அப்பாவைப் பற்றி வயது ஏற ஏறப் பிள்ளைகளின் மதிப்பீடு:
நான்கு வயதில் :என் அப்பாவால் எதையும் செய்ய முடியும்.
எழு வயதில் ;என் அப்பாவுக்கு எல்லாம் தெரியும்.முழுக்கத்தெரியும்.
எட்டு வயதில் :என்னப்பாவுக்கு எல்லாமே முழுமையாக தெரிந்திருக்காது.
12 வயதில் :எல்லாவற்றையும் என் அப்பா தெரிந்திருக்க
அவசியமில்லை.
14 வயதில் ;அப்பாவா!அவர் பத்தாம் பசலி.
21 வயதில் :அந்த ஆள் இந்தக் காலத்துக்கு ஏற்றவர்அல்ல.அவரிடமிருந்த
என்ன எதிர் பார்க்க முடியும்?
25 வயதில் ;அவருக்கு ஏதோகொஞ்சம் தெரியும்.அதிகமாக ஒன்றுமில்லை.
30 வயத்ல் :அப்பா இது பற்றி என்ன நினைக்கிறார் என்று பார்க்க வேண்டும்
35 வயதில் :அப்பாவின் கருத்தை அறிய கொஞ்சம் பொறுமை காட்ட
வேண்டும்.
50 வயதில் :அப்பா இது பற்றி என்ன எண்ணியிருப்பார்?
60 வயத்ல் :உண்மையிலே அப்பாவுக்கு எல்லாம் தெரிந்திருந்தது.
65 வயதில் :அப்பா இப்போது இருந்தால் அவரிடம் இது பற்றி ஒரு
. யோசனை கேட்கலாம்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஒரு சமயம் ஸ்பெயினில் இருந்து இளைஞர் ஒருவர் தூதுவராக பக்கத்து நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.அவரைக் கண்ட அந்நாட்டு அரசர் ,''ஸ்பெயினில் பெரிய மனிதர்கள் இல்லை போலும்! அதனால் தான் தாடி கூட முளைக்காத ஒரு சிறுவனை அனுப்பியுள்ளார்கள்'' என்று சொன்னார் கிண்டலுடன்.
அதற்கு அந்த இளைஞர் ,''அரசே,அறிவு என்பது தாடியில் இருப்பது என்பது எங்கள் மன்னருக்குத் தெரியாது.தெரிந்திருந்தால் எனக்குப் பதிலாக ஒரு வெள்ளாட்டையே அனுப்பியிருப்பார்.''எம்று பதிலடி கொடுத்தார்.
நெவில் கர்டஸ்என்ற ஆங்கிலேயரின் கிரிக்கெட் வர்ணனைகள் சூடாய் இருக்கும்.அதனால் ஒரு நிரூபர் அவரிடம் கேட்டார்,''நீங்கள் டெஸ்ட் மேட்ச்சில் விளையாடியதில்லை.ஆனால் விளையாட்டு வீரர்களை இப்படி விபரீதமாக விவரிக்கிறீர்களே?''
அதற்கு அவர் ,''எனக்கு முட்டையிடத் தெரியாது.ஆனாலும் எது நல்ல முட்டை ,எது கெட்டமுட்டைஎன்று தேர்ந்தெடுக்க நான் கோழியாக இருக்க வேண்டுமா?''என்று கேட்டார்.
பிச்சைக்காரர்கள் கோடீஷ்வரர்களைக்கண்டு பெருமூச்சு விடுவதில்லை.தம்மைக் காட்டிலும் வளமாகஉள்ள பிச்சைக்காரர்களைக் கண்டு தான் பெருமூச்சு விடுகிறார்கள்.
தனக்குத் தெரியாதவைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்பவன் ,அந்த சில நிமிடங்களுக்கு முட்டாளாகத் தெரிவான்.கேள்விகள் கேட்கத் தயங்குபவன் வாழ் நாள் முழுவதும் முட்டாளாக இருப்பான்.
_செ மோன் வெல்
நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மட்டும் நினைத்தால் அது சுலபமாக நடக்கக் கூடிய காரியமே.ஆனால் மற்றவர்களைக் காட்டிலும் அதிக சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.இது தான் கஷ்டம்.ஏனெனில் மற்றவர்கள் உண்மையில் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்களோ ,அதைக் காட்டிலும் அதிக சந்தோஷமாக அவர்கள் இருப்பதாக நாம் நினைக்கிறோம்.
மார்க்கஸ் அரேபியஸ் என்ற அரசன் பெரிய ஞானி.ரோமை ஆண்டவன்.எந்தப் பிரச்சினையைப் பற்றியும் யாருடைய நடத்தையைப் பற்றியும் எப்போதும் பதட்டம் அடைய மாட்டான்.அவன் தன நாட்குறிப்பில் எழுதியிருந்தது.:
''நான் இன்றைக்கு சுயநலம் படைத்தவர்களையும் ,வெட்டித்தனமாகப்பேசுபவர்களையும் ,தற்பெருமை பேசுபவர்களையும்,நம்பிக்கை மோசடி செய்பவர்களையும் ,நன்றியில்லாத மக்களையுமே பெருமளவில் சந்திக்கப் போகிறேன்.அவர்களைப் பார்த்து நான் ஆச்சரியமோ,கலவரமோ அடையப் போவதில்லை.இம்மாதிரியான மனிதர்கள் இல்லாத உலகை என்னால் கற்பனை கூடப் பண்ணிப் பார்க்க முடிய வில்லை.''
இவ்வாறு, தான் எழுதி வைத்திருந்ததைத் தினமும் படித்து விட்டுத்தான் அரசவைக்குச் செல்வான்.எப்படிப்பட்ட மனிதனைச் சந்தித்தாலும் ,பொறுமையாக நிதானம் தவறாமல் இருந்து பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து தீர்த்து வைப்பான்.
சராசரியாக ,என்பது ஒரு பயங்கரமான சொல்.ஒரு மனிதன் தன ஒரு காலை எரியும் தீயிலும் ,இன்னொரு காலை பனிக்கட்டிகளிடையே வைத்திருந்தால்சராசரியாக அவன் சவ்கரியமாக இருக்கிறான் என்று புள்ளி விபரக் காரர்கள் சொல்வார்கள்.
அவன் பணத்தைத் தொலைத்து விட்டான்.
அடுத்த வீட்டுக் காரன் திருடியதாக அவன் நினைத்தான்.
அவனை கூர்ந்து கவனித்தான்.
அவனது தோற்றம் ,நடவடிக்கைகள் ,அசைவுகள் எல்லாமே
அவனைத் திருடனாகவே அவனுக்குக் காட்டின.
அதன் பின் .........
அந்தப் பணம் தன வீட்டில் ஒரு மூங்கில் குழாயில் இருப்பதைக் கண்டான்.
அப்போது..........
அடுத்த வீட்டிக் காரனைக்கூர்ந்து கவனித்தான்.
அவன் அப்படியே காணப்பட்டான்.
அவனது எந்த நடவடிக்கையும் அவனைத் திருடனாகக் காட்ட வில்லை.
_சீனக் குட்டிக் கதை.
ஆந்தையைப் பார்த்து காடை கேட்டது,''எங்கு செல்கிறாய்?''
ஆந்தை: கீழ் திசை நோக்கி .
காடை: ஏன்?
ஆந்தை: எனது அலறல் சப்தத்தைக் கேட்டு மக்கள் வெறுப்படைகிறார்கள்.
காடை: நீ செய்ய வேண்டியது அலறல் சப்தத்தை மாற்றிக் கொள்வதே.அது உன்னால் முடியாத பட்சத்தில் நீ எங்கு சென்றாலும் வெறுக்கப் படுவாய்.
_சீனக் குட்டிக் கதை
சாக்ரட்டீஸ் ஒரு சிறிய வீட்டில் குடியிருந்தார்.நண்பர் கேட்டார்,''அய்யா,உங்களுக்கு இந்த சிறிய வீடு போதுமா?''அதற்கு சாக்ரட்டீஸ் சொன்னார்,;;இவ்வளவு சிறிய வீட்டை நிரப்புவதற்கே உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது.''
கொடைவள்ளல் ஹாத்தீம் தாயிடம் கேட்கப்பட்டது,''தங்களைக் காட்டிலும் உயர்ந்த மனிதரைத் தாங்கள் பார்த்ததுண்டா?''
ஹாத்தீம் தாய் சொன்னார்,''உண்டு.ஒரு நாள் நாற்பது ஒட்டகங்களை அடித்து விருந்து வைத்தேன்.அன்று பாலை வனத்தில் ஒருவன் விற்குச் சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவனிடம் விருந்துக்கு வராத காரணம் கேட்டேன்.அவன் சொன்னான்,'எவன் தன சொந்தக் கைகளினால் உழைத்து உண்கிறானோ ,அவன் பிறர் தரும் விருந்தை எதிர் நோக்கிக் கொண்டிருக்கமாட்டான்.,'அந்த ஏழை தான் என்னைக் காட்டிலும் உயர்ந்தவன்.''
_இஸ்லாமிய ஞானி ஷா அதி
திரைச் சீலையைப் பார்த்து கொடிகேட்டது,''நாம் இருவரும் அரசனுக்குத் தொண்டு செய்பவர்கள்.நான் மலை,காடு,பாலைவனம் என்று புழுதியிலும் ,காற்றிலும் துன்புற்று நீண்ட பயணங்கள் செய்தும் உனக்கிருக்கும் மதிப்பு எனக்கு இல்லையே!உன்னை அழகிகள் அலங்கரிக்கிறார்கள்.வாசனைத் திரவியங்களால் மனம் கமழவைக்கிறார்கள்.இதற்கு என்ன காரணம்?''
திரைச் சீலை அடக்கமாகச் சொன்னது,''என் தலை எப்போதும் தரையைத் தொட்டுக்கொண்டிருக்கிறது.உன் தலையோ அகந்தையுடன் ஆகாயத்தைப் பார்த்தபடி இருக்கிறது.காரணம் இது தான்.''
_ஷா அதி
இரவில் என் தந்தையுடன் உட்கார்ந்து புனித குர் ஆன் படித்துக் கொண்டிருந்தேன். சுற்றி இருந்த எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.ஏக்கத்துடன் நான் சொன்னேன்''ஒருவர் கூட தலையைத் தூக்கிப் பார்ப்பதாக இல்லையே ?பிணம் போலக் கிடக்கிறார்களே!''
''என் தந்தை சொன்னார்,''என் அன்பு மகனே,நீயும் உறங்கப்போ.மற்றவர்களைப் பழித்துப் பேசுவதிலும் அது சிறந்தது.''
_ஷா அதி
காயம் பட்டறியாதவனுக்குஅதன் வலி தெரியாது.அதன் வேதனையை அனுபவித்தவனிடம் தான் அதன் தன்மையைப் பற்றிச் சொல்லலாம்.உன் நிலை என் நிலையாக மாறும் வரை என் நிலைமை கட்டுக் கதையாகவே தோன்றும்.என் வேதனையை இன்னொருவனின் வேதனையோடு ஒப்பு நோக்க வேண்டாம்.ஏனெனில் அவன் உப்பைக் கையில் வைத்துள்ளான்.நானோ நெஞ்சிலிருக்கும் காயத்தில் வைத்துள்ளேன்.
_ஷா அதி
வேட்டையாடிய மிருகங்களை சமைக்க உப்பு தேவைப் பட்டது.அரசன் உப்பு வாங்க ஒருவனை அனுப்பும் போதுசொன்னான்,''உப்பிற்கான காசைக் கொடுத்து விடு.''கூட இருந்தவர்கள் கேட்டார்கள்,''இது அற்பமான விஷயம்.இதற்கு இவ்வளவு எச்சரிக்கை தேவையா?''அரசன் சொன்னான்,''உலகில் கொடுமைகள் துவக்கத்தில் சிறிய அளவில் தான் இருந்தன.பின்னால் வந்த ஒவ்வொருவரும் அவற்றைப் பெரிய அளவில் வளர்த்துவிட்டதற்குப் பொறுப்பாளிகள்.அரசன் இலவசமாக ஒரு ஆப்பிளை எடுத்தால் ,அவனது ஆட்கள் ஒரு மரத்தையே எடுத்துக் கொள்வார்கள்.''
_ஷா அதி
அரேபிய வர்த்தகன் ஒருவன் தன அனுபவத்தைச் சொன்னான்,''பாலை வனத்தில் ஒரு முறை வழிதவறி விட்டேன்.உணவு தீர்ந்து விட்டது.சாகும் நேரம் வந்தது என நினைக்கும் போதுஒரு மூட்டை கண்ணில் பட்டது.அதில் ஏதேனும் உணவு இருக்கும் என நினைத்த போது நெஞ்செல்லாம் மகிழ்ச்சியும் குதூகலமும் வழிந்தன.ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?அழகிய முத்துக்கள்.ஏமாற்றமும் கசப்புமே அப்போர்து தோன்றின.பசித்தவனுக்கு முத்தினால் என்ன பலன்?அவனுக்கு அப்போது விலை மதிக்க முடியாத பொருள் தண்ணீர் தான்.''
_ஷா அதி
கொடுங்கோல் அரசன் துறவியிடம் கேட்டான்,''பிரார்த்தனைகளில் மிகச் சிறந்தது எது?''
துறவி சொன்னார்,''உங்களைப் பொறுத்தவரை உறக்கம் தான் ,''
அரசன் விழித்தான்.துறவி சொன்னார்,''நீங்கள் உறங்கும் போதாவது ஜனங்கள் துன்புறுத்தப் படாமல் இருக்கிறார்கள் அல்லவா,அதனால் தான்.''
_ஷா அதி
நஷ்டமடைந்த வியாபாரி ஒருவர் ,தன மகனை அழைத்து அது பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்ல ,மகன் காரணம் கேட்டான்.வியாபாரி சொன்னார்,''இரு துன்பங்களை ஒரே நேரத்தில் அனுபவிக்க நான் விரும்பவில்லை.பொருள் நஷ்டம் ஒன்று;இரண்டாவது ,நமது நஷ்டத்தைக் கேட்டு உறவினர் அடையும் மகிழ்ச்சி.''
---ஷா அதி
பெல்ஜியம் நாட்டு ஆசிரியர் மேட்டர்லிக் என்பவர் தான் எழுதிக் கொண்டிருக்கும் போதுயாராவது குறுக்கே பேசினால் கோபம் வரும்.
ஒரு முறை அவர் எழுதிக் கொண்டு இருக்கும் போது அவர் மனைவி சந்தடி செய்யாது தன அறைக்குச் சென்றவள் அதிர்ச்சி அடைந்து ,கணவரிடம் ஓடி வந்து ;;நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் போது ஓசைப் படாமல் யாரோ என் நகைகளைத் திருடிக் கொண்டு போய் விட்டார்களே !''என்று அலறினாள்.
''ஒரு திருடன் என் வேலைக்குக் காட்டும் மரியாதையைக் கூட உனக்குக் காட்டத் தெரியவில்லையே''என்று பதிலுக்குக் கத்தினார்,மேட்டர்லிக்.
மனிதர்களுடைய நாவுக்குக் கடவுள் கொடுத்த சுவை ஆறுதான்.உப்பு ,புளிப்பு போன்ற அறுசுவைகளைவிடத்தனக்கு அதிக விருப்பமான ஏழாவதுசுவையை மனிதனாகவே கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறான்.அதுதான் பிறர் பற்றி நாவு கொழுக்க வம்பு பேசுகிற சுவை.
--குறிஞ்சி மலர் நாவலில் நா.பார்த்த சாரதி.
ஒரு தகப்பனும் மகனும் குற்றவாளியாக மன்னன் முன் நிறுத்தப்பட்டனர்.இருவருக்கும் நூறு கசை அடி கொடுக்க மன்னன் உத்தரவிட்டான்.முதலில் தகப்பனுக்கு நூறு கசை அடி கொடுக்கப் பட்டது.அவனோ நூறு கசை அடி வாங்கியும் சிறிது கூட கலங்கவில்லை.அடுத்தது மகன் முறை.முதல் அடி மகனுக்கு விழுந்ததுமே தகப்பன் அழத் துவங்கி விட்டார்.ஆச்சரியத்துடன்காரணத்தை மன்னன் வினவியபோது தகப்பன் சொன்னான்,''மன்னா,என் உடம்பில் அடி விழுந்த போதுஎன்னால் அதைத் தாங்க முடிந்தது.ஆனால் இப்போது அடி விழுவது என் நெஞ்சில்.''
ஒரு நாள் ஒரு தாத்தா பேரக்குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேரன் ஏதோபேச வாயெடுத்தான்.தாத்தா சொன்னார்''சாப்பிடும் பொது பேசுவது நல்ல பழக்கமல்ல சாப்பிட்டு முடிக்கும் வரை பேசாதே.''பின் எல்லோரும் சாப்பிட்டு முடிந்தவுடன் தாத்தா பேரனிடம் விஷயம் என்னவென்று கேட்டார்.
பேரன் முகத்தை மிக சோகமாக வைத்துக் கொண்டு ''இப்போது அதற்கு அவசியம் இல்லை,''என்றான்.ஏனெனக் கேட்க அவன் சொன்னான்''நீங்கள் சாப்பிடும் போதுஉங்கள் சாப்பாட்டில் ஒரு பூச்சி இருந்தது.அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.''
ராஜாஜியிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்''நீங்கள் குத்தலான கேள்விகள் கேட்டால் கூட கோபிப்பது இல்லையே.அது எப்படி?''
ராஜாஜி சொன்னார்,''நான் தவறு செய்தால் எனக்கு கோபப்பட உரிமையில்லை.நான் சரியானபடிதான் நடந்து கொண்டிருக்கிறேன் என்றால் கோபப்படக் காரணம் இல்லை.தவறு செய்து விட்டு அதை நியாயப் படுத்த முயன்று தர்கத்தில் தோற்கும் பொது தான் கோபம் வரும்.''
அரசாங்க செலவைக் குறைக்க எண்ணிய அரசர் அரண்மனையில் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கப் போகும் செய்தி கேள்விப்பட்ட அறிஞர் ஒருவர் சொன்னார்''அரண்மனை லாயத்தில் இருக்கும் குதிரைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைப்பதுக்குப் பதிலாக அரசரையே சுற்றிக் கொண்டிருக்கும் கழுதைகளின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்து விடலாம்.''
ஒரு சர்வாதிகார நாட்டில் ஒரு கோழிப் பண்ணைக்கு அரசாங்க அதிகாரி வந்தார்.அவர் கோழிகளுக்குப் போடும் தீவனம் பற்றி அங்கிருந்த மேலாளரிடம் கேட்டார். ''நான் எதுவும் போடுவதில்லை.அதுகளே சாக்கடையில்,தெருவில் கிடைப்பதை த்தின்னும்.''என்று மேலாளர் சொன்னார்.அதிகாரி கோபத்துடன் ''நீங்கள் செய்வது சுகாதாரக் கேடானது.எல்லாக் கோழிகளுக்கும் நோய்பரவலாம்.உங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.''
அதிகாரி மூன்று மாதம் கழித்து அங்கு வந்து அதே கேள்வி கேட்டார். ''நான் பால் ,நெய்,தேன்எல்லாம் கொடுக்கிறேன் ,சார்''என்றார் மேலாளர்.''நாட்டிலே உணவுப் பஞ்சம்.மக்களுக்கு இல்லாத உணவுப் பொருட்களை கோழிக்குப் போட்டு வீணடிக்கிறீர்கள்.எனவே ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.''என்றார் அதிகாரி.
அடுத்து மூன்று மாதம் கழித்து அதிகாரி வந்து அதே கேள்வி கேட்டார். ''சார்,நான் தினமும் என் கோழிகளுக்குஇரண்டு ரூபாய் கொடுத்து எது பிடிக்குமோ அதை வாங்கி சாப்பிடுங்கள்,''என்று சொல்லி விட்டேன் ''என்றார் மேலாளர் கடுப்புடன்.
ஏழை ஒருவன் தெய்வ வரம் பெற்ற தன நண்பன் ஒருவனைச் சந்தித்தான்.வரம் பெற்ற நண்பன் எழைக்குஉதவும் பொருட்டு ,ஒரு செங்கல்லை எடுத்து தன சுட்டு விரலால் தொட்டான்.அது தங்கமாக மாறியது.அதை ஏழைக்குக் கொடுத்தான்.ஏழைக்கோதிருப்தி ஏற்படவில்லை.இன்னொரு கல்லை எடுத்து த்தன்சுட்டு விரலால் தொட்டு தங்கமாக்கி அவனிடம் கொடுத்தான்.அப்போதும் எழைக்கு திருப்தி ஏற்படவில்லை.''உனக்கு என்ன தான் வேண்டும்?''என்று நண்பன் கேட்டான்.''உன் சுட்டு விரல்''என்று பதில் வந்தது.
துறவி ஒருவர் ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கையில் ஒரு தேள் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது.துறவி அதைக் காப்பாற்ற எண்ணிக் கையில் பிடித்துதூக்கினார்.தேள் அவரைக் கடித்த உடன் மீண்டும் தண்ணீரில் விழுந்தது.அவர் மீண்டும் மீண்டும் காப்பாற்ற முயற்சிக்க அது மீண்டும் மீண்டும் அவரைக் கொட்டி விட்டு நீரில் விழுந்தது.ஒருவர் துறவியைக் கேட்டார் .''தேள் கடிக்கும் என்று தெரிந்தும் அதை ஏன்காக்க முயல்கிறீர்கள்?''துறவி சொன்னார்''கடிப்பது அதன் சுபாவம்.காப்பது என்சுபாவம்.''
ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லாத ஒரு அரசன் புகழ் வாய்ந்த ஒரு ஜோதிடரை வரவழைத்து ஜோதிடமே ஏமாற்று வேலை என்று நிரூபிக்க நினைத்தான்.ஜோதிடரிடம் அவருடைய ஜாதகப்படி அவருடைய ஆயுள் காலம் என்ன என்று கேட்டால் அவர் ஆண்டு ஒன்றைக் குறிப்பிட்டு சொல்வார்,உடனே அவரைக் கொலை செய்து விட்டால் அவர் ஜோதிடம்பொயஎன்றாகிவிடும்எனக் கருதினான்.
ஜோதிடர் வந்தார்.அரசன் அவருடைய ஆயுள் விபரம் கேட்டான்.ஜோதிடர் சொன்னார்''ஆத்திரப்படாமல் கேளுங்கள் ,மன்னா,நீங்கள் பிறந்த நாள் நட்சத்திரப்படி நான் இறந்த மூன்றாவது நாள் நீங்கள் இறப்பீர்கள்.''இப்போது ஜோதிடரைக் கொள்ள அரசனுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது?
ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன கணவன் போருக்குப் போய்வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக் கொண்டாள்.முனிவர் கூறிய சமாதானங்களால்நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.
மறுநாளே அப்பெண் காட்டிற்குச் சென்றாள்.புலியைக் கண்டாள்.அது உறுமியது.பயந்து வந்து விட்டாள்.மறுநாள் சென்றாள்புலியைக் கண்டாள்.அது உறுமியது.ஆனால் இன்று பயம் சற்று குறைவாக இருந்தது.அனாலும் திரும்பி விட்டாள்.
அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது.சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்து விட்டது.ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.
புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள்.முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார்.அதைப் பார்த்து அந்தப் பெண் மனம் குழம்பி நின்றாள்.
முனிவர் கூறினார்''இனி உனக்கு மூலிகை தேவையில்லை.நீ புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்?ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கி விட்டாய்.அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா,என்ன?''
முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது.அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள்.
பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது.சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால்இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது.மற்றொன்று உதைக்கப் படுகின்றது.தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது.ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப்படுவான்பொதுநலம் உள்ளவன் போற்றப்படுவான்.
போரில் சிறப்பான வெற்றி பெற்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்று வீட்டுக்கு மகிழ்வுடன் வந்தான் சாமுராய்ஒருவன்.மனைவி குழந்தையுடன் மகிழ்ச்சியாகப் பேசி விட்டு படுக்கச் சென்றான்.அப்போது படுக்கையில் ஒரு எலி விளையாடிக் கொண்டிருந்தது.அதை விரட்டியும் அவனுக்கு போக்குக் காட்டிக் கொண்டிருந்தது.எரிச்சலுற்ற சாமுராய் தன வாளை எடுத்து அதைஇரண்டு துண்டாக்க விரட்டினான்.ஆனால் எலி மாட்டிக் கொள்ளாமல் இங்கும் அங்கும் ஓடியது.ஒரு மணி நேரம் ஆகியும் அதைக் கொல்லமுடியாத சாமுராய் அடுத்து என்ன செய்வது என யோசித்தான்.பூனையை விட்டால் எலியைப் பிடித்து விடும் என்று யோசனை தோன்றியது.அரண்மனைக்கு ஆள் அனுப்பி ஒரு கொழுத்த பூனை கொண்டு வந்து விடப்பட்டது.அந்தப் பூனை ஒரு மணி நேரம் விரட்டியும் எலி பிடிபடவில்லை.சாமுராய் க்குக் எரிச்சல்.கடுங்கோபம்.ஆனால்ஒன்றும் செய்ய இயலாத நிலை.
அப்போது அவன் வீடு வழியே ஞானி ஒருவர் சென்று கொண்டிருந்தார்.அவரை அணுகி விபரம் சொல்லி எலியை விரட்ட வழிகேட்டான்.அப்போது வேறு ஒரு பூனை சாலையில் சென்று கொண்டிருந்தது.அந்தப் பூனையை உபயோகிக்குமாறு ஞானி சொன்னார்.அந்தப் பூனை மெலிந்து எலும்பும்தோலுமாக இருந்தது.சாமுராய் க்கு சந்தேகம்.கொழுத்த அரண்மனைப் பூனையாலேயே பிடிக்க முடிய வில்லை.இந்த நோஞ்சான் பூனை எவ்வாறு எலியைப் பிடிக்கும்?இருந்தாலும் ஞானி சொன்னதால் அந்த நோஞ்சான் பூனையை பிடித்து தன படுக்கையில் விட்டான்.ஒரே நிமிடத்தில் அப்பூனை எலியைக் கவ்விக் கொண்டு வெளியே சென்றது.
சாமுராய்க்கு ஆச்சரியம்.இது ஞானியின் சக்தியால் தான்நடந்திருக்க வேண்டும் என்று எண்ணி ஞானியிடம் விளக்கம் கேட்டான்.ஞானி சொன்னார்''நான் மந்திரம் மாயம் எதுவும் செய்ய வில்லை.இந்த நோஞ்சான் பூனை இன்னும் பூனையாகவே இருக்கிறது.அதனால் எலியை உடனே பிடித்து விட்டது.அரண்மனைப் பூனைக்கு எல்லா வசதிகளும் அது இருக்கும் இடத்திலேயே கிடைப்பதால் அது ஓடிச் சென்று இரை தேட வேண்டிய அவசியமில்லை.எனவே அது தன் சொந்த இயல்பை மறந்து விட்டது.அது ஒரு பூனையாக இல்லை.எனவே அதனால் எலியைப் பிடிக்க முடியவில்லை.''
ஒரு சோற்றுப் பருக்கையின் மதிப்பு
சிதற விட்ட நமக்குத் தெரியாது.
அதை எடுத்துச் செல்லும்
எறும்புக்குத் தான் தெரியும்.
ஒரு குழந்தையை நடை வண்டியில் வைத்துத் தள்ளியபடி நடந்து கொண்டிருந்தான் ஒருவன்.குழந்தை பயங்கரமாக வீரிட்டு அழுதது.நடை வண்டியைத் தள்ளி வந்தவன் ''டேய்ஜான்,கோபப்படாதே,செல்லம் ....என் கண்ணல்ல,அமைதியாய் இருடா''என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தான்.அதைப் பார்த்த ஒரு பெண் அவனுடைய பொறுமையையும் அன்பையும் பாராட்டினார்.அப்புறம் குழந்தையிடம் திரும்பி ''ஜான்,ஏண்டாஅழுகிறாய்?''என்று கொஞ்சினாள்.அப்போது அவன் சொன்னான்,''அட!குழந்தையின் பெயர் ஜான் இல்லை.என்னுடைய பெயர் தான் ஜான்.நான் பொறுமையாய் இருக்க என்னை நானே சமாதானம் செய்து கொண்டிருந்தேன்.''
மாபெரும் இசைமேதை தன குழுவினருடன் இசை வெள்ளம் உருவாக்கிக்கொண்டிருந்தார்.அப்போது தட்,தட் என்று சப்தம்.திரும்பிப் பார்த்தால் அந்த அரங்கின் ஒரு பகுதியில் தச்சு வேலை நடந்து கொண்டிருந்தது.இசைக் குழுவில் இருந்தவர்கள் பொறுமை இழந்தார்கள் .''இப்படி இடையூறு செய்தால்ஒத்திகை பார்ப்பது எப்படி?''என்று கோபப்பட்டார்கள்.அவர்களின் தடுமாற்றத்தைக் கண்ட இசை மேதை ஒத்திகையை நிறுத்தினார்.தச்சு வேலை செய்பவர்கள் பக்கம் திரும்பிக் கேட்டார்,''ஐயா,எங்களின்இசை உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறதா?''
ஆனியை அடிக்கக் கையை ஓங்கியவர்கள்அப்படியே நிறுத்திக் கொண்டார்கள்.
நாம் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை; நமக்குத் தொந்தரவாகத் தெரிபவர்களுக்கு நாம் தொந்தரவாகத் தெரிகிறோம்.
'' சிவப்பிந்தியர்கள் சங்கத்திற்கு நீதி,நேர்மை,கட்டுப்பாடு ,உண்மை,சத்தியம் இவற்றை உணர்ந்த ஒரு தலைவர் வேண்டும்''என்று ஆபிரகாம் லிங்கன் ஒரு நண்பரிடம் கூறினார்.
நண்பர் சொன்னார்''இப்போது யாரும் அது மாதிரி இருக்க மாட்டார்கள்.பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட ஒருவர் இருந்தார்.ஆனால் அவரைச்சிலுவையில்அறைந்து விட்டார்கள்.''
''நாம் இருவரும் உரசிக் கொண்டாலும் தீக்குளிப்பது என்னவோ நான் தான்''என்று தீப்பெட்டியிடம் வருத்தப்பட்டது தீக்குச்சி.
''உன் தலை கனமாய் இருப்பதுதான் அதற்குக்காரணம்''என்றது தீப்பெட்டி.
துறவி ஒருவர் தன சீடர்களுடன் ஒரு காட்டைக்கடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது புலி ஒன்று வந்தது.புலியைக்கண்டு சீடர்கள் பயந்தனர்.அப்போது துறவி பயப்படாது அங்கேயே மண்டியிட்டு இறைவனை வேண்டினார்.,''கடவுளே,இந்தப் புலியை சாந்தப் படுத்தி அனுப்பி விடு.''என்ன ஆச்சரியம்!புலியும் அவரைப் போல மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்தது.சீடர்களுக்கு மிகுந்த வியப்பு.துறவி சொன்னார்,''என் பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்த்து விட்டான்.''அப்போது புலி சொன்னது,''எனது பிரார்த்தனைக்கும் இறைவன் செவி சாய்த்து விட்டான்.நான் எதையும் அடித்து ச சாப்பிடுமுன் பிரார்த்தனை செய்து இறைவன் அனுமதி பெறுவது வழக்கம்.''
எந்த விஷயத்தையும் ஒரு முறை சிந்திக்கிறவன் அதில் உள்ள நன்மைகளை மட்டுமோ,தீமைகளை மட்டுமோதான்சிந்திக்கிறான்.அவன் எடுக்கும் முடிவு அறிவு பூர்வமாய் இருக்காது.
எந்த விஷயத்தையும் இரு முறை சிந்திக்கிறவன் அதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவுக்கு வருகிறான்.அவன் எடுக்கும் முடிவு அறிவு பூர்வமாய் இருக்கும்.
எந்த விஷயத்தையும் மூன்று முறை சிந்திக்கிறவன் குழப்பவாதி.அவன் ஒரு முடிவுக்கும் எளிதில் வர மாட்டான்.அவன் எடுக்கும் முடிவும் அறிவு பூர்வமாக இருக்காது.
இராமானுஜ மாமுனிவர் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி .அவர் ஒரு முறை திருப்பதிக்குச் சென்ற போது,அவரது தாய் மாமா பெரிய திருமலைநம்பி என்பவர் திருமலையில் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். இராமானுஜரை ,வைணவத்தலைவர்என்ற முறையில் வரவேற்க திருமலை நம்பி மலையிலிருந்து இறங்கி வந்தார். வயதில் பெரியவரும் ,தாய் மாமனுமான அவர் தன்னை வரவேற்க இறங்கி வந்ததைப் பார்த்து வருந்தி இராமானுஜர்,''இந்தச் சின்னவனை வரவேற்க இவ்வளவு பெரியவர் வரவேண்டுமா?யாரேனும் சிறு பையனை அனுப்பி இருந்தால் போதுமே?''என்றார்.திருமலைநம்பி சொன்னார் ''நானும் அப்படித்தான் நினைத்தேன்.மடத்தை விட்டு வெளியே வந்து நாலாபக்கமும் பார்த்தேன்.என்னை விட ச்சின்னப்பையன் யாரும் தென்படாததால் நானே வர வேண்டியதாயிற்று.''இது எல்லோரையும் தன்னை விடப் பெரியவராகக் கருதும் உயர் பண்பு அல்லவா?
ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தார்.கனமான இரும்புக்குண்டுகளை அனாயாசமாக த்தூக்குவார .தாங்குவார் .அவர் யாரிடமும் தோற்றது கிடையாது.
ஒரு நாள் பாரசீகக் கவிஞர் ஷா அதி அந்த பயில்வானை பார்க்க வந்தார்.அந்த சமயம் பயில்வான் மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார்.கவிஞர் அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்க அவர்கள் சொன்னார்கள்''பயில்வானை யாரோ ஏளனமாகப் பேசி விட்டார்களாம்.அதனால் தான்கோபமாக இருக்கிறார்.''
இதைக் கேட்ட கவிஞர் ஷா அதி சொன்னார்''எத்தனையோ கடுமையான எடைகளைத் தாங்கும் இந்த பயில்வான் ,யாரோ கூறிய ஓரிரெண்டு வார்த்தைகளை த்தாங்க முடியாதவராய் இருக்கிறாரே?ஐயோ பாவம்!''
நேர்மையாக நடந்து பொய் பேசாது வாழ்பவரை பிழைக்கத்தெரியாதவன் என்று இகழ்வர்.பிழைப்பது வாழ்வது என்ற இரு வார்த்தைகளுக்கும் வேறுபாடு உண்டு.பிழைப்பது என்பது பிழை செய்தாவது உயிர் தரிப்பதாகும்.அப்படி நடக்காதவர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொன்னால் அது பெருமைக்குரிய விஷயம் தான்.
வியாச முனிவர் காட்டுச்சாலை ஒன்றில் சென்று கொண்டிருக்கும்போது ஒரு புழு சாலையை விரைந்து கடப்பதை பார்த்து காரணம் கேட்டார் .''தூரத்தில் ரதங்கள் வருவது நில அதிர்வின் மூலம் தெரிந்து கொண்டேன். அதில் சிக்கி இறந்து விடாதிருக்க விரைகிறேன்.''என்றது அப்புழு.''நீ ஒரு சாதரண புழு. நீ ஏன்இவ்வளவு பயப்படுகிறாய்? நீ வாழ்வதால் யாருக்கு என்ன பயன்?இறந்தால் தான் என்ன நஷ்டம்? ''என்று கேட்டார் வியாசர்.
அப்புழு சொன்னது ''அய்யா,உலக பிறப்புகளில் எதுவும் அற்பம் கிடையாது.ஏதோஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டுள்ளேன். நீங்களும் படைக்கப்பட்டுள்ளீர்கள். படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்திற்குமே அதன் உயிர் மேல் ஆசை இருக்கும். ''
'' என்னையும் உன்னையும் இணைத்துப்பேசாதே.நீ ஒரு அற்பப்பிறவி.''என்றார் வியாசர்.
'' மனிதப்பிறவி எடுத்த உமக்குநான்அற்ப பிறவியாக தெரிவேன்.தேவர்கள் கந்தர்வர்களுக்கு நீர் அற்பமாகத்தெரிவீர்.சிறிய பூச்சிகள் எனக்கு அற்பமாகத் தெரியும்.''என்று புழு கூற அசந்து விட்டார் வியாசர்.
புழு மேலும் கூறியது,''புழுவாகிய எனக்கு உள்ள சுக துக்கங்கள் சந்தோஷங்கள் மனித பிறவி எடுத்த உமக்கு ப்புரியாது.பன்றிகளுக்கு சேற்றில் புரள்வது சுகம்.எருமைக்கு நீரில் இருப்பது சுகம்.இந்த புழு பிறவிக்கென்று இறைவன் படைத்த சந்தோஷங்களைஎல்லாம்அடைந்த பிறகே இறக்க விரும்புகிறேன்.இதை தடுக்க யாருக்கும் உரிமையில்லை.''
வியாசர் மெளனமாக அந்த புழுவின் வார்த்தைகளை ஆமோதித்தார்.புழு விரைவாக சாலையைக் கடந்து மறுபுறம் சென்றது.
யாரையும் அற்பமாக நினைக்கக்கூடாது.
எல்லோரும் நமது கடந்த காலத்தின் ஏதோஒரு பகுதியைக் குறித்து ''அதெல்லாம் ஒரு பொற்காலம். அது போல் இனி வருமா?''என சொல்வதுண்டு. ஆனால்எதையெல்லாம் பொற்காலங்கள் என்று சொல்கின்றோமோ அந்தக் காலங்களில் வாழும் போதுநாம் அதை பொற்காலம் என்று உணரவில்லை. என்றோ நல்லது பிறக்கும் என்று ஒவ்வொரு நாளையும் நகர்த்துகிறோம் இப்போது நிகழ்வது எல்லாம் நல்ல விஷயங்கள்தான். இது ஒரு பொற்காலம் தான் என்று நாம் உணர்வதில்லை. ஒவ்வொரு நிமிடமும் புது வாழ்வு ,நல்வாழ்வு என்ற வகையில் வளர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒருவன் ஒரு ஹோட்டல் நிர்வாகிக்கு ,தன்னுடன் தன நாயையும் தங்க அனுமதிப்பார்களா என்று விபரம் கேட்டு ஒரு கடிதம் எழுதினான். அவனுக்கு கீழ்க்கண்ட பதில் வந்தது.
''ஐயா,நான் இந்த ஹோட்டல் தொழிலில் முப்பது வருடங்களாக இருந்து வருகிறேன். ஆனால் விடிகாலையில் எந்த நாயும் ஒழுங்கற்ற முறையில் நடந்ததாக நான் இதுவரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததில்லை. எந்த நாயும் பொய்செக் கொடுக்க முயன்றதுமில்லை. எந்த நாயும் சிகரெட் பிடித்து படுக்கை விரிப்பை எரித்தது இல்லை. எந்த நாயும் பையில் ஹோட்டல் துண்டை மறைத்து வைத்துப் பார்க்கவில்லை.அகவே ,உங்கள் நாயை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்.அந்த நாய் உங்களுடைய நேர்மைக்கு உத்தரவாதம் கொடுத்தால்நீங்கள் கூட வரலாம்.''
திருமணம் என்பது வார்த்தையா,வாக்கியமா? (word or sentence?)
அது அர்த்தமுள்ள வார்த்தையாக (word)ஆகஇருக்கலாம். அல்லது வாழ்வில் உங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையாகவும(sentence)இருக்கலாம். உங்கள் திருமண வாழ்வை எப்படி அமைத்துக்கொள்கிறீர்கள்என்பதைப்பொறுத்தது.
''இன்று மதியம் என்ன சாப்பிடலாம் ''என்பதை நான்கு குள்ளநரிகளும் ஒரு வெள்ளாடும் ஒட்டு போட்டு மெஜாரிட்டிப்படிமுடிவெடுக்கும் முறைக்குப்பெயர் தான் ஜனநாயகம்.
பொது ஒழுக்கம் இல்லாதவர்கள் சமய சொற்பொழிவு செய்யலாமா என்ற கேள்வியை ஒருவர் பரமஹம்ஸரிடம்கேட்டார். அழுக்காக இருக்கும் விளக்குமாறு தானே வீட்டைக் கூட்டி சுத்தமாக்குகிறது ,என்று பதல் அளித்தார் பரமஹம்ஸர்.
மந்திரி ஒருவர் ஒரு கிராமத்திற்கு வந்தார். மூன்று மதத்தலைவர்கள் வந்திருந்தார்கள். ஒருவர் பெருமாள் கோவில் பூசாரி. ஒருவர் கிருஸ்தவ பாதிரியார். இன்னொருவர் பள்ளிவாசல் இமாம். மூவரும் அவரவர் கோவிலுக்கு வரச்சொல்லி மந்திரியை இழுத்தார்கள் .மந்திரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. யாருடன் சென்றாலும் அடுத்த இருவரின் பொல்லாப்பு வரும். அப்போது திடீரென அங்கு ஒரு புலி வந்து விட்டது. புலி வந்ததும் கூப்பிட வந்தவர்கள் ஓடி விட்டார்கள். கூட்டம் கலைந்துவிட்டது. மந்திரியும் அவர் கார் டிரைவரும் அவசரமாய் காரில் ஏறும்போது டிரைவரின் கை ஹாரனில் பட்டு ஹரன் சப்தத்தில் புலி பயந்து ஓடி விட்டது. மந்திரி மறுபடியும் இறங்கி வந்து எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட யாரும் வரவில்லை. எல்லோரும் ஓடி ஒளிந்திருந்தார்கள். சரி,நாமாவது போய்ப் பார்ப்போம் என்று நினைத்து முதலில் சர்ச் கதவைத் திறந்தார். மெதுவாக பெருமாள் கோவில் பூசாரி உள்ளிருந்து வந்தார். பெருமாள் கோவிலைத்திரந்தால்பயந்து கொண்டே இமாம் வெளியே வந்தார்.
பள்ளிவாசலில் இருந்து பாதிரியார் வந்து கொண்டிருந்தார்.உயிர் பற்றிய
அச்சம் வந்தவுடன் எங்கே போய்விட்டது அந்த மத வுணர்வு?
நீங்கள் என்ன போதனை செய்தாலும் ,அதைத் தனக்கு வேண்டியபடி திருத்தி ,தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் சாமர்த்தியம் மனிதனுக்கு உள்ளது. விதி முறைகள் சமூகத்திற்காக த்தான் இயற்றப்பட்டவை,தனக்கில்லை என்று தன்னை விலக்கிவைத்துப் பார்க்கும் மனம் தான் பெரும்பாலானவர்களிடம் காணப்படுகிறது. உலகில் ஏற்கனவே ஒழுக்கம் பற்றிய போதனைகளும் சட்டங்களும் போதும் போதும் என்ற அளவிற்குப் பொங்கி வழிகின்றன.அந்த போதனைகளாலும் சட்டங்களாலும் உலகை மாற்ற முடிந்து உள்ளதா?
பசியோடு இருப்பவனைப் பார்க்க வைத்துக் கொண்டு பிரியாணி சாப்பிடுவது வெற்றி அல்ல.வன்முறை.
வெற்றியைக் கொண்டாடும் போது,தோற்றவர்களைப்பற்றி நாம் கவலைப்படுவதில்லை .அங்கே நாம் வெற்றி மூலம் அசிங்கமாகிறோம்
ஒரு முறை கடலில் மூழ்கி நாம் முத்தெடுக்காமல் திரும்பினால் கடலில் முத்துக்கள் இல்லை என்று பொருள் அல்ல.நம்முடைய முயற்சி போதவில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.
மரங்கள் மனிதனைப் பார்த்துக்கேட்டன "நாங்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் எத்தனை லட்சம் சிலுவைகள் தந்துள்ளோம்? ஆனால்மனிதர்களே உங்களாலே ஏன் ஒரு இயேசு கிருச்துவைத் தர முடியவில்லை? ''
ஒரு தவளையிடம் ஒரு ரூபாய் நாணயம் இருந்தது. அதை பூமிக்கு அடியில் ஒரு பள்ளத்தில் போட்டு வைத்தது. ஒரு நாள் ஒரு யானை அந்தப் பள்ளத்தின் மேலே நடந்து சென்றது. வந்ததே கோபம் தவளைக்கு. பள்ளத்தை விட்டு வெளியே வந்து யானையை உதைக்கக் காலைத்தூக்கியது.'என்ன தைரியம் இருந்தால் என் தலை மேலே நடந்து போவாய்?'என்று மிரட்டியது. பணத்தாலே வரும் கர்வம் இப்படிப்பட்டதுதான் என்று ராம கிருஷ்ண பரம ஹம்சர் சொல்கிறார்.
காந்தமும் கர்வமும் ஒன்று. காந்தம்எப்போதும் ஒரே திசையை சுட்டிக் காட்டும். கர்வம் பிடித்தவர்கள் மனது தங்களைப் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும். ஆனால்காந்தம் இரும்பைக் கவர்ந்து இழுக்கும். கர்வம் இருக்கும் மனதோ எதையும் யாரையும் எப்போதும் கவர்ந்து இழுக்க முடியாது
எப்போதும் நம் எதிர்பார்ப்புகளுடன் ஒத்துப் போகாதவர்கள் நமக்கு முட்டாளாகத் தென்படுவார்கள். உங்களையும் இதே காரணத்திற்காக முட்டாளாகப் பார்ப்பதற்கு நூறு பேர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
யாரையாவது எதிரியாக பார்க்கத் துவங்கிவிட்டால் அவருடன் முழு ஈடுபாட்டுடன் செயல் பட முடியாது. ஒருவரை பிடிக்கவில்லை என்று யாரும் விட்டுவிடுவதில்லை. ஏனெனில் அவரிடம் நமக்கு லாபம் இருக்கிறது. அதனால் அவரைக்குறை சொல்லிக்கொண்டாவது அங்கே ஓட்டிக்கொண்டிருக்கிறோம் . அவரிடம் பிடிக்காத குறையைக் கவனிப்பதை விடுத்து அவரிடம் உள்ள திறமையைக் கற்றுக்கொள்ளலாம் அல்லவா?
ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு குறை .சொத்தை ,சொள்ளை என்று சொல்லி சமையலுக்கு வாங்கி வந்த கத்தரிக்கயைத் தூக்கியா எறிகிறோம் ?தேவையில்லாத பகுதியை கழித்து விட்டு தேவையானதை சமையலுக்கு உபயோகப்படுத்துவதில்லையா ?ஆனால்மனிதர்களிடம் மட்டும் ஒரு சின்ன குறை கண்டால் கூட மொத்த மனிதரையுமேதுண்டடுகிறோமே,அது ஏன்? ஒரு காய்க்குக் கொடுக்கிற மதிப்பைக்கூட நாம் மனிதனுக்கு கொடுப்பதில்லையே?
நீங்கள் யாரை மோசமனவராகப்பர்க்கின்றீர்களோ ,அவரை மிக இனிமையானவரென நினைப்பவர்களும் இருக்கிறார்கள் அல்லவா?அப்படியானால் மோசமானவராக இருப்பது அவருடைய தன்மை இல்லை .அவருடைய தன்மையை ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே ,உங்கள் பார்வையில் அவர் மோசமாகத் தெரிகின்றார். எனில் தப்பு அவர் பெயரிலா இருக்கின்றது?
0