நாரதருக்கு தான்தான் பகவானின் சிறந்த பக்திமான் என்ற கர்வம் ஏற்பட்டது.பகவானிடம் பேச்சுவாக்கில் இதை சொன்னபோது அவர் சொன்னார் ,''நாரதா ,பூலோகத்தில் இருக்கும் ஒரு குடியானவன் தான் என் பக்தர்களிலே சிறந்தவன்,''நாரதருக்கு வருத்தம் ஏற்பட்டது தன்னைக் காட்டிலும் எந்த விதத்தில் சிறந்த பக்திமானாக அவன் இருக்கக்கூடும் என்பதை அறிய ஆவல் கொண்டு அந்தக் குடியானவன் இருக்கும் இடம் சென்று அவன் அறியாமல் அவனுடைய நடவடிக்கைகளைக் கவனித்தார்.அவன் காலையில் எழுந்ததும்,'கிருஷ்ணா,'என்று பகவானை ஒரு நிமிடம் நினைத்துக் கொண்டு,பின் தன் ஏரை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்று அந்தி சாயும் வரை கடுமையாக உழைத்தான்.பின் வீடு திரும்பி,குளித்துவிட்டு,வீட்டு வேலைகளைச் செய்து,சாப்பிட்டுவிட்டு படுக்கும் முன் ஒரு முறை,'கிருஷ்ணா,'என்று ஒரு நிமிடம் நினைத்துவிட்டு படுத்து உறங்கிவிட்டான்.நாரதர்,கிருஷ்ணரிடம் சென்று ,'ஒரு நாளில் இரண்டு தடவை மட்டும் உங்களை நினைக்கும் குடியானவன்,சதாசர்வகாலமும் உங்களையே துதித்துக் கொண்டிருக்கும் என்னைவிட எப்படி சிறந்த பக்தன் ஆவான்?'எனக் கேட்டார்.கிருஷ்ணர் சொன்னார்,''அது இருக்கட்டும்,முதலில் இதோ , இந்த எண்ணெய் நிரம்பிய கிண்ணத்தை எடுத்துக் கொண்டு இந்த நகரை ஒரு முறை சுற்றி வா.ஒரே ஒரு நிபந்தனை;எண்ணெய் ஒரு சொட்டுக்கூட கீழே சிந்தக்கூடாது '' நாரதரும் மிகுந்த கவனத்துடன் ஒரு துளி கூடச் சிந்தாது,எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்துக்கொண்டு நகர் வலம் முடித்து கிருஷ்ணரிடம் சாதித்த பெருமையுடன் வந்தார்.கிருஷ்ணர் கேட்டார்,''நாரதா,இந்தகிண்ணத்துடன் நகர் வலம் வந்தபோது என்னை எத்தனை முறை நினைத்தாய்?''நாரதர்செயலில் கவனமாய் இருந்ததால் அவரை நினைக்கவில்லை என்றார்.கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே சொன்னார்,''ஒரு சிறு வேலை செய்யும்போதே நீ என்னை மறந்துவிட்டாய்.நாள் முழுவதும் கடுமையாய் உழைத்த பின்னும் இரண்டு முறை என்னை துதிக்கும் குடியானவன் சிறந்த பக்தன் தானே?''நாரதர் கர்வம் அடங்கி தலை குனிந்தார்.
ராம கிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை.
|
|
Post a Comment