உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

கன்னாபின்னா..

1

Posted on : Monday, April 07, 2014 | By : ஜெயராஜன் | In :

வறுமையில் வாடிய போதும் சம்பாதிக்க வழி தெரியாத ஒருவனை அவன் மனைவி,''சோழ மகாராஜாவைப் பார்த்து பாடல் ஏதேனும் பாடினால் நிறையப் பரிசு கொடுக்கிறாராம்.சும்மாவே உட்கார்ந்து கொண்டிருக்கிறாயே, போய்ப் பாடி  பரிசு வாங்கிவா,''என்றாள் .அவனும் வேறு வழியின்றி ஏதோ ஒரு பாட்டை எழுதி அரசவைக்கு சென்றான்.புதிய புலவர் ஒருவர் வந்திருக்கிறார் என்றெண்ணி மன்னனும் அவனுடைய கவிதையைப் பாட சொன்னார். அவனும்  உடனே தான் எழுதிக் கொண்டு வந்ததைப் பாடினான்.
''மண்ணுண்ணி மாப்பிள்ளையே!
காவிறையே!
கூவிறையே!
உங்கள் அப்பன் கோவில் பெருச்சாளி!
மன்னா!தென்னா!
கன்னா! பின்னா!
சோழங்கப் பெருமானே!''
இதைக் கேட்டதும் மன்னனுக்குக் கோபம் வந்து விட்டது.அவனுக்கு தண்டனை கொடுக்க எத்தனிக்கையில் கம்பர் எழுந்து,''மன்னா,மிகச் சிறந்த இந்தப்  பாடலுக்கு நீங்கள் பரிசு கொடுக்க வேண்டும்,''என்று வேண்டினார்.மன்னனுக்கு ஒன்றும் புரியாது, விளக்கமாக சொல்ல சொன்னார்.கம்பரும் அந்தப் பாட்டிற்கு பொருள் கூறினார்:
மண் உண்ணி மாப்பிள்ளை என்றால் குழந்தையாய் இருந்த போது பசியில் மண்ணை உண்ட சிறந்த பிள்ளையாகியே பெருமாளே என்று பொருள்.
காவிறையே என்றால் தேவலோகத்தில் உள்ள கற்பக சோலைக்குத் தலைவனாகிய இந்திரனே,என்று பொருள்.
கூவிறையே என்றால் உலகுக்குக் கடவுள் போன்றவன் என்று பொருள்.உங்கள் அப்பன் கோ  என்றால் உங்கள் தந்தை யாகிய அரசன் என்றும்,வில் பெருச்சாளி என்றால் வில் போரில் பெரிய ஆளி போன்றவன் என்றும் பொருள்.மன்னா என்றால் மன்னவனே,தென்னா என்றால் தென்னாட்டை உடையவனே என்றும் கன்னா என்றால் கர்ணனைப் போல் கோடையில் சிறந்தவனே என்றும்,பின்னா என்றால் போரில் பின்னிட்டு 
 ஓடா தவனே  என்றும் பொருள்.
மகிழ்ச்சியுற்ற மன்னன் வந்தவனுக்கு நிறைய வெகுமதி கொடுத்து அனுப்பினார்.


தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (1)

எத்தனை முறை படித்தாலும் சுவாரஸ்யம் ஐயா...

Post a Comment