ஆசை,தேவை இவை இரண்டும் எதிர் மறையானவை.தேவை,அப்போதைய அவசரத்துக்கு ஒன்றை விரும்பும்.அந்த நெருக்கடி தீர்ந்தவுடன் அப்பொருள் அவசியமில்லை என்று ஒதுக்கி விடும்.ஆனால் ஆசை தனக்குத் தேவை இல்லாத சம்பந்தமில்லாத பொருட்களையெல்லாம் கூட விரும்பும்.இயற்கை என்றும் தேவைகளின் அடிப்படையில் இயங்குகிறது.மனிதனோ ஆசைகளின் வழி செல்கிறான்.
******
மனிதன் வாழும் காலத்தில் எவை எவற்றையோ தேடி ஓடுகிறான்.ஆனால் அவனுக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் அவன் எதை எதையெல்லாம் தேடி வைத்தானோ,அவற்றில் ஒன்று கூட தனக்கு உதவாது என்பதை உணர்கிறான்.இது நாள் வரை நாம்தான் அவற்றை சுமந்து கொண்டிருந்தோமே தவிர அவை தன்னை சுமக்கவில்லை என்பதை அறிகிறான்.ஆனால் அது காலம் கடந்த ஞானம்.
******
கடவுளிடம் காட்டும் பக்தி,மனிதனுக்கு மரணத்தின் மீதுள்ள அச்சத்தினால் தான்.'இறைவன் நம்மை மரணத்திலிருந்து காப்பான்,'என்ற நம்பிக்கைதான் மனித குலம் பல பொருட்களை இறைவனுக்கு காணிக்கையாக செலுத்தி வழிபடக் காரணம்.எல்லா மக்களும் சாவதற்கு அஞ்சுகிறார்கள்.மரணத்தைத் தவிர்க்க அவர்கள் செய்யும் முயற்சிகளால் அவர்கள் எப்போதும் வாழ்வதே இல்லை.
******
மனதின் இச்சைகளை பலவந்தமாக அடக்கும்போது நீ மனதின் எதிரியாகி விடுகிறாய்.எதை நீ மறுக்கிறாயோ,அதையே மனம் நாட ஆரம்பித்து விடும்.பிடிவாதமாக மறுப்பதும் ஒருவித எதிர்மறை ஆசைதான்.மெல்ல மெல்ல அவற்றிலிருந்து விடுபடுவதுதான் மேலான நிலையாகும்.
******
|
|
ஆசை அளவறிய வேண்டும்...