ஒரு மகான் ஒரு சீடனை தண்ணீருக்குள் அழுத்தினார்.அவனைஉள்ளே திண்டாடவிட்டு கடைசியில் வெளியே எடுத்தார்.
''உள்ளே இருந்தபோது மண்,பொன்,பெண் இவைகளை நினைத்தாயா?''என்று கேட்டார்.
''ஐயோ,நினைக்கவே இல்லை.மூச்சுக்கு வழி கிடைக்காதா என்றுதான் ஏங்கினேன்.துடித்தேன்,''என்றான்.
மண்ணும் பொன்னும் சிகிச்சைக்குப் பணம் கொடுக்குமே தவிர சிகிச்சை செய்யாது.
அந்தக் கடைசி நேரத்தில்,நாம் உலகை விட்டுப் பிரியும் நேரத்தில் மண்,பொன் எல்லாமே நமக்கு அற்பமாகத் தோன்றப் போகிறது.
அந்த நினைப்பை சற்று முன் கூட்டியே கொண்டு வந்தால் என்ன?
நாம் அறிவாளியாகவும்,முன் எச்சரிக்கைஉடையவராகவும் இருந்தால் அதைத்தான் செய்வோம்.
---அழகிக்கு ஆயிரம் நாமம் என்ற நூலில் ஸ்ரீ வேணுகோபாலன்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
தமிழறிஞர்உ.வே.சு.அவர்கள் ஒரு விழாவில் கலந்துகொண்டார்.அவருக்கு முன் மூன்றுஅறிஞர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள் .விழா அமைப்பாளர் மூவரின் பேச்சுத் திறம் பற்றி உ.வே.சு.ஐயர் அவர்களிடம் கருத்து கேட்டார்.அவரும்,''தொண்டை நாட்டினர்,தொண்டை நாட்டினர்,தொண்டை நாட்டினர்,''எனக் கூற அவருக்கு ஒன்றும் விளங்காமல், விளக்கமாகக் கூற வேண்டினார்.ஐயர் சொன்னார்,''முதலில் பேசியவரின் பேச்சில் சாரம்ஏதும் இல்லை வெறும் வரட்டுக் கூச்சல் தான் இருந்தது.அவர் தன தொண்டையை மட்டும் நிலை நாட்டினார்.இரண்டாமவர் பேச வேண்டிய தன கடமையை ஒழுங்காகச் செய்தார்.எனவே அவர் தம் தொண்டை செய்து முடித்தார்.மூன்றாமவர் தொண்டை நாட்டை சேர்ந்தவர்.அவர் தன தொண்டை நாட்டின் பெயரை நிலை நாட்டினார்.எனவே மூவருமே தொண்டை நாட்டினர் தானே?''அமைப்பாளர், ஐயர் அவர்களின் மொழி ஆற்றலை எண்ணி வியந்தார்.
இங்கிலாந்தில் ஒரு மாநகர மேயர் தனது நகரத்தில் ஒரு மாபெரும் கூடம்(town hall) கட்ட விரும்பினார்.இப்பணி ஒரு கட்டட நிபுணரிடம் ஒப்படைக்கப்பட்டது.அவரும் ஒரு டிசைன் போட்டு மேயரிடம் காண்பித்தார். அமைப்பு மிக அழகாக இருந்தது.ஆனாலும் மேயருக்கு ஒரு சந்தேகம். அதாவது அவ்வளவு பெரிய கூடத்தில் நடுவே தூண்களே அமைக்கப் படவில்லை.அதனால் கட்டடம் நீண்ட நாள் தாங்காது என்று மேயர் கருதி தூண்களை சேர்க்குமாறு வலியுறுத்தினார்.நிபுணரோ அதற்கான தேவையில்லை என்றும் இது புது மாதிரியான டிசைன் என்றும் கூறினார்.ஆனால் மேயர் ஒத்துக் கொள்ளத் தயாராயில்லை.எனவே மேயரின் விருப்பப்படி நிபுணர் மூன்று தூண்களைக் கட்டினார்.மேயருக்கு இப்போது பூரண திருப்தி.சில ஆண்டுகள் கழித்து சிறு பழுதுகள் பார்க்க பெரிய ஏணி கொண்டுவந்து ஒவ்வொரு தூணின் உச்சிக்கும் சென்று பழுது பார்த்தார்கள்.அப்போதுதான் ஒரு விஷயம் தெரிய வந்தது.அதாவது எந்தத் தூணும் மேற்கூரையுடன் இனைக்கப்படாமல் சிறு இடை வெளியுடன் இருந்தது.அதாவது அந்தக் கட்டடக் கலை நிபுணர்,தன்னுடைய தூணில்லா டிசைன் சரிதான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.அதே சமயத்தில் மேயரும் திருப்தியடையும் வகையில் வழிசெய்து விட்டார்.பிறர் மனம் நோகாமல் தன காரியத்தை முடிப்பவனே கெட்டிக்காரன்.
புத்தபிரான் ஒரு முறை ஒரு கிராமத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தார்.ஊர் மக்கள் அவரிடம் வந்து அடுத்து உள்ள காட்டுப் பாதையில் அவர் போக வேண்டாமென வலியுறுத்தினர்.காரணம் கேட்க, அங்கு அங்குலிமால் என்ற பெயருடைய ஒரு பெரிய கொள்ளையன் இருப்பதாகக் கூறினார். அங்குலிமால் என்பது ஒரு காரணப்பெயர்.அங்குலி என்றால் விரல் மால் என்றால் மாலை.அவன் அக்காட்டுப் பக்கம் வருபவர்களைக் கொன்று அவர்களது விரல்களை வெட்டி மாலையாகக் கோர்த்து கழுத்தில் அணிந்திருப்பானாம்.புத்த பிரான் அப்படிப்பட்ட ஆளைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கூறி அம்மக்களின் அன்பு வேண்டு கோளை மீறி சென்றார்.காட்டினுள் அவர் வருகையை அங்குலிமால் பார்த்தான். அவனுக்கு அளவு கடந்த கோபம் உண்டாயிற்று.யாரும் வர அஞ்சும் இக்காட்டுக்குள் ஒரு துறவி பயமின்றி வருவதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அவன் புத்தரைப் பார்த்து,''அங்கேயே நில் அதற்கு மேல் வந்தால் உன் உயிர் உனக்கில்லை.ஏதோ ,துறவியாய் இருக்கிறாயேஎன்று பார்க்கிறேன்.இப்போதே ஓடிப் போய்விடு.''என்று கத்தினான்.புத்தரோ அஞ்சவில்லை.அவனுடைய அச்சுறுத்தல்களைக் கண்டு கொள்ளாமல் அவர் அவன் அருகே வந்தார்.அவன் கடுஞ்சினத்துடன்,''உன்னுடைய கடைசிப் பிரார்த்தனைகளை முடித்துக்கொள்,''என்றான்.சாக்கிய முனி சாந்தமாகச் சொன்னார்,''அப்பனே,என் உயிரைப் பற்றி எனக்குக் கவலையில்லை.என் உயிரைப் பறிப்பதற்கு முன் ஒரு காரியம் செய்ய வேண்டும்,''என்றார்.அவன் என்னவென்று கேட்க,அவரும் அருகிலிருந்த மரத்தின் ஒரு கிளையை வெட்ட சொன்னார்.இது ஒரு வேலையா என்று ஏளனமாகக் கூறிக் கொண்டே மரத்தின் கிளையை அவன் வெட்டினான்.அப்போது புத்தர் சொன்னார்,''இப்போது அதே கிளையை மீண்டும் அந்த மரத்தில் ஒட்டவை,''என்றார்.கொள்ளையன் மலைத்துப் போய் ''அது எவ்வாறு முடியும்?''என்று கேட்டான்.புத்தபிரான் சொன்னார்,''இதோ பார்த்தாயா,அழிக்க முடிந்த உன்னால் ஆக்க முடியவில்லை.எந்த முட்டாளாலும் அழிக்க முடியும் ஆனால் எந்த ஞானியாலும் கூட எதையும் ஆக்க முடியாது.ஆக்க முடியாத உனக்கு அழிக்க எந்த உரிமையுமில்லை.''அந்தக் கணமே அந்த அங்குலிமால் அவர் காலில் விழுந்து சரணடைந்து அவருடைய சீடனாகிவிட்டான்.
காதலி: என் தந்தை எனக்காக நிறைய சொத்து சேர்த்து வைத்திருப்பதால் தான் என்னை விரும்புகிறீர்களா?
காதலன்:சே!சே!உனக்காக யார் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் உன்னைக் காதலித்திருப்பேன்.இது சத்தியம்.
**********
ஒரு சிலர் தனியாக இருந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் நண்பர்களுடன் சேர்ந்து அதிசயங்களை நிகழ்த்துகிறார்கள்.
ஒரு சிலர் திருமணம் செய்து கொண்டு,நிகழ்வதை அதிசயமாகப் பார்க்கிறார்கள்.
**********
ஒரு அழகான பெண் ஜவுளிக் கடைக்கு வந்தாள்.ஒரு துணியைத் தேர்வு செய்து அதன் விலையைக் கேட்டாள்.கடையின் உரிமையாளர் சொன்னான்,''ஒரு மீட்டருக்கு ஒரு முத்தம் விலை.''அந்தப் பெண்ணும் உடனே பத்து மீட்டர் துணி தரச் சொன்னாள்.அவனும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வேகமாக பத்து மீட்டர் துணியை அளந்து கொடுத்தான்.அதை வாங்கிக் கொண்டு அந்தப் பெண் சொன்னாள்,''இந்தத் துணிக்கான விலையை அதோ என்னுடன் வந்திருக்கும் என் தாத்தா தருவார்.''
**********
ஆசிரியர்:1947 ல் என்ன நடந்தது?
மாணவன்:இந்தியா சுதந்திரம் அடைந்தது.
ஆசிரியர்:நன்று.1950 ல் என்ன நடந்தது?
மாணவன்:சுதந்திரம் அடைந்து மூன்று ஆண்டு ஆகி இருந்தது.
**********
விவசாயி ஒருவன் இறக்கும் தறுவாயில் தன மூன்று மகன்களையும் கூப்பிட்டு, தான் இறந்த பிறகு,தான் எழுதியுள்ள உயிலில் கண்டவாறு அவனுடைய உடைமைகளைப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொன்னான்.சிறிது நேரத்தில் அவன் உயிர் பிரிந்தது.கடமைகளை முடித்தபின்,மூன்று மகன்களும் உயிலில் கண்டபடி சொத்துக்களைப் பிரித்துக் கொண்டு வந்தனர்.இறுதியாக பதினேழு பசு மாடுகள் இருந்தன.உயிலில்,பசுமாடுகளில் இரண்டில் ஒரு பங்கு மூத்த மகனுக்கும் மூன்றில் ஒரு பங்கு இரண்டாவது மகனுக்கும்,ஒன்பதில் ஒரு பங்கு கடைசி மகனுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தது.பதினேழு பசு மாடுகளை இந்த விகிதத்தில் எப்படிப் பிரிப்பது?ஒரே குழப்பம்.இது சம்பந்தமாக அவர்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டு,அவர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடலானர்கள்.அப்போது ஒரு பெரியவர் அந்தப் பக்கம் வந்தார்.பிரச்சினை என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் அதைத் தான் தீர்த்து வைப்பதாகக் கூறினார்.அவர்கள் சம்மதம் தரவே அவர் சொன்னார்,''உங்களிடம் பதினேழு பசுக்கள்உள்ளன.என்னிடம் உள்ள பசு ஒன்றையும் இவற்றோடு சேர்த்துக் கொள்கிறேன்.ஆகப் பதினெட்டு பசுக்கள் இருக்கின்றன.உயிலின் படி இரண்டில் ஒரு பங்கு,அதாவது ஒன்பது பசுக்கள் மூத்தவனுக்கு சொந்தம்.மூன்றில் ஒரு பங்கு,அதாவது,ஆறு பசுக்கள் இரண்டாமவனுக்கு சொந்தம்.ஒன்பதில் ஒரு பங்கு,அதாவது இரண்டு பசுக்கள் மூன்றாமவனுக்கு சொந்தம்.மூவருக்கும் பதினேழு பசுக்கள் கொடுத்தபின் ஒரு பசு மீதமிருக்கிறது.அது நான் கொண்டு வந்த பசு.அதை நான் எடுத்துக் கொள்கிறேன்.இப்போது உங்கள் பிரச்சினை தீர்ந்ததா?''மூவருக்கும் மிக்க மகிழ்ச்சி.ஆனால் கடைசி வரை இது எப்படி சாத்தியமாயிற்று என்று அவர்களுக்குப் புரியவில்லை.உங்களுக்குப் புரிகிறதா?
''ஏன் சார்,நீங்க சாப்பிடும் முன் பிரார்த்தனை செய்வீங்களா?''
'அதெல்லாம் இல்லேங்க,என் மனைவி பரவாயில்லாமல் சமைப்பாள்.'
**********
''என் மனைவி தேவதைங்க!''
'நீங்க கொடுத்து வைத்தவர்.என் மனைவி உயிருடன் இருக்கிறாள்.'
**********
''என்னங்க,நேத்து இரவு நீங்க முத்து மாலை வாங்கித் தருவதாகக் கனவு கண்டேன்.அதற்கு என்ன அர்த்தம்?''
'இன்று இரவு வரை பொறுத்திரு.இரவில் உனக்கு விளக்கம் தருகிறேன்.'
இரவில் கணவன்ஒரு பார்சலுடன் வந்தார்.மனைவி அதை வாங்கி பரபரப்புடன் பிரித்துப் பார்த்தாள்.உள்ளே ஒரு புத்தகம் இருந்தது.அந்தப் புத்தகத்தின் தலைப்பு,'கனவுகளின் பலன்கள்'.
**********
கப்பல் கவிழ்ந்து கொண்டிருந்தது.கேப்டன் பயணிகளிடம் கேட்டார்,''உங்களில் யாருக்காவது பிரார்த்தனை செய்யத் தெரியுமா?''ஒருவர் உடனே சொன்னார்,'நான் நன்றாகப் பிரார்த்தனை செய்வேன்.'இப்போது கேப்டன் சொன்னார்,''இவர் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கட்டும்.மற்றவர்கள் எல்லோரும் மூழ்காமல் தப்பிப்பதற்கான லைப் ஜாக்கெட்டை அணிந்து கொள்ளுங்கள்.மொத்தத்தில் ஒரு ஜாக்கெட் குறைவாக உள்ளது.''
**********
பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தவர் மதன் மோகன் மாளவியா.பல்கலைக் கழகத்தை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டார். அவர் மனம் தளராது ஊர் ஊராகச் சென்று,செல்வந்தர்களையும்,பெரிய வணிகர்களையும் நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும் பார்த்து நிதி உதவி கோரினார்.நவாப் கோபத்துடன்,''என்ன தைரியம் இருந்தால்,என்னிடம் வந்து,ஒரு இந்துப் பல்கலைக் கழகம் ஆரம்பிக்க நிதி கேட்பாய்?''என்று கேட்டவாறே அவர் காலிலிருந்த செருப்பைக் கழட்டி மாளவியாவின் மீது எறிந்தார்.மாளவியா ஏதும் பேசாமல் அந்த செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின் செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன செருப்பு குறைந்த விலையில் ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று எண்ணிய நவாப் உடனே தன ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச் சொன்னார்.மாளவியாவும் தன காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக் கழக நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது,அவனது திறமையின்மையோ,தகுதிக் குறைவோ கூட அல்ல.இனி தனக்கு வாய்ப்பே இல்லை,விடிவு காலமே இல்லை என்று ஒரு முடிவுக்கு வருவதுதான்.
நீ தான் உலகிலேயேஉயர்ந்த ரகச் சரக்கு என்றும்,எனவே ஒவ்வொருவரும் உன்னைக் கடித்துத் தின்னவே பார்க்கிறார்கள் என்றும் உனக்குத் தோன்றும்.ஆனால் கொஞ்ச காலம் போனால் ,எல்லோருடைய இதயங்களும் உன் இதயத்தைப்போலத்தான் இருக்கின்றன என்ற உண்மையை உணர்ந்து கொள்வாய்.உணர்ந்த பின் உன் மனம் ஓரளவு சமாதானம் அடையும்.கூப்பிடு தூரத்துக்குக்கூட ஒலிக்காத உனது சின்னஞ்சிறு மணியைக் கோபுரத்தின் உச்சியில்கொண்டு கட்டி ஊரெல்லாம் ஒலிக்கச் செய்ய விரும்பிய உனது அறியாமையைக் கண்டு நீயே நாணம் அடைவாய்.உனது மணியைப் போன்ற பல்வேறு சிறு மணிகளின் கூட்டுறவோடுதான் உனது மணியிசையும் ஒன்று பட்டு ஒலிக்க முடியும் என்பதை நீ உணர்வாய்.
**********
ஒரு மனிதன் நாற்பது வயதைத் தாண்டிய பிறகு,அத்தனை காலமும் தன இதயத்துக்குள்ளே வேண்டாத விஷயங்களோடு முண்டி முண்டிப் போராடிக் கொண்டிருந்த பிறகு,அவனை சீர்திருத்தி வழிக்குக் கொண்டு வருவது என்ன,லேசுப்பட்ட காரியமா?
**********
நாம் உணவுக்காகக் கால் நடைகளைக் கொல்கிறோம்.அதுவே மோசம்.காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்க்கிறோம்.அது சரிதான்.ஒரு மனிதன் சக மனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால்,அவனை நான் மிருகத்தைக் கொல்வதுபோல கொன்று தீர்க்கத்தான் செய்வேன்.
**********
வாழ்க்கை அமைப்பிலுள்ள குறைபாட்டினால்தான் மக்கள் குற்றவாளி ஆகிறார்கள்.
**********
நல்ல காலத்தை எதிர் பார்த்துத்தான் மக்கள் வாழ்கிறார்கள்.எந்த வித நம்பிக்கையும் இல்லாவிட்டால்,அது எந்த வாழ்வோடு சேர்த்தி?நல்லவர்கள் என்றும் அதிக நாட்கள் தனியாக வாழ்வதில்லை..நல்லவர்களோடு மற்றவர்கள் வந்து எப்போதும் ஒட்டிக் கொள்வார்கள்.
**********
இங்கு கைதிகளும் இல்லை, நீதிபதிகளும் இல்லை.பிடிபட்டவர்களும்,பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.
**********
--'தாய்'என்ற நூலிலிருந்து .
நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது தீவிரமாகப் பேசாதே.மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும்.அவர்கள் ஒருவரை ஒருவரே வெறுக்கிறார்கள்.பொறாமையாலும்,பகைமையாலுமே வாழ்கிறார்கள்.அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள்.நீ அதை எடுத்துக்காட்டி அவர்களைக் குறை கூறத் தொடங்கினால் உடனே அவர்கள் உன்னைப் பகைப்பார்கள்.உன்னை அழித்தே விடுவார்கள்.
**********
பயம்தான் நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது.நம்மை அதிகாரம் பண்ணி ஆளுகிறார்களே,அவர்கள் நமது பயத்தை வைத்துத்தான் காரியத்தைச் சாதிக்கிறார்கள்.மேலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
**********
ஒவ்வொருவனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான்.எனவே முதல் அடியை இவனே கொடுக்க முற்படுகிறான்.இப்படித்தான் வாழ்க்கை இருக்கிறது.
**********
என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு போய் விட்டால் என் துயரத்தை சொல்லி அழக்கூட ஒரு துணையிராது.
**********
நமது காசும் மற்ற காசுகளைப்போல வட்டக்காசுதான்.ஆனால்,மற்றவற்றைவிட இதன் கனம் அதிகம்.அவ்வளவுதான்.ஆனால் மனேஜரின்காசில் இருப்பதைவிட நமது காசில் மனித இரத்தம் அதிகம்.நாம் வெறும் காசை மதிக்கவில்லை.அந்தக் காசிலுள்ள இரத்தத்தை,நியாயத்தைத்தான் மதிக்கிறோம்.
**********
எல்லாப் பழமொழிகளும் வயிற்றிலிருந்துதான்பிறக்கின்றன.இவற்றைக் கொண்டு மனதிற்குக் கடிவாளம் பின்னுகிறது வயிறு.மனித இதயம் வாழ்க்கைப் பாதையில் சுலபமாகச் செல்வதற்காக,அதைப் பக்குவப் படுத்துவதற்காகவே பழமொழிகள் பயன்படுகின்றன.
**********
எந்தத் தவறானாலும் சரி,அது என்னை பாதித்தாலும்,பாதிக்காவிட்டாலும் அதை மன்னித்து விட்டுக் கொடுக்க எனக்கு உரிமை கிடையாது.இந்த உலகில் நான் ஒருவன் மட்டுமே உயிர் வாழவில்லை.இன்றைக்கு எனக்கு ஒருவன் தீங்கு இழைப்பதை நான் விட்டுக் கொடுத்து விடலாம்:அவனது தீங்கு அவ்வளவு ஒன்றும் பிரமாதமில்லை என்ற நினைப்பால் அதைக் கண்டு நான் சிரிக்கலாம்;அது என்னை சீண்டுவதில்லை.ஆனால் நாளைக்கோ என் மீது பலப் பரீட்சை செய்து பழகிய காரணத்தால் வேறொருவனின் முதுகுத் தோலை உரிக்க அவன் முனையலாம்.ஒவ்வொருவரையும் ஒரே மாதிரிக் கருதிவிட முடியாது.
**********
ஒவ்வொருவனும் அவனவன் வயிற்ரை நிரப்பவே வழி பார்க்கிறான்.அந்தப் பிரச்சினையை நாளை வரை ஒத்தி வைப்பதற்குக் கூட எவனும் விரும்புவதில்லை.
**********
-- தாய் எனும் நாவலிலிருந்து.
62 - 52 = 11
562 - 452 = 11 11
5562 - 4452 = 11 11 11
55562 - 44452 = 11 11 11 11
.......and so on
======
4 + 9 + 1 +3 = 17
4913 = 173
=======
13 + 53 + 33 = 153
ஒரு செல்வந்தர் ஒரு ஓவியரின் படங்களால் கவரப்பட்டு அவற்றை விற்றுக் கொடுப்பதற்கு வசதியாக ஒரு கண்காட்சி ஏற்பாடு செய்தார் இரண்டு நாள் கழித்து அந்த ஓவியர் அவரிடம் வந்து தன ஓவியங்கள் ஏதேனும் விற்றனவா எனக் கேட்டார்.அதற்கு அந்த செல்வந்தர்,''உங்களுக்கு இரண்டு செய்திகள் வைத்துள்ளேன்.ஒன்று நல்ல செய்தி இன்னொன்று கெட்டசெய்தி.''என்றார்.ஓவியர் முதலில் நல்ல செய்தியைக் கூறச் சொன்னார்.செல்வந்தரும்,,''நேற்று ஒருவர் வந்து உங்கள் ஓவியங்கள் நீங்கள் இறந்தபின் புகழ் பெறுமா எனக் கேட்டார்.ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் அப்படியானால் பின்னால் நல்ல விலைக்குப் போகும் அல்லவா என்றார்..நானும் அவ்வாறு கண்டிப்பாக நடக்கும் என்று சொன்னேன்.உடனே அவர் உங்களுடைய ஓவியங்கள் அனைத்தையும் நல்ல விலைக்கு வாங்கிச் சென்று விட்டார்.இதுதான் நல்ல செய்தி''என்றார்..ஓவியர் அடுத்த் கெட்ட செய்தியைக் கேட்க ,செல்வந்தர் சொன்னார்,''உங்கள் படங்களை வாங்கியது வேறு யாருமில்லை,உங்கள் குடும்ப டாக்டர் தான்.''
ஒரு வயதான மனிதன் கடற்கரையில் உலாவிக் கொண்டிருந்தபோது ஒரு பழைய விளக்கினைக் கண்டு எடுத்தார்.அதை எடுத்து தேய்த்தபோது ,அதிலிருந்து ஒரு பூதம் வந்தது,பூதம் அவரிடம் சொன்னது,''நீங்கள் எனக்கு விடுதலை அளித்ததால் நான் உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன்.என்ன வேண்டும்?''அவர் சொன்னார்,''எனக்கும் என் அண்ணனுக்கும் நான் செய்த ஒரு சிறு தவறினால் முப்பது ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தை இல்லை.அவர் எனது தவறை மறந்து மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.''பூதம் உடனே,''உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது.ஆனால் எனக்கு ஒரு ஆச்சரியம்.எல்லோரும் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைத்தால் பெரும் பணமும்,புகழும் கேட்டிருப்பார்கள்.ஆனால் உங்களுக்கு அன்பு தான் பெரிதாகப் பட்டது.உங்கள் அண்ணனின் உறவைத்தான் விரும்பினீர்கள்.என்ன காரணம் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?''என்று கேட்டது.அவர் சொன்னார்,''வாரிசில்லா என் அண்ணனிடம் பல கோடி பெறுமானமுள்ள சொத்து உள்ளது.நான் அவருக்கு ஒரே தம்பி.''
மகா பாரதத்தை எழுதியதோடு வேதங்களைத் தொகுத்தவர் வியாச முனிவர் அவருடைய மகன் சுகர்.பிரம்ம ஞானி.ஆடைகளையே சுமை என்று கருதி அவற்றைத் தவிர்த்தவர்.ஒரு நாள் அவர் ஆற்றங்கரையோரம் சென்று கொண்டிருந்தார்.ஆற்றில் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.இதைக் கவனித்த வியாசர் தன மகன் உடையின்றி செல்வதால் இளம் பெண்கள் சங்கடப் படுவார்களே என்று எண்ணி மகனை வேறு பாதைக்குத் திருப்ப விரைந்து சென்றார்.ஆனால் சுகர் பெண்களைக் கடந்து செல்லும்போது பெண்கள் பகுதியில் எந்த வித சலசலப்பும் இல்லை.ஆனால் வியாசர் அந்தப் பகுதியைக் கடந்து செல்லும்போது பெண்கள் சட்டென்று உடைகளை இழுத்துப் போர்த்துக் கொண்டு நின்றனர்.வியாசருக்கு ஆச்சரியம்.தன மகன் உடையில்லாமல் போவதைப் பொருட்படுத்தாத பெண்கள் தான் முனிவர் என்பது தெரிந்தும் பெண்களிடையே ஒரு பதற்றம் ஏன் ஏற்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினார்.அப்பெண்களிடம் அவர் கேட்டபோது அவர்கள் சொன்னார்கள்,''தங்கள் மகனைப் பார்க்கும்போது அவர் மனதில் தான் ஒரு ஆண் என்ற உணர்வு கூட இருப்பதாகத் தெரியவில்லை.எனவே எங்களுக்கு அவரைக் கண்டபோது மனதில் எந்த சஞ்சலமும் இல்லை.எங்களுக்கும் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு அந்நேரம் இல்லை.உங்கள் மனதில் நீங்கள் ஒரு ஆண் என்ற உணர்வு அழுத்தமாக இருக்கிறது.அதனால் எங்களுக்கும் உங்களைப் பார்த்த உடன் நாங்கள் பெண்கள் என்ற உணர்வு வந்து விட்டதால் எங்களுக்குள் ஒரு பதட்டம் ஏற்பட்டு நாங்கள் உடைகளை சரி செய்தோம்.''தன மகன் தன்னையே மிஞ்சி விட்டார் என்பதை வியாசர் புரிந்து கொண்டார்.
பக்தர் ஒருவர் இறைவனிடம் வேண்டினார்:
இறைவா!நான் மூன்று பாவங்கள் செய்துள்ளேன்.அவற்றை மன்னிப்பாயாக!முதலாவது,நான் செய்த பாவங்கள் எல்லாம்முன்னதாகவே உன்னால் மன்னிக்கப் பட்டவை என்று அறிந்தும் பாவ மன்னிப்பு கோரினேன்.இரண்டாவதாக,நீ எங்கும் எல்லா இடத்திலும் நிறைந்து இருப்பவன் என்று தெரிந்தும் உன்னைத்தேடி ஊர் ஊராக அலைந்தேன்.மூன்றாவதாக என் மீது என்னை விட உனக்கு அக்கறை அதிகம் என்று தெரிந்தும்,எனக்கு அதைக்கொடு,இதைக்கொடு என்று வேண்டினேன்.இம்மூன்று பாவங்களையும் மன்னித்து அருள்வாயாக!
தங்கள் கவலைகளை நேசிக்கும் மக்களும் இருக்கிறார்கள்.சொல்லப்போனால்,அதைப் பெரிது படுத்தி,பூதாகரமாக்கி விடுவார்கள்.அவர்கள் எப்போதும் தங்கள் துயரங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.வேறு எதைப் பற்றியும் பேச மாட்டார்கள்.நீங்கள் அதைக் கேட்காமல் போனால்,அவர்கள் உங்களை விரோதியாகவே பாவித்து விடுவார்கள்.உலகில் இப்படிப்பட்டவர்களே அதிகம்.அனுதாபம் பெறவே அவர்கள் அப்படிப் புலம்புகிறார்கள்.மிகவும் நுட்பமான தன முனைப்பு அது.கவலைப் படுபவர்களைக் கண்டால் நாம் அனுதாபம் கொள்கிறோம்.அவர்களின் நிலையில் இல்லாது நாம் மகிழ்ச்சியாக இருக்கும் மன நிலையில் தோன்றும் அனுதாபம் அது.இரண்டாவதாக அனுதாபம் காட்டும்போது நம்முடைய நிலை உயர்ந்து விடுகிறது.கவலைப்படுபவர் நமது அனுதாபத்தை அன்பு என்று தவறாக நினைக்கிறார்.அனுதாபம் அன்பு ஆகாது.
பண்டித மணி கதிரேசன் செட்டியார் ஒருநாள் திருவாவடுதுறை ஆதீனத் தலைவரைப் பார்க்க சென்றிருந்தார்.அவர் ஆதீனத்தை உடல் தாழ்ந்து வணங்கும்போது கால் தடுமாறிக் கீழே விழப்போனார்.ஆதீனத்தலைவர் அவரை சட்டென்று எழுந்து தாங்கிப் பிடித்துக் கொண்டார்.செட்டியார் மறுபடியும் ஆதீனத்தை வணங்கி,''எல்லாமே இயல்பாகத்தானே நடந்திருக்கிறது,சுவாமி,''என்றார்.ஆதீனத் தலைவர் அவர் சொல்வது விளங்காமல்,''இயல்பாக என்ன இப்போது நடந்தது?''என்று கேட்டார்.கதிரேசன் செட்டியார் விளக்கம் சொன்னார்,''எங்களைப் போன்ற அடியவர்கள் தவறுவதும்,தங்களைப்போன்ற ஆன்மீகப் பெரியவர்கள் தாங்கி வழி நடத்துவதும் இயல்புதானே?அதுதானே இப்போது நடந்திருக்கிறது?''ஆதீனத் தலைவர் செட்டியாரின் நகைச்சுவை உணர்வு கண்டு மகிழ்ந்தார்.
ஹிட்லர் ஒரு ஜோதிடரிடம்,''நான் எப்போது மரணம் அடைவேன் என்று சொல்ல முடியுமா?''என்று கேட்டார்.அதற்கு ஜோதிடர்,''யூதர்களின் திருநாள் அன்றுதான் தாங்கள் மரணம் அடைவீர்கள்.''என்றார்.ஹிட்லர் உடனே,''யூதர்களின் திருநாள் எப்போது வரும்?''என்று வினவினார்.ஜோதிடன் சொன்னான்,''தாங்கள் இறக்கும் நாள்தான் யூதர்களின் திருநாள்.''ஜோதிடன் உயிருடன் திரும்பியிருப்பானா?
ஒருவன் கலை அழகுடன் அரண்மனையைவிடச் சிறப்பாக மாளிகை ஒன்றைக் கட்டியிருந்தான்.அதை அந்த நாட்டு மன்னர் விலைக்குக் கேட்டும் அவன் கொடுக்கவில்லை.ஒருநாள் அவன் வெளிய போய்விட்டுத் திரும்பும்போது வீடு பற்றி எரிந்து கொண்டிருந்தது.மன்னன் செய்த சதியோ என நினைத்து அவன் அழுது புலம்பினான்.அப்போது அவன் மகன் அங்கே ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,கவலைப் படாதீர்கள்.இந்த வீட்டை நான் நேற்று மன்னருக்கு மூன்று பங்கு விலைக்கு விற்றுவிட்டேன்.வரும் பணத்தைக் கொண்டு இதை விட அழகான வீடு ஒன்று கட்டிக்கொள்ளலாம்.''தந்தையின் கண்ணீர் சட்டெனக் காணாமல் போயிற்று.அவன் சிரிக்கத் தொடங்கினான்.அவன் எதிரே வீடு எரிந்து கொண்டிருந்தது.அவன் கண்களிலோ எதிர் காலக் கனவு!அப்போது அவன் இளைய மகன் ஓடி வந்தான்.அவன் சொன்னான்,''அப்பா,அண்ணன் சொன்னது உண்மைதான்.ஆனால் விற்றது பேச்சளவில்தான்.பத்திரம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.பணமும் வாங்கவில்லை.''தந்தை மறுபடியும் அழ ஆரம்பித்து விட்டான்.
இதுதான் பற்று...அடையாளம்.ஒருவன் உயிருடன் இருக்கும்போது எல்லாவற்றையும் தன்னுடன் அடையாள படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.எல்லாவற்றையும் பயன் படுத்திக் கொள்ளலாம்.ஆனால் பற்றில் விழுந்து விடக் கூடாது.உடைமை கொள்ள முயலக்கூடாது.
விலகி இருங்கள்!விழித்திருங்கள்!மௌனமாய்ப் பார்த்திருங்கள்!
மனிதர்கள் ஏன் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள்?அது ஒரு அடிப்படைச் சிக்கல்.அதன் அடிப்படையைக் காண மாபெரும் உளவியல் அறிஞர்களாலும் முடியவில்லை.கொடுக்க யாரும் விரும்புவதில்லை.எல்லோரும் பெற்றுக் கொள்ளவே விரும்புகிறார்கள்.அதன் மனோதத்துவம் எளிமையானது.நீங்கள் காலியாக இருக்கிறீர்கள்..உங்கள் உள்ளே அன்பு இல்லாமல் மொத்த இடமும் காலியாக இருக்கிறது.அதில் எதையாவது போட்டு நிரப்ப பார்க்கிறீர்கள்.யாராவது ஏதாவது கொடுக்க மாட்டார்களா என எப்போதும் எதிர் பார்த்து இருக்கிறீர்கள்.உங்கள் உள்ளே உள்ள காலி இடமோ மிகப் பெரியது.பணம்,அதிகாரம்,பெருமை,மரியாதை இவை எவற்றாலும் உங்கள் காலியிடத்தை நிரப்ப முடியாது.இவை எல்லாம் கிடைத்து விட்டாலும் வெறுமையைத் தான் உணர்வீர்கள்.அப்புறம்,என் வாழ்வே வீண் என்று கவலைப் படுவீர்கள்.வெறுமையே கருமித்தனத்தை உருவாக்குகிறது.பொங்கும் அன்பு வெள்ளமே அதனை அடித்துச் செல்லக்கூடியது.நீங்கள் அன்பினால் நிறைந்து வழியும்போது கருமித்தனம் நில்லாது.
மக்கா சென்று வரும் இஸ்லாமிய சகோதரர்கள் புனித நீரான ஜம்ஜம் நீரைக் கொண்டு வருவது வழக்கம்.ஜம்ஜம் என்ற பெயர் எப்படி வந்தது?
தீர்க்கதரிசி இப்ராஹீமுக்கு தொண்ணூறு வயதில் அவரது இளைய மனைவி ஹாஜகா மூலம் இஸ்மாயில் பிறந்தார்.இறைவனின் கட்டளையை ஏற்று கைக்குழந்தையையும் தாயையும் நெடுந்தொலைவிலிருந்த தண்ணீர் இல்லாத,புல் பூண்டு முளைக்காத,மக்கள் அற்ற பாலைவனத்திற்கு இட்டுச்சென்று தனியே விட்டுவிட்டுத் திரும்பினார்.தனியே விடப்பட்ட தாய்க்கும்,மகனுக்கும் கொண்டு வந்த உணவும்,நீரும் ஒரு நாள் தீர்ந்தது.குழந்தை தண்ணீருக்காக அழுதது.அன்னை பதைபதைப்புடன் நீரைத் தேடினார்.சப்பா,மர்வா என்ற இரண்டு குன்றுகளுக்கிடையே ஏழு முறை விறுவிறுக்க ஓடினார்.குழந்தை தரையில் உதைத்துக் கொண்டிருந்த இடத்தில் திடீரென தண்ணீர் பொங்கி ஓடியது.இறையருளை உணர்ந்த அன்னையின் வாய்,''ஜம்ஜம்''என்றது.ஜம்ஜம் என்றால் போதும்,போதும் என்று பொருள்.வற்றாத நீர்வளம் ஏற்பட்டதால்,மக்கள் அங்கு குடியேறி,பின்பு அது மக்கா பெருநகராகிவிட்டது.
கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி:
வாலி வதை செய்யப்பட்டவுடன் அவன் மனைவி தாரை புலம்புகிறாள்:
''செருவார் தோள!நின்
சிந்தையேன் எனின்
மருவா வெஞ்சரம்
எனையும் எவ்வு மால்
ஒருவேன் உள் உனை
ஆகின உய்தியால்
இருவேம் உள் இரு
வேம் இருந்திலேம்.''
இப்பாடலின் பொருள்: உன் உள்ளத்தில் நான் இருக்கிறேன் என்றால் உன்னைக் கொன்ற பாணம் என்னையும் கொன்றிருக்க வேண்டும்.இப்போது,நான் மட்டும் இருக்கிறேன்.என்னுள் நீ இருக்கிறாய் என்றால் என்னைக் கொன்று தானே உன்னைக் கொன்றிருக்க வேண்டும்?நான் தான் உயிரோடு இருக்கிறேனே?அப்படியானால் நீயும் உயிரோடு இருக்க வேண்டும்.இல்லையே,நீ மாண்டு போய் விட்டாயே?
அப்டியானால் ஒருவரில் ஒருவர் மாறிப் புகுந்திருந்தோம் என்பது வெறும் வார்த்தை.
''இருவேம் உள் இருவேம் இருந்திலேம் ''என்பதில்,சோக பாவமும்,அழகு பாவமும் போட்டியிட்டு வெளிப்படுகின்றன.மரணத்திற்குக் கூட உயிர் ஊட்டி விட்டது கம்பனின் இலக்கியம்!.
கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதையை வாசிக்க ஆரம்பித்தார்.அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல் எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம் பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,''இன்று நான் வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர் நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது.எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்க சொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.என்பதுதான் உண்மை என்று புரிகிறது.''
மதுரையில் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு சொற்பொழிவாற்ற கவிஞர் கண்ணதாசன் அழைக்கப்பட்டிருந்தார்.விழா அரங்கு முழுவதும் மாணவர்கள்.குறித்த நேரத்தில் கவியரசர் வரவில்லை.மாணவர்கள் விசிலடித்து சப்தம் போட ஆரம்பித்தனர்.ஒரு வழியாய் ஒரு மணி நேர தாமதத்தில் வந்து சேர்ந்தார் கவிஞர்.கல்லூரி முதல்வர் வரவேற்புரை நிகழ்த்தியபோது கூட மாணவர்களிடையே சலசலப்பு குறையவில்லை.பின் கண்ணதாசன் பேச ஆரம்பித்தார்,''ஒரு சிலருக்கு இந்து மதம் பிடிக்கும்.சிலருக்கு இஸ்லாமும்,சிலருக்கு கிறிஸ்துவ மதமும் பிடிக்கும்.எனக்குப் பிடித்த மதம்.....''என்று சொல்லி நிறுத்தினார்.மாணவர்களிடையே அமைதி.அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அனைவருக்கும் ஆவல்.அவர் தொடர்ந்தார்,''எனக்குப் பிடித்த மதம் தாமதம்,''என்று சொன்னவுடனேயே பலத்த கரவொலி எழுந்தது.அதன் பின் அவர் தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிட்டு தன இனிய பேச்சைத் தொடர்ந்தார்.
காந்தி அடிகள் ஒரு முறை கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதனுக்கு சென்று இருந்தார்.தாகூர் தேசப் பிதாவை வரவேற்கும்போது,''என்றும் இளமை பொருந்திய எங்கள் இதய அரசியான சாந்தி நிகேதன் தங்களை வரவேற்பதில் பெருமை கொள்கிறாள்,'' என்றார்.மகாத்மா சிரித்துக் கொண்டே,''அப்படியானால் இந்தக் கிழவனுக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது என்று சொல்லுங்கள்.இல்லாவிட்டால்,என்றும் இளமையுடன் விளங்கும் உங்கள் அரசி இந்தப் பல் இல்லாத கிழவனை வரவேற்பாளா?''என்று பேசினார்.காந்திஜியின் நகைச்சுவை உணர்வை அனைவரும் ரசித்தனர்.
ராமானுஜர்,தனது குருவான திருக்கோட்டியூர் நம்பியை அணுகி தனக்கு அஷ்டாச்சற மந்திரத்தை சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார் .நம்பி உடனடியாக சொல்லிக் கொடுக்காமல் அவருடைய உண்மையான ஆர்வத்தை தெரிந்து கொள்ள அவரை பதினெட்டு முறை அலைய விட்டு அதன் பின் அவர் காதில் ரகசியமாக ஓதினார் இம்மந்திரத்தின் சிறப்பு என்னவென்றால் இதைத் தொடர்ந்து ஓதுபவன் பிறவித் தளையிலிருந்து விடுபடுவான் என்பதாகும் .நம்பி இதை உபதேசிக்கும்போதே வேறு யாருக்கும் இதை ராமானுஜர் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்றும்,அதை மீறிச் சொன்னால் நரகம் கிட்டும் என்றும் சொன்னார்.மந்திரத்தை கவனித்து கேட்டுக் கொண்ட ராமானுஜர்,உடனே ஊரின் மையத்தில் இருந்த கோபுரத்தில் ஏறிக் கொண்டு மக்கள் அனைவரையும் கூவி அழைத்தார் .அனைவருக்கும் மந்திரத்தை சொல்லிக் கொடுத்து அதன் பயன்களையும் விவரித்தார்.இதைக் கேள்விப்பட்ட நம்பி,ராமானுஜரை அழைத்து கோபத்துடன் தன சொல்லை மீறியதன் காரணம் கேட்டார்.ராமானுஜர் பய பக்தியுடன் அவரிடம் சொன்னார்,''இந்த மந்திரத்தை சொன்னால் முக்தி கிடைக்கும் என்றும் பிறரிடம் சொன்னால் நரகம் கிட்டும் என்று சொன்னீர்கள் .நான் ஒருவன் மட்டும் முக்தி அடைவதற்குப் பதிலாக ,நான் நரகம் சென்றாலும் ஆயிரக்கணக்கானோர் முக்தி அடைவார்கள் அல்லவா ?'' 'ராமானுஜரின் பெருந்தன்மையைக் கண்டு கண்ணீர் மல்க நம்பி,ராமானுஜரை கட்டிப் பிடித்துக் கொண்டார்.
பொதுவாக வாழ்வில் ஒருவர் சொல்வது ஒன்றாகவும் செய்வது வேறு ஒன்றாகவும் இருக்கும்.அவர் நம்புவது இன்னொன்றாக இருக்கலாம்.தன்னுடைய இந்த மாறுபட்ட தன்மையைப் பார்க்கவே அவர்களுக்கு அறிவுத்தெளிவு கிடையாது.அவர்கள் நினைப்பது அனைத்தும் உயர்ந்ததாக இருக்கும்.ஆனால் நடைமுறையில் அவர்கள் எவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள்?ஏனெனில் அவர்களுடைய மேலோட்டமான அழகிய எண்ணங்கள்,கோட்பாடுகள் அனைத்தும் அவர்களது அடக்கப்பட்ட மோசமான உணர்வுகளிளிருந்துதான் வருகின்றன.நீங்கள் பல நூற்றாண்டுகளாக எரிமலையின் மீது அமர்ந்திருக்கிறீர்கள்.அது உங்களை எந்த நேரமும் எரித்து விடும்.சிறிது ஆக்ரோசமான தூண்டுதல் போதும்.உங்களுடைய நீதிக் கோட்பாடுகள் அனைத்தும் உங்களின் தோலின் ஆழம் கூட இல்லை.கொஞ்சம் உரசினால் போதும்.தோளிலிருந்து உடனே இரத்தம் வருவதுபோல ,உங்களிடமிருந்து எல்லா விலங்குகளும் ஒருங்கே வெளிப்படும் .
அந்தணர் ஒருவர் முக்கியமான காரியத்திற்காக குளித்துவிட்டு ஈர உடையுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கினார் .அவருக்காகவே காத்திருந்தது போல ஒரு பூனை குறுக்கே ஓடியது.''சனியன் பிடித்த பூனை'' என்று ஆங்காரமான குரலில் கத்தினார் அந்தணர்.ஓடிய பூனை நின்றது.கோபத்துடன் திரும்பிப் பார்த்து அவரை முறைத்தது.மீசை துடிக்க,''ஏ மனிதனே,எதற்காக என்னைத் திட்டினாய்?''என்று கடுமையான குரலில் கேட்டது.வியப்படைந்த அந்தணர்,''முக்கியமான காரியமாக நான் புறப்பட்டேன்.அந்த சமயத்தில் கறுப்புப் பூனையாகிய நீ அபசகுனம் போல குறுக்கே வரலாமா?''என்றார் சற்று சமாதானமான குரலில்.பூனை அவரைப் பார்த்துக் கேட்டது,''எல்லாம இறைவன் சித்தப்படிதான் நடக்கும் என்று நீ ஓதிய வேதங்கள் கூறவில்லையா?அப்படியிருக்க சகுனத்தின் பேரில் பழி போடுவது நியாயமா?இந்த சகுனம் பற்றி உனக்குக் கற்பித்தது யார்?உன் தாயா,தந்தையா,குருவா,அல்லது நீ ஓதிய வேதங்களா?''அனல் போல் பொழிந்த பூனையின் வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் அந்தணர்.பூனை தொடர்ந்தது,''மூன்று நாட்களாக ஒரு எலியைக் குறி வைத்து நான் பாயும் போதெல்லாம் உங்கள் வீட்டிலிருந்து யாராவது குறுக்கே வந்துள்ளீர்கள்.அதற்காக நான் உங்களைத் திட்டினேனா?சரி,நமக்கு இன்னும் நேரம் வரவில்லை என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.இன்றாவது அது சிக்கும் என்ற நம்பிக்கையில் நான் சென்று கொண்டிருக்கிறேன்.''அபசகுனம் என்று வீட்டுக்குத் திரும்ப நினைத்த அந்தணர் தனது முடிவை மாற்றிக் கொண்டு,பூனைக்கு வந்தனம் சொல்லிவிட்டு தன பயணத்தைத் தொடர்ந்தார்.
----குருஜி வாசுதேவ் எழுதிய 'மாறுபட்டு சிந்தியுங்கள்'என்ற நூலிலிருந்து.
முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார்.உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.''குரங்கு என்ன சாப்பிடும்?''என்று கேட்டார்.மனைவி,''நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.''என்று பதில் கூறினார்.''அது எங்கே தூங்கப் போகிறது?''என்று அவர் கேட்க,மனைவி,''நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.''என்றார்.முல்லா கோபமுடன்,''நம் படுக்கையிலா?நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?''என்று கேட்டார்.அவர் மனைவி அமைதியாக சொன்னார்,''என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால்,குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.''
ரஷ்யாவில் ஒரு யூத மத குரு வசித்து வந்தார்.இருபது வருடங்களாக அவர் தினமும் காலை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சதுக்கம் வழியாக யூதத் திருக் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.இதை தினமும், யூதர்களை வெறுத்து வந்த காவலன் ஒருவன் கவனித்து வந்தான்.ஒரு நாள் அவன் அந்த மத குருவை வழி மறித்து,''எங்கே செல்கிறாய்,''என்று அதிகாரமாகக் கேட்டான்.அதற்கு அவர்,''எனக்குத் தெரியாது,''என்று பதிலுரைத்தார்.உடனே காவலன் கோபமுடன்,''நீ தினமும் யூதர் கோவிலுக்கு இவ்வழியே செல்வதை நான் கவனித்து வருகிறேன்.ஆனால் இப்போது எங்கே செல்கிறாய் என்று கேட்டால் தெரியாது என்று சொல்கிறாய்.உனக்கு நான் ஒரு பாடம் கற்பிக்கிறேன்,''என்று சொல்லியபடி அவன் அவரை இழுத்துக் கொண்டுபோய் சிறையில் தள்ளினான்.யூத மதகுரு அப்போது அவனைப் பார்த்து சொன்னார்,''நான் திருக்கோவிலுக்கு செல்லத்தான் வந்தேன்.ஆனால் ஆண்டவனின் திரு உள்ளம் எப்படி என்று எனக்குத்தெரியாது அதனால் தான் எனக்குத் தெரியாது என்று சொன்னேன்.இப்படி சிறைக்குவருவேன் என்று எனக்குத் தெரியாது.அதனால் நான் எங்கே போகிறேன் என்று எனக்குத்தெரியாது என்று சொன்னதன் பொருள் இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.''.
''
ஒரு பணக்காரர்,தன வீட்டிற்கு அருகில் இருந்த தனக்கு சொந்தமான காலி மனையில்,''இந்த நிலம்,வாழ்வில் முழுமையான திருப்தி அடைந்தவர்களுக்கு கொடுக்கப்படும்.''என்று எழுதி வைத்தார்.அந்தப் பக்கம் வந்த ஒருவர்,அவரை அணுகி,''அய்யா,என்னிடம் எல்லா செல்வங்களும் தேவைக்கு இருக்கின்றன.அதனால் நீங்கள் சொன்ன தகுதி எனக்கு உள்ளது.எனவே இந்த நிலத்தை எனக்கே தாருங்கள்,''என்றார்.செல்வந்தர் கேட்டார்,''உண்மையிலேயே நீங்கள் வாழ்வில் திருப்தியுடன் இருக்கிறீர்களா?"'உடனே வந்தவர்,''உண்மையிலேயே நான் திருப்தியுடன் இருக்கிறேன்.எனக்குத் தேவையானது அனைத்தும் இருப்பதால் எனக்கு வாழ்வில் முழு திருப்தியே,''என்றார்.செல்வந்தர் சொன்னார்,''நண்பரே,நீங்கள் உண்மையிலேயே முழு திருப்தியுடன் இருந்தால் இந்தக் காலி மனையை அடைய ஏன் ஆசைப்படுகிறீர்கள்?'' வந்தவர் தலை குனிந்து அங்கிருந்து சென்றார் .
ஜப்பானில் அடிக்கடி தேநீர் விருந்து நடை பெறுவதுண்டு.ஒரு வயதானவர் தன நண்பர்களுக்கு ஒரு நாள் தேநீர் விருந்து அளித்தார்.அவர் மிகச் சிறப்பாகத் தேநீர் தயாரித்து எல்லோருக்கும் வழங்கினார்.எல்லோரும் அந்த தேயிலையை விரும்பிக் குடித்தனர்.இப்படி ஒரு சிறப்பான தேநீர் எப்படி தயாரிக்கப் பட்டது என்று அவரிடம் அனைவரும் கேட்டனர்.அவர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''நண்பர்களே,நீங்கள் மகிழ்ந்து புகழும் இந்த தேநீர் எனது தோட்டத்திலுள்ள வேலையாட்கள் தினசரி அருந்தும் தேநீர்தான்.இதில் விசேசமான பொருட்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.வாழ்க்கையில் மிகச் சிறந்த பொருட்கள் விலை மிக அதிகம் உள்ளதாகவோ,காணக் கிடைக்காததாகவோ இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.''
நீங்கள் உண்மையில்,ஒருபோதும்
பொருட்களுக்கு உடைமையாளராக இருப்பதில்லை.
ஒரு சில காலத்திற்கு அவற்றை நீங்கள் வைத்திருக்கிறீர்கள்.
உங்களால் அவற்றைக் கொடுக்க முடியவில்லை என்றால்
நீங்கள் அவற்றால் பிடிக்கப் பட்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எதைப் புதையல் என்று போற்றுகிறீர்களோ,
அது,உங்களது கையின் குழிவிற்குள் இருக்க வேண்டும்
தண்ணீரைப் பிடித்திருப்பதுபோல.
அதை இறுக்கமாகப் பிடித்தால்
அது சென்று விடுகிறது..
உங்களுக்காக அதை ஒதுக்கி வைத்தால்
அதை நீங்கள் அழுக்குஆக்குகிறீர்கள்
அதை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.
அது எப்போதும் உங்களுடையதாகவே இருக்கிறது.
நமது செல்வத்தினால் அல்ல
ஆனால் மகிழ்ச்சிக்கான நமது ஆற்றலினால் மட்டுமே
நாம் செல்வந்தராகவோ,ஏழையாகவோ இருக்கிறோம்.
செல்வத்திற்காக போராடி
மகிழ்ச்சிக்கான ஆற்றலைப் பெறாமலிருப்பது
தலை வழுக்கையானவர்
சீப்புகளை சேகரிக்கப் போராடுவதைப்போல இருக்கும்.
தவளையின் பிரார்த்தனை என்ற நூலிலிருந்து.
மனிதன் ஒரு உணர்ச்சிக் குவியல்.பல நேரங்களில் கோபம்,பரிதாபம்,பயம் ,மகிழ்ச்சி,இரக்கம்,எரிச்சல்,பொறாமை போன்ற உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் தன்னிச்சையாக வெளிப்பட்டு காரியத்தைக் கெடுத்து விடும்.உணர்ச்சி வேகத்தில் செய்யப்படும் காரியங்கள் எதுவும் சரியாக அமைவதில்லை.பொங்கிப் பிரவகிக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பின்போது எதிர்த்துப் பேசுதல்,விட்டெறிந்து பேசுதல்,எழுந்து போய் விடுதல்,அடித்து விடுதல்,பணியை ராஜினாமா செய்து விடல்,ஏன்,கொலை கூட செய்தல் நாம் காணும் அன்றாட காட்சிகள்.நிகழ்ந்து விட்ட சம்பவங்களை,வெளியிட்ட வார்த்தைகளை திரும்பப் பெறவோ,மாற்றவோ,அழிக்கவோ,முடியாது.வாழ் நாள் முழுவது வடுக்களாக நம்மை அவை அசிங்கப் படுத்திக் கொண்டே இருக்கும்.இந்த நம் உணர்ச்சிகள்,நமது சுற்றுச்சூழல்,வாழ்க்கை மோதல்களில்-,உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகவும்,நடைமுறையிலிருந்தும் ஏற்படுகின்றன.நிச்சயம் இவை வெளியிலிருந்து வருவதில்லை.''எது உனக்கு நிகழ்கிறதோ,அந்த நிகழ்ச்சியைவிட,அதற்கு நீ எப்படி மறுவினை ஆற்றுகிறாய் என்பதே முக்கியம்,''என்கிறார்.கிரேக்க ஞானி எபிசிடஸ்.நம் உணர்ச்சியைத் தூண்டத்தக்க ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டால் எல்லாம் போச்சு என்று ஒடுங்கி விடக்கூடாது.பெற்றோர்,உறவினர்,மனைவி,குழந்தைகள்,நண்பர்கள் உள்ளனர்.கை,கால்,மூளை,சிந்தனை,நேர்மை,உழைப்பு,ஆக்கத்திறன் எல்லாம் நம்மிடம் உள்ளன.எனவே உணர்ச்சி வசப்பட்டு பதறாதே!காரியம் சிதறாது!
நார்சிசம் (naarcissim) என்ற சொல் கிரேக்க புராணத்தில் இடம் பெற்ற ஒருவனின் பெயரிலிருந்து வந்தது.ஆற்று தெய்வத்தின் மகன் நார்சிசஸ் என்பவன்.இவன் தன்னை நேசித்து பிறரை வெறுத்ததன் காரணமாக கடவுளால் தண்டிக்கப் பட்டான்.ஓடும் நீரோடை ஒன்றில் தன உருவம் கண்டு தன்னையே மோகித்து தன உருவத்தைத் தழுவ முயன்று முடியாமல் செத்துப் போனான் நார்சிசஸ் அதிலிருந்து தன்னையே நேசித்து காதல் கொள்ளும் மனிதர்களை நார்சிஸ்ட் என்பார்கள்.நார்சிசம் ஒரு மனோநிலை.இந்த மனம் கொண்டவர்கள் தன்னை முன்னிட்டே பிறரை எடை போடுவார்கள்.
மெஷகிசம் (mesochism):
இந்த வார்த்தை உருவாகக் காரணம் ஒரு ஆஷ்ட்ரிய எழுத்தாளர் பிரபுக்கள் வம்சத்தை சேர்ந்தவர்.அவர் பெயர் Count Leepold von socher-masoch(1835-1895) அவர் சின்ன வயதில் ஹன்ட்சா என்ற வாடகைத் தாயிடம் பால் குடித்து வளர்ந்தவர்.அந்த அம்மா பயங்கரக் கதைகளை சொல்லி வளர்த்ததால்,தன மனம்,உடல் இரண்டிலும் துன்பத்தை உண்டு பண்ணிக் கொண்டு அதில் இன்பத்தைக் காணுவது அவருக்கு பழக்கம் ஆகிவிட்டது.அதிலிருந்து தன்னை வருத்திக் கொண்டு அதில் இன்பத்தைக் காணுவதற்கு மெஷகிசம் என்ற பெயர் வந்தது.இது சேடிசத்திற்கு எதிரானதாகும்.
மனித உறவுகளில் நாம் ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக் கொண்டேயிருக்கிறோம். அப்படி இல்லையென்றால் உறவில் விரிசல் வரும்.இப்படி நாம் கொடுக்கும் பரிசுகள் நமது சகதிக்குள் இருக்கிறவரை பிரச்சினை இல்லை.நம்மால் கொடுக்க இயலாத பரிசினைக் கொடுக்க்ம்போதுதான் பிரச்சினை வருகிறது.
நண்பர் ஒருவர் உங்கள் ஸ்கூட்டரை ஒருநாள் உபயோகத்துக்குக் கேட்கிறார்.உங்களுக்கோ கொடுக்க மனதில்லை.மனம் பதைபதைக்கிறது.தரமாட்டேன் என்று சொன்னால் உங்கள் இமேஜ் பாதிக்கப்படும் என அஞ்சி வேண்டா வெறுப்பாகக் கொடுக்கிறீர்கள்.அவர் ஸ்கூட்டரைத் திரும்பக் கொடுக்கும் வரை மனதிற்குள் திட்டித் தீர்க்கிறீர்கள்.அடுத்து இரண்டு நாட்களுக்கு உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் அவரிடம் சண்டை போடுகிறீர்கள்.என்ன காரணம்? ஸ்கூட்டரை இரவல் கொடுப்பது உங்கள் சக்திக்கு மீறின பரிசு.
ஊனமுள்ள பெண்ணை ஒரு இலட்சியத்திற்காக திருமணம் செய்யலாம்.அது ஒரு பெரிய பரிசு என்பதில் சந்தேகமில்லை.ஆனால் அந்த மாதிரி பெரிய பரிசைக் கொடுக்குமுன் அதைக் கொடுக்கிற சக்தி நமக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறதா என யோசித்துப் பார்க்க வேண்டும்.அவ்வளவு அன்பு இருக்கிறதா என்று நமக்குள் நாமே தேடித் பார்க்க வேண்டும்.அது சக்திக்கு மீறிய பரிசாக இருக்கும் நிலையில் அந்தப் பரிசை நம்மால் முழுமையாக மனப்பூர்வமாகக் கொடுக்க முடியாது.எனவே அந்த அன்பு இல்லை என்றால் அந்தப் பரிசை வாங்குபவர்களுக்கும் அது நரகமாகிவிடும்.
ஆசிரியரொருவர் பின்னே இரண்டு மாணவர்கள் போய்க்கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் குறும்புக்காரர்கள்.ஆசிரியருக்கு தலை வழுக்கை.ஒரு மாணவன் சொன்னான்,''நண்பா,வழுக்க போகுது,பார்த்து வா,''இதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டே வந்தான்.ஆசிரியருக்கு கோபம் வந்துவிட்டது நேரே தலைமை ஆசிரியரிடம் சென்று புகார் கொடுத்தார்.தலைமை ஆசிரியர் இரு மாணவர்களையும் வரவழைத்து விசாரித்தார்.அப்போது அந்த பையன் சொன்னான்,''அய்யா,நேற்று பெய்த கடும் மழையில் பள்ளிக்கு வரும் பாதை முழுவதும் சேறாக இருந்தது.அதனால் சேற்றில் என் நண்பன் வழுக்கி விழுந்து விடக்கூடாதே என்றுதான்,திரும்பத்திரும்ப,வழுக்க போகுது ,பார்த்துவா,என்று சொன்னேன்.''
**********
ஒருவர் வெளிநாடு சென்று திரும்பினார்.நண்பர் கேட்டார்,''அங்கு உங்களுக்கு என்ன பிடித்தது?''அவர் சொன்னார்,''குளிர் அதிகமாக இருந்ததால் சளி பிடித்தது.''
**********
ஒரு விழாவில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ரசிகமணி டி.கே.சி.,கல்கி ஆகிய மூவரும் கலந்து கொண்டனர்.வரவேற்புரை நிகழ்த்திய ஒருவர் ,''இவ்விழாவில் மும்மணிகள் கலந்துகொண்டு சிறப்பு செய்துள்ளனர்,''என்று பேசினார்.அடுத்து கல்கி பேச ஆரம்பித்தார்.அவர்,''வரவேற்புரையில் மும்மணிகள் வந்திருப்பதாகக் கூறினார்கள்.அதில் ஒருவர் கவிமணி..இன்னொருவர் ரசிகமணி.இதில் மூன்றாவது மணியாக இருப்பதற்கு நான் ஒரு பெண்மணியாகக் கூட இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது,''என்று பேச கூட்டத்தில் சிரிப்பு அடங்க வெகு நேரமாயிற்று.
ஒரு அரசியல்வாதி மக்களால் போற்றப்பட்டான்.பின் அவனுக்கு அதிகாரம் கிடைத்த் உடன் எல்லோரும் அவனுக்கு எதிராகி விட்டார்கள்.அவன் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டான்.அவன் அந்த ஊரை விட்டே வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.அவன் ஊர் ஊராய் தன மனைவியுடன் சென்று வீடு தேட ஆரம்பித்தான்.யாரும் அவனைக் கண்டு கொள்ளவில்லை.ஒரு ஊருக்குள் சென்றபோது அந்த ஊர் மக்கள் அவன் மீது கல்லெறிய ஆரம்பித்தார்கள்.அவன் மனைவியிடம் சொன்னான்,''இந்த ஊர்தான் நம் வாழ்வைத் தொடங்க சரியான இடம்,''என்றான்.மனைவியோ,''உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா?''என்று கேட்டாள்.அவன் சொன்னான்,''மற்ற ஊர்க்காரர்களைப் போல இந்த ஊர் மக்கள் நம்மை உதாசீனப் படுத்த வில்லையே?அவர்கள் நம்மை கவனிப்பதால் தான் கல்லை விட்டெறிகிறார்கள்.''உதாசீனத்தை விட எதிர்ப்பு மேலானது.
மன்னன் ஒருவன்,ஒரு ஜென் குருவை தன அரண்மனைக்கு வந்து தன்னுடன் தங்கும்படி அழைத்தான்.அதற்கு சம்மதித்த குரு மறுநாள் அரசனை சந்தித்தார்.''சில நாட்கள் உன் விடுதியில் தங்கிப்போக வந்துள்ளேன்,''என்றார் அவர்.மன்னனுக்கோ அதிர்ச்சி.அவன் குருவிடம் வருத்தத்துடன் கேட்டான் ,''குருவே,இது என் அரண்மனை.இதை விடுதி என்று சொல்கிறீர்களே?''குரு கேட்டார்,''மன்னா ,உனக்கு முன்னாள் இந்த அரண்மனையில் யார் இருந்தார்கள்?''மன்னன் தன தந்தையார் என்று சொல்ல,அதற்கு முன் யார் இருந்தார்கள் என்று குரு கேட்டார்.அரசனும் தன பாட்டனார் என்றான்.குரு,''உன் தந்தை,பாட்டனார் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறார்கள்?''என்று கேட்டார்.மன்னனும்,''அவர்கள் இறந்து மேலோகம் சென்று விட்டார்கள்,''என்று சொன்னான்.அதன் பின் குரு கேட்டார்,''உனக்குப் பிறகு இந்த அரண்மனையில் யார் இருப்பார்கள்?''அரசன் சொன்னான்,''என் மகன்,அதன் பின் என் பேரன்.''குரு,''ஆக,உன் பாட்டனார் சில காலம் இருந்தார்.பிறகு போய் விட்டார்.அதன்பின் உன் தந்தையார் இருந்தார்.பிறகு போய் விட்டார்.இப்போது நீ இருக்கிறாய்.நீயும் ஒரு நாள் மேலுலகம் போய் விடுவாய்.உனக்குப் பின் உன் மகன் இங்கு வாசிப்பான்.அவன் போனபின் உன் பேரன் தங்கியிருப்பான்.யாரும் இங்கே நிரந்தரமாக இருக்கப் போவதில்லை.இப்படி ஒவ்வொருவரும் சில காலம் மட்டும் தங்கிப் போகும் இடத்தை விடுதி என்று சொன்னதில் என்ன தவறு?''என்று கேட்டார்.
''அவன் எவ்வளவு எகத்தாளமாய் பேசுகிறான்?''என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.அது என்ன எகத்தாளம்?
ஆதிதாளம்,அடதாளம்,திரிபுரதாளம்,ஜம்பதாளம்,ரூபகதாளம்,ஆகியவை பஞ்ச தாளங்கள் என்று அழைக்கப்படும்.ஒவ்வொரு ராகத்துக்கும் தகுந்த தாளம் வாசிக்க வேண்டும். இந்த ஐந்து தாளங்களையும் சேர்த்து வாசிப்பதற்கு ஏக தாளம் என்று பெயர்.பாடுபவருக்கும்,வாசிப்பவருக்கும் ஒத்து வராமல் போகும்போது வாசிப்பவர் வேண்டுமென்றே ஏக தாளமாக வாசிப்பார்.
அதேபோல கேட்பவரிடம் பதில் சொல்பவன் ஏறுக்கு மாறாகப் பதில் சொல்வதை ஏக தாளம் என்று சொல்லப்பட்டது.இது நாளடைவில் மருவி எகத்தாளம் என்று ஆகிவிட்டது.
சாராயக் கடையில் நல்ல கூட்டம்.ஒரே சப்தம்.அப்போது ஒரு குடிகாரன் திடீரென உரத்த குரலில்,''எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,''என்று கத்தினான்.உடனே ஒருவன் கேட்டான்,''ஏனப்பா இன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்கிறாய்?புத்தாண்டு பிறந்து இருபது நாட்கள் ஆகி விட்டனவே!''குடிகாரனுக்கு ஒரே குழப்பம்.பலரும் இதேபோல சொல்ல அவன் கூவினான்,''ஐயையோஇதுவரை நான் இவ்வளவு தாமதமாக வீட்டுக்குப் போனதில்லையே.என் மனைவி என்னைக் கொன்று விடுவாளே!''
**********
கல்லூரியில் படிக்கும் பையன் தந்தைக்குக் கடிதம் எழுதினான்,''அன்புள்ள தந்தைக்கு,உங்களிடம் இருந்து செய்தி வந்து நீண்ட நாட்களாகி விட்டன.உடனடியாக ஒரு செக் அனுப்பினால் நீங்கள் நலமுடன் இருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்வேன் அல்லவா?''
**********
ஒரு கடையில் சேலை திருடிய குற்றத்திற்காக ஒருவன் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டான்.நீதிபதி கூறினார்,''இதே குற்றத்திற்காக முன் ஒரு முறை தண்டனை பெற்றிருக்கிறாயே?மீண்டும் அதே தவறை செய்யலாமா?''திருடன் சொன்னான்,''என் மனைவி முதலில் திருடிய சேலை கிழிந்து விட்டது என்று கூறினாள்.அவளும் எவ்வளவு நாள் தான் கிழிந்த சேலையை உடுத்துவாள்?''
**********
ஒரு கூட்டத்தில் பெண்கள் பகுதியில் ஒரே அரட்டை.பேச்சாளருக்கு அது இடையூறாயிருந்தது.''அமைதி,அமைதி,''என்று சொல்லியும் சத்தம் நின்றபாடில்லை.அப்போது பேச்சாளர்,''பெண்மணிகள் எப்போதும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்,''என்றார்.உடனே கூச்சல் நின்றது.
**********
ஒரு இளைஞன் இரு ஏரிக்கரை வழியே போய்க் கொண்டிருந்தான்.அப்போது ஒருவர் நீரில் மூழ்கிக் கொண்டிருந்ததைக் கண்டான்.அவர் உதவி கேட்டு அலறவே இளைஞனும் உடனே நீரில் குதித்து அவரைதூக்கினான். அந்த ஆளுக்கு நினைவு இருந்தது.இளைஞன் நீந்திக் கொண்டே அவர் குடியிருப்பது ,சொந்த வீடா வாடகி வீடா என்று கேட்டான்.அவரும் வாடகை வீட்டில்குடியிருப்பதாகச் சொன்னார்.அவருடைய வீட்டு முகவரி கேட்டான்.அவரும் சொன்னார்.உடனே இளைஞன் அவரை அப்படியே நீரில் விட்டுவிட்டு தான் மட்டும் கரைக்கு நீந்தி வந்து அவர் சொன்ன முகவரிக்கு ஓடினான்.அந்த வீட்டின் சொந்தக்காரரை அணுகி,''ஐயா,உங்கள் வீட்டில் குடியிருந்தவர் ஏரியில் மூழ்கி விட்டார்.எனக்கு அந்த வீட்டை வாடகைக்குக் கொடுப்பீர்களா?''வீட்டின் உரிமையாளர் சொன்னார்,''அடப்பாவமே,கொஞ்சம் முந்தி வந்திருக்கக் கூடாதா?இப்போதுதான் அவரைத் தண்ணீரில் தள்ளிவிட்டவர் வந்து வாடகைக்கு வீட்டைப் பிடித்து விட்டார்.''
ஜென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?''ஞானி சொன்னார்,''பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.இப்போது இரண்டும் போய்விட்டன.இடையில் வந்தவை இடையில் போயின.இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?''
கலிலியோ பூமி சூரியனை சுற்றுகிறது என்று கண்டு பிடித்து சொன்னதற்கு கிறிஸ்துவ மதத்திலிருந்து கடுமையான எதிர்ப்பு இருந்தது.ஏனெனில் பைபிளில் சொல்லப்பட்டிருந்ததற்கு அது எதிராக இருந்தது.கடைசியில் எழுபது வயதுக் கிழவராயிருந்த அவரை போப்புக்கு முன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்கக் கட்டாயப் படுத்தினார்கள்.அவரும் தள்ளாடியபடி நடந்துபோய் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டு,சூரியன் தான் உலகை சுற்றுகிறது என்று ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.அனைவருக்கும் மகிழ்ச்சி.பிறகு கலிலியோ வாய் விட்டு சிரித்தார்.''நான் சொல்வதனால் ஏதாவது மாறி விடப் போகிறதா என்ன?என் வார்த்தைகள் எதை சாதித்துவிட முடியும்?நான் சொல்வதனால் பூமியும் சூரியனும் தம் போக்கை மாற்றிக் கொள்ளப் போகின்றனவா?ஆனாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் சொன்னது தவறு.ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்.பூமிதான் சூரியனை சுற்றுகிறது.என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பூமிக்குக் கிடையாது.நான் பைபிள் சொல்கிறபடி நடந்து கொள்கிறேன்.நான் கையாலாகாதவன்.''
ஒரு மரம் கொத்திப் பறவை அன்று காலை சுறுசுறுப்பாக இருந்தது.ஒரு பெரிய தேவதாரு மரத்தைக் கொத்திப் போட காட்டுக்குள் போனது.மரத்தின் பட்டையை அது கொத்திப்போட எத்தனிக்கும் போது ஒரு மின்னல் பாய்ந்து மரம் இரண்டாகப் பிளந்தது. ''அட,இத்தனை பலம் எனக்கு இருக்கு என்பது இத்தனை நாளாகத் தெரியாமல் போச்சே ''என்று அப்பறவை சிலிர்த்துக்கொண்டது.
இது தான் அகந்தை.
கடவுள் யார் என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கும் முன் நம்மை நாமே புரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் நம்மைப் பற்றித்தான் நமக்குக் குழப்பம்.நம் நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக நாம் கடவுளைப் புரிந்து கொள்கிறோம்.சில சமயங்களில் நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.நம்மிடம் நம்பிக்கை இருக்கும்போது கடவுளை நினைப்பதில்லை.மனிதன் தனக்கு வசதியான முறையில் கடவுளை எற்கிறானே தவிர அவர் இருக்கும் விதத்தில் அல்ல.எந்தக் கருத்து வசதியாக இருக்கிறதோ,அதை ஏற்று,அதை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளவும் செய்வான்.இது ஒரு விளையாட்டு.கடவுள் பெயரை சொல்லி நாமெல்லாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம்_நம்மை வைத்தே நாம் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறியாமலேயே!
ராமுவும் சோமுவும் நண்பர்கள்.ராமு சொன்னான்,''நீ ஒரு உதவாக்கரை.உனக்கு ஒன்றும் தெரியாது.''சோமு சொன்னான்,''என்னை அடிக்கடி உதவாக்கரை என்று சொல்கிறாய்.நான் ஒரு வாரத்தில் ஹெலிகாப்டர் ஓட்டிக்காட்டுகிறேன் பார்,''என்று சொன்னான்.சரியாக ஒரு வாரம் கழித்து சொன்னதுபோல ஒரு ஹெலிகாப்டரில் சோமு ஏறினான்.ராமுவும் சுற்றியிருந்தவர்களும் கைதட்டி அவனை உற்சாகப் படுத்தினர்.சோமுவும் ஹெலிகாப்டரில் ஜம்மென்று பறந்தான்.சிறிது நேரத்தில் ஹெலிகாப்டர் வானிலிருந்து கீழே விழுது சிதைந்தது.அனைவரும் அங்கு ஓடினர்.அதிர்ஷ்டவசமாக சோமு சிறு காயங்களுடன் உயிர் தப்பினான்.''என்ன ஆயிற்று?''என்று ராமு வினவினான்.சோமு சொன்னான்,''ஹெலிகாப்டர் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.ஆனால் மேலே போகப்போக அதிகமாகக் குளிர்ந்தது.எனவே மேலே ஓடிக் கொண்டிருந்த காற்றாடியை நிறுத்தி விட்டேன்.''
ஒருவன் போலீஸ் வேலைக்கு நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான் .ஆப்ரஹாம் லிங்கனை சுட்டுக் கொன்றது யார் தெரியுமா?''என்று அவனிடம் கேட்கப்பட்டது.உடனே அவன் தேர்வு அதிகாரிகளிடம் ,''எனக்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்,''என்றான்.அதிகாரியும் சிரித்துக் கொண்டே,''சரி,ஒரு வாரம் தருகிறோம்.விடையுடன் வா,''என்றார்.அவன் வீடு திரும்பினான்.வேலை கிடைத்து விட்டதா என்று அவன் மனைவி கேட்டாள்.அவன் சொன்னான்,''அநேகமாக வேலை கிடைத்த மாதிரிதான்.இல்லாவிட்டால் நேர்முகத் தேர்வின் போதே கண்டுபிடிக்க எனக்கு ஒரு கேசைத் தருவார்களா?ஒரு வாரத்திற்குள் அந்தக் கொலையாளியை நான் கண்டு பிடிக்க வேண்டும்.''
டாக்டர்:இதற்கு முன்னாள் டாக்டர் ரவியிடம் வேலை பார்த்ததாகச் சொல்கிறாயே,உன்னை எப்படி நம்புவது?சான்றிதழ் ஏதேனும் வைத்திருக்கிறாயா?
வந்தவர்:சான்றிதழ் எல்லாம் எதற்கு டாக்டர்?இதோ அவருடைய ஸ்டெதாஸ்கோப், தெர்மாமீட்டர் எல்லாம் வைத்திருக்கிறேனே!
**********
எஜமான்:ஏம்பா,இன்றைக்கு செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலையா?
வேலைக்காரன்:இன்றைக்கு மழை பெஞ்சதில்ல எஜமான்!
எஜமான்:உனக்கு எப்பவும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லணும்.குடையைப் பிடிச்சுக்கிட்டு தண்ணீர் ஊற்றியிருக்கலாம் இல்லையா?
**********
பயணி:குழந்தைகளுக்கு அரை டிக்கட் வாங்க வேண்டுமா?
நடத்துனர்:ஐந்துக்குக் கீழ் என்றால் வேண்டாம்.
பயணி:நல்ல வேளை, நான் நான்கு பிள்ளைகளைத்தான் கூட்டி வந்திருக்கிறேன்.
**********
ஒரு பேருந்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் வாயில் சிகரெட் வைத்திருந்தார்.அதைப் பார்த்த நடத்துனர்,பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த,'புகை பிடிக்காதீர்'என்ற அறிவிப்பினை சுட்டிக் காட்டி,;;இங்கு புகை பிடிக்கக் கூடாது,''என்றார்.பயணி சொன்னார்,''நான் புகைக்கவில்லை,''நடத்துனர் கேட்டார்,''நீங்கள்தான் வாயில் சிகரெட் வைத்திருக்கிறீர்களே?''பயணி பதிலுரைத்தார்,''அதனால் என்ன?இதோ பாருங்கள்!காலில் நான் செருப்பு அணிந்துள்ளேன்.அதற்காக நான் இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமா?''
**********
ஒரு நாடோடி ஒரு கிராமத்தை நோக்கி செல்கையில் பசி எடுத்ததால் சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அந்த வழியே ஒரு சுல்தான் குதிரையில் வந்து கொண்டிருந்தான்.சுல்தான் இவனைப் பார்த்து,''இப்படி நாடோடியாகத் திரிகிறாயே?சாப்பாட்டுக்கு என்ன செய்வாய்?''என்று கேட்டார்.அதற்கு நாடோடி,''நான் நினைத்தால் எதையும் செய்வேன்,''என்றான்.சுல்தான்,''என்னப்பா,ஒரு நாட்டிற்கே அதிபதியான எனக்கே நான் நினைத்ததைஎல்லாம் செய்ய முடியாது.ஒரு நாடோடியாகிய நீ எல்லாம் முடியும் என்கிறாயே?''என்று வியப்புடன் கேட்டார்.நாடோடி சொன்னான்,''உங்களால் முடியாது.ஆனால் என்னால் முடியும்.''உடனே சுல்தான் ,''எங்கே என்னைக் குதிரையிலிருந்து இறங்க வை பார்ப்போம்,''என்று சவால் விட்டார்.அதற்கு அவன்,''அய்யா,உங்களைப் போன்ற சுல்தானைக் குதிரையிலிருந்து இறங்க வைக்க முடியாது.ஆனால் நீங்கள் குதிரையிலிருந்து இறங்கினால்,அடுத்த நிமிடமே உங்களைக் குதிரையில் திரும்ப ஏற வைக்க முடியும்,''என்றான்.உடனே சுல்தானும் கீழே இறங்கினார்.உடனே நாடோடி,''இதோ,நான் சொன்ன உடனே இறங்கி விட்டர்கள்,பார்த்தீர்களா?''என்றான்.சுல்தானுக்கக் கோபம் வந்து விட்டது.''நீ சரியான் ஏமாற்றுப் பேர்வழி,''என்று கூறிக் கொண்டே மீண்டும் குதைரை மீது ஏறி கிளம்பினார்.அவன் சொன்னான்,''பார்த்தீர்களா?நான் சொன்னது போல நீங்கள் குதிரையிலிருந்து இறங்கிய உடனே திரும்பவும் ஏற வைத்து விட்டேன்.''என்றான்.சுல்தான்,அந்த நாடோடி தன்னை முட்டாளாக்கி விட்டான் என்பதை உணர்ந்தாலும் அவனுடைய சாமர்த்தயத்தை மெச்சி ஒரு தங்கக் காசினைக் கொடுத்துவிட்டு சென்றார்.நாடோடிக்கு இப்போதைக்கு சாப்பாட்டுப் பிரச்சினை தீர்ந்தது.
தண்ணீர் கலந்து பால் விற்கும் ஒருவன் முன் கடவுள் தோன்றி,பாலில் தண்ணீர் கலக்கும் காரணம் என்ன என்று கேட்டார்.அவன் சொன்னான்,''ஒரு குடம் பாலில் ஒரு குடம் தண்ணீர் கலந்தால் இரட்டிப்பாகப் பணம் கிடைக்கும்,''என்றான்.கடவுள் உடனே அவனுக்கு ஒரு குடம் பால் வரவழைத்துக் கொடுத்தார்.அவனும் கடவுளுக்கு நன்றி கூறிவிட்டு அவன் வழியே நடக்கலானான்.வேறேதேனும் வேண்டுமா எனக் கடவுள் அவனிடம் கேட்டார்.''உங்களால் முடிந்தால்...''என்று அவன் இழுக்க,''இன்னொரு குடம் பால் வேண்டுமா என்று கடவுள் கேட்டார்.அவன் சொன்னான்,''நான் அவ்வளவு பேராசைக்காரன் அல்ல.இன்னொரு குடம் தண்ணீர் கொடுத்தால் போதும்.அதை நீங்கள் கொடுத்த பாலில் ஊற்றி இரட்டிப்பாக்கி விடுவேன்.''அடுத்த நிமிடம் கடவுள் அந்த இடத்தில் நிற்க வில்லை.
படைவீரர்களின் காலை பெரேடுக்கு எட்டு பேர் சரியான நேரத்துக்கு வரவில்லை.பத்து நிமிட தாமதத்தில் ஒருவன் வந்தான்.தாமதத்திற்கான காரணத்தை அதிகாரி கேட்க அவன் சொன்னா,''என் தாயாருக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் அவரைப் பார்த்து விட்டு வந்ததில் சிறிது தாமதமாயிற்று.பின்னர் நான் வந்த பேருந்து வழியில் ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு குதிரையை வாடகைக்கு பிடித்து வந்தேன்.வரும் வழியில் திடீரென குதிரை கீழே விழுந்து இறந்து விட்டது.எனவே எஞ்சிய பத்து கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே வந்தேன்.அதனால் சற்று தாமதமாகி விட்டது,''அதிகாரி அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டு அவனை அனுமதித்தார்.அடுத்து இரண்டாவது ஒருவன் வந்தான்.இவனும் முதலாமவன் சொன்னது போலவே சொன்னான்.அரைகுறை மனதோடு அவனும் அனுமதிக்கப் பட்டான்.பின்னர் வந்த ஐந்து பேர் அதே காரணத்தை சொல்ல அதிகாரி ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை நிறுத்தி வைத்தார்.அப்போது எட்டாவது ஆளும் வந்து,''சார், உடல் நலமில்லாத தாயாரைப் பார்க்கப் போயிருந்தேன்பெருந்து ரிப்பேர் ஆகி விட்டது.எனவே ஒரு டாக்சியை பிடித்து வந்தேன்.''என்று ஆரம்பித்தான்.உடனே அதிகாரி,''நிறுத்து.அடுத்து டாக்சி ரிப்பேர் ஆகி விட்டது என்று சொல்லப் போகிறாய்.அப்படித்தானே?''அந்த ஆள் சொன்னான்,''இல்லை சார்,டாக்சி ரிப்பேர் ஆகவில்லை.வரும் வழியில் ஏழு குதிரைகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் அதைத் தாண்டி வரமுடிய வில்லை.எனவே அங்கிருந்து நடந்தே வந்தேன்.''
நான்கு பாதிரியார்கள் ஒரு இடத்தில் மகிழ்ச்சியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் சொன்னார்,''நாமெல்லாம் நல்ல நண்பர்கள்.பிறரிடம் சொல்ல முடியாத நம் பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசலாமே?''என்றார்.எல்லோரும் சம்மதிக்கவே அவர் சொன்னார்,''இப்போதெல்லாம் நான் அதிகம் குடிக்கிறேன்.அதை நிறுத்த முடியவில்லை.'' அவர் வெளிப்படையாகப் பேசியதைப் பார்த்து அடுத்தவர் தைரியம் அடைந்து ,''என்னுடைய பிரச்சினையே நான் அதிகம் சூதாடுவதுதான்.எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் அதிலிருந்து மீள முடியவில்லை.''மூன்றாமவர் சொன்னார்,''சமீப காலமாக என் கவனம் எல்லாம் ஏற்கனவே திருமணம் ஆன ஒரு பெண்ணை எப்படி அடைவது என்பதுதான்.பாவம் என்று தெரிந்தும் என் மனம் அதையே நாடுகிறது.''நான்காமவர் சொன்னார்,''என்னுடைய கெட்ட பழக்கம் என்னவென்றால்,ஏதாவது ஒரு செய்தியைக் கேள்விப்பட்டால்,அதை எல்லோரிடமும் சொல்லாமல் என்னால் இருக்க முடிவதில்லை.''மற்ற மூவரும் மயக்கம் அடையாத குறைதான்.
பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார்.எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார்.எடிசனுக்கோ தாங்க முடியவில்லை.இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார்,''பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான்,''என்றார்.எடிசன் அவரிடம் சொன்னார்,''நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான்.ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.''
சில ராகங்களுக்கான நேரங்கள்:
காலை --பூபாளம்
உச்சிவேளை --காம்போதி
மாலை --சந்நியாசி,பூர்வ கல்யாணி
நள்ளிரவு --கானடா
மகிழ்ச்சி --மோகனம்,கல்யாணி
துயரம் --முகாரி,சுப பந்துவராளி
சாமி வீதி உலா --நாட்டை
முகூர்த்தம் --நாட்டைக் குறிச்சி
தாலி கட்டியதும் --காபி
தாலாட்டு --ஆனந்த பைரவி
மங்களம் --மத்யமாவதி
மழை பொழிய --அமிர்த வர்ஷினி
வளரும் பயிருக்கு --சாருகேசி
ஒரு நேர்முகத் தேர்வுக்கு ஒருவர் வந்தார்.மேனேஜர் சொன்னார்,''நாங்கள் இந்த வேலைக்கு பொறுப்பான ஒரு நபரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்,''.இளைஞன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சொன்னார்,''நான் இதற்கு முன் வேலை பார்த்த இடத்தில் என்னை அடிக்கடி பொறுப்பானவர் என்று சொல்வார்கள்,''ஆர்வமுடன் மேனேஜர்,''இன்னும் கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்களேன்.''என்று கேட்டார்.இளைஞன் சொன்னார்,''எனக்கு கொடுக்கப்பட்ட வேலைகளில் ஏதாவது தவறாகப் போனால்,'இதற்கு நீங்கள்தான் பொறுப்பானவர்,'என்று சொல்வார்கள்.உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நான் முன்பு வேலை பார்த்த நிறுவன மேனேஜரிடம் கேட்டுப் பாருங்கள்.'';
சேடிசம் (sadism)என்ற சொல் Marquis-de-sade என்ற எழுத்தாளரின் பெயரில் இருந்து தோன்றியதாகும்.இவருடைய காலம் 1740-1814 ஆகும்.பிரான்சில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர் இவர்.பிரெஞ்ச் இலக்கியத்தில் குரூரத்தை சிறப்பித்து எழுதியவர்.பிறர் துன்பம் கண்டு இன்பம் அடைதல் என்ற எண்ணத்திற்கு வக்காலத்து வாங்கியவர். மனிதர்களைக் கீழ்மை
படுத்துவது ,சித்தரவதை,விபரீதமான காரியங்கள்தான் அவருடைய நாவல்களின் முக்கிய அம்சங்களாகும்.
சுதந்திரப் போராட்ட வீரர் சந்திரசேகர ஆசாத் தன நண்பரின் வீட்டில் இருந்தார்.அவரைத் தேடி போலீஸ் நண்பர் வீட்டுக்கு வந்து விட்டனர்.அப்போதுஆசாத் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.போலீசிடம் நண்பர்,ஆசாத்தைப் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அதைக் கேட்டுக் கொண்டிருந்த அவர் மனைவி ஆசாத்தைப் பார்த்து,''பண்டிகை தினமும் அதுவுமாய் இப்படி சோம்பேறித்தனமாய்உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே!இனிப்பு பலகாரங்களை எல்லாம்எடுத்துக் கொண்டு போய் நண்பர்கள் வீடுகளில் கொடுக்க வேண்டாமா?''என்று வேலைக்காரனிடம்ஆணையிடுவது போல சொல்ல.புரிந்து கொண்ட ஆசாத்,இனிப்புகளை எடுத்துக் கொண்டு வெளியே சென்று அப்படியே தப்பிச் சென்று விட்டார்.அந்தப் பெண்மணியின் அபார துணிச்சல்,விசுவாசம்,தேசப்பற்று ஆசாத்தை அன்று காப்பாற்றியது.
இறப்பு என்பது அழகானதுதான்.ஏனெனில்அப்போது ஒரு ஆழ்ந்த அமைதியும் மிகுந்த ஓய்வும் ஏற்படுகிறது.ஆனால் இறப்பைக் கண்டு நாம் பொதுவாகவே பயப்படுகிறோம்.நீங்கள் தொடர்ந்து வாழ விரும்புகிறீர்கள்.நீங்கள் வாழ்வை இதுவரை முழுமையாக வாழவில்லை.இவ்வளவுதான் வாழ்வு என்று புரிந்தவனுக்கு இறப்பு ஒரு கொண்டாட்டம்.உங்கள் சக்தியை பணம் ,அந்தஸ்து,பதவி,சொத்து,சுகம்,மனைவி,மக்கள் என்ற உலகப் பொருள்களுக்கு செலவழித்து,அதுதான் நிரந்தரம் என்ற கருத்தை உங்கள் மனதில் ஆழமாக செலுத்தி விட்டீர்கள்.அது எப்போதும் வேலை செய்து கொண்டேயிருக்கும்.அதிலிருந்து உங்களால் மீள முடியவில்லை.இறப்பைக் கண்டு பயப்பட இது ஒரு காரணம்.
ஒரு புதுக் கவிதை:
எனக்காக தாஜ்மஹாலைக் கூடக்
கட்டித் தருவதாகச் சொன்னான்.
நான் ஒரு தாலி மட்டும் கட்டச் சொன்னேன்.
ஷாஜஹானைக் காணவில்லை.........
கிராமவாசி ஒருவன் புதிதாக நகரத்திற்கு வந்தான்.பலமாடிக் கட்டிடம் ஒன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.அங்கே இருந்த லிப்டில் வயதான ஒரு பெண் மேலே போக ஏறினார்.சிறிது நேரம் கழித்து லிப்ட் கீழே வந்தபோது ஒருஇளம்பெண் இறங்கி வந்தார்.கிராமவாசி சொன்னான்,''பட்டணத்திலே எவ்வளவு அதிசயம் நடக்குது?கிழவி ஒருத்தி இந்தக் கூண்டுக்குள் போனாள்.கொஞ்ச நேரத்தில் குமரியாக மாறி வெளியே வராளே!இப்படித் தெரிஞ்சிருந்தா ஊரிலிருந்து என் பொண்டாட்டியையும் கூட்டி வந்து குமரியாக்கி இருப்பேனே!''
முல்லா கடை வீதிக்கு தன கழுதை மீதேறி சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே ஒரு பணக்காரன் தன குதிரையில் வந்து கொண்டிருந்தான்.முல்லாவைப் பார்த்து அவன் கிண்டலாக,''முல்லா,கழுதை எப்படியிருக்கிறது?''எனக் கேட்டான்.முல்லா அமைதியாக சொன்னார்,''கழுதை குதிரையின் மீது சென்று கொண்டிருக்கிறது.
பண்டிதமணி கதிரேசன் செட்டியாருக்கு ஒருவர் விருந்தளித்தார்.உணவு சாப்பிட்டு முடிந்ததும் அவருக்கு ஒரு தம்ளரில் பால் கொடுத்தனர்.அதை வாங்கிய பண்டிதமணி தம்ளரை உற்றுப் பார்த்துவிட்டு,''திருப்பாற்கடலில் சீனிவாசன் பள்ளி கொண்டிருக்கிறாரே!''என்றார்.விருந்தளித்தவருக்கு ஒன்றும் புரியாமல் திகைப்பு ஏற்பட்டது.உடனே பால் தம்ளரை வாங்கிப் பார்த்தார்,''அடடே,எறும்பு இருக்கிறது,''என்றார்.செட்டியார் சொன்னார்,''எறும்பு சீனியில் வாசம் செய்யக் கூடியது அல்லவா?அதனால் தான் அதை சீனிவாசன் என்று சொன்னேன்''என்றார்.
ஒருவர் தன மாட்டைக் கூட்டிக் கொண்டு கால் நடை மருத்துவரிடம் வந்தார்.மருத்துவர் என்ன பிரச்சினை என்று கேட்க வந்தவர் சொன்னார்,''மாட்டிற்கு புண் இருப்பதால் சரியாகப் புண்ணாக்கு தின்ன மாட்டேன் என்கிறது.''மருத்துவர் கேட்டார்,''புண் எங்கே உள்ளது?'' மாட்டுக்காரர் சொன்னார்,''புண்ணாக்கில் உள்ளது.''மருத்துவருக்கு கோபம் வந்து விட்டது.''என்ன நக்கலா?''என்று கேட்டார்.உடனே அவர் பதறிப்போய்,''அய்யா,நான் உங்களிடம் கிண்டல் செய்வேனா?மாட்டுக்குப் புண் நாக்கில் உள்ளது.என்று தான் சொன்னேன்.''
ஒரு நூலகத்திற்கு ஒருவரின் பெயர் இடப்பட்டிருந்தது.நூலகத்திற்கு வந்த ஒருவர் கேட்டார்,''இந்தப் பெயரை முன்னர் கேள்விப் பட்டதில்லையே? இவர் ஏதேனும் சிறந்த புத்தகம் எழுதியிருக்கிறாரா?இவர் என்ன எழுதினார்?''அங்கு பணி புரிந்த ஒருவர் சொன்னார்,''ஒரு செக்,''(cheque)
**********
ஒரு நகைச்சுவை எழுத்தாளர் சொன்னார்,''நான் இருபத்தாறு ஆண்டுகளும் என் மனைவி இருபத்தி நான்கு ஆண்டுகளும் மகிழ்ச்சியாக இருந்தோம்.''நண்பர் கேட்டார்,''அதன் பின் என்னாயிற்று?''எழுத்தாளர் சொன்னார்,'அதன் பின் எங்களுக்கு திருமணம் ஆகி விட்டது.''
**********
நேர்முகத் தேர்வில் விற்பனை அதிகாரி கேட்டார்,''உங்களுக்கு விற்பனையில் முன் அனுபவம் இருக்கிறதா?''வந்தவர் சொன்னார்,''நிறைய அனுபவம் இருக்கிறது,சார்.சமீபத்தில் கூட என் வீடு ,கார்,என் மனைவியின் நகைகள்.நிலம் எல்லாவற்றையும் விற்றிருக்கிறேன்.''
**********
ஆசிரியை கேட்டார்,''தேர்வுத் தாளில் உன் பக்கத்தில் இருந்தவன் செய்த தவறும்,உன் தவறும் ஒரே மாதிரியாக இருக்கிறதே?அதற்கு என்ன காரணம்?''மாணவன் சொன்னான்,''இருவருக்கும் ஒரே ஆசிரியை தானே சொல்லிக் கொடுக்கிறார்?''
**********
ஒரு கல்லறை மீது எழுதப்பட்டிருந்தது,''இங்கு நேர்மையான வக்கீல்,ஜான் அடக்கம் செய்யப் பட்டிருக்கிறார்.''ஒருவர் கேட்டார்,''ஒரே கல்லறையில் எப்படி மூன்று பேரை அடக்கம் செய்துள்ளார்கள்?''
**********
ஒருவர் விடுமுறைக்கு ஒரு கடற்கரை நகருக்கு செல்ல உத்தேசித்து அங்குள்ள ஒரு ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்துவிட்டு,அதன் முகவரி கேட்டார்.மேனேஜர் சொன்னார்,''கடற்கரையிலிருந்து கல்லடி தூரத்தில் தான் எங்கள் ஹோட்டல் உள்ளது.''இவர் கேட்டார்,''அது சரி,அதை எப்படி அடையாளம் காண்பது?''கண்ணாடிகள் எல்லாம் கல்லடி பட்ட அடையாளம் தெரியும் ''என்று பதில் வந்தது.
**********
ஒரு நேர்முகத் தேர்வில்,''இரண்டும் இரண்டும் சேர்ந்தால் எவ்வளவு?''என்று கேட்கப்பட்டது.''அது எவ்வளவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ,அவ்வளவு,''என்று பதில் வந்தது.அவர் தேர்வு செய்யப்பட்டார்.
**********
கணவனும் மனைவியும் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது திடீரென மின்சாரம் நின்று விட்டது.ஆனாலும் ஒரு மெழுகு வர்த்தியைப் பொருத்தி வைத்து விட்டு இருவரும் தொடர்ந்து சாப்பிட்டார்கள்.கணவன் முதலில்சாப்பிட்டு முடித்தான்.அவன் கை கழுவ எழுந்தான் மனைவி சொன்னாள்.''எனக்குரொம்ப வேர்க்கிறது..''கணவன் உடனடியாக,''மின் காற்றாடியை சுழல விடட்டுமா?''எனக் கேட்டான்.மனைவி கோபத்துடன்,''உங்களுக்கு மூளை மழுங்கி விட்டதா?என்னால் இருளில் சாப்பிட முடியுமா?நீங்கள் காற்றாடியைப் போட்டால் மெழுகுவர்த்தி அணைந்து விடாதா?''என்று கேட்டாள்.
ஜெயிலிலிருந்த ஒருவனுடைய கடிதப் போக்குவரத்து முழுவதும் கடுமையாகக் கண்காணிக்கப் பட்டன.ஒருமுறை அவன் மனைவியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.அதில்,தோட்டத்தில் எப்போது விதைக்கலாம் எனக் கேட்டு எழுதியிருந்தாள்.உடனே இவன் பதில் எழுதினான்,''அன்பே,தோட்டத்தில் மண்ணை இப்போது தோண்டாதே.அதில் தான் நான் என்னுடைய ஆயுதங்களை எல்லாம் ஒழித்து வைத்திருக்கிறன்.''அடுத்து மனைவியிடமிருந்து கடிதம் வந்தது.''ஆறு பேர் வந்து நம் தோட்டத்தை முழுவதும் தோண்டி மண்ணைப் புரட்டி விட்டார்கள்.''கணவன் இப்போது எழுதினான்,''சரி,இப்போது விதைகளை விதைத்துவிடு.''
இரண்டு வயதானவர்கள் பொழுது போகாமல் பேசிக் கொண்டிருந்தனர்.அவர்கள் இருவரும் இளவயதில் கிரிக்கெட் விளையாடியவர்கள்.அப்போது ஒருவர் கேட்டார்,''சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாடுவார்களா?''அடுத்தவருக்கு பதில் தெரியவில்லை.அப்போது யார் முதலில் இறந்தாலும்,இதுபற்றி அடுத்தவரின் கனவில் வந்து சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.சில நாட்களில் ஒருவர் இறந்து விட்டார்.அடுத்தவரின் கனவில் வந்து அவர் சொன்னார்,''ஒரு நல்ல செய்தி,இங்கு கிரிக்கெட் தினசரி விளையாடுகிறார்கள்.ஒரு கெட்டசெய்தி,நாளைய கிரிக்கெட் விளையாட்டில்உன் பெயரும் சேர்க்கப் பட்டுள்ளது.''
1961 ல் சீனா இந்தியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது.அப்போது நேரு பிரதமராக இருந்தார்,பாராளுமன்றத்தில் ஆக்கிரமிப்பு பற்றி ஏகப்பட்ட சலசலப்பு.அப்போது நேரு ,''சீனா சில பகுதிகளைப் பிடித்திருப்பது உண்மைதான்.ஆனால் அவை ஒன்றுக்கும் பயன்படாத பகுதிகள்.அங்கு புல் பூண்டு கூட முளைக்காது.''என்றார்.உடனே சிறந்த பாராளுமன்றவாதியான மகாவீர் தியாகி எழுந்து ,''இதோ,என் தலையைப் பாருங்கள்,''என்று கூறி தனது வழுக்கைத் தலையைக் காட்டினார்.பின் அவர் கேட்டார் ,''என் தலையில் கூட ஒன்றும் முளைக்கவில்லை.அதனால் அது பயனில்லாத பகுதி என்று சொல்வீர்களா?''நேரு உட்பட அனைவரும் சிரித்து விட்டார்கள்.
குழந்தைகள் தவறு செய்யும்போது அடிக்கலாமா?அடிக்கலாம் என்பதைவிட தண்டிக்கலாம்.குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
**குழந்தை தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும்.பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது.
**தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும்.மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது.
**தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும்.உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது.
**தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது,குழந்தை தன தவறைப் புரிந்து கொண்டவுடன் அதிகப் பாசத்தைக்காட்டலாம்.
**தண்டனை கொடுத்தது குழந்தை செய்த தவறுக்குத்தான்,அதன் மீதுள்ள வெறுப்பினால் அல்ல என்பதைக் குழந்தைக்குப் புரிய வைக்க வேண்டும்.
**குழந்தை தவறு செய்தால் உடனே தண்டிக்க வேண்டும்.நீண்ட நேரம் கழித்துத் தண்டிப்பது முறையல்ல.
**குழந்தை தவறு செய்தால்,தொடர்ந்து தண்டிக்க வேண்டும்.ஒரு முறை தண்டிப்பதும்,மறுமுறை ஊக்குவிப்பதாகவும் இருந்தால் குழந்தையின் தவறுகள் தொடரும்.
**குழந்தை மீது பாசம் உள்ளவர்கள் தண்டித்தால் உடனடி பலன் கிடைக்கும்.தொடர்ந்து வெறுப்புக் காட்டி வருபவர் தண்டித்தால் எதிர் விளைவுகள் தானுருவாகும்.
**குழந்தையைத் தண்டிக்கும் முன் செய்த தவறு பற்றியும் கொடுக்கப் போகும் தண்டனை பற்றியும் குழந்தையிடம் சொல்லி விட வேண்டும்.
**தண்டனைக்கு உடல் ரீதியான அணுகு முறையைவிடமன ரீதியான அணுகு முறையே சிறந்தது.
விவேகானந்தரின் பொன்மொழிகளில் சில:
இந்தியாவில் மூன்று பேர்கள் ஒன்று சேர்ந்து ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஒற்றுமையுடன் செயல்படுவதில்லை.ஒவ்வொருவரும் பட்டம் பதவிகளுக்காகப் போட்டி இடுகிறார்கள்.
**********
பேச்சு...பேச்சு....எப்போதும் பேசிக்கொண்டிருப்பதே வியாதி இதை நன்கு உணர வேண்டும்.
**********
கோழைத்தனத்தை விடப் பெரியதொரு பாவம் வேறெதுவுமில்லை.கோழைகள் என்றுமே காப்பாற்றப் பட மாட்டார்கள்.
**********
வலிமையே வாழ்வு:கோழைத்தனமே மரணம்.வலிமையற்றவர்க்கு இங்கு இடமில்லை.பலவீனம் அடிமைத்தனத்தில் புகுத்தி விடும்.உடலளவிலும் உள்ளத்தளவிலும் வரக் கூடிய எல்லாத் துன்பங்களுக்கும் பலவீனமே காரணம்.
**********
தீயோர்களுக்கு உலகம் நரகமாகத் தெரிகிறது.நல்லோருக்கு சுவர்க்கமாகத் தெரிகிறது.அருளாளருக்கு அருள் வடிவமாகத் தெரிகிறது.பகை உணர்ச்சி உடையவர்களுக்கு வெறுப்பு மயமாகத் தெரிகிறது.சண்டை சச்சரவு இடுபவர்களுக்கு போர்க்களமாகத் தெரிகிறது.அமைதியானவர்களுக்கு அமைதிக் களஞ்சியமாகத் தெரிகிறது.முழுமையுற்ற மனிதனுக்கு தெய்வமாகத் தெரிகிறது.
**********
ஒரு குழந்தைக்கு கற்றுக் கொடுக்க முடியும் என்றா நீ நினைக்கிறாய்?அது தானாகவே கற்றுக் கொள்ளும்.வாய்ப்புகளை உண்டாக்கித் தருவது,இடர்ப்பாடுகளை நீக்குவதுதான் உன் கடமை.
**********
உங்கள் சாத்திரங்களைக் கங்கையில் எறிந்துவிட்டு பாமர ஏழை மக்களுக்கு உண்ண உணவும்,உடுக்க உடையும் சம்பாதிப்பது எப்படி என்று கற்றுக் கொடுங்கள்.அவர்களுடைய உலக வாழ்க்கைத் தேவைகள் தீர்க்கப் பட்டாலொழிய நீங்கள் கூறும் ஆன்மீகக் கருத்துக்களை அவர்கள் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்.
**********
நீங்கள் கற்ற லட்சணம் தான் என்ன?மாற்றான் மொழியில் மற்றவர் கருத்துக்களை மனப்பாடம் செய்து மூளையில் அவற்றைத் திணித்து வைத்துப் பிறகு ஒரு சில பட்டங்களைப் பெற்றதனால் மெத்தப் படித்தவர் என்ற எண்ணம் உங்களுக்கு!இதுவா கல்வி?
**********
தனக்கு எது தேவையோ,அதை இறைவன் தந்தருளவில்லை என்ற காரணத்தினால் உலகம் இறைவனைத் துறந்து விட்டது.உதாசீனப் படுத்தியுள்ளது.கடவுளை ஒரு நகராட்சியின் அதிகாரியாகவா நாம் நினைப்பது?
**********
ஒரு யானை தன உணவுக்காக,ஒரு தோட்டத்தில் நுழைந்தால்,அது அங்கு உண்பதை விட சேதமாவதே அதிகமாக இருக்கும்.அதே சமயம்,தேனீ,தன உணவுக்காக ஒரு மலரிலிருந்து தேன் எடுப்பது எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது?அது தேனை எடுக்கும்போது பூவிற்கு எந்த சேதமும்,மாற்றமும் ஏற்படுவதில்லை.ஒரு பூவைப் பார்த்தால்,அதிலிருந்து தேனீ தேன் எடுத்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்கவேமுடியாது.
தன கீழே உள்ளவர்களிடம் வேலை வாங்கும் நிலையில் உள்ளவர்கள் ஆழ்ந்து கவனிக்க வேண்டிய பாடம் இது.
வீர சிவாஜி,தன குருவான ராமதாசரிடம் ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார்.ஒரு முறை சிவாஜி ராமதாசருக்கு ஏராளமான பொன்னும்,மணியும் பரிசாக அனுப்பினார்.அவற்றைப் பெற்ற ராமதாசர்,கையளவு மண்,சில கூலாங்கற்கள்,கொஞ்சம் குதிரை சாணம்,ஆகியவற்றை சிவாஜிக்கு பரிசாக அனுப்பினார்.அதைப் பார்த்த அனைவரும் கோபப்பட,சிவாஜி மட்டும் புன் முறுவலோடு சொன்னார்,''என் குரு தீர்க்க தரிசனத்துடன் அனுப்பிய பொருட்கள் இவை.இந்த மண்,முகலாயரின் ஆதிக்கத்திலிருந்து நாடு முழுவதையும் நான் ஜெயிப்பேன்,என்பதைக் குறிக்கிறது.கூலாங்கற்கள்,எனது நாட்டை வலிமை மிக்க கோட்டைகளால் பாதுகாப்பேன் என்று காட்டுகின்றன. குதிரையின் சாணம்,எண்ணற்ற மாவீரர்கள் அடங்கிய குதிரைப் படையை நான் அமைப்பேன் என்பதை உணர்த்துகிறது.''
ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார்,''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள்.இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.வாரியார் தொடர்ந்தார்,''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''
கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார்.அவர் கேட்டார்,''வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?''வாலி சொன்னார்,''ராமாயணத்திலே,வாலி யாரோடுசேர்கிறானோ,அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம்.அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது,அவர்களது அறிவில் பாதிஎனக்கு வந்து விடுமல்லவா?அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.''அறிஞர்உடனே கிண்டலாக சொன்னார்,''அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?'' வாலி சிரித்துக் கொண்டே,''நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!''என்றார்.
சுவாமி ராமதீர்த்தர் அமெரிக்கா சென்றார்.உடன் வந்த பயணிகள் அனைவரும் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறினர்.சுவாமி எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.தனியாக நின்ற அவரைக் கண்ட ஒரு அமெரிக்கர்,அவரிடம் வந்து,''நீங்கள் எங்கே போகவேண்டும்?உங்கள் உடமைகள் எங்கே?அறிமுகக் கடிதம் ஏதேனும் உள்ளதா?''என்று கேட்டார்.சுவாமி சொன்னார்,''எனக்கு உடமைகள் எதுவும் கிடையாது.என்னிடம் பணமும் எதுவுமில்லை.அறிமுகக் கடிதம் எதுவும் கிடையாது.''ஆச்சரியமுற்ற அந்த அமெரிக்கர்,''அப்படியானால் நீங்கள் இங்கு எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?இங்கு நண்பர்கள் யாரேனும் உள்ளனரா?'' என்று கேட்டார். ராமதீர்த்தர் புன்னகையுடன் அமெரிக்கரின் தோளில் கையை வைத்து,''எனக்கு ஒரு நண்பர் இங்கே உள்ளார்,''என்றார்.அவரும்,''அவர் எங்கேயிருக்கிறார்?''என்று கேட்க சுவாமி சொன்னார்,''அவர் நீங்கள்தான்.'' இதைக் கேட்ட அந்த அமெரிக்கர் நெகிழ்ந்து போய்விட்டார்.பின் அவரே அவருக்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்.
ஜனகரின் அரசவைக்கு அஷ்டவக்கிரர் என்ற தத்துவ மேதை வந்தார்,அவர் உடல் எட்டு கோணலாகத் திருகியிருந்ததால் அவருக்கு அந்தப் பெயர்.அவைக்குள் அவர் வந்ததும் அங்கு கூடியிருந்தோர் அவருடைய அவலட்சணத்தைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர்.அஷ்டவக்கிரர் நிதானமாகச் சொன்னார்,''ஜனகரே,இது தத்துவ ஞானிகள் நிறைந்த சபை என்று நான் எண்ணித்தான் இங்கு வந்தேன்.கசாப்புக் கடைக்காரர்களும்,செருப்பு தைப்பவர்களும் நிறைந்த இந்த சபைக்கு தவறுதலாக வந்து விட்டேன்.''இதைக்கேட்ட அறிஞர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.மன்னர் அவரிடம் விளக்கம் கேட்டார்.அதற்கு அவர்,''இங்குள்ளவர்கள் என்னைத் தோலாகவும் சதையாகவும், எலும்பாகவுமே பார்த்தனர்.சதையையும் எலும்பையும் விற்பவர் கசாப்புக் கடைக்காரர்.தோலைப் பயன்படுத்துபவர் செருப்புத் தைப்பவர்.ஒரு உன்னதமான தத்துவ ஞானி,மனிதனின் ஆன்மாவையே பார்க்கிறார்.அதையே அங்கீகரிக்கிறார்.அது அனைவருக்கும் ஒன்றே,''என்று பதிலளித்தார்.
அசோகா சக்கரவர்த்தி தன ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்தார்.அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது.அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார்.மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல்,ஒரு ஆட்டுத்தலை,ஒரு புலித்தலை,ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார்.மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன.மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார்.ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புளித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர்.இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன வீட்டு சுவற்றில் பாடம் பண்ணி தொங்கவிட வாங்கிச் சென்றார்.ஆனால் மனிதத் தலையைக் கண்டு எல்லோரும் அஞ்சிப் பின் வாங்கினர்.முகம் சுழித்து ஓடினர்.ஒரு காசுக்குக் கூட யாரும் வாங்க முன்வரவில்லை.விபரங்களை மன்னரிடம் சொன்னபோது மனிதத் தலையையாருக்காவது இலவசமாகக் கொடுத்துவிட சொன்னார்.இலவசமாக வாங்கக் கூட யாரும் தயாராயில்லை.இப்போது அசோகா மன்னர் சொன்னார்,''தளபதியே,மனிதன் இறந்து விட்டால் அவன் உடல் ஒரு காசு கூடப் பெறாது.இருந்தும் இந்த உடல் உயிர் உள்ளபோது என்ன ஆட்டம் போடுகிறது?இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லைஎன்பது நமக்கு தெரிகிறது.உடலில் உயிர் இருக்கும்போதே,தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் ஞானிகள்.அத்தகைய ஞானிகளை பாதத்தில் விழுந்து வணங்குவதில் என்ன தவறு இருக்க முடியும்?''தளபதிக்கு இப்போது புரிந்தது.
இறைவனை வேதங்கள் மற்றும் கீர்த்தனைகளால் துதிக்கும்போது இறுதியில் ஓம் சாந்தி:சாந்தி:சாந்தி என்று முடிப்பதைக் காணலாம்.சாந்தி என்றால் அமைதி.சாந்தி என்று மூன்று முறை சொல்வதன் நோக்கம் மூன்று விதமான தடைகளிலிருந்து நாம் விடுபடுவதற்காகச் சொல்லப்படுவதாகும்.
ஆத்யாத்மிகம்:நம்மால் வரும் தடை.உடல் நோய்,மனப் பிரச்சினைகள் போன்றவை.
ஆதி பௌதீகம்:பிற உயிர்களால் வரும் தடைகள்.
ஆதி தைவீகம் .இயற்கை சக்திகளால் வரும் தடைகள்.மழை,இடி,தீ போன்றவை.
மூன்று முறை சாந்தி என்று சொல்வதன் மூலம் நாம் இந்த மூவகைத் தடைகளிலிருந்து விடுபடுவதாக சொல்லப்படுகிறது.
முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?
ஒரு கும்பலோடு நீங்கள் சேர்ந்து இயங்கும்போது எந்த குற்றத்தையும் செய்ய முடியும்.ஏனெனில்,''கும்பலே அதை செய்தது,நான் அதன் பகுதி மட்டுமே,''என்பதாக நீங்கள் உணர்கிறீர்கள்.தனியாக என்றால்,அதை செய்வதா வேண்டாமா என்று ஒரு முறைக்கு பல முறை யோசிப்பீர்கள்.கும்பலிலோ பொறுப்பு இல்லாமல் போகிறது.உங்களின் தனி மனித சிந்தனை மழுங்கி விடுகிறது.கும்பல்களுக்கு பைத்தியம் பிடிக்க முடியும்.இதை ஒவ்வொரு நாடும் அறிந்திருக்கிறது.ஒவ்வொரு கால கட்டமும் அறிந்துள்ளது.ஆனால் கும்பல்கள் ஞான நிலைப்பெறு பெற முடிந்ததாக எந்த நாடும் எந்தக் காலத்திலும் கேள்விப்பட்டதில்லை.நீங்கள் முற்றிலும் தனியாக இருக்கும்போது நீங்கள் வளரத் தொடங்குகிறீர்கள்.
ஒரு வேட்டை நாய் கிராமத்தைக் காவல் காத்து வந்தது.ஒரு நாள் அது தன குட்டியுடன் சென்று கொண்டிருந்தது.அப்போது தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நாய்கள் வேட்டை நாய்களைப் பார்த்து குலைத்தன.வேட்டை நாயோ அதனை கருத்தில் கொள்ளாது தன வழியே சென்று கொண்டிருந்தது. குட்டி நாய்,தாயிடம் கேட்டது,''அவை குலைப்பதை கேட்டுவிட்டு ஒன்றும் செய்யாது வருகிறாயே?அந்த நாய்களைக் கடித்துக் குதற வேண்டாமா?'' வேட்டை நாய் பதில் சொன்னது,''அப்படி செய்யக் கூடாது.தெரு நாய்கள் இருப்பதால் தான் வேட்டை நாய்களான நமக்கு உயர்ந்த மதிப்பு இருக்கிறது.எனவே அவற்றை ஒன்றும் செய்யக்கூடாது.''
ராமநாதபுரம் சேதுபதியின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் சிலேடைப்புலி என்ற பட்டம் பெற்ற வேம்பத்தூர் பிச்சுவையர் .ஒரு சமயம் புலவர் சபை கூடியது.எல்லா இருக்கைகளிலும்புலவர்கள் அமர்ந்து விட்டனர்.தாமதமாகப் பிச்சுவையர் வந்தார்.''வேம்புக்கு இங்கு இடம் இல்லையே!''என்று சேதுபதி வேடிக்கையாகக் கூறினார்.உடனே பிச்சுவையர்,''வேம்பு அரசின் அருகில் தானே இருக்கும்.''என்று கூறி சேதுபதியின் அருகில் போய் அமர்ந்து கொண்டார்.
நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?
இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன.இவை ஒரே சீரான அளவில் இருக்கும்போது நமக்கு தாகம் எடுப்பதில்லை.இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது.உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது. இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது.இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது.அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது.உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது.
**********
இஸ்லாமிய சகோதரர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறிக் கொள்கிறபோது ,''அஸ்ஸலாமு அலைக்கும்''என்பர்.இதன் பொருள்,''உங்களுக்கு எல்லா நலன்களும் அமைதியும் உண்டாகட்டும் என்பதுதான்.
**********
கராத்தே என்றால் வெறும் கை என்று பொருள்.
**********
ஆண்டு மழை 125 மில்லி மீட்டருக்கும் குறைவாக உள்ள பகுதிகள் தாம் பாலைவனம் என்று அழைக்கப்படுகின்றன.
**********
மூங்கில் ஒரு வகை புல் இனத்தை சேர்ந்தது.
**********
கி.பி 440 லிருந்துதான் கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 ல் கொண்டாடப்படுகிறது.
**********
பிரபலமான நாவலாசிரியர்,ஜார்ஜ் மூர் ஒரு சிறந்த மேதை.அவருக்கு இளமையில் கர்வம் மிகுதியாக இருந்தது.டப்ளின் நகர ஆர்ச் பிஷப் டாக்டர். வால்ஷ் என்பவருக்கு ஒரு நாள் ஜார்ஜ் மூர் கீழ்க்கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார்.
அன்பார்ந்த ஆர்ச் பிஷப் அவர்களே,
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?நான் கிறிஸ்துவ மதத்தை விட்டு விட்டேன்.
இப்படிக்கு.
ஜார்ஜ் மூர்.
அதற்கு பிஷப் பதில் எழுதினார்:
அன்பார்ந்த மூர்,
ஒரு பசுவின் வால் நுனியில் ஈ உட்கார்ந்த கதை உங்களுக்குத் தெரியுமா? 'பசுவே நான் போய் வருகிறேன்' என ஈ கூறியதாம்.அப்போது பசு தன வால் பக்கம் திரும்பி,''நீ இவ்வளவு நேரம் இங்கே இருந்ததே எனக்குத் தெரியாதே!''என்று பதில் சொல்லியதாம்.
இப்படிக்கு
ஆர்ச் பிஷப்
ஒரு அதிகாரி கோபம் வரும் போதெல்லாம் தன கீழ் உள்ள அலுவலரை,'நரகத்துக்குப்போ,''என்று கூச்சலிடுவது வழக்கம்.அந்த அலுவலருக்கு இதைக் கேட்கும் பொழுதெல்லாம் வருத்தமாக இருக்கும். இதை தவிர்ப்பதற்கு ஒரு வழி கண்டாக வேண்டும் என்று நீண்ட நாள் யோசித்தார்.ஒரு நாள் அதிகாரி கோபத்தில்,'நரகத்துக்குப்போ,''என்று திட்டியபோது,அவர் அமைதியாகச் சொன்னார்,''ஐயா,எனக்கு உங்களிடம் வேலை பார்பதுதான் மிகவும் பிடித்திருக்கிறது.அதனால் அடுத்த முறை உங்களுக்கு நரகத்துக்கு மாறுதல் வரும்போது உங்களுடன் நானும் நரகம் வந்து விடுகிறேன்.''அதன்பின் அந்த அதிகாரி அந்த மாதிரி யாரையும் திட்டுவதில்லை.
ஒரு ஓவியர் புதிதாக ஒரு ஓவியம் வரைந்திருந்தார்.இது வரை அவர் வரைந்த ஓவியங்களிலே இதுதான் சிறந்தது என்று அவர் நினைத்தார்.அப்போது அவருடைய நண்பர் ஒரு மருத்துவர் வந்தார்.ஓவியர் அவரிடம் தன புதிய ஓவியத்தைக் காட்டி அவருடைய கருத்தைக் கேட்டார்.மருத்துவரும் அந்த ஓவியத்தை நீண்ட நேரம் பரிசோதித்தார்.ஓவியத்தின் ஒவ்வொரு பகுதியையும் உற்றுக் கவனித்தார்.இருபது நிமிடம் சென்றது ஓவியருக்கே மருத்துவர் இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டது ஆச்சரியமாக இருந்தது. பின் மருத்துவர் சொன்னார்,''நிச்சயமாக இது மலேரியா காய்ச்சலின் அறிகுறி போலத்தான் தெரிகிறது.''
முல்லாவிடம் ஒருவர் வந்து,''நீங்கள் மிகுந்த அனுபவம் உடையவர்கள்.எனக்கு கண்ணில் மிகுந்த வலி.அதற்கு தகுந்த மருந்தினைக் கூறுங்களேன்.''என்று நயந்து கேட்டார்.முல்லா சொன்னார்,''முன்பொரு முறை எனக்கு பல்லில் வலிவந்தது.அப்போது நான் வலித்த பல்லைப் பிடுங்கி விட்டேன்.''வந்தவர் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி விட்டார்.
முஹம்மது நபி அவர்கள் ஒரு மரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியே சென்ற ஒரு யூத வீரன் அவரை அடையாளம் கண்டு அவர் மீது இருந்த வெறுப்பினால் அவரைக் கொன்று விட முடிவு செய்து,வாளை உருவிக்கொண்டு அவர் அருகில் சென்றான்.சப்தம் கேட்டு விழித்தார் நபிகள்.அந்த யூதன்,''முகம்மதுவே,இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்கள்?''என்று அவரிடம் கேட்டான்.நபிகள்,''இறைவன் தான் என்னைக் காப்பான்,''என்று உரக்கக் கூறினார்.அந்தக் குரல் தந்த அதிர்ச்சியில் யூதன்கையிலிருந்து வாள் நழுவியது.நபிகள் உடனே அந்த வாளை எடுத்துக் கொண்டு அவனிடம் கேட்டார்,''இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்கள்?'' அவன்,''என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை,''என்று கதறினான்.நபிகள் புன்முறுவலுடன் அவனிடன் சொன்னார்,''இல்லை நண்பரே,உம்மையும் அந்த இறைவன் தான் காப்பாற்றுவான்,''பின் அந்த வாளை அவனிடமே திரும்பக் கொடுத்தார்.அந்த வீரன் தன செயல் குறித்து வெட்கி தலை குனிந்தான்.
சொத்து சேர சேர ஒரு குடும்பத்தில் கலகம் உண்டாகும்.செல்வம் சேர சேர ஒரு ஜாதியில் பிளவு உண்டாகும்.அதிகாரம் வளர வளர ஒரு மதம் தன மரியாதை இழக்கும்.
**********
கர்வம் கொண்டவன் எல்லோரையும் தூஷிப்பான்.எல்லா நேரமும் தூஷிப்பான்.கர்வம் கொண்டவன் கடவுள் நிந்தனை செய்யவும் தயங்க மாட்டான்.
**********
எல்லா மதத்தினரும் இறை வழிபாட்டை வெறும் கர்வக் கொப்பளிப்பாக மாற்றிவிட்டார்கள்.அலட்டலாய் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அகம்பாவத்தின் உச்சகட்டமாக இறை வழிபாடு ஆகிவிட்டது.அதனால்தான் மற்ற மதத்தினர் மீது ஆத்திரம் வருகிறது.
**********
இந்த தேசத்தில் ஒவ்வொரு ஆணின் அகங்காரமும் அதிகமாக வெளிப்படுகின்ற இடம் மனைவியின் மீதுதான்.
**********
கர்வப்படக் கூடாது என்று கட்டளை போட்டால் கர்வப்படும்.பொய் சொல்லாதே என்று மனசுக்குக் கட்டளை போட்டால் அது பொய் சொல்லும். கர்வப்படு என்று விட்டுவிட்டு,கர்வப்படுவதை வேடிக்கை பார்த்தா,நம்ம கர்வம் நம்ம எதிர்க்கே வெட்கப்பட்டு நம்மையே விட்டுட்டு ஓடிடும்.
**********
உதறி விடுவோமே என்று பயந்துதானே உரிமை கொண்டாடுகிறாய்.கலவரம் தானே உறவுக்குக் காரணம்?அதீத பயம் தானே குழு மனப்பான்மை?
**********
இல்லறத்தைத் துறப்பது துறவல்ல.அகந்தையைத் துறப்பதே துறவு.மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்.
**********
ஆசை,ஆங்காரம்,அதைரியம் மூன்றும் புத்தியை அலுப்படைய வைக்கும்.உடம்பிலுள்ள சுரப்பிகளை தேவையில்லாமல் வேலை வாங்கும்.அதனால் தூக்கம்,கனவு,மயக்கம்,வியாதி ஏற்படும்.ஆசையற்று இருப்பவருக்கு வியாதியில்லை.தூக்கமும் ஒரு வித நோயே.
**********
'என் கண்மணித்தாமரை'என்ற நூலில் பாலகுமாரன்.
நபிகள் நாயகம் மதீனாவில் ஒரு பள்ளி வாசலுக்கு செல்லும் போதெல்லாம் ஒரு மனிதர் எப்போதும் இறை வணக்கத்தில் ஈடு பட்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பற்றி விசாரித்தபோது அவர் சிறந்த பக்திமான் என்றனர்.இரவும் பகலும் இறை வணக்கத்திலேயே அவர் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அவர் குடும்ப செலவுக்கு என்ன செய்கிறார் என்று நபிகள் கேட்டார்.அருகிலிருந்தவர் சொன்னார்,''அவருக்கு ஒரு அண்ணன் இருக்கிறார்.அவர் விறகு வெட்டி வியாபாரம் செய்கிறார்.அவர் தான் இவருடைய தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.''நபிகள் உடனே சொன்னார்,''இரவும் பகலும் இறைவனை வழி படும் அந்த நண்பரிடம் சொல்லுங்கள்.இவரைக்காட்டிலும் விறகு வெட்டிப் பிழைக்கும் இவரது அண்ணன் ஆயிரம் பங்கு மேலானவர்.குடும்பத்தின் தேவைக்கு நியாயமான வழியில் சம்பாதிப்பது சிறந்த இறை வணக்கம்தான் என்று அவருக்கு எடுத்து சொல்லுங்கள்.''பெருமானாரின் கூற்றை அறிந்த அந்த பக்தர் அன்று முதல் தமது அண்ணனுக்கு உதவியாக விறகு வெட்ட ஆரம்பித்தார்.ஓய்வு கிடைத்தபோதெல்லாம் இறை வணக்கத்தில் ஈடுபடலானார்.
டெட்சுகன் என்றொரு ஜென் ஞானி இருந்தார்.அவர் ஜென் சூத்திரங்களை எல்லாம் சீன மொழியிலிருந்து ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கக் கருதி, அதற்கு ஆகும் செலவை சரிக்கட்ட ஜப்பான் முழுவதும் சென்று பலரிடமு நிதி உதவி கேட்டார்.அனைத்துத் தரப்பினரும் உதவி அளித்தனர்.ஆனால் தேவையான பணம் திரட்ட பத்து ஆண்டுகள் ஆயிற்று.மொழி பெயர்ப்பு வேலையை ஆரம்பிக்க இருந்த தருணத்தில் நதி ஒன்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்இழந்துதுன்புற்றனர் .டெட்சுகன் சேர்த்த பணம் முழுவதையும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக
செலவழித்தார்.
மீண்டும் பல ஆண்டுகள் மொழி பெயர்ப்புக்காக நிதி திரட்டினார்.இரண்டாம் முறை வேலை ஆரம்பிக்கும்போது நாடெங்கும் கொள்ளை நோய் பரவி ஏராளமான மக்கள் துன்புற்றதால் மறுபடியும் சேர்த்த பணம் எல்லாவற்றையும் அந்த மக்களுக்காக செலவழித்தார்.
பின்னரும் அவர் மனம் தளர்வடையாமல் மொழி பெயர்ப்பு வேலைகளுக்காக பணம் திரட்ட ஆரம்பித்தார்.சுமார் இருபது ஆண்டுகள் பணம் திரட்டி தான் நினைத்தபடி அனைத்துஜென் சூத்திரங்களையும் மொழி பெயர்த்து முடித்து விட்டார்.முதல் பிரதியை அவர் ஒரு மடாலயத்தில் மக்களின் பார்வைக்காக வைத்தார்.அதனைப் பார்வையிட்ட ஜென் துறவிகள்,''உண்மையில் இது டெட்சுகன் வெளியிட்ட மூன்றாவது பதிப்பாகும்.இதைவிட நாம் கண்ணால் பார்க்க முடியாத முதல் இரண்டு பதிப்புகளும் மிக அற்புதமானவை,''என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அமெரிக்காவில் எர்க் மார்வெல் என்ற பொதுவுடைமைவாதி ஒருவர் இருந்தார்.அவருடைய நண்பர் ஒருவர் இருந்தார்.அவருக்கு பொது உடைமைக் கருத்துகள் பிடிக்காது.எனவே அவர் மார்வெல்லை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு.ஒரு நாள் அவர்,''நண்பரே,உலகில் எல்லாப் பொருட்களும் பொது உடைமை ஆக்கப்பட வேண்டும் என்று கூறுகிறீரே,உமதுமனைவியையும் பொதுஉடைமை ஆக்கச் சம்மதிப்பீரா?'' என்று கேலியாகக் கேட்டார்.உயிருள்ள தன மனைவியை ஒரு பொருளுடன் ஒப்பிட்டதை மார்வெல் விரும்பவில்லை.எனினும் தன நண்பரின் வாயடைக்க விரும்பினார்.அவர் நண்பரிடம் கேட்டார் ,''தனிஉடமை தான் சிறந்தது என்று சொல்லும் நீர்,உமக்கு உரிமையுடைய உன் பெண் குழந்தைகளை நீரே மணந்து கொள்வீரா?''நண்பர் வாயைத்திறக்கவில்லை.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ரூஸ்வெல்ட் தமது குடியரசுக் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்.கூட்டத்தில் ஒருவன் எழுந்து,''நான் ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவன்,''என்று கூச்சலிட்டான். ''நீ ஏன் அந்த கட்சியில் இருக்கிறாய்?''என்று அவனிடம் கேட்டார் ரூஸ்வெல்ட்.அவன் சொன்னான்,''என் தாத்தா ஜனநாயகக் கட்சியில் இருந்தார்.எனவே நானும் அதே கட்சியில் இருக்கிறேன்.''ரூஸ்வெல்ட் உடனே கோபத்துடன் கேட்டார்,''உன் தாத்தா கழுதையாக இருந்திருந்தால் நீ எந்தக் கட்சியில்இருப்பாய்?அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் சொன்னான்,''கட்டாயம் உங்கள் குடியரசுக் கட்சியில் இருந்திருப்பேன்.''
ஒரு புலவர்,தன மகனைப் பார்த்து,'அறிவில்லாதவனே,'என்று திட்டினார். அவனோ சிரித்துக் கொண்டேஇருந்தான்.புலவருக்கு இன்னும் கோபம் அதிகமாகிவிட்டது.''நான் உன்னை அறிவில்லாதவன் என்று கூறியும் கொஞ்சம் கூடவெட்கம் இல்லாமல் சிரித்துக் கொண்டிருக்கிறாயே?''என்று கேட்டார்.மகன் சொன்னான்,''நீங்கள் என்னைப் பாராட்டும்போது எனக்கு எப்படிக் கோபம் வரும்?''புலவருக்கு திகைப்பு.மகன் சொன்னான் ,''அப்பா,நீங்கள் ஒரு புலவர்.நீங்களே என்னை அறிவில் ஆதவன் என்று சொல்லும்போது எனக்கு மகிழ்ச்சியே.''
யார் வாழ்ந்தார்?
கோவில் குருக்கள் சொன்னார்,
''திரு நீறிட்டார் தாழ்ந்தார்.இடாதார் வாழ்ந்தார்.''
கேட்டவர் திகைத்தார்.குருக்கள் விளக்கம் சொன்னார்,
''திருநீறு இட்டு யார் தாழ்ந்தார்?இடாது யார் வாழ்ந்தார்?''
அந்த ஊரில் முல்லா ஒருவரைத் தவிர யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது. ஒரு ஏழை முல்லாவிடம் வந்து வெளியூரிலிருக்கும் தன தங்கைக்குக் கடிதம் எழுதித் தரச் சொன்னான்.முல்லா சொன்னார்,''முடியாது.எழுதினால் கால் வலிக்கும்.''வந்தவன் திகைத்து,'அது எப்படி?'என்று கேட்டான்.முல்லா சொன்னார்,''என்னுடைய கையெழுத்தை என்னைத் தவிர யாராலும்படிக்க முடியாது.உன் சகோதரிக்கு நான் கடிதம் எழுதிக் கொடுத்தால்,அதைப் படித்துக் காட்ட,நான் உன் சகோதரியின் ஊருக்கு நடந்து தானே செல்ல வேண்டும்? அவ்வளவு தூரம் நடந்தால் கால் வலிக்காதா?''
ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான்,''நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?''குரு சிரித்துக் கொண்டே,''அது அவரவர் விருப்பம்,''என்றார்.பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான்.குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,''பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?''
சூதாட்டம் பேராசையின் குழந்தை:அநீதியின் சகோதரன்.
**********
தகுதியில்லாத ஒருவனைப் புகழ்தல் ,கள்ளச்சந்தையில் ஒரு பொருளை விற்பதற்கு சமம்.
**********
ஒத்தாசைக்கு பத்துப் பேர்இருந்தால்,செத்துப்போன குதிரையும் பந்தயத்தில் ஓடும்.
**********
ஒருவர் உங்களிடம் அறிவுரை கேட்கிறார் என்றால்,உங்கள் வாயால்,தன்னைப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார் என்று பொருள்.
**********
யாராவது தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால்,எனக்கு அவரைப் பிடிக்கும்.காரணம் ,நல்லதைத்தவிர எதுவும் என் காதில் விழாது அல்லவா ?
**********
ஒரு காரியத்தை எப்போது தொடங்கலாம் என்று நாம் யோசிக்கும்போதே காலம் கடந்து விடுகிறது.
**********
உங்கள் பிரச்சினை என்றால் மூளையை உபயோகியுங்கள்:
மற்றவர் பிரச்சினை என்றால் இருதயத்தை உபயோகியுங்கள்.
**********
ஒரே ஒருவர் உங்களை கழுதை என்று சொன்னால் அதை லட்சியம் செய்யத் தேவையில்லை.இரண்டு பேர் சொன்னால் ஒரு சேணம் வாங்கிக் கொள்வது நல்லது.
**********
முகஸ்துதிக்காரரிடம் எச்சரிக்கையாய் இருங்கள்.அவர் உங்களுக்கு விருந்து அளிக்கிறார்--வெறும் கரண்டி கொண்டு.
**********
புகழ் என்பது ஒரு வலை:இதனைக் கொண்டு எந்த மனிதனையும் பிடித்து விடலாம்.
**********
மற்றவர்களின் தவறுகளிலிருந்து தான் நாம்பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.அவ்வளவு தவறுகளையும் செய்ய நம் ஆயுள் போதாது.
**********
மௌனத்தின் சிறப்பைப் பற்றி என்னால் மணிக்கணக்காகப் பேச முடியும்.
**********
ஆகாயக் கோட்டை கட்டுவதில் தவறில்லை.அஸ்திவாரம் மட்டும் தரையில் இருக்க வேண்டும்.
**********
ஒவ்வொரு பறவைக்கும் கடவுள் உணவளிக்கிறார்.ஆனால்
அதை அவர் அதன் கூட்டினுள் போடுவதில்லை.
**********
இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது.ஒரு கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்த மக்களில் பத்து பேர் மழைக்காக அருகில் இருந்த ஒரு பழைய கட்டிடத்தில் ஒதுங்கினார்கள்.அவர்களில் ஒருவர் ஜோஷ்யர்.அவர் சொன்னார்,''இங்குள்ளவர்களில் ஒருவருக்கு நேரம் சரியில்லை ஆகவே அவர் தலையில் சிறிது நேரத்தில் இடி விழப்போகிறது.''இதைக்கேட்டு அனைவருக்கும் பயமாகிவிட்டது,நேரம் சரியில்லாத ஒருவரால் அவ்வளவு பெரும் பாதிக்கப் படுவதா?அந்த ஆள யார் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இறுதியில் ஒருவர் சொன்னார்,''இந்த வயதான கிழவன் தான் நேரம் சரியில்லாத மனிதன் போலத் தெரிகிறது.எனவே நாம் அவரை இங்கிருந்து வெளியே விரட்டி விடுவோம்.''அனைவரும் ஆமோதித்தனர்.கிழவர் வேறு வழியில்லாது,இருமிக்கொண்டே மெதுவாக அங்கிருந்து வெளியே சென்று ஒரு மரத்தடியில் நின்று கொண்டார்.அப்போது ஒரு பெரிய இடி இடித்தது. கிழவர் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டார்.சிறிது நேரம் கழித்து கண்ணைத் திறந்து பார்த்தபோது அந்த பழைய கட்டிடம் இடி விழுந்து தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
மனிதர்கள் எல்லோருமே பொதுவாக ஆறு தவறுகளை செய்கிறார்கள்.
*பிறரை அழித்துதனக்கு லாபம் பெற முயற்சிப்பது.
**திருத்த அல்லது மாற்ற முடியாதவைகளைப் பற்றி நினைத்து கவலைப்படுவது.
***நம்மால் முடியாது என்பதற்காக ஒரு செயலை எவராலும் செய்ய முடியாது என்று சாதிப்பது.
****சில்லறை விவகாரங்களுக்கு எல்லாம் அலட்டிக் கொள்வது.
*****மன வளர்ச்சிஇல்லாமை ,பக்குவம்பெறாமை ,பொறாமை,ஆகியவை.
******நாம் செய்வது போலவே மற்றவர்களும் செய்து வாழ வேண்டும் என்று பிறரைக் கட்டாயப் படுத்துவது.
-- 2000ஆண்டுகளுக்கு முன் ரோமானியத் தலைவரும் அறிஞருமான சிசரோ கூறியது.
எல்லா மேகங்களும் மழை தருவதில்லை.மேகங்களில் பல விதங்கள் இருக்கின்றன.அவற்றில் முக்கியமானவை நான்கு.
மென் பஞ்சியல் முகில்கள் (SIRRUS CLOUDS)
வெண்ணிற முகில்களான இவை பறவைகளின் இறகுகள்போல இருக்கும்.சின்னஞ்சிறு பனிக்கட்டிகளால் ஆன இவை விண்ணில் எட்டு கி.மீட்டர் முதல் பதினோரு கி.மீட்டர் உயரத்தில் உருவாகின்றன.
பாவடி முகில்கள் (STRATUS CLOUDS)
மழை மூட்டத்திற்கும்,தூறலுக்கும் அறிகுறி இவ்வகை மேகங்கள்.8000 அடி உயரத்தில் உருவாகுபவை இவை.
திரள்குவிக் கருமுகில்கள் (CUMULUS CLOUDS)
விண்ணில் வெண்ணிறமான மாலைபோலத் தோற்றமளிக்கும் இவற்றின் அடிப்பகுதி பரந்து காணப்படும். 4000 அடி முதல் 5000 அடி உயரத்தில் உருவாகும்.
மழை முகில்கள் (NIMBO STRATUS CLOUDS)
கருப்பு நிறத்தில் தாழ்வாகக் காணப்படும்.இவ்வகை நமக்கு மழை தருபவை.
புலவர் ஒருவர்,ஒரு அரசனைக் கண்டு அவன் புகழைப் பாடினார்.அரசனும் ஏதோ சன்மானம் அளித்தான்.புலவருக்கு அதில் திருப்தியில்லை.அரசனுக்கு தன பாடலை ரசிக்கக் கூடிய அளவுக்கு புலமை இல்லை என்று எண்ணி அவன் மீது அவருக்கு கோபம் வந்தது.அரசன் சரியான கருப்பு.புலவர் அரசனைப் பார்த்து,''அண்டங்காக்கைக்குப் பிறந்தவனே,''என்றார்.அரசனுக்கு கடுங்கோபம் ஏற்பட்டது உடனே வாளை உருவினான்.நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த புலவர் புன்முறுவல் பூத்த முகத்துடன் அரசனிடம் சொன்னார்,''அரசே,அண்டம் என்றால் உலகம்.காக்கை என்றால் காப்பதற்கு என்று பொருள் அதாவது நீ உலகத்தை ஆள்வதற்குப் பிறந்தவன் என்று சொன்னேன்.''அரசன் முகத்தில் இப்போது மகிழ்ச்சி.உடனே மேலும் பரிசுகளைப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான்.
வாழ்க்கையின் நிலையாமை குறித்து சித்தர்கள் பல பாடல்கள் எழுதியுள்ளனர்.அவற்றின் நோக்கம் வாழ்க்கையைக் கண்டு பயந்து ஓடுவதற்கு அல்ல .நம் வாழ்வில் நாம் நிதானத்துடன் நடந்து கொள்ள அவை பயன்படும் .இதோ ஒரு பாடல்:
ஊரைக்கூட்டி ஒலிக்கஅழுதிட்டு
பேரை நீக்கி பிணமென்று பெயரிட்டு
சூறையங்காட்டிடையே கொண்டு போய் சுட்டிட்டு
நீரில் மூழ்கி நினைப் பொழிவரே.
அதாவது ஒருவன் இறந்துவிட்டால்,ஊரில் அனைவருக்கும் தகவல் சொல்லி விட்டு,சப்தம் போட்டு அழுதுவிட்டு.இதுவரை ஒரு பேர் சொல்லி அழைத்து வந்த அவருக்கு பிணம் என்று பெயரிட்டு,சுடுகாட்டிலே கொண்டு போய் பொசுக்கிவிட்டு,நீரில் முழுகிக் குளித்துவிட்டு அதோடு அவர் பற்றிய நினைப்பை ஒழித்துவிட்டு தம் வாழ்க்கையைப் பார்க்கப் போய் விடுவார்கள்.
ஜென் குரு ஒருவர் தன சீடர்களுடன் ஒரு பாலைவனப் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.கடும் வெயில்.ஒரு மரம் கூட இல்லை.ஒதுங்குவதற்கு எங்கும் இடமில்லை.நீர்நிலை எதுவும் தென்படவில்லை.குடிக்க தண்ணீர் கூடக் கிடைக்காததால் சீடர்கள் அனைவரும் சோர்வடைந்தனர்.அதைப் பார்த்த குரு மாலை நேரம் ஆகிவிட்டதால் ஒரு இடத்தில் தங்கலாம் என்று சொன்னார்.உடனே சீடர்கள் அனைவரும் சுருண்டு படுத்து விட்டனர்.குரு,உறங்கச் செல்லும் முன் தியானம் செய்வது வழக்கம்.அன்றும் அவர் மண்டியிட்டபடியே,''இறைவா,தாங்கள் இன்று எமக்களித்த அனைத்திற்கும் நன்றி.''என்று கூறி வணங்கினார்.பசியில் இருந்த ஒரு சீடனுக்கு உடனே கடுமையான கோபம் வந்தது.எழுந்து உட்கார்ந்த அவன்,''குருவே இன்று இறைவன் நமக்கு ஒன்றுமே அளிக்கவில்லையே?'' என்றான்.சிரித்துக்கொண்டே குரு சொன்னார்,''யார் அப்படி சொன்னது?இறைவன் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார்.அற்புதமான தாகத்தைக் கொடுத்தார்.அதற்காகத்தான் அவருக்கு நன்றி செலுத்தினேன்.''இன்பமு துன்பமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை ஞானிகள் உணர்ந்திருக்கின்றனர்.
''நாம் சொல்லும் கருத்தை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.நமக்கு எல்லோரும் மரியாதை கொடுக்க வேண்டும்.''என்று தான் பலரும் நினைக்கிறார்கள்.அப்படிஎன்றால் என்ன அர்த்தம்?மற்றவர்கள் இவர்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் இவர்கள் சந்தோசப்படுவார்கள்.இதையே வேறு வார்த்தைகளில் சொன்னால்,இவர்கள் தங்களின் மகிழ்ச்சிக்காக மற்றவர்களின் தலையாட்டலை எதிர் பார்த்திருப்பார்கள்.இன்னும் பச்சையாகச் சொன்னால்,''எனக்கு மரியாதை கொடு,எனக்கு மரியாதை கொடு,''என்று மறைமுகமாகப் பிச்சை எடுப்பவர்கள் இவர்கள்.மரியாதை என்ற பிச்சையை மற்றவர்கள் கொடுக்க மறுக்கும்போது இவர்களின் அமைதி பறிபோய் விடுகிறது.மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.
--சுவாமி சுகபோதானந்தா .
ஒரு நாவலாசிரியர் ஆயிரம் பக்கங்கள் எழுதப்பட்ட கையெழுத்து பிரதியை எடுத்துக் கொண்டு ஒரு பிரசுரகர்த்தரைப் பார்க்கப்போனார்.அவரிடம் தன நாவலின் தனித்தன்மையைப் பற்றி விலாவாரியாகப் பேசினார்.தன கதா பாத்திரங்களைப் பற்றி பெருமையாகப் பேசினார்.மேலும் அவர் சொன்னார்,''சொன்னால் நீங்கள் ஆச்சரியப் படுவீர்கள்.எனக்கு இங்கு வரும்போது கடுமையான தலைவலி இருந்தது.என் நாவலைப் பற்றி உங்களிடம் பேசியதில் அந்த தலைவலி போன இடம் தெரியவில்லை.'' பிரசுரகர்த்தர் சொன்னார்,''அந்த தலைவலி வேறு எங்கும் போகவில்லை.என்னிடம் வந்துவிட்டது.''
ஜென் ஞானியிடம்,''ஒருவரின் முன்னேற்றம்,வளர்ச்சி எதைப் பொறுத்தது?'' என்று கேட்கப் பட்டது.''அது நீங்கள் கழுதையா,குதிரையா,எருமையா என்பதைப் பொறுத்தது,''என்றார் ஞானி அதன் விளக்கம்:
கழுதையை ஒரு தட்டு தட்டினால்,பின்னால் எட்டி உதைக்கும்.எருமையை ஒரு தட்டு தட்டினால் அது கொஞ்சம் கூட கண்டுகொள்ளாது.குதிரையோ தட்டினால் அசுர வேகத்தில் முன்னால் ஓட ஆரம்பிக்கும்.
அதேபோல்,யாராவது ஒரு திட்டு திட்டினால்,
சிலர் மீண்டும் திட்டுவார்கள்.இதனால் முன்னேற்றம் இராது.சக்தி முன்னோக்கிப் பாயாததால் வளர்ச்சி சாத்தியமில்லை.
சிலர் திட்டினால் கண்டு கொள்ள மாட்டார்கள்.இவர்கள் வாழ்வு வெறுமையாகத் தொடரும்.
சிலர் திட்டினால்,வாங்கிய திட்டுக்கும் கிடைத்த அவமானத்துக்கும் நேர் எதிராகச் செயல் படுவார்கள்.முன்னேற்றம் அடைவார்கள்.முன்னோக்கி ஓடுவதும்,திட்டியவர் ம்மேது வஞ்சம் கொள்ளாமல் அதையும் தன்னைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வர்.
மற்றவர்களின் கவனத்தை நாம் பெற நினைப்பது ஏன்?'நீ புத்திசாலி,நீ நல்லவன்,'என்று புகழ்ச்சியான சில வார்த்தைகளைக் கேட்பதற்குத்தான். 'நீ முட்டாள்,எதற்கும் லாயக்கில்லாதவன்'என்பது போன்ற அவச்சொற்களை வாங்கி விடக் கூடாது என்பதற்காகவும்தான்.
புகழ்ச்சியான வார்த்தைகளுக்கு மகிழ்ச்சியடைகிறோம்.இகழ்ச்சியான வார்த்தைகளுக்கு கோபமும்வெறுப்பும் கொள்கிறோம்.இப்படி பலர் நமக்குக் கொடுத்த மதிப்பெண் பட்டியலை வைத்து வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.அதனால் நம் வாழ்க்கை,நம் மகிழ்ச்சி நம் கையில் இல்லை.போலித்தனமான வாழ்க்கை வாழ்கிறோம்.
நீ மோசமானவன் என்று யாராவது சொன்னால்,அது உண்மைதான் என்று உடனே கோபப்பட்டோ,நொந்துபோயோ நாம் நிரூபித்து விடுவோம்.
கணவனும் மனைவியும்,மாமியாரும் மருமகளும்,காதலனும் காதலியும் ஓயாது சண்டை போட்டாலும் அவர்கள் பிரிந்து விடுவதில்லை.காரணம்,இது போன்ற சண்டைகள்தான் அவர்களிடையே சலிப்பு ஏற்படாமல் காத்துக் கொள்கிறது.சண்டையின் மூலம் மேலும் மேலும் ஒருவர் மீது இன்னொருவர் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள்.
நூறு பேர் ஒருவரை கவனித்தால் தெருவில் அவர் ஒரு முக்கியமான ஆள்.ஆயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு பிரமுகர்.பத்தாயிரம் பேர் கவனித்தால் அவர் மிக முக்கியமானவர்.ஐம்பதாயிரம் பேர் கவனித்தால் அவர் ஒரு தலைவர்.
மற்றவர்களின் நன் மதிப்பை பெறுவது மட்டுமே நோக்கமாக இருக்கும்போது, அதற்காகவே வாழ ஆரம்பிக்கும்போது அவர்கள் தங்களை வருத்திக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.விளைவு,நல்ல பெயர் கிடைத்தாலும் திருப்தி அடைவதில்லை.தன ஆற்றலை வளர்த்துக் கொள்ள அக்கறை பிறக்காதவரை அடுத்தவர்களுக்காக நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
''நான் என் சுதந்திரத்தை இழக்க மாட்டேன்,மற்றவர்களின் நல்ல,கெட்ட ஒப்புதல்களால் பாதிக்கப் படாத அளவுக்கு சிறந்த முதிர்ச்சியைப் பெறுவேன்,''என்ற அக்கறை பிறக்கும்போது நீங்கள் ஒப்பற்ற மனிதர் ஆகி விடுவீர்கள்.
திரும்பத்திரும்ப ஒரே எண்ணம்மனதில் வட்டமடித்துக் கொண்டிருப்பதை முக்கியமான பிரச்சினையாகக் கருதுகிறோம்.இதிலிருந்து விடுபட ஒரே வழி,மனதின் பிரச்சினைகளை உங்கள் சொந்தப் பிரச்சினையாக நினைப்பதை முதலில் நிறுத்த வேண்டும்.உலகம் ஒரு சூப்பர் மார்க்கெட் மாதிரி.பல பொருட்கள் அங்கேயிருந்தாலும் ஒரு சில தான் உங்களுக்கு தேவையானவை.
**********
உலகில் பிரச்சினை என்று ஒன்றும் கிடையாது.உங்களால் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளைப் பிரச்சினைகள் என்று முத்திரை குத்தி விடுகிறீர்கள்.சூழ்நிலை எப்படியிருந்தாலும் அதை உங்கள் முன்னேற்றத்திற்கு சாதகமாக ஆக்கிக் கொள்வது எப்படி என்று பார்க்க வேண்டும்.ஏதாவது ஒரு அனுபவம் கசப்பாகத் தோன்றினால் ,அது அந்த அனுபவத்தின் ருசியில்ல.அந்த சூழ்நிலையை நீங்கள் அப்படிப் பார்க்கிறீர்கள் என்று பொருள்.ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை நீங்கள் விரும்பவில்லை என்றால் அதைத் துரத்தி விட முடியாது.என்ன செய்தால் குறைவான பாதிப்பு ஏற்படும் என்று கவனித்து செயல் படுங்கள்.பிரச்சினையா,இல்லையா என்பது நிகழ்வில் இல்லை.அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதில் தான் இருக்கிறது.
**********
சலிப்பு,உற்சாகமின்மை,விரக்தி இந்த மூன்றும் வாழ்க்கையின் சாரத்தையே அழிக்கவல்லவை.உலகில் எந்த உயிர் சக்திக்கும் இவை ஏற்படுவது கிடையாது.மனிதனின் குறுகிய மனதில்தான் சலிப்பும்,எரிச்சலும் நம்பிக்கையின்மையும் ஊற்றெடுக்கின்றன.வாழ்க்கை என்பதே உற்சாகம்தான்.ஒரு முடிவைக் கண்டு அது தோல்வி என எரிச்சல் கொள்ளக் கூடாது.
**********
இன்றைய மனிதனுக்கு யார் மீதும் முழு நம்பிக்கை இல்லை.எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.சந்தேகங்கள் பெருகப் பெருக மனிதனுக்கு வாழ்க்கை பற்றிய தைரியம் குறைந்து போகிறது.சந்தேகங்கள் ஒரு மனிதனின் அடிப்படையையே அசைத்துப் பார்க்கும்.அடுத்தவர் மீதும் சமூகத்தின் மீதும் நம்பிக்கை இழந்தவர்கள் தான் ஒரு கட்டத்தில் குற்றவாளியாகிறார்கள்.அவர்களது சந்தேகம் தான் வன்முறையாக உருவாகிறது.மனித வாழ்வு வளம் பெறசந்தேகங்கள் களையப்பட வேண்டும்.
**********
தாய் வயலில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் குழந்தை பக்கத்தில் மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தது.வேலை மும்மரத்தில் தாய் சிறிதுநேரம் குழந்தையைக் கவனிக்க வில்லை.திடீரென ஞாபகம் வந்து பார்த்தபோது குழந்தை கைபிடியில்லாத ஒரு கிணற்றின் விளிம்பருகே நின்று கொண்டிருந்ததைக் கவனித்தாள்.அடுத்து ஒரு அடி எடுத்து வைத்தாலும் குழந்தை கிணற்றுக்குள் விழுந்துவிடும்.கூட இருந்தவர்கள் பதைபதைத்தார்கள்.தாய் சிறிது கூட யோசிக்காமல் கொஞ்ச தூரம் மெதுவாக நடந்துசென்று,குழந்தையைப் பார்த்து,''பாப்பா,அம்மா வீட்டுக்குக் கிளம்பி விட்டேன்.நீ வருகிறாயா,இல்லையா?''என்று சப்தம் போட்டு சொன்னாள்.அடுத்த நிமிடம் குழந்தை திரும்பிதாயைப் பார்த்து ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டது.தாயன்பு தானே அந்த இக்கட்டானநேரத்தில் சமயோசிதமாக சிந்திக்க வைத்தது.
ஒரு பேராசிரியர் ஒரு ஜென் ஞானியிடம் சென்று,''நான் ஏன் உங்களைப்போல இல்லை?உங்களைப்போல என்னால் ஏன் அமைதியாய் இருக்க முடியவில்லை?உங்களுக்கு இருக்கும் அறிவு எனக்கு ஏன் இல்லை?''என்று கேட்டார்.ஞானி சொன்னார்,''இன்று முழுவதும் என்னுடன் இருந்து என்னை கவனித்து வா.எல்லோரும் சென்றவுடன் உன் கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன்.''அன்று முழுவதும் ஏராளமான மக்கள் ஞானியை வந்து தரிசித்து சென்றனர்.மாலையில் எல்லோரும்போன பின் பேராசிரியர் ஞானியிடம் தன கேள்விக்கு பதில் சொல்ல ஞாபகப் படுத்தினார்.அன்று பௌர்ணமி.முழு நிலவு வானில் அழகுடன் ஜொலித்தது.ஞானி கேட்டார்,''இன்னுமா உனக்கு பதில் கிடைக்கவில்லை?நான் மக்களுக்கு சொன்ன பதில்களைக் கவனித்திருந்தால் உனக்கு பதில் கிடைத்திருக்கும்.பரவாயில்லை வெளியில் வா.இந்த அமைதியான தோட்டத்தில் முழு நிலவின் அழகினைப் பார்.இந்த நிலவொளியில் இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் எவ்வளவு அழகாய் இருக்கின்றன?''பேராசிரியர் பொறுமை இழந்து தன கேள்விக்கு பதில் சொல்லுமாறு கேட்டார்.ஞானி சொன்னார்,''உன் கேள்விக்கு பதில் சொல்கிறேன்.இந்த நீண்ட மரமும் அதன் அருகில் உள்ள செடியும் வெகு நாட்களாக என் தோட்டத்தில் இருக்கின்றன.ஆனால் ஒரு நாளும்.இந்த செடி தான் ஏன் இந்த பெரிய மரம் போல இல்லை என்று மரத்திடம் கேட்டதில்லை.அதேபோல மரமும் அந்த செடியிடம் தான் ஏன் செடிபோல இல்லை என்று கேட்டதில்லை.மரம்,மரம்தான்.செடி,செடிதான்.மரம் தான் மரமாயிருப்பதிலும்,செடி,தான் செடியாயிருப்பதிலும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கின்றன.''
ஒப்பீடுதான் மனிதனின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம்.
பிரசவத்திற்கு வீட்டுக்கு வந்திருக்கும் நம் மகள்,
என் தலை முடியைப் பார்த்து,
''என்னம்மா எல்லா முடியும் நரைச்சிடுச்சு,''என்றதும்
குறுக்கே புகுந்த நீங்கள்
''இது நரையா?முப்பது வருடம் மல்லிகைப் பூவை
சூடிச்சூடி இவள் கூந்தலும்
மல்லிகைப் பூவாகவே மாறிவிட்டது,''என்றீர்கள்.
''அப்பா உன்னை விட்டுக் கொடுக்க மாட்டாரே?''என்றாள் மகள்.
கட்டிக் கொண்டவளை விட்டுக் கொடுக்க
அவருக்குத் தெரியாது,மகளே.
சீன ஞானி கன்பூசியசிடம் ஒரு சீடர்,''ஆனந்தமாயிருக்க ஒரு வழி சொல்லுங்கள்,குருவே,''என்று கேட்டுக் கொண்டான்.அதற்கு கன்பூசியஸ் ''உன் கேள்வியே விநோதமாக இருக்கிறது.எந்த ரோஜாவும்,தான் ரோஜாவாக என்ன வழி என்று கேட்பதில்லை.''என்றார்.உங்களுக்குள் ஆனந்தம் எப்போதும் இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது.ஆனால் மனிதன் தன அறியாமையினால் தன்னுள் பொங்கும் ஆனந்தத்தை தடுத்துக் கொண்டிருக்கிறான்.அவ்வாறு தடுக்காமலிருக்கக் கற்றுக் கொண்டால் ஆனந்தம் பொங்கிக்கொண்டே இருக்கும்.
ஒரு மனிதன் வேகமாக காவல் நிலையத்துக்குள் நுழைந்து,,''சார்,சற்று நேரத்துக்குமுன் ஒரு அயல் கிரக வாசியைப் பார்த்தேன்.அவன் எங்களைத் தாக்க வந்தான்.''என்று படபடவென சொன்னான்.அதிகாரி நடந்தவிஷயங்களை விளக்கமாகக் கூறச்சொன்னார்.அவன் சொன்னான், ''நான் என் மாமியாருடன் நடந்து வந்து கொண்டிருந்தேன்.திடீரென அந்த அயல் கிரகவாசி என் மாமியாரைப் பிடித்துக் கொண்டான்.எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கு ஓடி வந்தேன்.''காவல் அதிகாரி,''அடையாளம் ஏதேனும் சொல்ல முடியுமா?''என்று கேட்க அவன் சொன்னான்,''நல்ல கனத்த உருவம்.தலை முடி சடை சடையாக இருக்கும்.பல் மூன்று வெளியே துருத்திக் கொண்டிருக்கும்.கூன் விழுந்திருக்கும்...''அதிகாரி,''அயல் கிரகவாசி அவ்வளவு பயங்கரமாகவா இருந்தான்?''என்று கேட்க,அவன் சொன்னான்,''ஹி,ஹி,...நான் என் மாமியாரைப் பற்றி சொன்னேன்.''
பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்,''உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,''உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து,''உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?''என்று கேட்டான். அடுத்து ஆசிரியர்,''உலகிலேயே சிறந்த நாடு எது?''என்று மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்.மாணவர்கள் அனைவரும் பிரான்சு தேசக்காரர்களே.எனவே அவர்கள்,''பிரான்சு தான் சிறந்த நாடு,''என்றனர். பின் ஆசிரியர் கேட்டார்,''பிரான்சிலேயே சிறந்த நகரம் எது?''மாணவர்கள் அனைவரும் பாரிஸ் நகரை சேர்ந்தவர்கள்.எனவே அவர்கள் ஒருமித்து சொன்னார்கள்,''பாரிஸ் நகரம்தான்சிறந்த நகரம்.'' ''பாரிஸ் நகரிலேயே சிறந்த இடம் எது?''என்று ஆசிரியர் கேட்கே,மாணவர்கள் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்ததால்,அதுதான் சிறந்த இடம் என்றனர்.''நமது பல்கலைக் கழகத்திலேயே சிறந்த துறைஎது?''என்று ஆசிரியர் கேட்க,அவர்கள் அனைவரும் மனோதத்துவத் துறையில் இருப்பதால்,அதுதான் சிறந்த துறை என்று தயக்கம் ஏதுமின்றிக் கூறினார்.அடுத்து பேராசிரியர்,''அந்த சிறந்த துறையின் தலைவர் யார்?''என்று கேட்க,''நீங்கள்தான்,''என்று கூறினர். இப்போது பேராசிரியர்,நிரூபிக்க முடியுமா என்று கேட்ட மாணவனிடம் கேட்டார்,''அப்போது நான் தானே உலகின் சிறந்த மனிதன்?''
0