ஒரு குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள்.கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்.குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழை.கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்.குரு வந்த போது யாருமில்லை.பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம்.அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான்.என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.
அவன் சொன்னான்,''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும்.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன்.புல்லு வைக்கப் போகும் போது ,எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க ,ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும் ,நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன்.''
படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு,அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார்.தத்துவம்,மந்திரம்,பாவம்,புண்ணியம்,சொர்க்கம்,நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார்.பிரசங்கம் முடிந்ததும்,எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார்.
''ஐயா,நான் குதிரைக்காரன்.எனக்கு ஒன்றும் தெரியாது.ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால்,அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்,''என்றான் அவன்.
அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
சமூகத்திலுள்ள வன்முறைகளுக்கு எந்த விதத்திலும் குறைவானதாயில்லை,குடும்பத்தில் உள்ள வன்முறைகள்.இரத்தம் சிந்தாத இந்த வன்முறைக்கு ஆயுதம் சொற்கள் தான்.கூர் தீட்டப்பட்ட கத்திகளைப் போல சொற்கள் நம் உடலில் ஆழமாகப் பாய்கின்றன.அதன் வலி மிக அந்தரங்கமானது.ஆறாத ரணமுடையது.
கதவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் குடும்ப யுத்தத்தின் கூப்பாடு நம் தெருக்கள்,நகரங்கள் முழுவதும் எதிரொலிக்கக் கூடும்.வீடுகளுக்குக் கதவுகளையும் ஜன்னல்களையும் கண்டு பிடித்தவன் ஒரு குடும்பஸ்தனாகத் தான் இருக்க வேண்டும்.நம் வீட்டுக் கதவுகள் வெளியிலிருந்து எதுவும் நுழையாமல் பார்த்துக் கொள்வதை விடவும் உள்ளிருந்து எதுவும் வெளியே செல்லாமல் இருக்கத்தான் அதிகம் உதவுகின்றன.
--கதா விலாசம் --எஸ்.இராமகிருஷ்ணன்
ஒரு ஊரில் எலித்தொல்லை. அதைப் பார்த்த ராஜா,''ஒரு செத்த எலி கொண்டு வந்தால் பத்து ரூபாய் தரப்படும்,''என்று அறிவித்தார்.மக்களும் நிறைய எலிகளைக் கொன்று பையில் போட்டு அரண்மனையில் கொடுத்துப் பணம் பெற்றுச்சென்றனர்.அரண்மனை துர்நாற்றம் எடுக்க ஆரம்பித்தது.அரசன் உடனே செத்த எலியின் வாலைக் கொண்டு வந்தால் போதும் என்று அறிவித்தார்.வாலைக் கொண்டு வந்து பரிசு வாங்கும் மக்களின் எண்ணக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருந்தது.அனால் எலித்தொல்லை குறையவில்லை.இது பற்றி அரசன் தீவிரமாக விசாரித்ததில்தெரிய வந்தது;
பணம் கிடைக்குமே என்றுமக்களே வீட்டில் எலி வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்!
வெற்றிகள் நிச்சயம் உற்சாகப் படுத்துபவை தான்.ஆனால் வெற்றிக்கு மறு நாள் உலகம் நம்மைக் கடந்து சென்ற பின் ஏற்படும் வெறுமை கொடுமையானது.தோல்வி நிறைய பாடம் கற்றுக் கொடுக்கும் என்பது உண்மை.அதற்காகத் தோல்விகளிலேயே தங்கி தேங்கி விடக் கூடாது.பாராட்டுக்களோ திட்டுக்களோ ,எதையும் மனதிற்குள் ஏற்றிக் கொள்ளாமல் ,கண்ணாடி போல் நம் மனதை வைத்துக் கொள்ள வேண்டும்.அந்தப் பக்குவத்தை நமக்கு வெற்றிகளும் தோல்விகளும் ஏற்படுத்தும்.
செஸ் மாஸ்டர் ஆனந்த்
கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு வழிசொல்லுங்கள எனஒரு ஞானியிடம் ஒருவர் கேட்டார்.ஞானி சொன்னார்,''ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.உங்களின் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டு நீங்கள் கோபப்படுவதேயில்லை.இக்கோபத்தினால் நான் எதையாவது இழந்து விடுவேனோ,எனக்கு இது சாதகமா,பாதகமா என்று ஆராய்ந்து கொண்டேயிருக்கிறீர்கள்.பாதகம் வரும் என்றால் அந்தச் சூழல் அவமானம் தருவதாய் இருந்தால் கூட சிறு தடுமாற்றத்துடன் அமைதியாகிவிடுகிறீர்கள்.பாதகமில்லை என்றால் அந்தச் சூழலில் யாராவது சாதாரணமாகப் பேசி வைத்தால் கூட கோபம் பொங்குகிறது.எனவே உங்களின் கோபம் தர்க்கம் சம்பந்தப்பட்டது.உங்களின் தர்க்கத்தைச் சரி செய்யுங்கள்.கோபம் தன்னால் சரியாகும்.''
பரமஹம்ச நித்யானந்தர்.
பிரபல ஓவியர் பிக்காசோவைச் சந்தித்த ஒரு பெண் ,''ஐயா,நான் உங்கள் தீவிர ரசிகை.உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி.எனக்காக இந்தக் காகிதத்தில் ஒரு படம் வரைந்து கொடுக்க வேண்டும்.,''என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள்.அவரும் சிரித்துக் கொண்டே அவள் கொடுத்த காகிதத்தில் ஒரு படம் வரைந்து அவளிடம் கொடுக்கும் போது,''இதன் விலை என்ன தெரியுமா?ஒரு மில்லியன் டாலர்.''என்றார்.அவள்,'' இதை வரைய நீங்கள் எடுத்துக் கொண்ட நேரம் முப்பது வினாடிகள் தானே?''என்றாள்.அதற்கு அவர் ,''உண்மை.ஆனால் இப்படி ஒரு படத்தை முப்பது வினாடிகளில் வரைய எனக்கு முப்பது ஆண்டு பயிற்சி தேவைப்பட்டது.''என்றார்.
நீங்கள் சந்தோசமாக இருக்கும் போதும் ,கருணையோடு இருக்கும் போதும் ,தாராளமாக வழங்கும் மன நிலையில் இருக்கும் போதும் உங்கள் வாழ்க்கை அழகாக அமைகிறது.யாராவது குற்றம் செய்ததாக நீங்கள் கருதும் போது,அந்த அழகு மறைந்து அசிங்கமாகிவிடுகிறது.உண்மையாகச் சொல்லுங்கள்.நீங்கள் செய்தேயிராத ஒரு குற்றத்தையா அவர் செய்து விட்டார்?நம் பிரச்சினை என்ன?நாம் ஒரு குற்றம் செய்தால் அதைப் பொருட்படுத்த மாட்டோம்.வேறு யாரும் பொருட்படுத்தக் கூடாது என்று எதிர் பார்ப்போம்.ஆனால் அதையே வேறொருவர் செய்தால் பெரிது படுத்துவோம்.
மற்றவர் மீது சுமத்துவதாக நாம் நினைக்கும் குற்றச்சாட்டு உண்மையில் நம் மனதில் தான் பாரமாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது.நம் இயல்பையும் வேகத்தையும் சிதைக்கிறது
----ஞானி ஜாக்கி வாசுதேவ்
எதிரிக் கூடாரத்திலிருந்து இராமனிடம் தஞ்சம் புகுந்த விபீஷணனிடம் ஜாம்பவான் கேட்டார்,''இவ்வளவு தீயவர்கள் நடுவே நீ மட்டும் எப்படி நல்லவனாக இருக்க முடியும்?''அதற்கு விபீஷணன் சொன்னார்,''32 பற்களுக்கு நடுவே நாக்கு இருந்தாற்போல் ஜாக்கிரதையாக இருந்தேன்.''
32 பற்கள் நடுவே நாக்கு இருப்பது போலத்தான் வாழ்க்கை.அந்தப் பற்கள் நம்மைக் கடிக்காமல் இருப்பது நம் வசம் உள்ளது.பற்களையும் மீறி நாக்கு வெளியே வந்து தேவையான ஐஸ் க்ரீம் சாப்பிடுவது போல நம் சூழலின் நிர்பந்தங்களை மீறி நாம் வெளியே வந்து நமக்குத் தேவையான மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் சாத்தியம் உண்டு.
ஒரு முறை முல்லாவும் மன்னரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
மன்னர்; முல்லா!உண்மையைச் சொல்.என் மதிப்பு என்ன இருக்கும்?''
முல்லா;''பத்துப் பொற்காசுகள்,அரசே!''
மன்னர்; ''என் துண்டின் மேல் உள்ள பெல்டே பத்துப் பொற்காசுகள் பேருமே,உனக்குத் தெரியாதா?''
முல்லா; ''தெரியும் அரசே,அதனால் தான் பத்துப் பொற்காசுகள் என்றேன்!''
இராம கிருஷ்ண பரமஹம்சர் நரேந்திரநாத்தின் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்ததும் அவர் விவேகானந்தர் ஆனார்,என்பதைப் படித்துத் தெரிந்த ஒருவர் வினோபாஜியிடம் சென்று ,''ஐயா,தாங்கள் என் தலை மீது கை வைத்து ஆசிர்வதித்தால்,நான் சங்கராச்சாரி ஆகி விடுவேன்.''என்று சொன்னார்.
''நான் ஆக்குவதால் நீ ஆகி விட்டால் ,பிறர் அழிப்பதால்,நீ அழிந்தும் போய் விடுவாய்.என்னைக் காட்டிலும் உண்மை மிகுந்தவர்கள் இருக்கிறார்கள்.எனவே நீ நீயாகவே இரு.எவராவது உன்னை ஏதாகிலும் ஆக்கினால்,அப்படி ஆகாதே..''என்று அறிவுறுத்தினார் வினோபாஜி.
ஒரு பஞ்சப் பரதேசி.துறவி.சொத்து சுகம் ஏதுமற்ற ஞானி.குளிர் காலத்தில் வெயில் காய்வதற்காக ஆற்று மணலில் துண்டை விரித்துப் படுத்திருந்தார்.
உலகையே வெல்லப் புறப்பட்ட மகா அலெக்சாண்டர் அவர் அருகிலே வந்தார்.ஞானி அவரைக் கவனிக்க வில்லை.கால் மேல் கால் போட்டபடி சூரிய வெப்பத்தில் குளித்துக் கொண்டிருந்தார்.
''நான் அலெக்சாண்டர் வந்திருக்கிறேன்,''என்றார் அவர்.
அப்படியாவென சாதாரணமாகக் கேட்டார் ஞானி.
''ஏ ஞானியே!உனக்கு என்ன வேண்டும்?கேள்;நான் தருகிறேன்.''என்றார் அலெக்சாண்டர்.
''எனக்கு ஒரே ஒரு உதவி வேண்டும்,''என்றார் ஞானி.
''என்ன வேண்டும்?பொன் வேண்டுமா,பொருள் வேண்டுமா,மாளிகை வேண்டுமா?''என்று கேட்டார் அலெக்சாண்டர்.
''அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்.நீகொஞ்சம் தள்ளி விலகி நிற்க வேண்டும்.உன் நிழல் வெயிலை மறைக்கிறது.''என்றார் ஞானி.
அலெக்சாண்டரின் ஆணவத்தை ஞானியின் ஆணவம் தோற்கடித்தது.காரணம்,ஞானிக்குத் தேவை என்று எதுவும் இல்லை.
சந்தைக் கும்பலில் குப்பத்துக்காரன் காலில் ஒருவன் மிதித்து விட்டான்.கூட்ட நெரிசல்.குப்பத்துக்காரனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.''டேய்,சந்தைக்கூட்டம் என்று பார்க்கிறேன்.நான்கு பேர் கூடுற இடத்தில் ஏதாவது செய்தால் நன்றாக இராது என்று உன்னைச் சும்மா விட்டு வைக்கிறேன்.'' என்று கத்தினான்.மிதித்தவன்,''இங்கேயே நீ என்ன செய்ய முடியுமோ அதைச் செய்''என்று பதிலுக்குக் கத்தினான்.
குப்பத்துக்காரன்,''என் ஊருக்கு வாடா,என்ன நடக்கிறது பார்.''என குப்பத்துக்காரன் மிதித்தவன் ஊருக்கே வந்தான்.''உன் ஊருக்கே வந்து விட்டேன்.என்ன செய்யப் போகிறாய்?''என்று சவால் விட்டான்.
''என்னுடைய தெருவிற்கு வாடா,தெரியும்,''என்றான் குப்பத்துக்காரன்.மிதித்தவன் அவனுடைய தெருவிற்கும் வந்து விட்டான்.
''என் வீட்டு வாசற்படியை மிதித்தால் பிறகு தெரியும்.''
மிதித்தவன் குப்பத்துக்காரன் வீட்டு வாசற்படிக்கும் வந்தான்.
''என் வீட்ட்ற்குள் வந்தால் என்ன ஆகும் தெரியுமா?''
அவன் வீட்டிற்குள்ளும் நுழைந்து விட்டான்.குப்பத்துக்காரன் உடனே நெடுஞ்சாண் கிடையாக அவன் காலில் விழுந்தான்.''அண்ணே,வாங்க!நமக்குள் என்ன சண்டை?உட்காருங்க,காபி சாப்பிடுங்கோ!''என்று உபசரித்தான்.
அளவுக்கு மீறி தன்னைப் பற்றிப் பேசி அச்சத்தை உருவாக்குபவர்கள் அருகில் நெருங்கிச் சென்றால் தான் அத்தனையும் வெத்து வெட்டு என்பது தெளிவாகும்.
ஒரு அரசன் சில கவிதைகளைப் புனைந்து தன அமைச்சரிடம் காட்டினான்.அமைச்சர் சொன்னார்,''இவை மோசமான கவிதைகள்.உங்களால் முடியாத காரியத்தில் ஏன்தலையிட வேண்டும்?''இது கேட்டு மன்னன் கடுங்கோபம் அடைந்து அமைச்சரைக் கழுதை லாயத்தில் அடைக்க உத்தரவிட்டான்.
சில தினங்களுக்குப் பிறகு அரசன் மேலும் சில கவிதைகளை எழுதி அமைச்சரைக் கூப்பிட்டனுப்பிக் காட்டினான்.அமைச்சர் கவிதைகளைப் படித்து விட்டு ஒன்றும் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார்.''எங்கே போகிறீர்?''என்று அரசன் கேட்டான்.''கழுதை லாயத்திற்கு''என்றார் அமைச்சர்.
ஒரு காட்டில் இருந்த சிங்கத்திற்கு தன பலத்தின் மீது கர்வம் ஏற்பட்டது. வரிசையாக கரடி,மான்,முயல் முதலிய பிராணிகளைப் பார்த்து ,''இக்காட்டில் யார் பலசாலி?''என்று கேட்டது.அப்பிராணிகளும் பயத்துடன் ,''சந்தேகமில்லாமல் நீங்கள் தான்,''என்று பதிலளித்தன.சிங்கம் பின்னர் மேலும் கர்வத்துடன் அதே கேள்வியை ஒரு யானையிடம் கேட்டது.யானை ஏதும் பேசாமல் சிங்கத்தைத் ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது.சிங்கம் பயத்துடன் ஓடிக்கொண்டே எதிரே வந்த மிருகங்களிடம் சொன்னது,''முட்டாள்,பதில் தெரியாவிட்டால் அவன் பாட்டிற்குப் போக வேண்டியது தானே?இப்படியா முரட்டுத்தனமாக நடப்பது?''
ஒரு சாமியாரின் செருப்பு அறுந்து விட்டது.செருப்புத் தைப்பவனிடம் சென்று அதைத் தைத்துக் கொடுக்கச் சொன்னார்.
''இப்போது இருட்டி விட்டது.நாளை காலை வந்தால் தைத்துத் தருகிறேன்.''என்றான் அவன்.
''இப்போதே தைத்துக் கொடுக்க வேண்டும்.இல்லாவிடில் உன் வாய் அடைத்துப் போகும்படி சாபம் கொடுப்பேன்.''என்று பயமுறுத்தினார் சாமியார்.
''உமக்கு அவ்வளவு சக்தி இருந்தால் அறுந்து போன செருப்பை சாபம் போட்டு ஒட்டி வைத்துக் கொள்வது தானே?''என்று சொல்லி விட்டுப் போனான்,செருப்புத் தைப்பவன்.
தனித்துச் சொல்லப்படும் பொய் என்பது ஒரு முடவனைப் போன்றது.அதனால் அடுத்த பொய்யின் ஆதரவில்லாமல் நிற்க முடியாது.பொய் சொல்வது என்பது சுலபமான வேலை.ஆனால் ஒரே ஒரு பொய் சொல்வது என்பது உலகிலே மிகக் கடினமான காரியம்.
ஒருவன் தன விசிறி நீண்ட காலம் உழைக்கும் என்று கூறி இன்னொருவனிடம் விற்றான்.விசிறி இரண்டே நாளில் சேதமாகி விட்டது.விற்றவனிடம் அவன் சண்டைக்கு வந்தான்.
விற்றவன்; நீ விசிறியை எப்படி உபயோகிப்பது என்று தெரியாமல் உபயோகித்திருப்பாய்.அதனால் தான் சேதமாகி விட்டது.
வாங்கியவன்; எப்படி அதை உபயோகிக்க வேண்டும்?
விற்றவன்; விசிறியை உன் முகத்துக்கு நேரே பிடித்துக் கொண்டு உன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்ட வேண்டும்.அப்படி உபயோகித்தால் தான் நீண்ட காலம் என் விசிறி உழைக்கும்.என் விசிறியின் மேல் குறை இல்லை.நீ உபயோகித்த முறை தான் தவறு.
பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஓரிரவு திருடன் நுழைந்து மேஜையைத் துளாவிக் கொண்டிருந்தான்.தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த பால்சாக் இதைக் கவனித்து விட்டு உரக்க சிரித்தார்.'' திருடன்
''ஏன் சிரிக்கிறாய்?''என்று மிரட்டினான்.''நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் கண்டு விடலாமென இவ்வளவு சிரமப்படுகிறாயே!அதை நினைத்தேன்.சிரிப்பு வந்தது.''என்றார் பால்சாக்.
ரஞ்சித் சிங் என்ற அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போதுஎங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது.வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.கிழவி சொன்னாள்,''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது.அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன்.அது தவறி உங்கள் மேல் பட்டு விட்டது.''இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார்.எல்லோருக்கும் ஆச்சரியம்.காரணம் கேட்க அவர் சொன்னார்,''உணர்ச்சியே இல்லாத மரம் தன மீது கல்லை விட்டு எறிந்ததற்குபுசிக்கப் பழங்களைத் தருகிறது.ஆறறிவு படைத்த-அதுவும் மன்னனான நான் தண்டனையா கொடுப்பது?''
வயதான மனிதன் ஒருவன் காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போதுமுடியவில்லை.நொந்து போய் ,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?''என்று கத்தினான்.உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,''அப்பனே,என்னை அழைக்கக் காரணம் என்ன?''என்று கேட்டான்.திடுக்கிட்ட பெரியவர் ,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டை தூக்கி விட இங்கே யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்.''என்றாராம்.
அலெக்சாண்டர் இறக்கும் தருவாயில் போர் வீரர்களிடம் சொன்னார்,''எனக்கு நீங்கள் நான் கேட்கப் போகும் உதவிகளைச் செய்ய வேண்டும்.நான் இறந்த பின் என்னைச் சவப் பெட்டியில் தூக்கிச் செல்லும் பொது என் இரு கைகளையும் வெளியே தொங்கப் போட்டவாறு எடுத்துச் செல்ல வேண்டும்.எனக்கு மருத்துவம் பார்த்த உலகப் புகழ் பெற்ற டாக்டர்கள் சவ ஊர்வலத்தின் முன்னே செல்ல வேண்டும்.நான் சேகரித்த வைரங்களையும் வைடூரியங்களையும் ஊர்வலப் பாதையில் போட்டுக்கொண்டே செல்ல வேண்டும்.''
அங்கிருந்த அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.இவற்றை ஏன்செய்யவேண்டும் என்று ஆர்வமுடனும் வருத்தத்துடனும் அவரையே கேட்க அவர் சொன்னார்,''நான் எத்தனை நாடுகளை வென்ற போதும் எத்தனை கோடி செல்வத்தை வாரி எடுத்த போதிலும்,இறந்தபின் நான் வெறுங் கையுடன் தான் போகிறேன் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள என் கைகளை வெளியே தொங்க விட வேண்டும்.மிகச்சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும் சாவை வெல்ல முடியாது என்பதை உணர்த்த மருத்துவர்கள் சவ ஊர்வலத்தில் செல்ல வேண்டும்.வைரங்களும் வைடூரியங்களும் இறந்த பின் மதிப்பில்லாதவை என்பதை அறிவிக்கத்தான் அவற்றை ஊர்வலத்தில் வீசச் சொன்னேன்.''
ஒரு பிச்சைக்காரன்,''சோறு போட வில்லை என்றால் அடுத்த கிராமத்தில் செய்த மாதிரி செய்து விடுவேன்,''என்று பயமுறுத்தியே காலட்சேபம் செய்து வந்தான்.ஏமாந்த பெண்களும் பயந்து அவனுக்கு அன்னமிட்டு வந்தனர்.ஒரு தைரியமுள்ள பெண்மணி ஒரு நாள் துணிந்து கேட்டாள்,''அடுத்த கிராமத்தில் அப்படி என்ன தான் செய்தாய்?''பிச்சைக்காரன் சொன்னானாம்,''துண்டை உதறித் தோளில்போட்டுக் கொண்டு வேறு ஊர் தேடித் போவேன்.''
ஒரு மனிதனுக்கு நாக்கு கடைசி வரை இருக்கிறது.ஆனால் பற்கள் சீக்கிரமே விழுந்து விடுகின்றன.ஏன்?ஒரு ஞானி சொல்கிறார்,''நாக்கு மென்மையாக இருப்பதால் நிலை பெற முடிகிறது.பற்கள் கடினமாக இருப்பதால் விழுந்து விடுகின்றன.
நான் இளைஞனாக இருக்கும் போது,பத்துக் காரியங்கள் செய்தால் ஒன்பது காரியங்கள் தோல்வி அடைவதைக் கண்டேன்.என் வாழ்க்கை தோல்வியாவதை நான் விரும்ப வில்லை.ஒன்பது முறை வெற்றியடைய என்ன செய்ய வேண்டுமென்று யோசித்தபோது எனக்கு ஒரு உண்மை பளிச்சென்று தெரிந்தது.90 முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்பது தான் அது.ஆகவே முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன்.
---பெர்னாட்ஷா
ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் சொன்னார்,''நீங்கள் ஏன்உங்கள் பகைவர்களிடம் கூட நட்பு பாராட்டுகிறீர்கள்?நீங்கள் நினைத்தால் அவர்களைஒழித்து விடலாமே?''
லிங்கன் சொன்னார்,''நட்பு கொள்ளும் போதே பகைவன் ஒழிந்து விடுகிறானே!''
வேடன் ஒருவன் காட்டில் ஒரு முயல் பிடித்தான்.குதிரை வீரன் ஒருவன் வந்து விலை கேட்டான்.விலை சொல்லு முன்னே முயலைப் பிடுங்கிக் கொண்டு குதிரையில் பறந்தான்.வேடன் பின்னால் ஓடினான்.பிடிக்க முடிய வில்லை.கடைசியில் சப்தம் போட்டுச் சொன்னான்,''ஏய் குதிரைக்காரா,என்னை ஏய்த்துவிட்டு என் முயலை எடுத்துக் கொண்டதாக நினைத்து விடாதே!நான் அதை உனக்கு பரிசாகக் கொடுத்து விட்டேனாக்கும்!''
குதிரைக்காரன் காதில் அது விழுந்ததோ இல்லையோ,வேடனுக்கு ஆறுதல் கிடைத்தது.
வெற்றியா?அது ஒன்றும் பெரிதில்லை.
நஷ்டமா? புதிய முயற்சி செய்வோம்.
சாவா? நாம் செய்வதற்கு ஒன்றும் இல்லை.
காட்சியா?கண்டு களிப்போம்.
சங்கீதமா?கேட்டு மகிழ்வோம்.
இப்படி எல்லாவற்றையும் அவற்றிற்குரிய மதிப்பளித்து ஏற்றுக் கொண்டு விட வேண்டும்.வினைகளும் அதன் விளைவுகளும் இயற்கை நியதி என்று ஆகி விட்ட பின் மனதில் தொய்வுக்கும் தாழ்ச்சிக்கும் இடம் கிடையாது.அது போல் கவர்ச்சிக்கும் எக்களிப்புக்கும் அர்த்தம் கிடையாது.மனதினை மாத்திரம் புதிதாக வைத்துக் கொள்வோம்.நாம் செய்த செயல்களையும் அதன் விளைவுகளையும் தொகுத்து வைத்துக் கொண்டு அந்தத் தொகுப்பு தான் நாம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
கடுமையான விமரிசனங்களோடுவளர்க்கப்படும் குழந்தை எதையும் மட்டம் தட்டி ஒதுக்கக் கற்றுக் கொள்கிறான்.
நையாண்டி செய்து வளர்க்கப்படும் குழந்தை எதைக் கண்டும் வெட்கி ஒதுங்க ஆரம்பிக்கிறான்.
அவமான உணர்ச்சியோடு வளர்க்கப்படும் குழந்தை ,குற்ற உணர்வுகளுக்கு அடிமையாகிப் போகிறான்.
பொறுப்போடு வளர்க்கப்படும் குழந்தை ,நிதானத்தோடு இருக்கிறான்.
சரியான தூண்டுதலோடு வளர்க்கப்படும் குழந்தை ,தன்னம்பிக்கையோடு திகழ்கிறான்.
தக்க பாராட்டுதல்களுடன் வளர்க்கப்படும் குழந்தை நல்லவற்றை ரசிக்க கற்றுக் கொள்கிறான்.
நியாய உணர்வோடு வளர்க்கப்படும் குழந்தை நேர்மையைக் கடைப் பிடிக்கிறான்.
பாதுகாப்போடு வளர்க்கப்படும் குழந்தை மற்றவர்களை நம்பப் பழகுகிறான்.
தட்டிக் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தை தன்னையே புரிந்து கொண்டவனாக இருக்கிறான்.
அன்பு,நட்பின் அர்த்தம் புரிந்து வளர்க்கப்படும் குழந்தை நிஜமான அன்பைக் கொடுக்கவும் ,பதிலுக்கு அதைப் பெறவும் தெரிந்து கொள்வதால் ஆயுசு முழுவதும் நிம்மதியாக இருக்கும் வழியைத் தெரிந்து கொள்கிறான்.
என்னால் மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை எனக்குக் கொடு.
மாற்றக்கூடியதை மாற்றும் தைரியத்தை எனக்குத்தா.
மாற்றக்கூடியது எது ,மாற்ற முடியாதது எது என்பதைப் பாகுபடுத்தும்
தெளிவை எனக்குத்தா,ஆண்டவனே!
அப்பாவுக்கு வயது 108.மகனுக்கு வயது 90.இருவரும் தினசரி காலை முதல் மாலை வரை வயலில் வேலை செய்வர்.அப்பா முன் கோபி.சிறு தவறுகளுக்கு எல்லாம் மகனை அடிப்பார்.ஆனால் மகன் எதிர்த்துக் கூட பேச மாட்டார்.ஒரு நாள் கோபத்துடன் தந்தை மகனை அடித்த போது மகன் கண்ணீர் விட்டு அழுதார்.
''இத்தனை நாள் இல்லாது இன்று மட்டும் அழுத காரணம் என்ன?''என்று தந்தை கேட்ட போது மகன் சொன்னார்,''அப்பா,இது வரை நீங்கள் அடித்த போதெல்லாம் வலி அதிகமாக இருக்கும்.நானும் பொறுத்துக் கொள்வேன்.இன்று நீங்கள் ஓங்கி அடித்தும் வலிக்கவில்லை.ஐயோ,உங்கள் உடம்பில் வலு குறைந்து விட்டதே என்று எண்ணித்தான் அழுதேன்.''
---சீனக்கதை
பாரசீக மொழியில் அழியாக் காவியங்களை எழுதியவர் மௌலானா ஜாமி.அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவைத் தாளிட்டுக் கொள்வார்.வெளியே போகும் போது கதவைத் திறந்து வைத்து விட்டுச் செல்வார்.இவ்வாறு செய்வதற்குக் காரணம் கேட்ட போது ,''வீட்டினுள் இருக்கும் போது அதற்குள் விலை மிகுந்த பொருள் நான் தான்.''
மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.''வராது''என்றான் அமைச்சன்.வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.அவனோ,''மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.''
ஆபிரஹாம் லிங்கன் ,தன மகனுக்கு என்ன கற்பிக்கப் படவேண்டும் என்று அவனது ஆசிரியருக்கு விடுத்த வேண்டுகோள் கடிதம்;
எவரும் முற்றிலும் நேர்மையானவர் அல்லர்;உண்மையானவர் அல்லர்--இதை அவனுக்குச் சொல்லுங்கள்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளவும் வெற்றியைக் கொண்டாடவும் கற்றுக் கொடுங்கள்.
பெருமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.
மனம் விட்டுச் சிரிக்கும் இரகசியம் அவனுக்குத் தெரியட்டும்.
டம்பப் பேச்சுக்கு அடிமை ஆவது எளிது என்பதை அவன் சிறு வயதிலேயே அறியட்டும்.
புத்தகங்களின் விரோதங்களை அவனுக்கு உணர்த்துங்கள்.
இயற்கை விநோதங்களை அலசி ஆராய அவனுக்கு நேரம் கொடுங்கள்.
பிறரை ஏமாற்றுவதை விட ,தோற்பது கண்ணியமானது என்பதனைக் கற்றுக் கொடுங்கள்.
எத்தனை பேர் கூடி 'தவறு'என்றாலும்,சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.
மென்மையானவர்களிடம் மென்மையாகவும்,உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடக்கக் கற்றுக் கொடுங்கள்.
துன்பத்தில் அவன் சிரிக்கட்டும்.அத்துடன் கண்ணீர் விடுவது அவமானம் இல்லை என்பதை உணர்த்துங்கள்.
குற்றங்குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும்.அத்துடன் அளவுக்கு அதிக இனிமையுடன் பேசுபவரிடம் எச்சரிக்கையாகவும் இருக்கச் சொல்லிக் கொடுங்கள்.
உரக்கக் கத்தும் கூட்டத்திற்கு அவன் செவி சாயாமல் இருக்கட்டும்.தன மனதுக்கு 'சரி' என்று தோன்றுவதை துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.
அவனை மென்மையாக நடத்துங்கள்.அதற்காகக் கட்டித் தழுவாதீர்கள்.
எப்போதும் எதிலும் ஆவல் மிக்கவனாக இருக்க அவனுக்குத் தைரியம் ஊட்டுங்கள்.தொடர்ந்து தைரியசாலியாக இருக்க விடாமுயற்சியைக் கற்றுக் கொடுங்கள்.
தன்னம்பிக்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள்.அப்போது அவன் மனித சமுதாயம்,அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.
இவையெல்லாம் மிகப்பெரிய ,கடினமான நடைமுறைகள்தான்.ஆனால் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்.ஏனெனில் இனிமையான என் மகன் மிகவும் சிறியவன்.
மற்றவர்களது இரகசியங்களைத தெரிந்து கொள்வதில் செவிடனாக இரு.
பிறன் மனைவியைப் பார்க்கும் பொது குருடனாக இரு.
கோள் சொல்லும் விசயத்தில் ஊமையாக இரு.
அப்படி இருப்பவனுக்கு நல வழிப் பாடம் போதிக்க வேண்டியதில்லை.
அவனே அறத்தின் உருவமாவான்.
----நாலடியார்.
அலெக்சாண்டர் ஒரு கடல் கொள்ளைக் காரனை பிடித்து விசாரிக்கிறார்.,''எந்த தைரியத்தில் நீ கடலில் கொள்ளை அடித்தாய்?''
கொள்ளையன் சொன்னான்,''நாடு பிடிக்கத் தங்களுக்கு எந்த தைரியம் காரணமோ ,அதே தைரியம் தான்.''
ஒரு கவனக் குறைவான வார்த்தை ,சர்ச்சையில் முடியும்.
ஒரு கடுமையான வார்த்தை ,வாழ்க்கையை முறிக்கும்.
ஒரு கசப்பான வார்த்தை ,வெறுப்பை வளர்க்கும்.
ஒரு கொடுமையான வார்த்தை,துடித்துச் சாகடிக்கும்.
ஒரு இனிமையான வார்த்தை,நல வாழ்வைக் கொடுக்கும்.
ஒரு சந்தோசமான வார்த்தை,ஒளியைக் கொடுக்கும்.
ஒரு நேரமறிந்து கூறும் வார்த்தை,கடுமையைத் தணிக்கும்.
ஒரு அன்பான வார்த்தை பாசத்தை வளர்க்கும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் டயோனிக்ஸ் ,அரிஸ்டோ பஸ் என்னும் இரண்டு தத்துவ ஞானிகள் வாழ்ந்து வந்தனர். இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஒரு நாள் டயோனிக்ஸ் தன் வீட்டில் குழம்பு வைக்க கீரையை அலசிக் கொண்டிருந்தார்.அரிஸ்டோ பஸ் அப்போது அங்கு வந்தார். ''அரசனை முகஸ்துதி செய்ய நீ தெரிந்து கொண்டால் ,இப்படிக் கீரையை சாப்பிட வேண்டிய அவசியம் வராது.,''எனச் சினந்து சொன்னார் அரிஸ்டோ பஸ் .
''நண்பனே,கீரை போன்ற எளிய உணவை சாப்பிட நீ பழகிக் கொண்டால்,அரசனை முகஸ்துதி செய்ய வேண்டிய அவசியம் வராது.''எனச் சொல்லிச் சிரித்தார் டயோனிக்ஸ்.
ஒரு ஆண் சிங்கம் ,ஒரு மானை விரட்டிச் சென்றது.மான் வேகமாக ஓடித் தப்பித்து விட்டது. பெண் சிங்கம் ஆண் சிங்கத்தின் இயலாமை குறித்து கேலி செய்தது.
ஆண் சிங்கம் சொன்னது,''நான் இரைக்காக ஓடினேன்.ஆனால் மான் உயிருக்காக ஓடியது.''
மழை பெய்து ஓடி வரும் தண்ணீர் பாறையின் மீது மோதி மோதித் தேங்கி நின்று தவிப்பதில்லை.மோதுகிறது. பின் இடுக்குக் கிடைத்த வழியே தன பாதையை வகுத்துக் கொண்டு பேராறாகச்செல்கிறது.லட்சியத்தை அடைய முயல வேண்டுமே ஒழிய பாறைகளை எதிர்த்துக்கொண்டு பாதி வழியில் நிற்பது பரிதாபத்திற்கு உரியது.
-----டாக்டர் உதயமூர்த்தி
ஒருவன் தெருவில் நடந்து செல்லும் பொது தன்னுடைய கைத்தடியை அநாயாசமாக சுழற்றிக் கொண்டேயிருந்தான். தெருவில் வந்து கொண்டிருந்த பாதசாரி ஒருவர் அதை ஆட்சேபித்தார். ''என் கைத்தடியை என் இஷ்டம் போல் சுழற்ற எனக்கு சுதந்திரம் இல்லையா?என முதல் ஆள் கேட்டான்.பாதசாரி சொன்னான்,''உனக்கு சுதந்திரம் இல்லை என்று யார் சொன்னது?ஆனால் ஒன்றை மட்டும் நீ மறந்து விடக் கூடாது.என்னுடைய மூக்கு எங்கே ஆரம்பிக்கின்றதோ அந்த இடத்தில் உன் சுதந்திரத்தின் எல்லைக் கோடுமுடிகிறது என்பதை மறந்து விடாதே.''
---தத்துவ விமரிசகர் சி.இ எம் .ஜோட்
ஒரு புகழ் பெற்ற அரசன் ,தன்னைக் காட்டிலும் புகழ் பெற்ற அறிஞன் ஒருவனை மட்டம் தட்ட எண்ணினான்.ஒரு கைக்குள்ளே அடங்கக்கூடிய சிறு பறவைக் குஞ்சை கையில் அடக்கி வைத்துக் கொண்டு அறிஞனிடம் வினவினான்,''என் கைக்குள்ளே பறவைக் குஞ்சு உயிரோடிருக்கிறதா,இறந்து விட்டதா?''
அறிஞன் புரிந்து கொண்டான்.உயிரோடிருக்கிறது என்று சொன்னால் அரசன் குஞ்சை நசுக்கிக் கொன்று விடுவான்.இறந்து விட்டது என்றால் கையைத்திறந்து பறவையைப் பறக்க விடுவான். எனவே சொன்னான்,''அரசே,அது உன் விருப்பத்தைப் பொறுத்தது.அந்தப் பறவை சிறகை விரிக்குமா அல்லது செத்து மடியுமா என்பது உன் விருப்பத்தை மட்டுமே ஒட்டிய விஷயம்.''
அது போலவே ஒருவன் வாழ்வில் உயர்வானா அல்லது உதவாக்கரை ஆவானா என்பது அவன் கைக்குள் தான் உள்ளது.
ஓடம் போவதற்கு நீர் தேவையே. நீர் இன்றி ஓடம் இல்லை. ஆனால் ஓடத்திற்கு ஆதாரமான நீர் ஓடத்திற்கு வெளியே இருக்க வேண்டுமேயன்றி உள்ளே அன்று.
சமூகத்தின் செல்வமும் இத்தகையதே. செல்வம் ஒவ்வொருவர் வீட்டிலும் உள்ளே தங்கி விடாமல் சமூக ஓட்டத்திற்கு வெளியே,அது மிதப்பதற்கு ஆதாரமாக அமைய வேண்டும்.
--வினோபாஜி
மற்றவர்களுக்கு உங்களைப் பிடிக்காது,உங்களைக் குறை கூறுவார்கள் என்று நினைக்காதீர்கள். அவரவர்க்கு அவரவர் பிழைப்பைக் கவனிக்கும் வேலையே தலைக்கு மேல் இருக்கிறது.உங்களை வெறுத்துக் கொண்டிருக்கவோ குறை கூறவோ அவர்களுக்கு நேரமில்லை.நீங்களாக ஏதாவது கோளாறாக நடந்து கொண்டாலன்றி உங்களைப் பற்றி அவர்கள் ஏன்சிந்திக்கப் போகிறார்கள்?
மற்றவர்களை அனுசரித்துப் போனால் நீங்கள் இன்னும் நன்றாக இருக்க முடியும் என்பதை உணருங்கள்.
மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் நீங்கள் இளக்கார மானவர்அல்ல என்று நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றோ மற்றவர்களைக் காட்டிலும் கெட்டிக்காரர்களாக இருக்க முயல வேண்டும் என்றோ எண்ணி எல்லாவற்றிலும் போட்டி போட வேண்டாம்.
பேசுவது நீங்களாகவே இருக்க வேண்டும் ,கேட்பதற்கு மட்டும் மற்றவர்கள் என்று நினைக்காதீர்கள்.உரையாடலின் போது மற்றவர்கள் பேசுவதற்குக் காது
கொடுத்து அவர்கள் பேச்சைக் கவனத்துடனும் ஆர்வத்துடனும் கேட்டுக் கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.
ஒரு முறை சில வேடர்கள் காட்டு யானைகளை பிடிக்க காட்டுக்குள் சென்றனர்.பழக்கப்பட்ட சில யானைகளை உடன் அழைத்துக்கொண்டு கையில் கயிறுகள் மற்றும் ஆயுதங்களுடன் போனார்கள்.வேடர்கள் வருவதைப் பார்த்த காட்டு யானைகள் ,''நாம் வேடர்களைக் கண்டு பயப்படவில்லை.அவர்கள் கையில் வைத்துள்ள பாசக் கயறுகளைப் பார்த்தும் கவலைப் படவில்லை.அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களைப் பற்றியும் கவலையில்லை.ஆனால் தம்முடன் அந்த மனிதர்கள் அழைத்து வந்திருக்கும் நம் இனத்தவரான நாட்டு யானைகளைக் கண்டு தான் நாம் பயப்பட வேண்டியிருக்கிறது.நம்மை எவ்வாறு பிடிக்கலாம் என்னும் உபாயத்தை நாட்டு யானைகள் தான் அந்த வேடர்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றன.ஆகவே மற்ற பயத்தைக் காட்டிலும் உறவினருக்கு இருக்கும் பங்காளிக் காய்ச்சலைக் கண்டு தான் நாம் பெரிதும் பயப்பட வேண்டியுள்ளது.''என்று தமக்குள்ள பேசிக்கொண்டன.
போஸ்ட் ஆபீசிற்கு போக வழி தெரியாத ஒரு பாதிரியாருக்கு ,வழி காட்டினான் பையன் ஒருவன்.நன்றி கூறிய பாதிரியார் பையனிடம் சொன்னார்,
''உனக்கு சொர்க்கம் போகும் வழி சொல்கிறேன்.''பையன் சொன்னான்,''இதோ இருக்கும் போஸ்ட் ஆபீசுக்கு வழி தெரியாத நீங்களா ,சொர்க்கத்திற்கு வழி கட்டப் போகிறீர்கள்?''
தியாகம் பற்றி இரு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஒருவன் சொன்னான்,
''என்னிடம் இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் உனக்கு ஒரு லட்சம் கொடுப்பேன்.''இரண்டாமவன் சொன்னான்,''என்னிடம் இரண்டு பங்களா இருந்தால் உனக்கு ஒன்று கொடுப்பேன்.''
முதல்வன் இரண்டாமவனின் பையில் இரண்டு பேனா இருப்பதைக் கண்டு ஒன்றைக் கேட்டான்.இரண்டாமவன் முதல்வனின் பையில் இருபது ரூபாய் இருப்பதைப் பார்த்து பத்து ரூபாய் கேட்டான்.அடுத்த நிமிடம் இருவரும் அந்த இடத்தில் இல்லை.இல்லாததைக் கொடுப்பதில் தான் எவ்வளவு தியாக மனப்பான்மை?
ஒரு பெண், பெரியவர் ஒருவரிடம் தன கணவன் மிகக் கொடுமைகள் செய்வதாகப் புகார் சொன்னாள்.பெரியவர் சொன்னார்,''ஒரு பேப்பரை எடுத்து உன் கணவன் உனக்கு செய்த நல்ல காரியங்களையும் ,செய்த கொடுமைகளையும் தனித்தனியே எழுதிக் கொண்டு வா.அதைப் படித்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறேன்.''என்றார்.
பெண்ணும் ஒரு பேப்பரை எடுத்து முதலில் தன கணவன் செய்த நல்ல காரியங்களை யோசித்து எழுதி முடித்தாள்.அப்போது அவளுக்குத் தோன்றியது,''சே!இவ்வளவு நல்ல காரியங்கள் செய்த என் கணவரையா குறை கூறுகிறேன்?''என்று வருத்தப்பட்டாள்.
ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒரு பெண் தன தோழியிடம் ,''என் மேனேஜர் கோபக்காரர்.எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு குறையைச் சொல்லித் திட்டிக்கொண்டிருக்கிறார்.எப்படி வேலை பார்த்தாலும் பயனில்லை.''என்று வருத்தப்பட்டு சொன்னாள்.
தோழி ஆறுதலாகக் கூறினாள்,''அவர் எப்படிக் கோபப்பட்டாலும் நீ மட்டும் அவரிடம் நீ காணும் சிறப்பம்சங்களை தினமும் ஒன்றாகக் கூறி வா.''அந்தப் பெண்ணும் அதே போல் ஒரு நாள் ,''இவ்வளவு டென்சனான நேரத்திலும் குழப்பம் இல்லாமல் எப்படி சார் முடிவெடுக்கிறீர்கள்?''என்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாகப் பாராட்டி வந்தாள்.
சிறிது நாள் கழித்து தோழி கேட்டாள்,''ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?''
அந்தப் பெண் கூறினாள்,''ஆம்,இப்போது நான் அவரது மனைவி.''
உண்மையை யாரும் நம்புவதில்லை.பசும்பாலிலிருந்துதயாரித்த மோரை தெருத்தெருவாக அலைந்து விற்க வேண்டியுள்ளது.ஆனால் கள்உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போய் விடுகிறது.நல்லது மெதுவாகத்தான் விலை போகும்.விரைவில் விற்பதால் கெட்டதுஒரு போதும் நல்லதாகிவிடாது.
உண்மையைப் போன்ற தவம் இல்லை.பொய்யைப் போன்ற பாவம் இல்லை.உண்மையைப் பொய்,நிந்தை ஒன்றும் செய்து விட முடியாது.காலம் அதனை விழுங்கி விட முடியாது.உண்மைக்கு வெற்றி கிடைத்தே தீரும்.
---கபீர்தாசர்.
ஒரு ஞானி இரவு பகலாக ஆன்மீக நூல்களைப் படித்துக் கொண்டிருந்தார்.ஒரு தேவதை அவர் முன் தோன்றி ,;;உனக்கு எல்லா வகை ஞானத்தையும் நான் தருகிறேன்.நீ ஏன்இரவில் இவ்வளவு சிரமப்பட்டு உன் சக்தியை வீணாக்குகிறாய்?''
ஞானி சொன்னார்,''உழைக்காமல் கிடைக்கும் பரிசு எதையும் என்னால் அனுபவிக்க முடியாது.நீங்கள் தரும் ஞானம் எனக்கு ஒரு சுமையாகவே இருக்கும்.''
ஆனால் தேவதையோ பிடிவாதமாய் ,''நான் வந்து விட்டேன்.உனக்கு பரிசு ஏதும் தராமல் போக மாட்டேன்.''என்றது.
கடைசியில் ஞானி ,''நீங்கள் ஏதேனும் உதவி செய்தே ஆக வேண்டுமானால் ,இதோ இந்த விளக்கிற்கு சிறிது எண்ணெய்ஊற்றிச் செல்லுங்கள்.பிறர்க்குப் பயன் படுத்தும் ஞானத்தை நான் பெறுவதில் உங்கள் பங்கும் இருக்கும்.''என்று கூறி விட்டு ஆத்ம திருப்தியுடன் படிக்க ஆரம்பித்தார்.
எளிமையான ஒரு குரு.புரியக்கூடிய, இதயத்தை தொடக்கூடிய அளவு பேசுபவர்.
இன்னொரு குரு.கர்வம் கொண்டவர்.வாதாடுவதில் வல்லவர்.இவர் எளிமையானவரை பார்க்க வந்தார்.வந்தவர் மரியாதை கூடச் செலுத்தாமல் ,''என்னைப் பணிய வைக்க உம்மால் முடியுமா?''என்றார் அகங்காரத்தோடு.
''இங்கே வாருங்கள் ,என் பக்கம்.''என்றார் முதல்வர்.இவர் வந்தார்.
''கொஞ்சம் இடப்பக்கம் வாருங்கள்,''என்றார்.இவர் வந்தார்.
''இல்லை.இது சரிப்படாது.வலப் பக்கம் வந்து விட்டால் வாதம் தொடர வசதியாக இருக்கும்.''இவரும் வலப்பக்கம் மாறினார்.
''பார்த்தீர்களா?இப்போது நான் சொன்ன படியெல்லாம் கேட்டீர்கள் அல்லவா?இப்படித்தான் நான் பணிய வைப்பது.''
உன் உடல் நிலை சரியில்லையா?டாக்டரிடம் போ.
டாக்டர்கள் பிழைக்க வேண்டாமா?
டாக்டர் எழுதிக் கொடுக்கும் எல்லா மருந்தையும் கடையில் வாங்கு.
கடைக்காரர் பிழைக்க வேண்டாமா?
வாங்கிய மருந்து எதையும் சாப்பிடாதே.
நீ பிழைக்க வேண்டாமா?
குனிந்த தலை குனிந்தபடி மூட்டை சுமந்து செல்லும் கழுதையைப் பார்த்து ஒரு காகம் வருத்தப்பட்டது.''பாவம்,இந்தக் கழுதை எப்போது பார்த்தாலும் யாருக்காகவோ மூட்டை சுமந்து கஷ்டப்படுகின்றது.''
''நாம் என்ன செய்ய முடியும் ?கழுதை தான் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்.,''என்றது இன்னொரு காகம்.
''ஏன் அப்படிச் சொல்கிறாய்?''என்று கேட்டது முதல் காகம்.
''குனிந்து கொண்டே இருப்பவன் சுமந்து கொண்டே இருப்பான்.''என்றது அடுத்த காகம்.
இலங்கைக் கவிஞர் காசி ஆனந்தன்.
ஒருவன் தன குதிரைக்கு சங்கேத மொழி கற்றுக் கொடுத்தான்.அவன் 'ஐயோ' என்றால் குதிரை நிற்கும்.'அப்பாடா' என்றால் ஓடும்.ஒரு நாள் மலைப் பகுதிக்குச் சென்ற அவன் ஒரு புலியைக் கண்ட பதட்டத்தில் ,குதிரையும் தறி கெட்டு ஓட, ,அதை நிறுத்தச் சொல்ல வேண்டிய வார்த்தையை மறந்து விட்டான்.குதிரை வெகு வேகமாக ஒரு பள்ளத் தாக்கின் முனையை நோக்கி ஓடியது.எதிரே உள்ள ஆபத்தை உணர்ந்து அவன் தன்னை அறியாமல் ,'ஐயோ'என்றான்.உடனே குதிரை நின்றது.மயிரிழையில் உயிர் பிழைத்த அவன் நிம்மதியாக 'அப்பாடா' என்றான்.மறு நிமிடம் குதிரை பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
ஒரு ராஜாவுக்கு தாராள மனசு.ஒரு நாள் மீனவன் ஒருவன் அழகான வண்ண மீனை ராஜாவிடம் கொடுத்தான்.உடனே ராஜா நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணிக்கு எரிச்சல்.ஒரு சாதாரண மீனுக்கு நூறு பொற்காசா என்று.ராஜாவை நச்சரித்து நூறு பொற்காசுகளை திரும்ப வாங்கச்சொல்லி ஒரு யோசனையும் சொன்னாள்.''இந்த மீன் ஆணா பெண்ணா என்று கேளுங்கள்.பதில் சொல்லாவிடில் காசைத் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.''என்றாள்.அரசனும் மீனவனைக் கூப்பிட்டு அக்கேள்வி கேட்க ,அவன்,''இது ஆணுமல்ல ,பெண்ணுமல்ல,அலி.''என்றான்.இப்பதிலைக்கேட்டு பரவசமடைந்து அரசன் இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தான்.
ராணிக்கு மகாஎரிச்சல்.எப்படி இருநூறு பொற்காசுகளைத் திரும்ப வாங்குவது என யோசித்தாள்.
மீனவன் பொற்காசுகளைத் தூக்கிச் செல்லும் போது ஒரு காசு தவறி கீழே விழுந்தது.ராணி சொன்னாள்,''பாருங்கள்!இவன் பேராசைக்காரன்.இருநூறு காசில் ஒன்று விழுந்ததற்கே பெருந்தன்மை இல்லாது ஓடி எடுக்கிறானே, காசைத் திரும்ப வாங்குங்கள்.''
ராஜா கேட்டார்,''ஏன் இப்படி அற்பத்தனமாய் ந்கடந்து கொண்டாய்?''
மீனவனோ ,''ஒவ்வொரு காசிலும் உங்கள் முகமும் ,ராணியின் முகமும் பொறிக்கப் பட்டிருக்கிறது.அது கீழே விழுந்து யார் காலிலாவது பட்டால் உங்களுக்கு அவமானம்.அதனால் தான் எடுத்தேன்.''என்றான்.மகிழ்ச்சியுற்ற ராஜா அவனுக்கு இன்னும் நூறு பொற்காசுகள் கொடுத்தார்.ராணி இப்போது வாயைத் திறக்க வில்லை.
நான் மாறும் போது தானும் மாறியும்
நான் தலை அசைக்கும் போது தானும் தலை அசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்.
உலகத்தைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!பேசி உலகத்தை நீ ஒன்றும் செய்ய முடியாது.
உன்னைப் பற்றி பேசுகிறாயா?
நிறுத்து!உன்னைப்பற்றி நீ பேசினால் யாரும் கேட்டுக் கொண்டிருக்க
மாட்டார்கள்.
உன் அனுபவத்தைப் பற்றி பேசுகிறாயா?
வேண்டாம்!ஒவ்வொருவரும் மூட்டை மூட்டையாக வைத்து
இருப்பார்கள்.உன் பேச்சு செலாவணியாகாது.
பிறருக்கு நன்மை செய்வதைப் பற்றி பேசுகிறாயா?
பேசாதே!செய்!
பாரதப் போர் முடிந்தது.தர்மர் முடி சூட்டிக் கொண்டார்.கண்ணன் துவாரகைக்கு விடை பெரும் நேரம் வந்தது.வேதனையுடன் தர்மர் சொல்கிறார்,
''கண்ணா,எங்கள் தெய்வமே,
உன்னைப் போகாதே என்று சொன்னால் அது அபமங்களம்.
உன்னை இரு என்று கட்டளையிட்டால் அது மமதை ஆகும்.
உன்னைப்போ என்று சொன்னால் செய் நன்றி மறந்தவனாவேன்.
உன் இஷ்டம் போல் செய் என்றால் அது அசட்டையாக கருதப்படும்.
இந்த இக்கட்டான சூழ் நிலையில் உன்னிடம் நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுதான்.உன் இதயத்தில் எங்களுக்கு எப்போதும் தனி இடம் வேண்டும்.உன்னை மறவாதிருக்க வேண்டும்.''
ஒரு மகானைத் தேடி ஒருவன் படபடப்போடும் கோபத்தோடும் வந்தான்.கால் செருப்பை கழட்டிகோபமாக ஒரு மூலையில் வீசி எறிந்தான்.கதவை வேகமாக அடித்துச் சாத்தினான்.அப்புறம் மகானுக்கு வணக்கம் தெரிவித்தான்.மகான் சொன்னார்,''அப்பா,உன் வணக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.முதலில் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டு விட்டு வா.''
''உயிரற்ற அப் பொருள் களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது?''என வினவினான்.அவன்.
''அந்தச் செருப்புக்கும் கதவுக்கும் உயிர் இருப்பதாக நினைத்துத்தானே உன் கோபத்தைக் காட்டினாய்.மன்னிப்பு கேட்க மட்டும் அவை உயிரற்றவை ஆகி விடுமா?''எனக் கேட்டார் மகான்.
அவன் செருப்பிடமும் கதவிடமும் மன்னிப்புக் கேட்டான்.அவனது மூர்க்க குணம் அடங்கியது.
''நம் கோபத்துக்கு அடிப்படையான தவறுகளை நாம் தான் செய்கிறோம்.பிறருக்கு இதில் பங்கு இல்லை என்பதை உணர்ந்தாலே கோபம் அடங்கி விடும்.''என்றார் மகான்.
தெய்வத்தின் காலடியில் சமர்ப்பிக்கப் படுவதை விட,ஒரு பெண்ணின் கூந்தலில் இடம் பெறுவதை விட ,மேசையின் மீது பூக்கிண்ணத்தில் செருகப் படுவதை விட செடியிலே இருக்கும் போது தான் மலர் அழகாக இருக்கும்.
பாவத்தையும் புண்ணியத்தையும் மறந்து விடுங்கள்..இரண்டும் அபத்தமானவை.பாவம் புரிந்தவன் குற்ற உணர்வு அடைகிறான்..குற்ற உணர்வு உடையவன் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?புண்ணியாத்மாவகத் தன்னைக் கருதிக்கொள்பவனும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. தான் எதைச் செய்தாலும் தப்பாகி விடுமோ என்று அஞ்சுகிறான்.தன்னுடைய புனிதத் தன்மை கெட்டுவிடுமோ என்ற அச்சம்.ஆக,பாவம் புண்ணியம் இரண்டுமே மனித இனத்தின் மகிழ்ச்சியைக் கூறு போடுபவை.பாவிகள் குற்ற உணர்வில் குதூகலத்தை இழக்கிறார்கள்.புண்ணியவான்கள் அகந்தையில் இழக்கிறார்கள்.
கிராமத்தில் ஒரு கிழவன் தன வீட்டு சுவர் மீது அமர்ந்திருந்தான்.சாலையில் போய் வருகிற வாகனங்களை பார்ப்பதே அவனுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. காரில் போய்க்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் இறங்கி கிழவனிடம் வந்தான். ''பெரியவரே,இந்த சுவற்றில் ஐந்து நிமிடம் கூட என்னால் உட்கார்ந்து இருக்க முடியாது. எங்காவது சுற்றிக்கொண்டே இருந்தால் தான் எனக்கு மகிழ்ச்சி.ஆனால்நீ எனக்கு நேர் மாறாக சுவரிலேயே உட்கார்ந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கிறாய். அது எப்படி?''என்று கேட்டான்.
கிழவன் சொன்னான்,''அப்பனே,ரெண்டுக்கும் ரொம்ப வித்தியாசமில்லை.நீ காருக்குள் இருந்தபடி சுவர்களையும் ,வேலிகளையும்பார்த்துக் கொண்டு போகிறாய்.நான் இங்கே உட்கார்ந்து கொண்டு போகிற வருகிற கார்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்..எல்லாம் ஒன்று தான்.''
தண்ணீர் தெளிவானது.கண்ணாடி தெளிவானது. அதே போல் தான் மனமும்..தண்ணீரில் அசுத்தமும் கண்ணாடியில் தூசும் மனதில் ஆபாசமும் படிந்தால் தெளிவற்ற தன்மை ஏற்படுகிறது..நமக்கெல்லாம் தெளிவில்லாத போதுதான் அடுத்தவரைப் பார்த்து சிரிக்க தோன்றும்.தெளிவு வந்து விட்டால் தன்னைத்தானே பார்த்து சிரிக்கிறவர்களாகி விடுவோம்.நம்முடைய அகந்தையில் செய்யப்படுகின்ற காரியங்களும் முட்டாள்தனங்களும் நகைப்பிற்குரியவை.
ஒரு மனிதன் மலை உச்சியிலிருந்து தவறி விழுந்தபோது ,தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக் கொண்டான்.பிடி தளர்ந்தால் பாதாளம் போகும் அபாயம்!அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை.இப்போது கடவுளை நினைத்து ,''கடவுளே,உன்னை நான் முழுமையாக நம்புகிறேன்.நீ தான் காப்பாற்ற வேண்டும்,''என வேண்டினான்.அப்போது வானிலிருந்து ஒரு குரல்!
குரல்: நீ என்னை நம்ப மாட்டாய் .
மனிதன்: கடவுளே ,என்னைக் கை விட்டு விடாதே.நிச்சயம் நம்புகிறேன்.
குரல்:எனக்கு நம்பிக்கை இல்லை.
மனிதன்:கடவுளே,நீ தான் காப்பாற்ற வேண்டும்.
குரல்:சரி,உன்னைக் காப்பாற்றுகிறேன்.முதலில் நீ பிடித்திருக்கும் வேரை
விட்டு விடு.
மனிதன்:வேரை விட்டு விட்டால் கீழே விழுந்து இறந்து விடுவேனே?
அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்க வில்லை.
ஆப்பிரிக்கா ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் வந்ததைப் பற்றி ஜோமோ என்ற முன்னாள் கென்யா நாட்டதிபர் சொன்ன விளக்கம் ;
''வெள்ளைக்காரர்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்த போதுஎங்கள் கையில் தேசம் இருந்தது.அவர்கள் கையில் பைபிள் இருந்தது.கண்களை மூடிக்கொண்டு ஜெபம் செய்ய எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.கற்றுக் கொண்டோம்.அப்புறம் கண்ணைத் திறந்து நாங்கள் பார்த்த போது எங்கள் கையில் பைபிள் இருந்தது.அவர்கள் கையில் தேசம் இருந்தது.''
தன்னைப் பார்க்க வந்த ஒரு அறிஞரை ,ஒரு ஞானி உபசரித்து ஒரு ஆசனத்தில் அமரச் செய்தார்.அறிஞருக்கு ,தனக்கு அளிக்கப்பட்டஆசனம் ஞானி அமர்ந்திருந்த ஆசனத்தைவிட சற்றுக் குறைவாய் இருந்தது வருத்தத்தை ஏற்படுத்தியது.அவர் ஞானியிடம் ,''நீங்கள் என்னை அவமதித்து விட்டீர்கள்.நான் படித்த படிப்புக்கு இப்படித் தாழ்வான இருக்கையைத்தந்து கேவலப்படுத்தலாமா?''என்று கோபமாகக் கேட்டார்.ஞானி உடனே தன இருக்கையை அவருக்கு அளித்து விட்டுத்தான் கீழே அமர்ந்து அவருடன் பேசினார்.சிறிது நேரத்தில் அவர்கள் அமர்ந்திருந்த இடம் அருகே இருந்த ஒரு மரத்தின்மேல் ஒரு குருவி வந்து அமர்ந்தது.அதைக் கவனித்த ஞானி பேச்சு வாக்கில் ,''அறிஞரே ,அதோ உச்சாணிக்கொம்பில் அமர்ந்திருக்கும் குருவி தங்களை விட அதிகம் படித்திருக்குமோ?''என்று நாசூக்காக கேட்க அறிஞர் தன செயலுக்கு வெட்கப்பட்டு த்தலை குனிந்தார்.
குடையும் ஒரு சுமை தான்
மழை இல்லாத போது.
படிப்பும் ஒரு சுமை தான்
வேலையில்லாதபோது.
மொகலாய மன்னர் பாபரின் பெருமையைக் கேள்விப்பட்டு ஒரு வெளி நாட்டவர் அவரைப் பார்க்க அரண்மனைக்குப் போனார்.கட்டுப்பாடும் கம்பீரமும் உள்ள பாபரின் அரண்மனைக்குள் நுழைவதே சிரமம் என நினைத்ததற்கு மாறாக அரசன் இருக்குமிடத்திற்கு தங்கு தடையில்லாமல் போக முடிந்தது.யாரும் தடுக்கவில்லை.பாபரின் அறைக்குள் எட்டிப் பார்த்தபோது இன்னும் வியப்பு.பாபர் மிகச் சாதாரணமாக வேலையாட்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.சபையில் அவ்வளவு கம்பீரமாக இருப்பவர் இவ்வளவு சாதாரணமாய் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டு அதன் காரணத்தை மன்னரிடமே கேட்டார்.அப்போது பாபர் அமைதியாக அறையின் மூலையிலிருந்த ஒரு வில்லையும் அம்பையும் காட்டினார்.பின் சொன்னார்,''அந்த வில்லை போர் முனைக்கு எடுத்துச் செல்லும் போதுதான்
கிண்ணென்று நாண்ஏற்றி பாணங்களை அடுக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.மற்ற நேரங்களிலும் அதை இறுக்கமாகக் கட்டி நாணஏற்றி வைத்தால் ,அந்த இறுக்கம் தாளாது ஒடிந்து விடும்.மனிதர்களும் அப்படித்தான்.வளைந்து குழைந்துஇருக்க முடிந்தவர்களே நிமிர்ந்து நிற்கும் போது வலுவாகத் தாக்குப் பிடித்து நிற்பார்கள்.எப்போதும் வளையாமல் இருப்பவர்கள் எந்தக் கணத்திலும் உடைந்து போகிறவர்களாகவே இருப்பார்கள்.''
நான் மூட்டை தூக்க நேரிட்ட போது,அதன் பாரத்தினால் வேதனைப் பட்டிருப்பேனே ஒழிய ,மூட்டை தூக்குவது அவமானம் என்று ஒரு போதும் வேதனைப் பட்டதில்லை.
----தந்தை பெரியார்
பன்றி,பசுவிடம் தன ஏக்கத்தைக் கூறியது,''நான் எவ்வளவு தான் செய்தாலும் மக்கள் உன்னைத்தான் புகழ்கிறார்கள்.நீ பால் தந்தாலும்,நான் அதை விட அதிகமாக என் மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறேன்.இருந்தும் என்னை யாரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் .''
பசு கூறியது,''நீ கூறுவது உண்மையே.அதன் காரணம் நான் கொடுப்பவற்றை உயிருடன் இருக்கும் போதே கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.''
தஞ்சை பெரிய கோவில் கட்டும் பணிநடந்து கொண்டிருந்தது.மன்னன் இராஜ ராஜன் மாறு வேடத்தில் வந்து,அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தான்.
''அய்யா,என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று ஒருவனைக் கேட்டான்.
அவன் பதில் சொன்னான்,''நான் ஒரு சுவரை கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மன்னன் அதே கேள்வியை இன்னொருவரிடம் கேட்டான்.
அவன் சொன்னான்,''நான் ஒரு கோவிலின் மதில் சுவரைக் கட்டிக் கொண்டிருக்கின்றேன்.''
மூன்றாவது நபரிடம் அதே கேள்வியைக் கேட்டதற்கு அவன் சொன்னான்,''அய்யா,
வரலாற்றில் இடம் பிடிக்கப் போகும் ஒரு மாபெரும் கோவிலைக் கட்டிக் கொண்டிருக்கிறேன்.''இதைத்தான் நாம் ஈடுபாடு என்கிறோம்.
ஒரு எண்ணெய்வியாபாரி செக்கில் எண்ணெய் ஆட்டிக் கொண்டிருந்தார்.அப்போது தர்க்கம் படித்த ஞானி ஒருவர் அங்கே வந்தார்.
ஞானி; செக்கு மாட்டுக் கழுத்தில் ஏன்மணி கட்டியிருக்கிறாய்?
வியாபாரி; வேறு வேலை பார்க்க அப்பப்போ நான் பக்கத்தில் வீட்டிற்குப் போவேன்.மணி சப்தம் கேட்டால் மாடு சுற்றிக்கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்வேன்.
ஞானி; அந்த மாடு சுற்றாமல் ,நின்ற இடத்திலேயே தலையை மட்டும் ஆட்டி சப்தம் கொடுத்தால்........?
வியாபாரி;அய்யா,எங்க மாடு உங்க அளவுக்கு தர்க்கம் படிக்க வில்லை.அதனாலே அதற்கு குதர்க்கம் தெரியாது.
வீட்டில் பூனை வளர்த்தார் ஒருவர்.
ஒரு நாள் வீட்டையே துவம்சமாக்கிக் கொண்டிருந்த ஒரு பெரிய எலியை அது பிடித்துக் கொன்றது. ஆனந்தக் கூத்தாடினார் அவர்.
அடுத்த நாள் அதே பூனை அவர் ஆசையாய்வளர்த்த கிளியை கவ்விக் கொன்றது.
கழியை எடுத்துக் கொண்டு பூனையைத் துரத்தினார் அவர்.
மூன்றாம் நாள் பூனை எங்கிருந்தோ வந்த ஒரு குருவியைப் பிடித்துக் கொன்றது.
வேடிக்கை பார்த்தபடி இருந்தார் அவர்.ஆனந்தமும் இல்லை;ஆத்திரமும் இல்லை.
வேண்டாத எலியைக் கொன்ற போதுமகிழ்ச்சி.
வேண்டிய கிளியைக் கொன்ற போது ஆத்திரம்;துக்கம்.
வேண்டும்,வேண்டாம் என்ற எல்லைக் குள் வராத குருவியைக் கொன்ற போது மகிழ்ச்சியும் இல்லை;துக்கமும் இல்லை.
அது மட்டுமல்ல......
பசிக்கு,தனக்கு வாய்த்த இரை எதுவாயினும் அதைப் பிடித்து தின்பது பூனையின் இயல்பு என்ற ஞானம் வந்து விட்டது அவருக்கு.
இந்த மன நிலை தான் யோகியின் சமநிலை.
நண்பனே.
என்னை நீ எங்கே தேடி அலைகிறாய்?
நான் உன் அருகிலேயே இருக்கிறேன்.
நான் ஆலயத்திலும் இல்லை;மசூதியிலும் இல்லை.
என்னை உண்மையில் தேடினால்
ஒரு கணத்தில் என்னைக் கண்டு பிடித்து விடுவாய்.
நான் உன் நம்பிக்கையில் இருக்கிறேன் நண்பனே!
---கபீர்தாசர்
சிரமம் இல்லாத வேலை எதுவும் கிடையாது.சிரமம் வரும் போது ,நம்மை விடிவு காலத்திற்கு இட்டுச் செல்லும் பணியும் துவங்கி விட்டது என்று பொருள்.நம் உடலும் மனமும் அப்பொதுநன்கு பழக்கப்பட்டு பக்குவப்படும்.இதை விடப் பெரிய உடல் சிரமங்களையும் ,உள்ளச் சிரமங்களையும் எதிர் கொள்ள நாம் தயாராகி விடுகிறோம்.சிரமங்கள் என்பவை அனுபவப் பாடங்கள்.அவை வலிந்து திணிக்கப் படும்போது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.பாடம் சிரமமாக இருக்கிறது என்பதற்காக முதல் வகுப்பிலேயே உட்கார்ந்திருக்க முடியுமா?
ஒருவர் மீது நாம் அன்பு செலுத்துகிறோம் என்றால் என்ன பொருள்?அவர்களுடைய அந்தரங்கமான பலவீனங்கள் நமக்குத் தெரிந்த போதிலும் ,அதற்காக அவர்களுடைய மற்ற தகுதிகளையும் பெருமைகளையும் குலைக்காமல் ,அந்தப் பலவீனமும் சேர்ந்தவர்கள் தான் அவர்கள்,என்று புரிந்து கொள்வது தான்.
----ஜெயகாந்தன்
ஒருவரிடம் தெருவில் சென்ற பிச்சைக் காரன் சாப்பிட ,இரண்டு ரூபாய் கேட்டான்.அவர் அவனை விசாரித்தார்,
''குடிப்பாயா?''
'இல்லை,சார்,'
''சிகரெட் பிடிப்பாயா?''
'இல்லை,சார்.'
''ரேசுக்கு போவாயா?''
'இல்லை,சார்.'
''சூதாட்டம்?''
'கிடையாது,சார்.'
''பெண் சிநேகிதம்?''
'சத்தியமா இல்லை,சார்.'
''உனக்கு இருபது ரூபாய் தருகிறேன்.என் வீட்டுக்கு வா.என் மனைவியிடம் உன்னைக் காட்ட வேண்டும்.எந்த கெட்டபழக்கமும் இல்லாத ஒரு மனிதனின் நிலைமையை பார்த்தாயா என்று காட்ட வேண்டும்.''
ஒரு குருவிற்கு இரண்டு சீடர்கள் இருந்தார்கள்.ஒரு சீடன் குருவிடம் சென்று ,தியானம் செய்யும் போதுபுகை பிடிக்கலாமா என்று கேட்க ,குருவிற்கு கோபம் வந்து திட்டிவிட்டார்.
அன்று மாலை அடுத்த சீடன் சாவகாசமாகப் புகை பிடித்துக் கொண்டிருந்தான்.முதல் சீடன் அவனிடம் சென்று குரு அவனை மட்டும் புகை பிடிக்க எப்படி அனுமதித்தார் எனக் கேட்டான்.அதற்கு அவன் சொன்னான்.''நான் ,குருவிடம் ,புகைக்கும் போது தியானம் செய்யலாமா எனக் கேட்டேன்.ஆஹா,எவ்வளவு சிறந்த விஷயம் எனக் கூறி குரு அனுமதித்துவிட்டார்.''
பெரிய பதவியில் உள்ள ஒரு அதிகாரி ஆபீசின் பின்புறமுள்ள கிணற்றில் விழுந்து விட்டார்.அவரைக் காப்பாற்ற ஊழியர்கள் அனைவரும் போராடினார்கள்.ஒரே பரபரப்பு.ஒருவர் கயிறைக் கட்டி உள்ளே இறங்க முயற்சி செய்தார்.இன்னும் சிலர் சட்டைகளைக் கழற்றி முடிச்சுப் போட்டு கிணற்றுக்குள் விட்டு ,''ஐயா,இதைப் பிடித்துக் கொள்ளுங்கள்''என்று கத்தினார்கள்.பெண்ஊழியர்கள் கிணற்றைச் சுற்றி நின்று அழ ஆரம்பித்து விட்டார்கள்.ஒவ்வொருவரும் தீவிரமாக அதிகாரியைக் காப்பாற்ற முயற்சி செய்தார்கள்.அந்த அலுவலரை பாதி அளவு மேலே தூக்கிக் கொண்டிருந்த சமயம் ,அந்தப் பக்கம் வந்த பியூன் ,''இந்த ஆபீசருக்கு வேலை மாறுதல் ஆகி விட்டது.புது ஆபீசர் வாசலுக்கு வந்து விட்டார்.''என்று தகவல் சொன்னார்.அவ்வளவுதான்.கிணற்றுக்குள் இருந்த ஆபிசரை அப்படியே போட்டு விட்டு புது ஆபிசரை வரவேற்க எல்லோரும் வாசலுக்கு ஓடி விட்டார்கள்.பதவிக்கு இருக்கும் மகிமை இது தான்!
ஒரு ஆபீசர் தன நாய்க்கு பிறந்த நாள் விழா ஒன்றிற்குத் தன வீட்டில் ஏற்பாடு செய்தார்.அலுவகத்தில் பணிபுரியும் அனைவரும் பரிசுகளுடன் வந்து விழாவை சிறப்பித்தார்கள்.ஒரே கோலாகலம்.கொண்டாட்டம்.
சில மாதங்களுக்குப் பின் அந்த ஆபீசர் பதவி ஒய்வு பெற்றார்.அதன் பின் ஒரு நாய் கூட அவர் வீட்டிற்கு வரவில்லை.
ஒருவரைப் பிடிக்காமல் போனால் ,அவர் கையில் வெறும் ஷ்பூனைப் பிடித்திருக்கும் விதம் கூட உங்களுக்கு எரிச்சலைத் தரும்.ஆனால் அதே நபர் உங்களுக்கு மிகவும் பிடித்தவராய் இருந்தால் ,அவர் முழுத் தட்டையும் ,சாப்பாட்டுடன் உங்கள் மடியில் கொட்டி விட்டால் கூட அதை பெரிதாக நினைக்க மாட்டீர்கள்.இந்த மனம் தான் எவ்வளவு விசித்திரமானது?
அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு:
நான்கு வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
எழு வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.
எட்டு வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க
அவசியமில்லை.
14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.
21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த
என்ன எதிர் பார்க்க முடியும்?
25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.
30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்
35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட
வேண்டும்.
50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயத்ல் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு
. யோசனை கேட்கலாம்.
ஒரு சமயம் ஸ்பெயினில் இருந்து இளைஞர் ஒருவர் தூதுவராக பக்கத்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.அவரைக் கண்ட அந்நாட்டு அரசர் ,''ஸ்பெயினில் பெரிய மனிதர்கள் இல்லை போலும்! அதனால் தான் தாடி கூட முளைக்காத ஒரு சிறுவனை அனுப்பியுள்ளார்கள்'' என்று சொன்னார் கிண்டலுடன்.
அதற்கு அந்த இளைஞர் ,''அரசே,அறிவு என்பது தாடியில் இருப்பது என்பது எங்கள் மன்னருக்குத் தெரியாது.தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பியிருப்பார்.''எம்று பதிலடி கொடுத்தார்.
நெவில் கர்டஸ்என்ற ஆங்கிலேயரின் கிரிக்கெட் வர்ணனைகள் சூடாய் இருக்கும்.அதனால் ஒரு நிரூபர் அவரிடம் கேட்டார்,''நீங்கள் டெஸ்ட் மேட்ச்சில் விளையாடியதில்லை.ஆனால் விளையாட்டு வீரர்களை இப்படி விபரீதமாக விவரிக்கிறீர்களே?''
அதற்கு அவர் ,''எனக்கு முட்டையிடத் தெரியாது.ஆனாலும் எது நல்ல முட்டை ,எது கெட்டமுட்டைஎன்று தேர்ந்தெடுக்க நான் கோழியாக இருக்க வேண்டுமா?''என்று கேட்டார்.
பிச்சைக்காரர்கள் கோடீஷ்வரர்களைக்கண்டு பெருமூச்சு விடுவதில்லை.தம்மைக் காட்டிலும் வளமாகஉள்ள பிச்சைக்காரர்களைக் கண்டு தான் பெருமூச்சு விடுகிறார்கள்.
தனக்குத் தெரியாதவைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்பவன் ,அந்த சில நிமிடங்களுக்கு முட்டாளாகத் தெரிவான்.கேள்விகள் கேட்கத் தயங்குபவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாக இருப்பான்.
_செ மோன் வெல்
நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்தால் அது சுலபமாக நடக்கக் கூடிய காரியமே.ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் அதிக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.இது தான் கஷ்டம்.ஏனெனில் மற்றவர்கள் உண்மையில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்களோ ,அதைக் காட்டிலும் அதிக சந்தோஷமாக அவர்கள் இருப்பதாக நாம் நினைக்கிறோம்.
மார்க்கஸ் அரேபியஸ் என்ற அரசன் பெரிய ஞானி.ரோமை ஆண்டவன்.எந்தப் பிரச்சினையைப் பற்றியும் யாருடைய நடத்தையைப் பற்றியும் எப்போதும் பதட்டம் அடைய மாட்டான்.அவன் தன நாட்குறிப்பில் எழுதியிருந்தது.:
''நான் இன்றைக்கு சுயநலம் படைத்தவர்களையும் ,வெட்டித்தனமாகப்பேசுபவர்களையும் ,தற்பெருமை பேசுபவர்களையும்,நம்பிக்கை மோசடி செய்பவர்களையும் ,நன்றியில்லாத மக்களையுமே பெருமளவில் சந்திக்கப் போகிறேன்.அவர்களைப் பார்த்து நான் ஆச்சரியமோ,கலவரமோ அடையப் போவதில்லை.இம்மாதிரியான மனிதர்கள் இல்லாத உலகை என்னால் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடிய வில்லை.''
இவ்வாறு, தான் எழுதி வைத்திருந்ததைத் தினமும் படித்து விட்டுத்தான் அரசவைக்குச் செல்வான்.எப்படிப்பட்ட மனிதனைச் சந்தித்தாலும் ,பொறுமையாக நிதானம் தவறாமல் இருந்து பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பான்.
சராசரியாக ,என்பது ஒரு பயங்கரமான சொல்.ஒரு மனிதன் தன ஒரு காலை எரியும் தீயிலும் ,இன்னொரு காலை பனிக்கட்டிகளிடையே வைத்திருந்தால்சராசரியாக அவன் சவ்கரியமாக இருக்கிறான் என்று புள்ளி விபரக் காரர்கள் சொல்வார்கள்.
அவன் பணத்தைத் தொலைத்து விட்டான்.
அடுத்த வீட்டுக் காரன் திருடியதாக அவன் நினைத்தான்.
அவனை கூர்ந்து கவனித்தான்.
அவனது தோற்றம் ,நடவடிக்கைகள் ,அசைவுகள் எல்லாமே
அவனைத் திருடனாகவே அவனுக்குக் காட்டின.
அதன் பின் .........
அந்தப் பணம் தன வீட்டில் ஒரு மூங்கில் குழாயில் இருப்பதைக் கண்டான்.
அப்போது..........
அடுத்த வீட்டிக் காரனைக்கூர்ந்து கவனித்தான்.
அவன் அப்படியே காணப்பட்டான்.
அவனது எந்த நடவடிக்கையும் அவனைத் திருடனாகக் காட்ட வில்லை.
_சீனக் குட்டிக் கதை.
ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?''
ஆந்தை: கீழ் திசை நோக்கி .
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய்.
_சீனக் குட்டிக் கதை
சாக்ரட்டீஸ் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தார்.நண்பர் கேட்டார்,''அய்யா,உங்களுக்கு இந்த சிறிய வீடு போதுமா?''அதற்கு சாக்ரட்டீஸ் சொன்னார்,;;இவ்வளவு சிறிய வீட்டை நிரப்புவதற்கே உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.''
கொடைவள்ளல் ஹாத்தீம் தாயிடம் கேட்கப்பட்டது,''தங்களைக் காட்டிலும் உயர்ந்த மனிதரைத் தாங்கள் பார்த்ததுண்டா?''
ஹாத்தீம் தாய் சொன்னார்,''உண்டு.ஒரு நாள் நாற்பது ஒட்டகங்களை அடித்து விருந்து வைத்தேன்.அன்று பாலை வனத்தில் ஒருவன் விற்குச் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவனிடம் விருந்துக்கு வராத காரணம் கேட்டேன்.அவன் சொன்னான்,'எவன் தன சொந்தக் கைகளினால் உழைத்து உண்கிறானோ ,அவன் பிறர் தரும் விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கமாட்டான்.,'அந்த ஏழை தான் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன்.''
_இஸ்லாமிய ஞானி ஷா அதி
திரைச் சீலையைப் பார்த்து கொடிகேட்டது,''நாம் இருவரும் அரசனுக்குத் தொண்டு செய்பவர்கள்.நான் மலை,காடு,பாலைவனம் என்று புழுதியிலும் ,காற்றிலும் துன்புற்று நீண்ட பயணங்கள் செய்தும் உனக்கிருக்கும் மதிப்பு எனக்கு இல்லையே!உன்னை அழகிகள் அலங்கரிக்கிறார்கள்.வாசனைத் திரவியங்களால் மனம் கமழவைக்கிறார்கள்.இதற்கு என்ன காரணம்?''
திரைச் சீலை அடக்கமாகச் சொன்னது,''என் தலை எப்போதும் தரையைத் தொட்டுக்கொண்டிருக்கிறது.உன் தலையோ அகந்தையுடன் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கிறது.காரணம் இது தான்.''
_ஷா அதி
இரவில் என் தந்தையுடன் உட்கார்ந்து புனித குர் ஆன் படித்துக் கொண்டிருந்தேன். சுற்றி இருந்த எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.ஏக்கத்துடன் நான் சொன்னேன்''ஒருவர் கூட தலையைத் தூக்கிப் பார்ப்பதாக இல்லையே ?பிணம் போலக் கிடக்கிறார்களே!''
''என் தந்தை சொன்னார்,''என் அன்பு மகனே,நீயும் உறங்கப்போ.மற்றவர்களைப் பழித்துப் பேசுவதிலும் அது சிறந்தது.''
_ஷா அதி
காயம் பட்டறியாதவனுக்குஅதன் வலி தெரியாது.அதன் வேதனையை அனுபவித்தவனிடம் தான் அதன் தன்மையைப் பற்றிச் சொல்லலாம்.உன் நிலை என் நிலையாக மாறும் வரை என் நிலைமை கட்டுக் கதையாகவே தோன்றும்.என் வேதனையை இன்னொருவனின் வேதனையோடு ஒப்பு நோக்க வேண்டாம்.ஏனெனில் அவன் உப்பைக் கையில் வைத்துள்ளான்.நானோ நெஞ்சிலிருக்கும் காயத்தில் வைத்துள்ளேன்.
_ஷா அதி
வேட்டையாடிய மிருகங்களை சமைக்க உப்பு தேவைப் பட்டது.அரசன் உப்பு வாங்க ஒருவனை அனுப்பும் போதுசொன்னான்,''உப்பிற்கான காசைக் கொடுத்து விடு.''கூட இருந்தவர்கள் கேட்டார்கள்,''இது அற்பமான விஷயம்.இதற்கு இவ்வளவு எச்சரிக்கை தேவையா?''அரசன் சொன்னான்,''உலகில் கொடுமைகள் துவக்கத்தில் சிறிய அளவில் தான் இருந்தன.பின்னால் வந்த ஒவ்வொருவரும் அவற்றைப் பெரிய அளவில் வளர்த்துவிட்டதற்குப் பொறுப்பாளிகள்.அரசன் இலவசமாக ஒரு ஆப்பிளை எடுத்தால் ,அவனது ஆட்கள் ஒரு மரத்தையே எடுத்துக் கொள்வார்கள்.''
_ஷா அதி
அரேபிய வர்த்தகன் ஒருவன் தன அனுபவத்தைச் சொன்னான்,''பாலை வனத்தில் ஒரு முறை வழிதவறி விட்டேன்.உணவு தீர்ந்து விட்டது.சாகும் நேரம் வந்தது என நினைக்கும் போதுஒரு மூட்டை கண்ணில் பட்டது.அதில் ஏதேனும் உணவு இருக்கும் என நினைத்த போது நெஞ்செல்லாம் மகிழ்ச்சியும் குதூகலமும் வழிந்தன.ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?அழகிய முத்துக்கள்.ஏமாற்றமும் கசப்புமே அப்போர்து தோன்றின.பசித்தவனுக்கு முத்தினால் என்ன பலன்?அவனுக்கு அப்போது விலை மதிக்க முடியாத பொருள் தண்ணீர் தான்.''
_ஷா அதி
கொடுங்கோல் அரசன் துறவியிடம் கேட்டான்,''பிரார்த்தனைகளில் மிகச் சிறந்தது எது?''
துறவி சொன்னார்,''உங்களைப் பொறுத்தவரை உறக்கம் தான் ,''
அரசன் விழித்தான்.துறவி சொன்னார்,''நீங்கள் உறங்கும் போதாவது ஜனங்கள் துன்புறுத்தப் படாமல் இருக்கிறார்கள் அல்லவா,அதனால் தான்.''
_ஷா அதி
நஷ்டமடைந்த வியாபாரி ஒருவர் ,தன மகனை அழைத்து அது பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்ல ,மகன் காரணம் கேட்டான்.வியாபாரி சொன்னார்,''இரு துன்பங்களை ஒரே நேரத்தில் அனுபவிக்க நான் விரும்பவில்லை.பொருள் நஷ்டம் ஒன்று;இரண்டாவது ,நமது நஷ்டத்தைக் கேட்டு உறவினர் அடையும் மகிழ்ச்சி.''
---ஷா அதி
பெல்ஜியம் நாட்டு ஆசிரியர் மேட்டர்லிக் என்பவர் தான் எழுதிக் கொண்டிருக்கும் போதுயாராவது குறுக்கே பேசினால் கோபம் வரும்.
ஒரு முறை அவர் எழுதிக் கொண்டு இருக்கும் போது அவர் மனைவி சந்தடி செய்யாது தன அறைக்குச் சென்றவள் அதிர்ச்சி அடைந்து ,கணவரிடம் ஓடி வந்து ;;நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது ஓசைப் படாமல் யாரோ என் நகைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்களே !''என்று அலறினாள்.
''ஒரு திருடன் என் வேலைக்குக் காட்டும் மரியாதையைக் கூட உனக்குக் காட்டத் தெரியவில்லையே''என்று பதிலுக்குக் கத்தினார்,மேட்டர்லிக்.
மனிதர்களுடைய நாவுக்குக் கடவுள் கொடுத்த சுவை ஆறுதான்.உப்பு ,புளிப்பு போன்ற அறுசுவைகளைவிடத்தனக்கு அதிக விருப்பமான ஏழாவதுசுவையை மனிதனாகவே கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறான்.அதுதான் பிறர் பற்றி நாவு கொழுக்க வம்பு பேசுகிற சுவை.
--குறிஞ்சி மலர் நாவலில் நா.பார்த்த சாரதி.
ஒரு தகப்பனும் மகனும் குற்றவாளியாக மன்னன் முன் நிறுத்தப்பட்டனர்.இருவருக்கும் நூறு கசை அடி கொடுக்க மன்னன் உத்தரவிட்டான்.முதலில் தகப்பனுக்கு நூறு கசை அடி கொடுக்கப் பட்டது.அவனோ நூறு கசை அடி வாங்கியும் சிறிது கூட கலங்கவில்லை.அடுத்தது மகன் முறை.முதல் அடி மகனுக்கு விழுந்ததுமே தகப்பன் அழத் துவங்கி விட்டார்.ஆச்சரியத்துடன்காரணத்தை மன்னன் வினவியபோது தகப்பன் சொன்னான்,''மன்னா,என் உடம்பில் அடி விழுந்த போதுஎன்னால் அதைத் தாங்க முடிந்தது.ஆனால் இப்போது அடி விழுவது என் நெஞ்சில்.''
ஒரு நாள் ஒரு தாத்தா பேரக்குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேரன் ஏதோபேச வாயெடுத்தான்.தாத்தா சொன்னார்''சாப்பிடும் பொது பேசுவது நல்ல பழக்கமல்ல சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே.''பின் எல்லோரும் சாப்பிட்டு முடிந்தவுடன் தாத்தா பேரனிடம் விஷயம் என்னவென்று கேட்டார்.
பேரன் முகத்தை மிக சோகமாக வைத்துக் கொண்டு ''இப்போது அதற்கு அவசியம் இல்லை,''என்றான்.ஏனெனக் கேட்க அவன் சொன்னான்''நீங்கள் சாப்பிடும் போதுஉங்கள் சாப்பாட்டில் ஒரு பூச்சி இருந்தது.அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.''
ராஜாஜியிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்''நீங்கள் குத்தலான கேள்விகள் கேட்டால் கூட கோபிப்பது இல்லையே.அது எப்படி?''
ராஜாஜி சொன்னார்,''நான் தவறு செய்தால் எனக்கு கோபப்பட உரிமையில்லை.நான் சரியானபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன் என்றால் கோபப்படக் காரணம் இல்லை.தவறு செய்து விட்டு அதை நியாயப் படுத்த முயன்று தர்கத்தில் தோற்கும் பொது தான் கோபம் வரும்.''
அரசாங்க செலவைக் குறைக்க எண்ணிய அரசர் அரண்மனையில் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கப் போகும் செய்தி கேள்விப்பட்ட அறிஞர் ஒருவர் சொன்னார்''அரண்மனை லாயத்தில் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பதுக்குப் பதிலாக அரசரையே சுற்றிக் கொண்டிருக்கும் கழுதைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து விடலாம்.''
ஒரு சர்வாதிகார நாட்டில் ஒரு கோழிப் பண்ணைக்கு அரசாங்க அதிகாரி வந்தார்.அவர் கோழிகளுக்குப் போடும் தீவனம் பற்றி அங்கிருந்த மேலாளரிடம் கேட்டார். ''நான் எதுவும் போடுவதில்லை.அதுகளே சாக்கடையில்,தெருவில் கிடைப்பதை த்தின்னும்.''என்று மேலாளர் சொன்னார்.அதிகாரி கோபத்துடன் ''நீங்கள் செய்வது சுகாதாரக் கேடானது.எல்லாக் கோழிகளுக்கும் நோய்பரவலாம்.உங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.''
அதிகாரி மூன்று மாதம் கழித்து அங்கு வந்து அதே கேள்வி கேட்டார். ''நான் பால் ,நெய்,தேன்எல்லாம் கொடுக்கிறேன் ,சார்''என்றார் மேலாளர்.''நாட்டிலே உணவுப் பஞ்சம்.மக்களுக்கு இல்லாத உணவுப் பொருட்களை கோழிக்குப் போட்டு வீணடிக்கிறீர்கள்.எனவே ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.''என்றார் அதிகாரி.
அடுத்து மூன்று மாதம் கழித்து அதிகாரி வந்து அதே கேள்வி கேட்டார். ''சார்,நான் தினமும் என் கோழிகளுக்குஇரண்டு ரூபாய் கொடுத்து எது பிடிக்குமோ அதை வாங்கி சாப்பிடுங்கள்,''என்று சொல்லி விட்டேன் ''என்றார் மேலாளர் கடுப்புடன்.
ஏழை ஒருவன் தெய்வ வரம் பெற்ற தன நண்பன் ஒருவனைச் சந்தித்தான்.வரம் பெற்ற நண்பன் எழைக்குஉதவும் பொருட்டு ,ஒரு செங்கல்லை எடுத்து தன சுட்டு விரலால் தொட்டான்.அது தங்கமாக மாறியது.அதை ஏழைக்குக் கொடுத்தான்.ஏழைக்கோதிருப்தி ஏற்படவில்லை.இன்னொரு கல்லை எடுத்து த்தன்சுட்டு விரலால் தொட்டு தங்கமாக்கி அவனிடம் கொடுத்தான்.அப்போதும் எழைக்கு திருப்தி ஏற்படவில்லை.''உனக்கு என்ன தான் வேண்டும்?''என்று நண்பன் கேட்டான்.''உன் சுட்டு விரல்''என்று பதில் வந்தது.
துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கையில் ஒரு தேள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.துறவி அதைக் காப்பாற்ற எண்ணிக் கையில் பிடித்துதூக்கினார்.தேள் அவரைக் கடித்த உடன் மீண்டும் தண்ணீரில் விழுந்தது.அவர் மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சிக்க அது மீண்டும் மீண்டும் அவரைக் கொட்டி விட்டு நீரில் விழுந்தது.ஒருவர் துறவியைக் கேட்டார் .''தேள் கடிக்கும் என்று தெரிந்தும் அதை ஏன்காக்க முயல்கிறீர்கள்?''துறவி சொன்னார்''கடிப்பது அதன் சுபாவம்.காப்பது என்சுபாவம்.''
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு அரசன் புகழ் வாய்ந்த ஒரு ஜோதிடரை வரவழைத்து ஜோதிடமே ஏமாற்று வேலை என்று நிரூபிக்க நினைத்தான்.ஜோதிடரிடம் அவருடைய ஜாதகப்படி அவருடைய ஆயுள் காலம் என்ன என்று கேட்டால் அவர் ஆண்டு ஒன்றைக் குறிப்பிட்டு சொல்வார்,உடனே அவரைக் கொலை செய்து விட்டால் அவர் ஜோதிடம்பொயஎன்றாகிவிடும்எனக் கருதினான்.
ஜோதிடர் வந்தார்.அரசன் அவருடைய ஆயுள் விபரம் கேட்டான்.ஜோதிடர் சொன்னார்''ஆத்திரப்படாமல் கேளுங்கள் ,மன்னா,நீங்கள் பிறந்த நாள் நட்சத்திரப்படி நான் இறந்த மூன்றாவது நாள் நீங்கள் இறப்பீர்கள்.''இப்போது ஜோதிடரைக் கொள்ள அரசனுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?
ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய்வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.முனிவர் கூறிய சமாதானங்களால்நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.
மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள்.புலியைக் கண்டாள்.அது உறுமியது.பயந்து வந்து விட்டாள்.மறுநாள் சென்றாள்புலியைக் கண்டாள்.அது உறுமியது.ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது.அனாலும் திரும்பி விட்டாள்.
அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது.சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது.ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.
புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள்.முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார்.அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.
முனிவர் கூறினார்''இனி உனக்கு மூலிகை தேவையில்லை.நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்?ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா,என்ன?''
முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.மற்றொன்று உதைக்கப் படுகின்றது.தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப்படுவான்பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.
போரில் சிறப்பான வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வீட்டுக்கு மகிழ்வுடன் வந்தான் சாமுராய்ஒருவன்.மனைவி குழந்தையுடன் மகிழ்ச்சியாகப் பேசி விட்டு படுக்கச் சென்றான்.அப்போது படுக்கையில் ஒரு எலி விளையாடிக் கொண்டிருந்தது.அதை விரட்டியும் அவனுக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.எரிச்சலுற்ற சாமுராய் தன வாளை எடுத்து அதைஇரண்டு துண்டாக்க விரட்டினான்.ஆனால் எலி மாட்டிக் கொள்ளாமல் இங்கும் அங்கும் ஓடியது.ஒரு மணி நேரம் ஆகியும் அதைக் கொல்லமுடியாத சாமுராய் அடுத்து என்ன செய்வது என யோசித்தான்.பூனையை விட்டால் எலியைப் பிடித்து விடும் என்று யோசனை தோன்றியது.அரண்மனைக்கு ஆள் அனுப்பி ஒரு கொழுத்த பூனை கொண்டு வந்து விடப்பட்டது.அந்தப் பூனை ஒரு மணி நேரம் விரட்டியும் எலி பிடிபடவில்லை.சாமுராய் க்குக் எரிச்சல்.கடுங்கோபம்.ஆனால்ஒன்றும் செய்ய இயலாத நிலை.
அப்போது அவன் வீடு வழியே ஞானி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.அவரை அணுகி விபரம் சொல்லி எலியை விரட்ட வழிகேட்டான்.அப்போது வேறு ஒரு பூனை சாலையில் சென்று கொண்டிருந்தது.அந்தப் பூனையை உபயோகிக்குமாறு ஞானி சொன்னார்.அந்தப் பூனை மெலிந்து எலும்பும்தோலுமாக இருந்தது.சாமுராய் க்கு சந்தேகம்.கொழுத்த அரண்மனைப் பூனையாலேயே பிடிக்க முடிய வில்லை.இந்த நோஞ்சான் பூனை எவ்வாறு எலியைப் பிடிக்கும்?இருந்தாலும் ஞானி சொன்னதால் அந்த நோஞ்சான் பூனையை பிடித்து தன படுக்கையில் விட்டான்.ஒரே நிமிடத்தில் அப்பூனை எலியைக் கவ்விக் கொண்டு வெளியே சென்றது.
சாமுராய்க்கு ஆச்சரியம்.இது ஞானியின் சக்தியால் தான்நடந்திருக்க வேண்டும் என்று எண்ணி ஞானியிடம் விளக்கம் கேட்டான்.ஞானி சொன்னார்''நான் மந்திரம் மாயம் எதுவும் செய்ய வில்லை.இந்த நோஞ்சான் பூனை இன்னும் பூனையாகவே இருக்கிறது.அதனால் எலியை உடனே பிடித்து விட்டது.அரண்மனைப் பூனைக்கு எல்லா வசதிகளும் அது இருக்கும் இடத்திலேயே கிடைப்பதால் அது ஓடிச் சென்று இரை தேட வேண்டிய அவசியமில்லை.எனவே அது தன் சொந்த இயல்பை மறந்து விட்டது.அது ஒரு பூனையாக இல்லை.எனவே அதனால் எலியைப் பிடிக்க முடியவில்லை.''
ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு
சிதற விட்ட நமக்குத் தெரியாது.
அதை எடுத்துச் செல்லும்
எறும்புக்குத் தான் தெரியும்.
ஒரு குழந்தையை நடை வண்டியில் வைத்துத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்தான் ஒருவன்.குழந்தை பயங்கரமாக வீரிட்டு அழுதது.நடை வண்டியைத் தள்ளி வந்தவன் ''டேய்ஜான்,கோபப்படாதே,செல்லம் ....என் கண்ணல்ல,அமைதியாய் இருடா''என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்த ஒரு பெண் அவனுடைய பொறுமையையும் அன்பையும் பாராட்டினார்.அப்புறம் குழந்தையிடம் திரும்பி ''ஜான்,ஏண்டாஅழுகிறாய்?''என்று கொஞ்சினாள்.அப்போது அவன் சொன்னான்,''அட!குழந்தையின் பெயர் ஜான் இல்லை.என்னுடைய பெயர் தான் ஜான்.நான் பொறுமையாய் இருக்க என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.''
மாபெரும் இசைமேதை தன குழுவினருடன் இசை வெள்ளம் உருவாக்கிக்கொண்டிருந்தார்.அப்போது தட்,தட் என்று சப்தம்.திரும்பிப் பார்த்தால் அந்த அரங்கின் ஒரு பகுதியில் தச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.இசைக் குழுவில் இருந்தவர்கள் பொறுமை இழந்தார்கள் .''இப்படி இடையூறு செய்தால்ஒத்திகை பார்ப்பது எப்படி?''என்று கோபப்பட்டார்கள்.அவர்களின் தடுமாற்றத்தைக் கண்ட இசை மேதை ஒத்திகையை நிறுத்தினார்.தச்சு வேலை செய்பவர்கள் பக்கம் திரும்பிக் கேட்டார்,''ஐயா,எங்களின்இசை உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா?''
ஆனியை அடிக்கக் கையை ஓங்கியவர்கள்அப்படியே நிறுத்திக் கொண்டார்கள்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை; நமக்குத் தொந்தரவாகத் தெரிபவர்களுக்கு நாம் தொந்தரவாகத் தெரிகிறோம்.
'' சிவப்பிந்தியர்கள் சங்கத்திற்கு நீதி,நேர்மை,கட்டுப்பாடு ,உண்மை,சத்தியம் இவற்றை உணர்ந்த ஒரு தலைவர் வேண்டும்''என்று ஆபிரகாம் லிங்கன் ஒரு நண்பரிடம் கூறினார்.
நண்பர் சொன்னார்''இப்போது யாரும் அது மாதிரி இருக்க மாட்டார்கள்.பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட ஒருவர் இருந்தார்.ஆனால் அவரைச்சிலுவையில்அறைந்து விட்டார்கள்.''
''நாம் இருவரும் உரசிக் கொண்டாலும் தீக்குளிப்பது என்னவோ நான் தான்''என்று தீப்பெட்டியிடம் வருத்தப்பட்டது தீக்குச்சி.
''உன் தலை கனமாய் இருப்பதுதான் அதற்குக்காரணம்''என்றது தீப்பெட்டி.
துறவி ஒருவர் தன சீடர்களுடன் ஒரு காட்டைக்கடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது புலி ஒன்று வந்தது.புலியைக்கண்டு சீடர்கள் பயந்தனர்.அப்போது துறவி பயப்படாது அங்கேயே மண்டியிட்டு இறைவனை வேண்டினார்.,''கடவுளே,இந்தப் புலியை சாந்தப் படுத்தி அனுப்பி விடு.''என்ன ஆச்சரியம்!புலியும் அவரைப் போல மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தது.சீடர்களுக்கு மிகுந்த வியப்பு.துறவி சொன்னார்,''என் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான்.''அப்போது புலி சொன்னது,''எனது பிரார்த்தனைக்கும் இறைவன் செவி சாய்த்து விட்டான்.நான் எதையும் அடித்து ச சாப்பிடுமுன் பிரார்த்தனை செய்து இறைவன் அனுமதி பெறுவது வழக்கம்.''
எந்த விஷயத்தையும் ஒரு முறை சிந்திக்கிறவன் அதில் உள்ள நன்மைகளை மட்டுமோ,தீமைகளை மட்டுமோதான்சிந்திக்கிறான்.அவன் எடுக்கும் முடிவு அறிவு பூர்வமாய் இருக்காது.
எந்த விஷயத்தையும் இரு முறை சிந்திக்கிறவன் அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவுக்கு வருகிறான்.அவன் எடுக்கும் முடிவு அறிவு பூர்வமாய் இருக்கும்.
எந்த விஷயத்தையும் மூன்று முறை சிந்திக்கிறவன் குழப்பவாதி.அவன் ஒரு முடிவுக்கும் எளிதில் வர மாட்டான்.அவன் எடுக்கும் முடிவும் அறிவு பூர்வமாக இருக்காது.
இராமானுஜ மாமுனிவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி .அவர் ஒரு முறை திருப்பதிக்குச் சென்ற போது,அவரது தாய் மாமா பெரிய திருமலைநம்பி என்பவர் திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இராமானுஜரை ,வைணவத்தலைவர்என்ற முறையில் வரவேற்க திருமலை நம்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். வயதில் பெரியவரும் ,தாய் மாமனுமான அவர் தன்னை வரவேற்க இறங்கி வந்ததைப் பார்த்து வருந்தி இராமானுஜர்,''இந்தச் சின்னவனை வரவேற்க இவ்வளவு பெரியவர் வரவேண்டுமா?யாரேனும் சிறு பையனை அனுப்பி இருந்தால் போதுமே?''என்றார்.திருமலைநம்பி சொன்னார் ''நானும் அப்படித்தான் நினைத்தேன்.மடத்தை விட்டு வெளியே வந்து நாலாபக்கமும் பார்த்தேன்.என்னை விட ச்சின்னப்பையன் யாரும் தென்படாததால் நானே வர வேண்டியதாயிற்று.''இது எல்லோரையும் தன்னை விடப் பெரியவராகக் கருதும் உயர் பண்பு அல்லவா?
ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தார்.கனமான இரும்புக்குண்டுகளை அனாயாசமாக த்தூக்குவார .தாங்குவார் .அவர் யாரிடமும் தோற்றது கிடையாது.
ஒரு நாள் பாரசீகக் கவிஞர் ஷா அதி அந்த பயில்வானை பார்க்க வந்தார்.அந்த சமயம் பயில்வான் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார்.கவிஞர் அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் சொன்னார்கள்''பயில்வானை யாரோ ஏளனமாகப் பேசி விட்டார்களாம்.அதனால் தான்கோபமாக இருக்கிறார்.''
இதைக் கேட்ட கவிஞர் ஷா அதி சொன்னார்''எத்தனையோ கடுமையான எடைகளைத் தாங்கும் இந்த பயில்வான் ,யாரோ கூறிய ஓரிரெண்டு வார்த்தைகளை த்தாங்க முடியாதவராய் இருக்கிறாரே?ஐயோ பாவம்!''
நேர்மையாக நடந்து பொய் பேசாது வாழ்பவரை பிழைக்கத்தெரியாதவன் என்று இகழ்வர்.பிழைப்பது வாழ்வது என்ற இரு வார்த்தைகளுக்கும் வேறுபாடு உண்டு.பிழைப்பது என்பது பிழை செய்தாவது உயிர் தரிப்பதாகும்.அப்படி நடக்காதவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொன்னால் அது பெருமைக்குரிய விஷயம் தான்.
வியாச முனிவர் காட்டுச்சாலை ஒன்றில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு புழு சாலையை விரைந்து கடப்பதை பார்த்து காரணம் கேட்டார் .''தூரத்தில் ரதங்கள் வருவது நில அதிர்வின் மூலம் தெரிந்து கொண்டேன். அதில் சிக்கி இறந்து விடாதிருக்க விரைகிறேன்.''என்றது அப்புழு.''நீ ஒரு சாதரண புழு. நீ ஏன்இவ்வளவு பயப்படுகிறாய்? நீ வாழ்வதால் யாருக்கு என்ன பயன்?இறந்தால் தான் என்ன நஷ்டம்? ''என்று கேட்டார் வியாசர்.
அப்புழு சொன்னது ''அய்யா,உலக பிறப்புகளில் எதுவும் அற்பம் கிடையாது.ஏதோஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டுள்ளேன். நீங்களும் படைக்கப்பட்டுள்ளீர்கள். படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்குமே அதன் உயிர் மேல் ஆசை இருக்கும். ''
'' என்னையும் உன்னையும் இணைத்துப்பேசாதே.நீ ஒரு அற்பப்பிறவி.''என்றார் வியாசர்.
'' மனிதப்பிறவி எடுத்த உமக்குநான்அற்ப பிறவியாக தெரிவேன்.தேவர்கள் கந்தர்வர்களுக்கு நீர் அற்பமாகத்தெரிவீர்.சிறிய பூச்சிகள் எனக்கு அற்பமாகத் தெரியும்.''என்று புழு கூற அசந்து விட்டார் வியாசர்.
புழு மேலும் கூறியது,''புழுவாகிய எனக்கு உள்ள சுக துக்கங்கள் சந்தோஷங்கள் மனித பிறவி எடுத்த உமக்கு ப்புரியாது.பன்றிகளுக்கு சேற்றில் புரள்வது சுகம்.எருமைக்கு நீரில் இருப்பது சுகம்.இந்த புழு பிறவிக்கென்று இறைவன் படைத்த சந்தோஷங்களைஎல்லாம்அடைந்த பிறகே இறக்க விரும்புகிறேன்.இதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை.''
வியாசர் மெளனமாக அந்த புழுவின் வார்த்தைகளை ஆமோதித்தார்.புழு விரைவாக சாலையைக் கடந்து மறுபுறம் சென்றது.
யாரையும் அற்பமாக நினைக்கக்கூடாது.
எல்லோரும் நமது கடந்த காலத்தின் ஏதோஒரு பகுதியைக் குறித்து ''அதெல்லாம் ஒரு பொற்காலம். அது போல் இனி வருமா?''என சொல்வதுண்டு. ஆனால்எதையெல்லாம் பொற்காலங்கள் என்று சொல்கின்றோமோ அந்தக் காலங்களில் வாழும் போதுநாம் அதை பொற்காலம் என்று உணரவில்லை. என்றோ நல்லது பிறக்கும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறோம் இப்போது நிகழ்வது எல்லாம் நல்ல விஷயங்கள்தான். இது ஒரு பொற்காலம் தான் என்று நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு நிமிடமும் புது வாழ்வு ,நல்வாழ்வு என்ற வகையில் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒருவன் ஒரு ஹோட்டல் நிர்வாகிக்கு ,தன்னுடன் தன நாயையும் தங்க அனுமதிப்பார்களா என்று விபரம் கேட்டு ஒரு கடிதம் எழுதினான். அவனுக்கு கீழ்க்கண்ட பதில் வந்தது.
''ஐயா,நான் இந்த ஹோட்டல் தொழிலில் முப்பது வருடங்களாக இருந்து வருகிறேன். ஆனால் விடிகாலையில் எந்த நாயும் ஒழுங்கற்ற முறையில் நடந்ததாக நான் இதுவரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததில்லை. எந்த நாயும் பொய்செக் கொடுக்க முயன்றதுமில்லை. எந்த நாயும் சிகரெட் பிடித்து படுக்கை விரிப்பை எரித்தது இல்லை. எந்த நாயும் பையில் ஹோட்டல் துண்டை மறைத்து வைத்துப் பார்க்கவில்லை.அகவே ,உங்கள் நாயை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்.அந்த நாய் உங்களுடைய நேர்மைக்கு உத்தரவாதம் கொடுத்தால்நீங்கள் கூட வரலாம்.''
திருமணம் என்பது வார்த்தையா,வாக்கியமா? (word or sentence?)
அது அர்த்தமுள்ள வார்த்தையாக (word)ஆகஇருக்கலாம். அல்லது வாழ்வில் உங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகவும(sentence)இருக்கலாம். உங்கள் திருமண வாழ்வை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள்என்பதைப்பொறுத்தது.
''இன்று மதியம் என்ன சாப்பிடலாம் ''என்பதை நான்கு குள்ளநரிகளும் ஒரு வெள்ளாடும் ஒட்டு போட்டு மெஜாரிட்டிப்படிமுடிவெடுக்கும் முறைக்குப்பெயர் தான் ஜனநாயகம்.
பொது ஒழுக்கம் இல்லாதவர்கள் சமய சொற்பொழிவு செய்யலாமா என்ற கேள்வியை ஒருவர் பரமஹம்ஸரிடம்கேட்டார். அழுக்காக இருக்கும் விளக்குமாறு தானே வீட்டைக் கூட்டி சுத்தமாக்குகிறது ,என்று பதல் அளித்தார் பரமஹம்ஸர்.
மந்திரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். மூன்று மதத்தலைவர்கள் வந்திருந்தார்கள். ஒருவர் பெருமாள் கோவில் பூசாரி. ஒருவர் கிருஸ்தவ பாதிரியார். இன்னொருவர் பள்ளிவாசல் இமாம். மூவரும் அவரவர் கோவிலுக்கு வரச்சொல்லி மந்திரியை இழுத்தார்கள் .மந்திரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யாருடன் சென்றாலும் அடுத்த இருவரின் பொல்லாப்பு வரும். அப்போது திடீரென அங்கு ஒரு புலி வந்து விட்டது. புலி வந்ததும் கூப்பிட வந்தவர்கள் ஓடி விட்டார்கள். கூட்டம் கலைந்துவிட்டது. மந்திரியும் அவர் கார் டிரைவரும் அவசரமாய் காரில் ஏறும்போது டிரைவரின் கை ஹாரனில் பட்டு ஹரன் சப்தத்தில் புலி பயந்து ஓடி விட்டது. மந்திரி மறுபடியும் இறங்கி வந்து எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட யாரும் வரவில்லை. எல்லோரும் ஓடி ஒளிந்திருந்தார்கள். சரி,நாமாவது போய்ப் பார்ப்போம் என்று நினைத்து முதலில் சர்ச் கதவைத் திறந்தார். மெதுவாக பெருமாள் கோவில் பூசாரி உள்ளிருந்து வந்தார். பெருமாள் கோவிலைத்திரந்தால்பயந்து கொண்டே இமாம் வெளியே வந்தார்.
பள்ளிவாசலில் இருந்து பாதிரியார் வந்து கொண்டிருந்தார்.உயிர் பற்றிய
அச்சம் வந்தவுடன் எங்கே போய்விட்டது அந்த மத வுணர்வு?
நீங்கள் என்ன போதனை செய்தாலும் ,அதைத் தனக்கு வேண்டியபடி திருத்தி ,தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் மனிதனுக்கு உள்ளது. விதி முறைகள் சமூகத்திற்காக த்தான் இயற்றப்பட்டவை,தனக்கில்லை என்று தன்னை விலக்கிவைத்துப் பார்க்கும் மனம் தான் பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. உலகில் ஏற்கனவே ஒழுக்கம் பற்றிய போதனைகளும் சட்டங்களும் போதும் போதும் என்ற அளவிற்குப் பொங்கி வழிகின்றன.அந்த போதனைகளாலும் சட்டங்களாலும் உலகை மாற்ற முடிந்து உள்ளதா?
பசியோடு இருப்பவனைப் பார்க்க வைத்துக் கொண்டு பிரியாணி சாப்பிடுவது வெற்றி அல்ல.வன்முறை.
வெற்றியைக் கொண்டாடும் போது,தோற்றவர்களைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை .அங்கே நாம் வெற்றி மூலம் அசிங்கமாகிறோம்
ஒரு முறை கடலில் மூழ்கி நாம் முத்தெடுக்காமல் திரும்பினால் கடலில் முத்துக்கள் இல்லை என்று பொருள் அல்ல.நம்முடைய முயற்சி போதவில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.
மரங்கள் மனிதனைப் பார்த்துக்கேட்டன "நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் எத்தனை லட்சம் சிலுவைகள் தந்துள்ளோம்? ஆனால்மனிதர்களே உங்களாலே ஏன் ஒரு இயேசு கிருச்துவைத் தர முடியவில்லை? ''
ஒரு தவளையிடம் ஒரு ரூபாய் நாணயம் இருந்தது. அதை பூமிக்கு அடியில் ஒரு பள்ளத்தில் போட்டு வைத்தது. ஒரு நாள் ஒரு யானை அந்தப் பள்ளத்தின் மேலே நடந்து சென்றது. வந்ததே கோபம் தவளைக்கு. பள்ளத்தை விட்டு வெளியே வந்து யானையை உதைக்கக் காலைத்தூக்கியது.'என்ன தைரியம் இருந்தால் என் தலை மேலே நடந்து போவாய்?'என்று மிரட்டியது. பணத்தாலே வரும் கர்வம் இப்படிப்பட்டதுதான் என்று ராம கிருஷ்ண பரம ஹம்சர் சொல்கிறார்.
காந்தமும் கர்வமும் ஒன்று. காந்தம்எப்போதும் ஒரே திசையை சுட்டிக் காட்டும். கர்வம் பிடித்தவர்கள் மனது தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும். ஆனால்காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுக்கும். கர்வம் இருக்கும் மனதோ எதையும் யாரையும் எப்போதும் கவர்ந்து இழுக்க முடியாது
எப்போதும் நம் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள். உங்களையும் இதே காரணத்திற்காக முட்டாளாகப் பார்ப்பதற்கு நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
யாரையாவது எதிரியாக பார்க்கத் துவங்கிவிட்டால் அவருடன் முழு ஈடுபாட்டுடன் செயல் பட முடியாது. ஒருவரை பிடிக்கவில்லை என்று யாரும் விட்டுவிடுவதில்லை. ஏனெனில் அவரிடம் நமக்கு லாபம் இருக்கிறது. அதனால் அவரைக்குறை சொல்லிக்கொண்டாவது அங்கே ஓட்டிக்கொண்டிருக்கிறோம் . அவரிடம் பிடிக்காத குறையைக் கவனிப்பதை விடுத்து அவரிடம் உள்ள திறமையைக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா?
ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு குறை .சொத்தை ,சொள்ளை என்று சொல்லி சமையலுக்கு வாங்கி வந்த கத்தரிக்கயைத் தூக்கியா எறிகிறோம் ?தேவையில்லாத பகுதியை கழித்து விட்டு தேவையானதை சமையலுக்கு உபயோகப்படுத்துவதில்லையா ?ஆனால்மனிதர்களிடம் மட்டும் ஒரு சின்ன குறை கண்டால் கூட மொத்த மனிதரையுமேதுண்டடுகிறோமே,அது ஏன்? ஒரு காய்க்குக் கொடுக்கிற மதிப்பைக்கூட நாம் மனிதனுக்கு கொடுப்பதில்லையே?
நீங்கள் யாரை மோசமனவராகப்பர்க்கின்றீர்களோ ,அவரை மிக இனிமையானவரென நினைப்பவர்களும் இருக்கிறார்கள் அல்லவா?அப்படியானால் மோசமானவராக இருப்பது அவருடைய தன்மை இல்லை .அவருடைய தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே ,உங்கள் பார்வையில் அவர் மோசமாகத் தெரிகின்றார். எனில் தப்பு அவர் பெயரிலா இருக்கின்றது?
0