ஒரு அரசியல்வாதி ஊரில் கோவில் கட்டுகிறேன் என்று நன்கொடை புத்தகத்துடன் அலைந்து கொண்டிருந்தார்.அவரைப் பார்த்து எல்லோரும் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருந்தனர்.ஒரு நாள் அவர் நன்கொடை புத்தகத்தை எடுத்துக் கொண்டு அடுத்த ஊருக்கு காட்டு வழியே சென்றார்.வழியிலே ஒரு வேடனை அவர் சந்தித்தார்.காட்டிலே ஏதாவது மிருகம் வந்தால் என்ன செய்வது என்று எண்ணி அவனையும் துணைக்கு அழைத்துக் கொண்டார்.சென்ற வழியில் திடீரென ஒரு புலி வந்தது. இருவரையும் நோக்கி அது ஆவேசமாகப் பாய்ந்தது.வேடன் வில்லை எடுத்து அதன் மீது அம்பை எய்தான்.புலி அதைக் கண்டு கொஞ்சம் கூட அஞ்சவில்லை.ஆவேசமாகப் பாய்ந்தது.அரசியல்வாதிக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டது.செய்வது அறியாது கையிலிருந்த நன்கொடை புத்தகத்தை புலியின் மீது வீசினார். உடனே புலி அவசரமாக பின்னோக்கி ஓடியது. இதை முழுவதும் பார்த்துக் கொண்டிருந்த புலியின் குட்டி அதனிடம் கேட்டது, ''வேடனைப் பார்த்து அஞ்சாத நீ ஏன் திடீரெனத் திரும்பி ஓடி வந்தாய்?''அந்தப் புலி சொன்னது,''அந்த வேடன் வீரமுடையவன்.அவனிடம் தாராளமாக சண்டை போடலாம்.ஆனால் அருகிலிருந்த அரசியல்வாதி நன்கொடைப் புத்தகத்தை எறிந்தானே,அதற்குக் கொடுக்க பணம் நம்மிடம் எங்கே இருக்கிறது? அதனால்தான் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்று ஓடி வந்துவிட்டேன்.''
|
|
Post a Comment