உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

சூழல்

0

Posted on : Tuesday, May 01, 2012 | By : ஜெயராஜன் | In :

பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி:
பிரான்சில் பிரபுக்கள் ஆண்ட காலத்தில் பாஸ்டைல் என்ற மாபெரும் சிறை ஒன்று இருந்தது ஆட்சிக்கு எதிர்ப்பாளர் யாராயினும் இச்சிறையில் இருந்த இருண்ட குகை போன்ற செல்களுக்குள் அடைத்து விடுவார்கள்.விலங்கு பூட்டிய சாவியை உள்ளே இருந்த கிணற்றில் போட்டு விடுவார்கள்.செல்கள் என்றும் திறக்கப்பட மாட்டா.உள்ளேயே சாக வேண்டியதுதான் .இறந்த பின் கை விலங்குகளை வெட்டி எடுப்பார்கள்.
பிரெஞ்சுப் புரட்சியின்போது புரட்சியாளர்கள் முதலாவதாக அச்சிறையை உடைத்து கைதிகள் அனைவரையும் வெளியே அழைத்தனர்.ஆனால் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி.கைதிகள் வெளியே வர மறுத்து விட்டனர். முப்பது ஆண்டுகளுக்குமேல் வானம் பார்க்காமல் நிலவைப் பார்க்காமல் உலகம் பார்க்காமல் விலங்குகளுடன் வாழ்ந்த அவர்களுக்கு அந்த வாழ்வு பழக்கப் பட்டு விட்டது.அவர்களுக்கு வெளியே வர பயம்.வெளியே வந்தால் உறவினர் யார் இருப்பார்?எத்தனைபேர் இறந்திருப்பர்?உறவினர் பேர்கள் எதுவும் ஞாபகம் இல்லையே!அவர்களை அடையாளம் காண இயலுமா?அவர்கள் எங்கே போவார்கள்?உணவுக்கும்,உடைக்கும் உறங்கவும் எங்கே போவது?வயதாகி நோயுடன் போராடிக் கொண்டிருக்கும்போது உழைக்க முடியுமா?உழைக்கத் தயாராக இருந்தாலும் யார் வேலை கொடுப்பார்கள்?யார் இவர்களை நம்புவார்கள்?இங்கே சிறையில் எல்லாம் வசதியாகத்தான் இருக்கிறது வெளியே போனால்தான் சிரமம்.சிறையில் ஆரம்பத்தில் கொடுமையாகத்தான் இருந்தது.காலப்போக்கில் எல்லாம் பழகிவிட்டது.சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து வாழும் மாபெரும் சக்தி மனிதனுக்கு உண்டு.நாளைய தினம் பற்றிய கவலை இல்லாமல் வாழ்ந்தாகிவிட்டது.இப்போது எதற்கு வெளியே?
அவர்கள் கூறியதை புரட்சிக்காரர்களால் நம்ப முடியவில்லை.''உங்களுக்கு சுதந்திரம்தானே கொடுக்கிறோம்,''என்று சொல்லி விலங்குகளை உடைத்து அனைவரையும் பலவந்தமாக வெளிய கொண்டு வந்தனர்.சிறைக்கு உள்ளே போகும்போதும் அவர்கள் விருப்பத்திற்கு மாறாக,இப்போது வெளியே வந்ததும் விருப்பத்துக்கு மாறாக!
வெளியே வந்த பலரால் கண்களைத் திறக்க முடியவில்லை.ஒரே கூச்சம்.பலருக்கு நடக்கவே வரவில்லை.வெளிய அவர்களை வரவேற்க யாரும் இல்லை.சவங்களைப்போல,பேய்களைப்போல நகரில் இலக்கில்லாமல் அலைந்தார்கள்.அன்று மாலையே பெரும்பாலானோர் சிறைக்கே திரும்பினர்.புரட்சிக்காரர்கள் அவர்களைத் தடுத்தபோது அவர்கள் சொன்னார்கள்,''கை விலங்குகள் இல்லாமல் எங்களால் தூங்க முடியாது.எல்லாம் பழகி போய்விட்டது.ஏதோ இழந்துவிட்டதுபோல இருக்கிறது.எங்களைச் சித்திரவதை செய்யாதீர்கள்.வாழ்க்கை எங்களைக் கஷ்டப்படுத்தியது போதும்.எங்கள் வாழ்க்கை முறையை நாங்கள் மாற்ற விரும்பவில்லை.''புரட்சிக்காரர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அவரவர் சூழல் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது!. 

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment