முல்லா நசிருதீன் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் கூட காலையில் விரைவில் எழுந்தது இல்லை.அவனது தந்தை எவ்வளவோ முயற்சி செய்தும் அவனை விரைவில் படுக்கையிலிருந்து எழ வைக்க முடியவில்லை.ஒருநாள் வழக்கம்போல அவர் அதிகாலை எழுந்து வெளியே சென்றார்.அப்போது ஒரு பறவை தரையில் கிடந்த புழுவைத் தூக்கி சென்றது.பறவை அதிகாலையில் எழுந்ததால்தானே காலை இளம் குளிரில் வெளி வந்த புழுவைப் பிடிக்க முடிந்தது என்று எண்ணினார்.பின்னர் அவர் சாலையில் ஒரு துணிப்பை கிடப்பதைப் பார்த்து அதை எடுத்து அதில் பொற்காசுகள் இருப்பதைக் கண்டார்.சிறிது நேரம் காத்திருந்தும் ஒருவரும் தேடி வராததால் அதிகாலையில் எழுந்ததற்குக் கிடைத்த பரிசு என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் நசிருதீனிடம் சொல்லி விரைந்து எழ வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்தலாம் என்று எண்ணி வீட்டிற்கு வந்தார்.தந்தை எழுப்பியும் நசிருதீன் எழவில்லை.அவன் முகத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து ஊற்றினார்.அப்போதும் அவன் அரைத் தூக்கத்தில் எழுந்து உட்கார்ந்தான்.தந்தை தான் கண்ட இரு நிகழ்வுகளையும் சொல்லி மகனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்தார்.நசிருதீன் சொன்னான்,''என்ன அப்பா,உங்களுக்கு விபரமே தெரியவில்லை.அந்தப்புழு அப்பறவை எழுமுன் எழுந்ததால்தானே அது பறவைக்கு இரையாக நேர்ந்தது. அதேபோல் எவனோ ஒருவன் உங்களுக்குமுன் எழுந்து சென்றதால்தானே தன பொற்காசுகளைத் தொலைத்துவிட்டு இப்போது கவலைப் பட்டுக் கொண்டிருப்பான்?எனவே சீக்கிரம் எழுவது ஆபத்துதான்,''என்று சொல்லிக் கொண்டே மீண்டும் படுக்கையில் படுத்துக் கொண்டான்.தந்தை அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.
|
|
Post a Comment