்களைக் கவனியுங்கள்.உங்கள் உள்ளே உண்டான வடுவின் வலியை முழுமையாக மேலே கொண்டு வந்து உணர்ந்தால் அது உங்கள் இதயத்தைப் பிழியும்.அது மரண வலியாகத்தான் இருக்கும்.அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். அப்போது நீங்கள் ஒரு குழந்தை போலக் கதறலாம்.தரையில் புரண்டு அழலாம்.அப்போது அந்த வலி உங்கள் உடல் முழுவதும் பரவி இருப்பதை உணர்வீர்கள்.
துன்பம்,கவலை என்று ஏற்படும்போது அதை மறக்க அல்லது வெளியே தள்ள இதுவரை பழக்கப் பட்டிருக்கிறீர்கள்.அதற்கு மாறாக அதை எவ்வளவு அதிகப் படுத்த முடியுமோ,அப்படி அதிகப் படுத்தி,அதை நீங்களே ஜீரணம் செய்வது என்பது ஒரு புதுமையான மாறுபட்ட செயல்.அது உங்கள் இயல்பாக மாற கொஞ்சம் நாட்கள் ஆகும்.அப்படி அந்த சக்தியை முழுமையாக ஜீரணம் செய்து விட்டால்,அது உங்கள் உடலோடும் உள்ளத்தோடும் கலந்து விட்டால் உங்களிடம் புதுமையான ஒரு கதவு திறக்கும்.அதன் வழியாக நீங்கள் ஒரு புதிய பயணத்தை தொடங்குவீர்கள்.நீங்கள் எப்போது அந்த வலியை பரிபூரணமாக ஏற்றுக் கொண்டு விட்டீர்களோ,அதனுடன் கலந்து விட்டீர்களோ,அதன்பிறகு அது உங்களுக்கு ஒரு வலியாகவோ, துன்பமாகவோ தெரியாது.ஒரு பெரிய ரசாயன மாறுதல் உங்களுக்குள் இப்போது நடந்திருக்கிறது.இப்போது உங்கள் வலி,துயரம்,கவலை,இறுக்கம் அனைத்தும் மகிழ்ச்சி, ஆனந்தம், புத்துணர்ச்சி,பூரிப்பாக மாறி இருக்கும்.இதை நீங்கள் அனுபவத்தில்தான் உணர முடியும்.
உலகில் உள்ள உயிர் வாழ் இனங்களில் மனிதன் மட்டுமே சிரிக்கிறான்.எந்த விலங்கோ பறவையோ சிரிப்பதில்லை.அதே போல 'எனக்கு போரடிக்கிறது' என்று சொல்லக் கூடியதும் மனிதன் மட்டுமே.வேறு எந்த இனத்திற்கும் போரடிப்பது என்றால் என்னவென்று தெரியாது.எனவே இந்த இரண்டுக்கும் ஒரு பிணைப்பு உள்ளது.மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு உள்ளது .எனவே அவனால் சிந்திக்க முடிகிறது.அவன் இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் அனைத்தும் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறான்.இதனால் நாகரீகமும் அறிவு வளர்ச்சியும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மனிதனுக்கு சிந்தனைகளினால் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இவற்றிற்கிடையே இடைவெளி ஏற்படும்போது மனிதன் வெறுமையை உணர்கிறான்.அதன் பிரதிபலிப்புதான் போரடிப்பது. போரடிப்பதற்கு மருந்துதான் சிரிப்பு.இந்த சிரிப்பு மட்டும் இல்லையென்றால் மனிதனுக்கு எப்போதும் நோய்தான்.விலங்குகளுக்கோ பறவைகளுக்கோ இந்த சிந்தனைகளும் எதிர்பார்ப்புகளும் இல்லை.அவை வாழ்வை அப்படியே எதிர் கொள்கின்றன.அதனால் அவற்றிற்கு சிரிப்பிற்கான அவசியம் இல்லை.ஆதிவாசிகள் மற்றும் பூர்வ குடி மக்களிடையே அதிகம் சிரிப்பு கிடையாது.அவர்கள் வசதிக் குறைவுடன் இருக்கலாம்.ஆனால் அவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் கிடையாது.அதனால் அவர்கள் எப்போதும் திருப்தியுடனும் மன நிறைவுடனும் இருக்கிறார்கள்.உலகிலேயே அதி புத்திசாலிகள் என்று யூத இனத்தை சேர்ந்தவர்களை சொல்வார்கள். நோபல் பரிசு வாங்கியவர்களில் அதிகம் பேர் யூத இனத்தை சேர்ந்தவர்களே. அவர்களிடையே தான் நகைச்சுவை கதைகளும் துணுக்குகளும் அதிகம் .இருக்கின்றன.அவர்களுக்குத்தான் அதிகம் போரடிக்கவும் செய்யும்.
அம்மா தோசை சுட்டுக் கொடுக்கக் கொடுக்க பையன் ஆவலுடன் சாப்பிட்டான்
வழக்கமாக ஐந்து தோசை சாப்பிடுவான்.அன்று எட்டு தோசை சாப்பிட்ட பின்னும் மீண்டும் தோசை கேட்டான்.அம்மா சொன்னார்,''தம்பி,இன்று போதும்.இதுக்கு மேல் சாப்பிட்டால் உன் வயிறு வெடித்துவிடும்.''பையன் சொன்னான்,''பரவாயில்லை அம்மா,நீ இன்னொரு தோசை சுட்டுக் கொடுத்து விட்டு, என் வயிறு வெடித்துவிடும் என்று பயந்தால் ஒதுங்கி நின்று கொள்.''
******
காதலன் காதலியிடம் சொன்னான்,''இன்று மட்டும் நமது வழக்கத்தை மாற்றிக் கொள்வோமே!''காதலி என்னவென்று கேட்டாள்.காதலன் சொன்னான்,''இன்று நீ என்னை முத்தம் இட முயற்சி செய்.நான் உன்னைக் கன்னத்தில் அறைகிறேன்.''
******
ஒருவன் நண்பனிடம் கேட்டான்,''ஒரு பெண்ணுக்கு எப்படி நீச்சல் சொல்லிக் கொடுப்பது?''நண்பன் சொன்னான்,''அது மிக நல்ல விசயமாயிற்றே!.
தண்ணீரில் இறங்கி முதலில் பெண்ணை இடுப்பை சுற்றிப் பிடித்துக் கொள்.பின் அவளுடைய வலது கையை மெதுவாக எடுத்து...''
''ஏய்,நிறுத்து.நான் என் சகோதரிக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும்.''
நண்பன் சொன்னான் ,''அப்படியானால் நீச்சல் மேடையிலிருந்து அவளை தண்ணீரில் தள்ளிவிட்டுவிடு.''
******
சீனாவில் மூன்று புத்த ஞானிகள் இருந்தார்கள்.அவர்கள் எங்கும் சேர்ந்தே செல்வார்கள்.ஒரு ஊருக்குச் சென்றால் அந்த ஊரின் மையப் பகுதியில் நின்று கொண்டு மூவரும் வயிறு குலுங்க சிரிக்க ஆரம்பிப்பார்கள்.உடனே அங்கு கூட்டம் கூட ஆரம்பித்து விடும்.சிறிது நேரத்தில் அனைவருமே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள்.அவர்கள் எந்த விதமான புத்திமதிகளோ ஆலோசனைகளோ சொல்வது இல்லை.அது ஏன்?சிரிப்பைத்தவிர அவர்கள் யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. அவர்கள் வந்த இடம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மக்கள் அவர்களை மிக நேசித்து 'சிரிக்கும் புத்தர்கள்' (LAUGHING BUDHDHAS)என்று அழைத்தார்கள்.ஒரு கிராமத்துக்கு சென்ற போது அவர்களில் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்து போனார்.இப்போது மீதி இரண்டு பேரும் கண்டிப்பாக அழுவார்கள் என்று எண்ணி மக்கள் சென்றபோது அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.அதில் ஒருவர் அதிசயமாய் வாய் திறந்து,''அவன் மரணத்தில் எங்களை வென்று விட்டான். அவன் வெற்றியைக் கொண்டாட நாங்கள் சிரிக்கிறோம்,''என்றார்.பின் இறந்த புத்தரை அப்படியே சிதைக்குக் கொண்டு போனார்கள்.பிணத்தைக் குளிப்பாட்டவில்லை.புதுத் துணிகள் மாற்றவில்லை.ஏன் என்று மக்கள் கேட்டதற்கு அந்த ஞானி சொன்னார்,''அவன் இறக்கும் முன்னே, தான் தூய்மையாகவே இருப்பதாகவும் அதனால் இறந்தபின் தன்னை எந்த மாற்றமும் செய்யாது அப்படியே சிதையில் எரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறான்'' என்றார்.சீதை மூட்டப்பட்டது.திடீரென இறந்த உடலிலிருந்து வான வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன.அப்போதுதான் எல்லோருக்கும் தெரிந்தது,அவர் ஏன் ஆடை மாற்ற வேண்டாம் என்று சொன்னார் என்று.தான் இறந்த பின்னும் மக்கள் கவலையின்றி சிரிக்கவேண்டும் என்ற குறிக்கோளுடன் தனது ஆடையின் உள்ளே வெடிகளை ஒளித்து வைத்திருக்கிறார். அது கடைசி வரை யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.சிரிப்பையே போதனையாக தந்த அவர்களை இன்றும் மக்கள் மறவாதிருக்கிறார்கள்.
தற்போது அவர்கள் பொம்மைகளை வீட்டில் வைப்பது வளம் தரும் என்ற நம்பிக்கை உலகெங்கும் உள்ளது.
காதலி காதலனிடம் கேட்டாள்,''நீ என்னை உயிருக்குயிராய்க் காதலிப்பதாகச் சொல்கிறாயே,நான் உன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லைஎன்றால் தற்கொலை செய்து கொள்வாயா?''
காதலன் சொன்னான்,''உறுதியாக!அது என் பழக்கமாயிற்றே!''
******
காதலன் காதலியிடம் பெருமையாகக் கேட்டான்,''உன்வீட்டில் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள்?நான் கவிதை எழுதுவது,கதை எழுதுவது இதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா?''
காதலி சொன்னாள்,''இப்போதுதான் நீ தண்ணி அடிப்பது,சூதாடுவது பற்றிச் சொல்லியுள்ளேன்.எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சொல்ல முடியாதல்லவா?''
******
இளைஞன் ஒருவன் வாழ்த்து அட்டைகள் விற்கும் கடைக்குப் போனான்.ஒரு அட்டையில்,''நான் மிக விரும்பும் ஒரே ஒரு பெண்ணுக்கு என் வாழ்த்துக்கள்'' என்றுஇருந்தது.கடைக்காரர் சொன்னார்,''இதை நிறையப் பேர் விரும்பி வாங்குகிறார்கள்,''.உடனே இளைஞன் சொன்னான்,''அப்படியானால் அதில் ஆறு அட்டைகள் கொடுங்கள்.''
******
முல்லா, ஒரு பொருட்காட்சி சாலையில் ஒரு ராட்டினத்தில் சுற்றிக் கொண்டிருந்தார்.ராட்டினம் நின்றவுடன் வேகமாக இறங்கிக் கீழே சென்று தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் வேகமாக வந்து ராட்டினத்தில் ஏறிக் கொண்டார்.இதுபோல திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தார்.இவரை முழுவதும் கவனித்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி கேட்டாள், ''முல்லா, உங்களுக்கு ராட்டினத்தில் சுற்றுவது என்றால் அவ்வளவு ஆசையா?''முல்லா சொன்னார்,''இல்லை,அம்மா,எனக்கு ராட்டினத்தில் சுற்றுவது பிடிக்கவே செய்யாது.தலை வேறு சுற்றும்,வாந்தி வரும்,''அச்சிறுமி ஆச்சரியத்துடன்,''பின் ஏன் மீண்டும் மீண்டும் சுற்றுகிறீர்கள்?''என்று கேட்க,முல்லா சொன்னார்,''என்னம்மா செய்வது?இந்தப்பயல் எனக்கு கடன் தர வேண்டியுள்ளது.நீண்ட நாட்களாகக் கேட்டும் தரவில்லை.இப்படியாவது ராட்டினத்தில் ஏறிக் கணக்கை முடிக்கலாமே என்று நினைத்தேன்.''
******
முல்லா ஒரு பணக்காரப் பெண்ணைக் காதலித்தார்.அந்தப் பெண் ஒருநாள் சோகமாக வந்து,''முல்லா,என் அப்பா சொத்து முழுவதையும் தொலைத்து விட்டார்.இப்போது நான் ஒரு ஏழை.என்னை எப்போதும் போலக் காதலிப்பீர்களா?''என்று கேட்டாள்.முல்லாவும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு,''நான் உன்னை ஆயுள் முழுவதும் காதலிப்பேன்.இனி நீ என்னை எப்போதும் பார்க்க முடியாது என்றாலும் தொடர்ந்து நான் உன்னைக் காதலிப்பேன்.''என்றார்.
******
முல்லா ஒரு அலுவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.தினசரி வேலைக்கு தாமதமாக வருவதைக் கவனித்த முதலாளி,''என்ன முல்லா,கடிகாரம் பார்ப்பது இல்லையா?''என்று கேட்டார்.முல்லா உடனே ,''எனக்கு கடிகாரம் பார்க்கும் பழக்கம் போய்விட்டது.அதற்குக் காரணம் நீங்கள்தான்.''என்றார்,அதிர்ந்து போய் முல்லாவை முதலாளி பார்க்க,முல்லா தொடர்ந்தார்,''தினசரி அலுவலகத்தில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எல்லோரும் நேரம் பார்க்காது வேலை பார்க்க வேண்டும் என்று தானே அடிக்கடி சொல்கிறீர்கள்!அதை அப்படியே கடைப் பிடித்து வந்ததால் இப்போது கடிகாரம் பார்க்கும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.என்ன...வீட்டிற்குப் போனாலும் இதே பழக்கம் தொடர்கிறது.''
******
முல்லா ஒருவரிடம் வேலை கேட்டுப் போனார்.தனக்கு அவர்கள் கேட்பது போல ஐந்து வருட அனுபவம் இருப்பதாகக் கூற அவருக்கு உடனே வேலை கிடைத்து விட்டது.சிறிது நாள் கழித்து அவரை முதலாளி கூப்பிட்டு அனுப்பி,''விசாரித்ததில் உனக்கு எந்த அனுபவமும் இருப்பதாகத் தெரியவில்லையே.ஏன் பொய் சொன்னாய்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார்,''நீங்கள்தான் இந்த வேலைக்கு கற்பனைத்திறன் மிக்கவர்கள் வேண்டும் என்று கேட்டீர்கள்!''
******
மனிதர்கள் மகிழ்ச்சியை அது இல்லாத இடத்தில் தேடுகிறார்கள்.அவர்கள் பாலைவனங்களில் தண்ணீரைத் தேடுகிறார்கள்.ஏமாற்றம் வரும் போது, தோல்வி வரும்போது,துயரம் வரும்போது அவர்கள் வாழ்க்கை மீது கோபம் கொள்கிறார்கள்.தங்கள் மீது கோபம் கொள்வதில்லை.வாழ்க்கை என்ன செய்யும்?அது எப்போதும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது.நீங்கள்தான் அதைத் தவறான வழியில் தேட முற்பட்டு விடுகிறீர்கள்.
******
மனிதர்கள் எல்லோருமே தனது நல்ல பக்கத்தை மட்டுமே உலகிற்குக் காட்டுகிறார்கள்.இதயம் முழுவதும் கண்ணீரால் நிரம்பி இருக்கலாம்.ஆனால் மனிதர்கள் புன்னகை செய்து கொண்டிருக்கிறார்கள்.இவ்வாறுதான் நாம் ஒரு பொய்யான சமூகத்தால் வளர்க்கப்பட்டு இருக்கிறோம்.நாம் உருவாக்கியுள்ள இந்த முழு சமுதாயமும் ஒரு நாடகம்தான்.யாரும் தனது சொந்த இதயத்தைத் திறப்பதில்லை.
******
ஒருமுறை வந்தபின் உங்களை ஒருபோதும் நீங்கிச் செல்லாத திருப்திதான் உண்மையான திருப்தி.வந்துகொண்டும்,திரும்பப் போய்க் கொண்டும் இருக்கும் திருப்தி உண்மையான திருப்தி இல்லை.அது இரண்டு துயரங்களின் இடையே உள்ள இடைவெளி.
******
பிறரிடம் மரியாதையாக இருப்பவர்கள்தான் அதிக தன் முனைப்புடையவர்களாக (EGOISTS)இருக்கிறார்கள்.அவர்கள் நிற்கின்ற பாங்கு,பேசுகிற விதம்,பார்க்கின்ற பார்வை,நடை எல்லாவற்றையும் மரியாதையாக இருப்பதுபோலக் காட்டிக் கொள்கிறார்கள்.ஆனால் உள்ளே அவர்களின் தன்முனைப்புதான் அவர்களைக் கையாளுகிறது.மிகவும் பணிவாக இருப்பவர்கள் ''தாங்கள் ஒன்றுமே இல்லை,கால்தூசு போன்றவர்கள்''என்று சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் அப்போது அவர்கள் கண்களைப் பார்த்தால் அங்கு தன்முனைப்பு ஆட்சி செய்வது தெரியும்.இதுமிக தந்திரமான தன்முனைப்பு ஆகும்.
மரியாதையாக இருப்பவர்கள் மிகவும் தந்திரக்காரர்கள்.சிறந்த சாமர்த்தியசாலிகள்.அவர்கள்,'நான் மிகச்சிறந்தவன்,'என்று சொன்னால் ஒவ்வொருவரும் அவர்களுக்கு எதிரிகள் ஆகி விடுவார்கள்.பிறகு போராட்டம் எழுகிறது.அவர்கள் தன்முனைப்பளர்கள் என்று முத்திரை குத்தப்படுவர்.அப்புறம் மக்களைத் தங்களுக்கு வசதியாக உபயோகப் படுத்திக் கொள்ள முடியாது.ஆனால் அவர்கள்,'நான் கால் தூசியைப் போன்றவன்'என்று சொன்னால்,மக்கள் எல்லோரும் அவர்களுக்கு தங்கள் கதவைத் திறப்பார்கள்.பிறகு அம்மக்களை அவர்கள் வசதிக்கு எப்படி வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ளலாம்.எல்லாவிதமான மரியாதைகளும் பண்பாடுகளும் ஒரு வகையான நாகரீகத் தந்திரத்தனமாகும்.
ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள்.மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர்.தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள்.ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுகிறாள். இறக்கி விடப்பட்ட குழந்தை அவள் கண்முன்னே வெட்டப்பட்டு மரணிக்கிறது. அவளிடம் ஒரு பெரியவர் கேட்கிறார்,''ஒரு தாய்க்கு இரண்டு குழந்தைகளும் சமமானதுதானே!அப்படி இருக்கும்போது எதை வைத்து ஒரு குழந்தையை பழி கொடுக்கத் துணிந்தாய்?''என்று.அந்தப்பெண் கண்ணீருடன் சொன்னாள்,''என் குழந்தைக்கும் பக்கத்து வீட்டுக் குழந்தைக்கும் சாதம் ஊட்டிக் கொண்டிருந்தேன்.அப்போதுதான் ராணுவம் வந்தது.பக்கத்துவீட்டுக் குழந்தையை இறக்கிவிட எனக்கு அதிகாரம் கிடையாது.அதனால் என் குழந்தையை இறக்கிவிட்டு பக்கத்து வீட்டுக் குழந்தையைக் காப்பாற்றினேன்.''அந்தப் பெரியவர் கண் கலங்கினார்.
எழுத்தாளர் எஸ்,ராமகிருஷ்ணன் சொன்ன ஜப்பானியக் கதை. இது. ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் கதை.
மத போதகர் ஒருவர் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.அவர் கடவுளை வணங்கும் முறை மற்றும் மத சம்பந்தமான சாஸ்திர சம்பிரதாயங்களில் கரை கண்டவர்.திடீரென கடலின் சீற்றம் காரணமாக கப்பல் சேதமடைந்து தெய்வாதீனமாக அவர் தப்பி ஒரு தீவினை அடைந்தார்.இவர் ஒரு மதபோதகர் என்பதனை அறிந்த அவ்வூர் மக்கள் மிகுந்த நட்பு பாராட்டினர்.அவரும் அங்கு மத போதகர் யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்டார்.மக்களும் அங்கு அவ்வாறு யாரும் இல்லைஎன்றும் அவ்வூரில் மூன்று சகோதரர்கள் இருப்பதாகவும் அவர்கள் இறை பக்தி மிக்கவர்கள் என்றும் மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள் என்றும் அவர்கள் சொல்வது படிதான் அங்கு வழிபாடுகள் நடக்கும் என்று கூறினார்.போதகரும் உடனே அவர்களைப் பார்க்க விரும்பியதால் அவர்களிடம் அவர் அழைத்து செல்லப்பட்டார்.மூன்று சகோதரர்களும் அவரை அன்புடன் வரவேற்றனர்.பொதுவான விசயங்கள் பேசி முடித்ததும் போதகர் அங்கு இறைவழிபாடு என்ன முறையில் நடக்கிறது என்று கேட்டார்.அந்த சகோதரர்கள் ,''நாங்கள் எங்கள் தொழிலில் முழு கவனமுடன் இருப்போம்.எங்களுக்கு எந்தக் குறையும் இல்லை நாங்கள் ஆண்டவனுக்கு தினமும் சிறிது நேரம் சாதாரணமாக நன்றி சொல்வோம்.''என்றனர்.இவர்கள் அறியாமையில் இருக்கிறார்களே என்று எண்ணிய போதகர் அவர்களிடம் இறை வழிபாட்டு முறைகளை விளக்கினார்.அவர்களுக்கு சில பாடல்கள் புரியவில்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினர்.பல முறை சொல்லிக் கொடுத்தும் அவர்களால் சரியாக உச்சரித்துப் பாடமுடியவில்லை.அதற்காக அவர்கள் வருத்தப்பட்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்தார்கள்.இதற்கிடையில் ஒருநாள் ஒரு கப்பல் அங்கு வந்ததால் போதகரும் அவர்களிடம் தான் சொல்லிக் கொடுத்தவற்றைக் கடைப்பிடிக்க சொல்லி அறிவுறுத்தி விட்டு கப்பலில் ஏறினார்.கப்பல் புறப்பட்டு சிறிது தூரம் சென்றது. .மக்கள் அனைவரையும் பார்த்துக் கை அசைத்து விடை பெற்றுக் கொண்டிருந்தார்,போதகர்.அப்போது அவர் ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.அந்த மூவரும் கடலில் வேகமாக நடந்தவாறு கப்பலை நோக்கிக் கத்தியபடி வந்து கொண்டிருந்தனர்.கப்பல் உடனே நிறுத்தப்பட்டது. மூச்சிறைக்க வந்த அவர்கள் போதகரிடம்,''ஐயா,நீங்கள் சொல்லிக் கொடுத்தது மறந்துவிட்டது.தயவு செய்து இன்னொரு முறை சொல்லிக் கொடுங்கள்,''என்றனர்.போதகர் சொன்னார்,''என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்.உண்மையான பக்தி சம்பிரதாயங்களில் இல்லை என்று நீங்கள் எனக்கு உணர்த்திவிட்டீர்கள்.நீங்கள் உங்கள் வழக்கப்படியே இறைவனை வணங்குங்கள்.கடலிலே நடக்கக் கூடிய அளவுக்கு உங்களிடம் இறைவனின் கருணை உள்ளது .உங்கள் காலில் விழக்கூட நான் தகுதியற்றவன்,'' என்றார்.அவர் சொல்வது புரியாது அம்மூவரும் அவரிடம் விடைபெற்றனர்.
ஆற்றுப்படை நூல்கள்:
திருமுருகாற்றுப்படை.
பொருநராற்றுப்படை.
பெரும்பாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை
தணிகையாற்றுப்படை.
******
எட்டுத்தொகை நூல்கள்:
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு .
******
ஐம்பெரும் காப்பியங்கள் :
சீவக சிந்தாமணி,சிலப்பதிகாரம்,மணிமேகலை,குண்டலகேசி,வளையாபதி.
******
ஐஞ்சிறு காப்பியங்கள்:
யசோதரா காவியம், உதயணகுமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம், சூளாமணி.
******
கடையெழு வள்ளல்கள்:
பாரி,எழினி,மலயன்,ஆய் ஆண்டிரன்,நள்ளி,பேகன்,ஓரி.
******
நீங்கள் எப்போதும் மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைத்து விடுவார்களோ என்று பயப்படுகிறீர்கள்.மற்றவர்கள் உங்களை முட்டாள் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டால் அது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப் பட ஆரம்பித்து விடுகிறீர்கள்.அநேகர் உங்களை முட்டாள் என்று நினைத்தால் நீங்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறீர்கள்.புத்திசாலியை மட்டும் ஏமாற்ற முடியாது.அவன் பார்ப்பதற்கு முட்டாள் போன்று தோன்றுவான்.
நீங்கள் உங்களைக் கவனித்திருக்கிறீர்களா?நீங்கள் எப்போதும் உங்கள் புத்திசாலித்தனத்தை வெளிக்காட்டவே முயற்சி செய்கிறீர்கள்.உங்கள் அறிவாற்றலைக் காட்ட யாரையாவது தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.உங்களை விடக் குறைவான புத்திசாலித்தனம் உடையவரைத் தேடி அலைகிறீர்கள். அம்மாதிரி ஆள் கிடைத்தவுடன் உங்கள் அறிவுத் திறமையை அவரிடம் காண்பிப்பதில் பெருமை கொள்கிறீர்கள்.ஒரு புத்திசாலி தனது புத்திசாலித்தனத்தை வெளிக்காட்ட வேண்டிய அவசியமில்லை.அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே இருக்கிறான்.
சங்கரன் என்றால் யார்?சம் என்றால் மங்களம்.கரோதி என்றால் உண்டு பண்ணுதல் .எனவே மங்களம் உண்டு பண்ணுபவன் தான் சங்கரன்.
******
சேஷன் என்றால் தாசன்,அடிமை என்று பொருள்.
******
நிர்மலன் என்றால் அழுக்கில்லாதவன் என்று பொருள்.
******
அச்சுதன் என்றால் தான் நழுவி கீழே விழாதவன்:தன்னைப் பற்றியவர்களை நழுவ விடாதவன்.
******
சாரு என்றால் அழகு.
******
அஸ்தி என்றால் இருக்கிறது என்று பொருள்.இருக்கிறது என்று சொல்பவன் ஆஸ்திகன்.நாஸ்தி என்றால் இல்லை என்று பொருள்.இல்லை என்று சொல்பவன் நாஸ்திகன்.
******
கிருஷ்ணன் என்ற பேருக்குப் பொருள் என்ன தெரியுமா?க்ரு என்றால் பூமி.ண என்றால் விடுவித்தல்.பூமியிலிருந்து நம்மை விடுவித்து மோட்சத்தைக் கொடுப்பவன் கிருஷ்ணன்.
******
சுதர்ஷன் என்றால் நல்ல பாதையைக் காட்டுபவன் என்று பொருள்.
******
விபு என்றால் எங்கும் நிறைந்திருப்பவன் என்று பொருள்.
******
******
பால் விநியோகம் செய்யும் நான்கு இளைஞர்களிடம் மொத்தம் 24 பால் கேன்கள் இருந்தன.அவை எல்லாம் ஒரே அளவுடையவை.ஒரே கொள்ளளவு உடையவை.அவற்றுள் 9 கேன்களில் பால் முழு அளவிற்கு இருந்தது. 10 கேன்களில் பால் பாதிதான் இருந்தது.மீதி 5 கேன்கள் காலியாக இருந்தன. இப்பொழுது இந்த இளைஞர்கள் தங்களுக்குள் கேன்களைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.அப்படிப் பிரிக்கும் போது ஒவ்வொருவரிடமும் ஒரே எண்ணிக்கையில் கேன்கள் இருக்க வேண்டும்.அனைவரிடமும் பால் ஒரே அளவு இருக்க வேண்டும்.எவ்வாறு பிரிப்பது என்று தெரியாமல் அவர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நீங்கள் அவர்களுக்கு உதவ முடியுமா?
விடை:மூன்று இளைஞர்களும் ஒவ்வொருவரும் பால் முழுமையாக உள்ள இரண்டு கேன்களையும் பாதிப் பால் உள்ள கேன்கள் மூன்றினையும்,ஒரு காலி கேனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.நான்காவது இளைஞர் மூன்று முழுமையான கேன்களையும் ஒரு பாதி நிறைந்த கேனையும் இரண்டு காலி கேன்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது ஒவ்வொருவரிடமும் ஆறு கேன்கள் இருக்கும்.ஒவ்வொருவரிடமும் 3.5 முழுக் கேன் கொள்ளளவிற்குப் பால் இருக்கும்.
ஏதாவது ஒரு விசயத்தில் ஏமாற்றம் அடைந்து விட்டீர்களா?அதை ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யுங்கள்.நாளானால் அதுவே உங்கள் மூளையை ஒரு அமிலம் போல அரிக்க ஆரம்பித்துவிடும்.ஏமாற்றத்திலிருந்து விடுபட சில யோசனைகள்:
1.முதலில் பதட்டப்படாமல் சற்று அமைதி ஆகுங்கள்.உங்களுக்கு சிறிது கால அவகாசம் கொடுத்துக் கொள்ளுங்கள்.இதே பிரச்சினை நாளைக்கு சாதாரணமானதாகத் தெரியலாம்.
2.உங்களுக்கோ பிறருக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் உங்கள் ஏமாற்ற உணர்வுக்கு வடிகால் கொடுங்கள்.
3.உங்கள் பெற்றோரிடமோ,மனைவியிடமோ,நண்பர்களிடமோ இது பற்றி மனம் விட்டுப் பேசுங்கள்.
4.கோபப்படுவதற்கோ,வருத்தப்படுவதற்கோ உரியதுதானா இப்பிரச்சினை என்று கொஞ்சம் யோசியுங்கள்.
5.இந்தப் பிரச்சினையிலிருந்து ஒரு பாடம் கற்றுக் கொண்டு அடுத்து இதைவிட சிறப்பாக எப்படி செயல்பட முடியும் என்று பாருங்கள்.
6.ஒரு தோல்வி உங்களை ஒரு உதவாக்கரை ஆக்கிவிட முடியாது.உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளாதீர்கள்.
7.ஏமாற்றத்தைத் தவிர்க்க நன்கு திட்டமிடுங்கள்.அதில் மிக உறுதியாக இருக்க வேண்டாம்.திட்டங்கள் தேவைக்கேற்ற மாறுதல்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
8.ஏமாற்றம் கண்டு மனம் தளர்ந்து விடாதீர்கள்.இந்த சூழ்நிலையில் இந்தக் காரியத்தை நான் சிறப்பாக செய்கிறேனா என்பதை மட்டும் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.
9.நாளை நமதே என்று நம்பிக்கை கொள்ளுங்கள்.கெட்டிக்காரத்தனம் என்பது இயற்கையாய் வருவதல்ல.நாம் வளர்த்துக் கொள்வதுதான்.
சத்தம் அதிகம் உள்ள இடத்தில்
சட்டம் அமைதியாகிவிடும்.
******
ஒரு கையைப் பிடிப்பதற்காக மூளையைத் தொலைக்கும் செயலே காதல்.
******
மக்களிடம் எதையும் ரகசியமாய்ச் சொன்னால் நம்புவார்கள்.
******
முடியுமா என்பது முட்டாள்தனம்:
முடியாது என்பது மூடத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்.
******
வீழ்வது வெட்கத்திற்குரிய விசயமில்லை.
வீழ்ந்தே கிடப்பதுதான் வெட்கம்.
******
எவன் மனிதர்களை அடக்கி ஆள்கின்றானோ
அவன் குழப்பத்தில் வாழ்கின்றான்.
எவன் மற்றவர்களால் அடக்கி ஆளப்படுகின்றானோ
அவன் துன்பத்தில் வாழ்கின்றான்.
******
திறமை என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது.-அடக்கத்துடன் இருங்கள்.
புகழ் என்பது மனிதரால் கொடுக்கப்பட்டது-நன்றியுடன் இருங்கள்.
அகம்பாவம் என்பது நமக்கு நாமே கொடுத்துக் கொள்வது-எச்சரிக்கையுடன் இருங்கள்.
******
ஒரு தோல்வியிலிருந்து இன்னொரு தோல்விக்கு உற்சாகம் குறையாமல் செல்வதே வெற்றி.
******
யாராவது ஒரு வேலையை உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டால் முடியும் என்று சொல்லிவிட்டு அதை எப்படி செய்வது என்பதை யோசியுங்கள்.
******
மனிதன்குறையுடையவன்மட்டுமல்ல.குறைகாண்பவனும்ஆவான்.
பிறர் குறையைக் காண்பவன் அரை மனிதன்.தன் குறையைக் காண்பவன் முழு மனிதன்.
******
என் மகன் ஒரு தவறு செய்தால் அவனுக்காகப் பரிந்து பேச மாட்டேன்.
அப்படிப் பேசி நான் வெற்றி பெற்றுவிட்டால் பின்னால் அதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
******
எந்த ஒரு விசயத்தையும் சில கோணங்களில் ஆராய்ச்சி செய்து முடிவு எடுத்தால் அம்முடிவு தெளிவான முடிவாக இருக்கும்.
1.நான் இப்போது எடுத்துள்ள முடிவு உணர்ச்சி பூர்வமான முடிவா,அல்லது அறிவு பூர்வமான முடிவா?
2.இந்த நிலைப் பாட்டிலிருந்து நான் பின் வாங்குவது எனக்குப் பெருமையா, பின்னடைவா?
3.இந்த முடிவின் விளைவுகள் என்னவாக இருக்கும்?அவற்றை எதிர் கொள்ளும் திறன் நமக்கு உண்டா?
4.இந்த முடிவின் மீது விமரிசனங்கள் எப்படி இருக்கும்?அவை புறக்கணிக்கத்
தக்கவையா,ஏற்கத் தக்கவையா?
5.எதிராளி இதற்கு எத்தகைய பதிலடி கொடுப்பான்?அவனை நாம் எடுக்கும் முடிவு, சாய்க்க வல்லதா,பணிய வைப்பதா,முன்னிலும் வீறு கொண்டு எழச் செய்வதா?
6.எதிராளி இதனால் துன்பப் படுவாரா?இதில் நம் மகிழ்ச்சி மட்டும் முக்கியமா?
7.இது பற்றி ஒரு சிலரிடம் கலந்து ஆலோசித்தால் என்ன?
8.முடிவுக்கு வர இன்னும் கால அவகாசம் இருக்கிறதா?ஆம் எனில்,அந்தக் கால அவகாசத்தை நாம் இன்னும் நன்றாக சிந்திக்கப் பயன் படுத்திக் கொண்டால் என்ன?
நூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்ததில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்து ஒரு தீவில் ஒதுங்கினார்கள். அங்கே மனித நடமாட்டமே இல்லை.குடிக்கத்தண்ணீர் இல்லை. உண்ண உணவு எதுவும் இல்லை.ஒதுங்க ஒரு நல்ல இடம் இல்லை.கடுமையாக அலைந்து ஒன்றும் பயனில்லாது போகவே இருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று முடிவு செய்தனர்.ஒருவன் கடவுளிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்தான்.மற்றொருவனோ ஒரே நிமிடத்தில் தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டான்.பிரார்த்தனை முடிந்து அவர்கள் சிறிது தூரம் நடந்தபோது அங்கே ஒரு நீரூற்று தென்பட்டது.தாகம் தீர அதில் அவர்கள் தண்ணீர் பருகினார்கள்.இப்போது பசி வந்து காதை அடைத்தது.மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள்.இப்போதும் ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொண்டான்.சிறிது தூரம் சென்றதும் ஒரு பழ மரத்தைக் கண்டு ஆவலுடன் பழங்களைத் தின்று பசியாறினார்கள்.அந்தத் தீவில் வாழ வழியில்லை என்பதை உணர்ந்து மறுபடியும் அந்தத் தீவிலிருந்து வெளியேறி ஊர் போய்ச் சேர வேண்டும் என்று இருவரும் இறைவனைப் பிரார்த்தித்தார்கள். வழக்கம்போல ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டான்.என்ன ஆச்சரியம்.அப்போது அத்தீவின் பக்கம் ஒரு கப்பல் வந்தது.இவர்கள் கூச்சல் போட்டதும் கப்பலில் இருந்தவர்கள் இவர்களைக் கவனித்து,வந்து இருவரையும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்கள்.அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தவனின் மனதில் ஒரு வஞ்சக எண்ணம் உருவானது.அவன் மற்றவன் கப்பலில் ஏற கூடாது என்று தடுத்தான்.ஏன் என்று அனைவரும் கேட்க அவன் சொன்னான்,''ஒவ்வொரு முறையும் நான் நீண்ட நேரம் வேண்டி உருகிக் கடவுளை வழிபட்டு ஒவ்வொன்றையும் அடைந்தேன்.இவனோ பேருக்குப் பிரார்த்தனை செய்தவன்.இவனுக்கு இந்த பலனை அடையத் தகுதியில்லை,'' .அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது, ''மூடனே,உன்னால்தான் எல்லாம் நடந்தது என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் உன் நண்பனின் பிரார்த்தனைக்குத்தான் எல்லாமே கிடைத்தது.ஒரு நிமிடம்தான் வேண்டினாலும் அவன் என்ன வேண்டினான் தெரியுமா?'கடவுளே,என் நண்பன் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்து கொடுங்கள்,'என்பதுதான்.அவனுடைய உண்மையான பிரார்த்தனைக்கு செவி சாய்த்துத்தான் நான் எல்லா உதவிகளையும் செய்தேன்,''முதலாமவன் வெட்கித் தலை குனிந்து தன் நண்பனிடம் மன்னிப்புக் கோரினான்.பின் கடவுளுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான்.மற்றவன் வழக்கம்போல ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப்போனான்.
மற்றவர்களிடம் பழகும் விதத்தை வைத்து மனிதனை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1.Introverts:மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள்.தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை.அன்பும் பாசமும் இருந்தாலும் வெளிப்பாடு வெளிப்படையாய் இருக்காது..
2.Extroverts:எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள்.ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள்.வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.
3.ambiverts:மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.
மனிதனின் புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
தைல புத்தி:ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும்.அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு இதரர்களுக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.
கிரத புத்தி: நெய்யை வழித்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும்.பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர்.பிறர் கேட்டால் சொல்லத் தெரியாது.
கம்பள புத்தி:விழாவில் கம்பளம் விரித்து,விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய துப்பட்டி போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் பொய் விடுவர்.
களி மண் புத்தி: எந்த விசயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.
வாழ்வில் நடப்பனவற்றைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டே இருந்து விடுதல்,அவற்றோடு பழகிப் போய்விடுதல்,சூழ்நிலையில் நிகழும் நிகழ்ச்சிகள் மீது பழி போடுதல்-இத்தகைய மனோபாவங்களுடன் தான் அனைவரும் வாழ்ந்து வருகிறோம்.
உள்ளபடி,உள்ள நிலையிலிருந்து நாம் ஏன் தப்பி ஓடுகிறோம்? எடுத்துக் காட்டாக, நாம் சாவைக் கண்டு அஞ்சுகிறோம்.சாவுக்குப்பின் நமக்கு நேரிட இருக்கும் நிலையினைப் பலவிதமான கருத்துக்கள், நம்பிக்கைகள், கொள்கைகள் இவற்றினை உருவாக்கி,அவற்றின் மூலம் சாவு என்ற உண்மையை உள்ளது உள்ளபடி காண இயலாதவாறு மறைத்து விடுகிறோம்.என்ன செய்தால் என்ன?சாவை நம்மால் தவிர்க்க முடியாது.அது நம்மை எதிர் நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.எதனையும் உள்ளது உள்ளபடி உணர்வதற்கு அதன் முன் நின்று கண் கொண்டு நோக்க வேண்டுமேயன்றி அதற்கு முதுகு காட்டி ஓடுவதில் பயனில்லை.நம்மில் பெரும்பாலோனோர் வாழவும் அஞ்சுகிறோம்,சாகவும் அஞ்சுகிறோம்.நம் குடும்பம் என்ன ஆகுமோ என்ற அச்சம்,நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அச்சம்,நமது வேலை போய்விடுமோ என்ற அச்சம்,இது போன்ற நூற்றுக் கணக்கான அச்சங்கள்.அஞ்சுகின்ற மன நிலையில் தான் நாம் இருக்கிறோம்.உண்மையை நேருக்கு நேர் நம்மால் பார்க்க முடிவதில்லை.
--ஜே.கிருஷ்ணமூர்த்தி.
1 x 9 + 2 = 11
12 x 9 + 3 = 111
123 x 9 + 4 = 1111
1234 x 9 + 5 = 11111
12345 x 9 + 6 = 111111
123456 x 9 + 7 = 1111111
1234567 x 9 + 8 = 11111111
12345678 x 9 + 9 = 111111111
9 X 9 + 7 = 88
98 X 9 + 6 = 888
987 X 9 + 5 = 8888
9876 X 9 + 4 = 88888
98765 X 9 + 3 = 888888
987654 X 9 + 2 = 8888888
9876543 X 9 + 1 = 88888888
98765432 X 9 + 0 = 888888888
1 X 8 + 1 = 9
12 X 8 + 2 = 98
123 X 8 + 3 = 987
1234 X 8 + 4 = 9876
12345 X 8 + 5 = 98765
123456 X 8 + 6 = 987654
1234567 X 8 + 7 = 9876543
12345678 X 8 + 8 = 98765432
123456789 X 8 + 9 = 987654321
ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,''நான் குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பிறந்து கொள்,''
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,''நான் வளர வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''வளர்ந்து கொள்.''
வளர்ந்த குழந்தை கேட்டது,''நான் படிக்க வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''படித்துக் கொள்.''
படித்த பையன் கேட்டான்,''எனக்கு நல்ல வேலை வேண்டுமே?''
கடவுள் சொன்னார்,''தேடிக் கண்டுபிடி,''
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,''எனக்கு திருமணம் செய்ய வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''நல்ல பெண்ணாய்ப்பார்த்து திருமணம் செய்துகொள்.''
திருமணம் ஆனதும் கேட்டான்,''நல்ல குழந்தை வேண்டுமே!''
கடவுள் சொன்னார்,''பெற்றுக் கொள்.''
வயதானபின் அவன் கேட்டான்,''நான் நல்ல படியாக இறக்க வேண்டுமே,''
கடவுள் சொன்னார்,''இறந்து கொள்.''
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,''ஆரம்பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் வேலை?''
கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''இத்தனையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே அதுதான் நான்.''
'அனுபவம் பேசுகிறது,'என்பார்கள்.திருமணம் பற்றி எத்தனை விதமான அனுபவங்கள்!
*திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல.நாணயத்தின் இரு புறங்களும் ஒன்றை ஒன்று எதிர் கொள்ள முடிவதில்லை.ஆனாலும் சேர்ந்தே அவை இருக்கும்.
******
*ஒருவனுக்கு நல்ல மனைவி கிடைத்தால் அவன் மகிழ்ச்சியுடன் இருப்பான். கெட்ட மனைவி அமைந்து விட்டால் அவன் தத்துவ வாதியாகி விடுகிறான்.எப்படியும் நன்மைதான்.அதனால் திருமணம் செய்துகொள்.
******
*பெண்கள் தங்கள் கணவனை அரிய செயல்கள் புரிய ஊக்குவிப்பார்கள்.ஆனால் அவற்றை சாதிக்கத்தான் விட மாட்டார்கள்.
******
*என்னால் எப்போதும் பதில் சொல்ல முடியாத கேள்வி இதுதான் ''இந்தப் பெண்களுக்கு என்னதான் வேண்டும்?''
******
*எனக்கு தீவிரவாதம் குறித்து எந்தவித அச்சமும் இல்லை.ஏனெனில் எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.
******
*திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய,நீ செய்ய .வேண்டியதெல்லாம்
1.நீ தவறுசெய்யும் போது அதை ஒத்துக் கொள்.
2.நீ செய்தது சரிதான் என்றால் வாயை மூடிக் கொண்டிரு.
******
*ஒரு நல்ல மனைவி பல சமயங்களில் தனது கணவனை பெருந்தன்மையுடன் மன்னிக்கிறாள்.எந்த சமயங்களில்?அவள் செய்தது தவறாயிருக்கும் போது .
******
*''என் மனைவி தேவதை.''
'நீ கொடுத்து வைத்தவன்.என் மனைவி உயிருடன் இருக்கிறாள்.'
******
*நான் என் மனைவியிடம் பேசியது சில வார்த்தைகள்.வந்த பதிலோ பல பக்கங்கள்.
******
*''உங்கள் நீண்ட காலத் திருமண வெற்றிக்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?''
'வாரத்திற்கு இரண்டு நாட்கள் நல்ல உணவகம் ஒன்றிற்கு செல்வோம். குறைந்த வெளிச்சம்;நல்லிசை .சிறந்த நடனம்.அருமையான உணவு. இவை போதாதா?என்ன,நான் செவ்வாய்க்கிழமைகளில் செல்வேன்.என் மனைவி வெள்ளிக் கிழமைகளில் செல்வாள்.'
******
நமக்கு முன்னும் பின்னும் மற்றவர்கள் செய்யும் விமரிசனத்திலிருந்து யாரும் தப்ப முடியாது.நம் வாழ்வில் மகிழ்ச்சியோ துயரமோ,இந்த விமரிசனத்தை எதிர் கொள்வதைப் பொறுத்துத்தான் அமைகின்றன.மற்றவர்கள் செய்யும் விமரிசனத்தை மூன்று வழிகளில் எதிர் கொள்ளலாம்.
உணர்ச்சி வழி:
உணர்ச்சி வயப்பட்டு மனம் கொந்தளிப்பது,அதுவும் மற்றவர்கள் விமரிசனம் செய்வதைக் கேட்டு மனம் பதறுவது இயற்கை.அதனால் சினத்துடன் நமது மறுதலிப்பைப் புலப்படுத்துவது மிக எளிது.ஆனால் உணர்ச்சி வசப்படுவது நமக்கு நாமே நஞ்சு ஊட்டிக் கொள்வது போலாகும்.முதலில் உணர்ச்சி வசப்படாமல் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது.விமரிசனங்களை முன்னரே எதிர் பார்த்தால் வரும் துன்பம் இலேசாக இருக்கும்.நம் மனதை அடிக்கடல் போல அமைதியாக வைத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.நம்மை விமரிசிப்பவர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்பப் பழகிக் கொள்ள வேண்டும்.
பகுத்தறிவு வழி:
உண்மையான விமரிசகர்கள் நம்மை சிந்திக்கவைக்கிறார்கள்.அது நல்லதுதானே.விமரிசனத்தின் உண்மையைக் காண வேண்டுமே தவிர நம்மை விமரிசித்தாரே என்று ஆத்திரம் கொள்ளக் கூடாது.அப்படி அறியும்போது விமரிசனத்தில் உண்மை இருந்தால் ஒப்புக் கொண்டு விடுவது நல்லது.அது விமரிசகர்களின் வாயையும் அடைத்துவிடும்.விமரிசிப்பவர்கள் நல்லவர் அல்லாதவராய் இருந்தால் அந்த விமரிசனத்தை நாம் பொருட்படுத்தத் தேவையில்லை.அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் கூறி நம் பொன்னான நேரத்தை வீணாக்கக் கூடாது.விமரிசகரை ஆய்வதோடு மட்டுமல்லாது ஒருவரின் விமரிசனத்தை நம் காதுக்குக் கொண்டு வந்து சேர்க்கிறவர் அதற்குக் காது மூக்கு வைத்து நீட்டியிருக்கிறாரா என்பதையும் ஆராய வேண்டும்.அவர்களின் தூண்டுதலுக்கு நாம் ஆளாகி விடக்கூடாது.
செய்முறை வழி:
கருணை,பழிவாங்கும் உணர்வைவிட ஆற்றல் மிக்கது.பழிவாங்கும் செயலுக்குப் பணியாதவன் அன்பிற்குப் பணிந்து விடுவான்.கடுமையான விமரிசகர்களைக் கூட கனிவுடன் அனைத்தும்,இணைத்தும் சென்று வெற்றி காண வேண்டும்.
ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்கிறது.அதை ஊதி அணைத்துவிட்டு உடனே மறுபடியும் தீக்குச்சி கொண்டு பொருத்தினால் உடனே பற்றிக் கொள்கிறது.ஆனால் புதிதாக ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைக்க சிறிது நேரமாகிறது.ஏன்?
எரிந்து கொண்டிருக்கும் மெழுகுவர்த்தியை அணைத்தாலும் அதைச் சுற்றி மெழுகு ஆவி சுற்றியிருக்கும்.தீப்பொறி கண்டவுடன் மெழுகுவர்த்தி உடனே பற்றிக் கொள்ள அது பயன் படுகிறது.
******
துணியை அயர்ன் செய்யும்போது தண்ணீரில்தெளித்து பின் சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது மட்டும் ஒழுங்காகத் தேய்க்க வருகிறது.ஏன்?
துணியில் உள்ள ஸ்டார்ச் தண்ணீர் பட்டவுடன் நன்கு பரவி துணிக்கு மிருதுத் தன்மை கொடுக்கிறது.சூடான பாக்ஸை வைத்து தேய்க்கும்போது தண்ணீர் ஆவியாகி stiff ஆன surface கிடைக்கிறது.
******
ஒரு காகிதத்தின் கனம் 0.01அங்குலம்.அதை 50 முறை மடக்கினால் அதன் கனம் எவ்வளவு இருக்கும்?
பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரம் இருக்கும்.
******
ஒரு பேப்பரில் ஒரு கத்தியை வைத்து மடக்கிப் பின் ஒரு உருளைக் கிழங்கை அறுத்தால் உருளைக் கிழங்கு அறுபடும்.ஆனால் பேப்பரை வெளியே எடுத்துப் பார்த்தால் பேப்பர் அறுபடாமல் அப்படியே இருக்கும். காரணம் என்ன?
பேப்பரின் fibre உருளைக் கிழங்கின் fibre ஐ விட பலமானது.அதனால் பேப்பர் அறுபடுவதில்லை.உருளைக் கிழங்கிற்கு பதிலாக கடினமான பொருள் ஒன்றினை அறுத்தால் பேப்பர் அறுபடும்.
******
தமிழர்கள் பழங்காலத்திலேயே நுண்ணிய கால அளவுகளை வகுத்துள்ளனர். .அதன் விபரம்:
60 தற்பரை=ஒரு வினாடி.
60 வினாடி=ஒரு நாழிகை
60 நாழிகை=ஒரு நாள்
3.75 நாழிகை=ஒரு முழுத்தம்.
2 முழுத்தம்=ஒரு யாமம்.
8 யாமம்=ஒரு நாள்.
7 நாள்=ஒரு கிழமை.
15 நாள்=ஒரு பக்கம்.
2 பக்கம்=ஒரு மாதம்.
2 மாதம்=ஒரு பருவம்.
3பருவம்=ஒரு செலவு.
2 செல வு=ஒரு ஆண்டு.
365நாள்,15நாளிகை,31வினாடி,15 தற்பரைகள்=ஒரு ஆண்டு.
ஒரு உணவு விடுதியில் கீழ்க்கண்டவாறு எழுதிப் போடப்பட்டிருந்தது.
''இங்கு சாப்பிட்டு விட்டு நீங்கள் பணம் தர வேண்டியதில்லை.உங்கள் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களிடம் வசூலித்துக் கொள்வோம்.''
இதைப் பார்த்தவுடன் பசியாய் இருந்த ஒருவன் உணவகத்திற்குள் நுழைந்து வயிறு புடைக்க சாப்பிட்டான்.சாப்பிட்டு வெளியே செல்லும்போது அவனிடம் விடுதி சிப்பந்தி ஒரு பில்லை நீட்டினார்.அவனுக்குக் கோபம் வந்து விட்டது.விடுதி உரிமையாளரிடம்,''என்ன மோசடி செய்கிறீர்களா? பிள்ளைகளிடம் வசூலித்துக் கொள்வோம் என்று எழுதிப் போட்டுவிட்டு இப்போது சாப்பிட்டதற்கு பணம் கேட்கிறீர்களே?''என்று கத்தினான். விடுதிக்காரர் அமைதியாகச் சொன்னார்,''ஐயா,இது நீங்கள் சாப்பிட்டதற்கான பில் அல்ல.உங்கள் தந்தை இங்கு முன்னால் சாப்பிட்டதற்கான தொகைக்குரிய பில் இது.இதை உங்களிடம்தானே வசூலிக்க வேண்டும்?''அவன் மயங்கிக் கீழே விழுந்தான்.
உரையாடல் ஒரு கலை.இனிமையாகவும் சுவையாகவும் பிறரைக் கவரும் வண்ணம் உரையாடுவது ஒரு வித்தை.அந்தக் கலை கைவரச்சிலவழிகள் :
*உரையாடலின்போது உங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் உடல்நிலை, உங்கள் பிரச்சினைகள் ,தொந்தரவுகள் இவை பற்றிப் பேசாதீர்கள்.அதனால் எந்தப் பயனும் இல்லை.கேட்பவர்க்கும் போர்.
*நீங்களே பேச்சைக் குத்தகை எடுக்காதீர்கள்.நீங்கள் நகைச் சுவையாகப் பேசுபவராக இருக்கலாம்.ஆனால் உங்கள் பேச்சைக் கெட்டு முதலில் விழுந்து விழுந்து சிரிப்பவர்கள் கூட கொஞ்ச நேரத்தில் சலிப்படைவார்கள்.நாம் பேசக் கொஞ்சம் இடம் கொடுக்க மாட்டேன் என்கிறாரே என்று எரிச்சல் படுவார்கள்.எனவே மற்றவர்களும் பேசுவதற்கு வசதியாக இடைவெளி கொடுங்கள்.
*குறுக்கே விழுந்து மறுக்காதீர்கள்.'நீங்கள் சொல்வது தப்பு,'என்று சொல்லும் போதே உரையாடல் செத்து விடுகிறது.அதைக் காட்டிலும் பேசுபவரின் பேச்சில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் அதை உறுதிப் படுத்துங்கள்.
*திடீரென்று ஒரு விசயத்திலிருந்து இன்னொரு விசயத்திற்குத் தாவாதீர்கள்.அடுத்தவர் பேசும்போது அரை வினாடி நிறுத்தினால் உடனே நுழைந்து வேறு விசயத்தைப் பேச ஆரம்பிக்கக் கூடாது.
*எதிராளியின் பேச்சில் உண்மையான அக்கறை காட்டுங்கள்.அவர் உள்ளம் திறந்து பேச அது வழி வகுக்கும்.அவர் பேசும் விஷயத்தை விரிவு படுத்துங்கள்.உரையாடல் இனிமையாய் அமையும்.
*ஒரு விசயத்தைப் பற்றி ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேச்சு வேறெங்கோ சென்று விட்டால் நீங்கள் அதை மறவாது விட்டுப் போன விஷயத்தை ஞாபகப் படுத்துங்கள்.இது பண்பாடு மட்டும் அல்ல.அவருடைய பேச்சில் உண்மையான அக்கறை காட்டுவதாக அமையும்.
*எதையும் அடித்துப் பேசி முத்தாய்ப்பு வைக்காதீர்கள்.எதிராளிக்கு வேறு கருத்தும் இருக்கக் கூடும் என்பதற்கு இடம் கொடுத்துப் பேசுங்கள்.
*தாக்காதீர்கள்.கெட்ட விசயத்தைக் குறை சொல்லும்போது கூட குத்தலாகவோ அவதூறாகவோ பேசாதீர்கள்.கிண்டலாகப் பேசுவது உங்கள் மூளைக் கூர்மையைக் காட்டக் கூடும்.ஆனால் எதிராளிக்கு இருப்புக் கொள்ளாமல் போகும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
கோபம்!எல்லோருக்கும் சுலபமாக வந்து விடுகிறது.எத்தனை பேரால் அதை அடக்க முடிகிறது?உங்கள் வளர்ச்சி நிச்சயம் கோபத்தில் இல்லை.கோபத்தை அடக்குவதில்தான் இருக்கிறது.அதற்கு என்ன வழி?
*இப்போது நாம் கோபமாக இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டால் ,அதை ஒப்புக் கொண்டால் மட்டுமே அதை எப்படி வெளிப்படுத்துவது என்பது பற்றி யோசிக்க முடியும்.யோசித்தால் இந்தக் கோபம் நாமே வரவழைத்துக் கொண்டது தான் என்பது புரியும்.
*கோபத்தின் போது பேசும் வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை என்பது அமைதியாக இருக்கும்போதுதான் தெரியும்.எனவே சூடான பேச்சுக் கிளம்பும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறி சூடு ஆறியபின் திரும்ப வரலாம்.
*கோபத்திற்கு ஒரு இலக்கு வேண்டும்.எனவேதான் சம்பந்தம் இல்லாதவர்கள் மீது எரிந்து விழுகிறோம்.கோபம் வரும்போது யார் மீது கோபப்பட வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும்.
*கோபத்தின் அடிப்படைக் காரணம் என்ன என்று கண்டு பிடியுங்கள். இல்லாவிடில் யார் மீதாவது குற்றம் கண்டு பிடித்துக் கொண்டே இருப்பீர்கள்.காரணம் தெரியாமல் போகும்.அம்மாதிரி நேரங்களில் மனைவியிடமோ,நெருங்கிய நண்பனிடமோ மனம் விட்டுப் பேசுங்கள்.காரணம் தெரிய வரும்.
*அனுபவமே நல்ல ஆசான்.யார்யார் உங்களுக்கு கோபமூட்டுகிறார்கள் என்னென்ன இடத்தில் எந்தெந்த சந்தர்ப்பத்தில் கோபம் வருகிறது என்பதை அறிந்து அந்தப் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.அதேபோல நீங்கள் என்ன பேசினால் அல்லது என்ன செய்தால் மற்றவர்களுக்குக் கோபம் வருகிறது என்பதை அறிந்து கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
*கோபம் வரும்போது உங்களை ஏதாவது ஒரு வேலையில் மூழ்கடித்துக் கொள்ளுங்கள்.நிதானம் திரும்பி விடும்.
*இன்று ரொம்பத் தலை போகிற விசயமாக தெரிவது கொஞ்ச நாள் கழித்து அப்படித் தெரியாது.அல்பமான விஷயமாகக் கூடத்தெரியும்.நாள் கடத்திப் பாருங்கள்.
*சில அக்கிரமங்களைக் காணும்போது கோபம் வருவது நியாயமே.ஆனால் வெறுமனே கோபப்படாமல் நாலு பேருடன் சேர்ந்து அந்த நிலைமைக்குப் பரிகாரம் ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்.
The guide to knowing yourself என்ற நூலிலிருந்து.
தனது தேசம் இழந்து போனதற்காகக் கவலைப்படும் மன்னனின் நிலைக்கும், தனது பொம்மை உடைந்ததற்காக வருத்தப்படும் குழந்தையின் நிலைக்கும் வேறுபாடு அதிகம் இல்லை.
******
ஒருவன் கடும் முயற்சியினால் உயர்ந்த மலையின் சிகரத்தை அடைந்து விடலாம்.ஆனால் அவன் அங்கேயே வாழ்ந்து விட முடியாது.
******
வெற்றிகரமாகப் பொய் சொல்ல வரம்பற்ற நினைவாற்றல் வேண்டும்.
******
கோபமான மனிதன் தனது வாயைத் திறந்து கண்களை மூடிக் கொள்கிறான்.
******
இளமை குறைகள் உடையது.
நடுத்தர வயது சிரமங்கள் உடையது.
முதுமை வருத்தங்கள் உடையது.
******
'தான் மிக முக்கியமானவன்'என்று நினைத்துக் கொள்பவர்கள் தனக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி,''நான் இல்லாவிடில் இவ்வுலகம் எதை இழந்துவிடும்?''
******
வாழ்க்கை முழுவதும் இன்பமா!
அதைக் காட்டிலும் நரகம் எதுவும் இருக்க முடியாது.
******
நெற்றியைக் காயப்படுத்திக் கொள்வதைவிட
முதுகை வளைத்துச் செல்வது நல்லது.
******
நரி நம்புகிறது,''எல்லோரும் என்னைப்போல கோழியைப் பிடித்துத் தின்கிறார்கள்,''என்று.
******
நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் என்னைவிட ஏதாவது ஒரு வகையில் சிறந்தவனாக உள்ளான்.
******
பணிதல் நல்ல பண்புதான்.அதில் ஒரு வரம்பைக் கையாளவில்லை என்றால் நீ அடிமையாவதற்கு அஸ்திவாரம் போடப்படும்.
******
ஒரு வாக்குவாதத்தின் உச்சத்தில் யார் அடிதடியில் இறந்குகிறார்களோ,அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்று பொருள்.
******
1